வெளிர்மஞ்சள் நிறத்தில் வழிகிறது வெயில்
துளைத்து வெளியேறும் மண்புழுவின்
தடங்கள் மீது
பாடுகின்றது நிழலை மரம்.
•
கல்வாழையின் இலைபரப்பில்
இருக்கின்றன
பாதைகள்
பயணித்து மறைகின்றன
சிவந்த எறும்புகள்.
•
உடைவுண்ட
மணிநாவைப் போல
அமைதியின் கூர்மையை வரைதல்
வெளியெங்கும் பிரதிபலிக்கும்
நிர்வாணத்தின் மேனியை அடைதல்.
•
உள்ளிருக்கும் எதுவும்
வெளியிலில்லை
உள்ளிலிருந்துப் பரந்த ஒன்றே வெளி
உள்ளும்
வெளியும்
ஒன்றாகும் கணம் ஒன்றே
ஓர்மையின் உள்.
•
அடர்ந்த புல் தரை நோக்கி
விரட்டும் மேய்ப்பன்
மகிழ்ச்சியில் ஆநிரைகள்
வாழ்வின் அந்தியில் சேர்க்கிறது
வெளிறிய நரையும் திரைந்த தோலும்
கவலைகள் ஏதுமின்றி காய்கிறது நிலா.
•
எரியும் உலகில் நீள்கிறது தீ நாக்குகள்
துன்பத்தின் மிகுதியில்
வாழ்க்கை
இருளுக்குள்ளான வாழ்வில்
புலனாகும் வழி
தீபமொன்று ஏற்றப்பட்டால்.
•
அழகிய தோலும்
உறுதியான எலும்புகளும்
வேனிலில் உதிரும்
தென்னை மட்டைகள்
ரத்தம் நிரம்பிய
மதுக்குடுவையில்
தேடுவது எதை.
•
சன்னல்களை நோக்கி
திருப்புகின்றன தங்கள் தளிர்களை
தொட்டிச்செடிகள்
சன்னல்களின் வழி நுழையும்
வெளிச்சக் கீற்றுகள்.
•
காத்திருக்கும் கிழக்கொக்கு
வேட்டை சூன்யம்
மீன்களற்ற குளம்.
•
கொன்றை மரத்தில் படரும்
ஓணான் கொடியில்
சிக்கித் துவள்கிறது பட்டாம்பூச்சி
சிக்கலற்றுப் பூத்திருக்கிறது
கொடிப்பூ.