எனக்கான அடையாளங்கள் ஏதும் இல்லாதபோதும்
அது என் பிம்பம்தான்
என் கவனம் பற்றிய கவலையின்றி
அது என்னோடே இருக்கிறது
ஒரு நண்பனைப்போல
என் அன்பின் வாசமோ
அழுக்கின் நாற்றமோ
அது கண்டுகொள்வதேயில்லை
என் புன்னகைகளை, பொய்களை
அது விமர்சிப்பதே இல்லை
குறைந்தபட்சம்
என்னோடு வாழநேர்ந்ததற்கான
வருத்தங்களைக்கூட அது தெரிவித்ததில்லை
இருந்தும் எனக்குத்தான் பயம்
என் எல்லா அசைவுகளையும் ஏளனம் செய்யும்
என் நிழலைக் கண்டு
- ஸ்ரீரங்கம் மாதவன்