seemanதன்னை ஓர் ஆளுமையாக தகவமைத்துக் கொள்ள இயலாதவர்கள்தான் எப்போதும் அடுத்தவர்களின் புகழ் வெளிச்சத்தின் கீழ் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளத் துடிப்பார்கள். இன்னாரின் நண்பன், இன்னாரின் உறவினன், எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று சொல்லி வயிற்றுப் பிழைப்புக்கு வழி தேடிக் கொள்பவர்களால் ஒருபோதும் ஒரு சுய ஆளுமையாக தன்னை உருவாக்கிக் கொள்ள முடியாது. மேலும் அப்படிப் பட்டவர்கள்தான் தான் யாரின் பெயரைச் சொல்லி பிழைப்பை ஓட்டிக் கொண்டு இருக்கின்றார்களோ, அவர்களின் புகழுக்கே ஆப்பு வைத்து விடுவார்கள். கடும் உழைப்பால் அவர்கள் சேர்த்து வைத்த நற்பெயரையும் நாசம் செய்து விடுவார்கள். அது போன்ற உழைப்புறிஞ்சிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து களை எடுக்கவில்லை என்றால், போலிகளே உண்மைகளைப் போல கொட்டமடிக்க ஆரம்பித்து விடும். ஆனால் நிழல்கள் ஒரு போதும் மரங்கள் ஆகி விடுவதில்லை என்பது போல, போலிகள் ஒருபோதும் நிஜங்களைப் பதிலீடு செய்து விடுவதில்லை.

அப்படி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயரைச் சொல்லி வயிறு வளர்த்து வந்த சீமான், இன்று அவரின் பிம்பத்தை உடைத்து நொறுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றார். ஈழப் போரில் இலட்சக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது, விடுதலைப் புலிகளின் இராணுவத்தில் உயர் பொறுப்பில் இருந்த நபர்கள் சீமானுக்கு ஆமைக் கறி, உடும்புக் கறி, கறி இட்லி என விதவிதமாக சமைத்துப் போட்டு, அவர் எதைச் சாப்பிட்டார், எதைச் சாப்பிடவில்லை எனக் குறிப்பு வேறு எடுத்தார்கள் என்று கூச்சமே இல்லாமல் பரப்புரை செய்து விடுதலைப் புலிகள் தன் சொந்த இன மக்கள் அழித்தொழிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அதைப் பற்றி இம்மி அளவு கூட கவலைப்படாமல் சுகபோகமாக உண்டு களித்ததாக ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்.

பிரபாகரன் அவர்களின் அரசியலை கடுமையாக விமர்சிக்கும் இயக்கங்கள், கட்சிகள் கூட பிரபாகரனை இந்தளவிற்குக் கேவலமாக தமிழக மக்கள் முன் காட்சிப்படுத்தியது இல்லை. பிரபாகரனை இழிவு செய்யும் இது போன்ற கதைகளை சீமான் சில ஆண்டுகளாக வலியச் சொல்வதற்கும், அவரின் வங்கி இருப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதற்கு எல்லா முகாந்திரங்களும் உள்ளன.

திராவிட எதிர்ப்பு, பார்ப்பனிய ஆதரவு எனத் தன்னுடைய அரசியல் செயல்பாடுகளை கட்டமைத்துக் கொண்ட சீமானின் முதன்மையான திட்டம் ஏற்கெனவே மதுவாலும், பண்பாட்டுச் சீரழிவாலும், உலகமயமாக்கத்தாலும் தக்கை மனிதர்களாக வாழ்ந்து வரும் இளைஞர்களை தன்னுடைய பேச்சை மட்டுமே நம்பும் அடிமைக் கூட்டமாக மாற்றி, அதன் வழி பிழைப்பு ஓட்டுவதுதான்.

சீமானின் அரசியல் களம் விரிவடைந்ததற்கு முக்கிய காரணம் ஈழப் பிரச்சினையைத் தீர்க்க முடிந்த சர்வ வல்லமை பொருந்திய ஒரே நபர் தான்தான் என்ற தோற்றத்தை இளைஞர்களின் மத்தியில் ஏற்படுத்தியதும், தமிழகத்தில் விடுதலைப் புலிகளே நம்பிய அரசியல் பிரதிநிதியாக பொய்யாகத் தன்னை முன்நிறுத்திக் கொண்டதும்தான். இன்று பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளும் இல்லை, ஈழத்தை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்து பிழைப்பை ஓட்டுவதற்கான வாய்ப்புகளும் இல்லை என்பதால், தனது முக்கிய நிதி ஆதாரமாக விளங்கும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் தனக்கிருக்கும் செல்வாக்கை ஆழப்படுத்திக் கொள்ள, தான் சொன்ன பொய்யையே வெவ்வேறு பரிணாமங்களில் மாற்றி, மாற்றி சொல்வதன் மூலம் அதை உண்மையாக்க வேண்டிய கட்டாயம் சீமானுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதனால்தான் பிரபாகரனைப் பயன்படுத்தி உருவாக்கிக் கொண்ட தனது போலிப் பிம்பத்தை தக்க வைத்துக் கொள்ள, பிரபாகரனைப் பற்றிய சாப்பாட்டுக் கதைகளை அவிழ்த்து விடுவதன் மூலம் தன்னை பிரபாகரனின் அரசியல் வாரிசாக நிலைநிறுத்திக் கொள்ள முயன்று வருகின்றார்.

சீமான் சொல்வதை எல்லாம் அப்படியே விமர்சனமின்றி நம்பும் தம்பிகளின் அரசியல் அறிவு பற்றி நாம் சொல்லவே தேவையில்லை. தம்பிகள் அனைவரும் வாட்ஸ் அப், பேஸ்புக்கில் புளுகு மூட்டைகளை பார்வெட் செய்வதிலும், சீமானுக்கு எதிராக யாராவது பேசினாலோ, எழுதினாலோ அவர்களை அரசியல் ரீதியாக விமர்சிப்பதற்குத் திராணியில்லாமல் அவதூறுகளையும், ஆபாசங்களையும் கொண்டு தாக்குவதிலும், சங்கிக் கும்பலுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் செய்பவர்கள்.

சீமான் விடுதலைப் புலிகளைச் சந்தித்தது வெறும் 15 நிமிடங்கள் கூட இருக்காது என தோழர் கொளத்தூர் மணி அவர்கள் உறுதியாகச் சொல்கின்றார். அவர் சொல்வதை நாம் அப்படியே கடந்து சென்றுவிட முடியாது. காரணம் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் விடுதலைப் புலிகளோடு மிக நெருக்கமான தொடர்பில் இருந்தவர். ஈழப் பிரச்சினைக்காக பல முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும், தடா சட்டத்திலும் கைது செய்யப்பட்டவர். இன்னும் சொல்லப் போனால் அடையாளமே இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த சீமானுக்கு ஈழத்திற்குப் போகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர்.

தன்னுடைய புளுகுகள் எல்லாம் நிச்சயம் அம்பலப்பட்டு விடும் என்று சீமானுக்கு நன்றாகவே தெரியும். காரணம் விடுதலைப் புலிகளுடன் மிக நெருக்கமான தொடர்பில் இருந்த பலர் தமிழ்நாட்டில் இருக்கின்றார்கள். ஆனால் அண்ணன் சொல்லும் புளுகுகள் எல்லாம் ஒட்டுமொத்த பொதுச் சமூகத்துக்குமானதல்ல.. அது அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட 'அறிவாளிகள்' கூட்டத்திற்கானது.

அந்த 'அறிவாளிகள்' கூட்டம்தான் ஏகே 75 துப்பாக்கியை தூக்கிக் கொண்டு போய் தனி ஈழத்தை அண்ணன் வாங்கித் தருவார் என்று நம்பி, அவரது கட்சிக்கான வங்கிக் கணக்கை சிறப்பாகக் கவனித்து வந்தது. ஆனால் காலச்சூழல் இலங்கையின் அரசியல் போக்கையும், தமிழகத்தின் அரசியல் போக்கையும் மாற்றி விட்டதால், இனி தனி ஈழத்தை வாங்கித் தருவேன் என்று சொல்லி, எவனாவது பணம் கேட்டால் தமிழ் நாட்டில் சல்லிப் பைசா கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதனால்தான் பதறிப் போய் பிரபாகரனுடனான தனது நெருக்கத்தை உறுதிப்படுத்தும் விதமாக அண்ணன் புதுப் புது அயிட்டங்களை அவ்வப்போது வீசிக் கொண்டே இருக்கின்றார்.

உண்மையிலேயே ஈழ விடுதலையைப் பற்றியும் பிரபாகரனைப் பற்றியும் சீமானுக்கு உயரிய மதிப்பீடுகள் எல்லாம் இருந்ததே கிடையாது. அப்படி இருந்திருந்தால் ஈழப் படுகொலைக்குப் பின்னர், ஐநாவின் டப்ளின் தீர்ப்பாயத்தில் நடந்த விசாரணையில், "ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவரையும் புலிகள் போரில் ஈடுபடுத்தினர், குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிடுங்கி,படைகளில் இணைத்துக் கொண்டனர். திருமணமான பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை செய்தனர், மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள், தப்பிக்கப் பார்த்த தமிழர்களை சுட்டுக் கொன்றார்கள்" என்று தனது கட்சி சார்பில் சொல்லியிருக்க மாட்டார்.

சீமானின் அரசியல் நகர்வுகள் அனைத்துமே வரும்படியை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்கப் படுகின்றது. இன்று அண்ணன் வாழும் சொகுசு வாழ்க்கையே அதற்குச் சான்று. சீமானால் தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் மாற்றமும் ஏற்பட்டு விடப் போவதில்லை. அவர் தன்னுடைய தனித்தன்மையாக சொல்லிக் கொண்டிருக்கும் இனவாதம், மொழிவாதம் போன்ற பாசிசக் கோட்பாடுகள் எல்லாம் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் ஏற்கெனவே வீசி எறியப்பட்டவை. அவரிடம் மிச்சம் மீதி ஏதோ சிறப்பாக இருப்பதாகச் சொல்லப்படுபவையும் மார்க்சியக் கோட்பாடுகளில் இருந்தும், காந்தியத்தில் இருந்தும் திருடப் பட்டவைதான்.

நாம் தமிழர் கட்சியில் ஒருவன் உறுப்பினராக இருப்பதற்கான முதன்மையான தகுதி அவன் ஒரு அறிவிலியாக இருக்க வேண்டும் என்பதுதான். அப்படி சமூகத்தில் அரசியல் விழிப்புணர்வு இன்றி, தக்கை மனிதர்களாய் சுற்றிக் கொண்டிருந்த கூட்டம்தான் இன்று சீமானின் அடிமைகளாய் மாறி இருக்கின்றது. எப்படி ரஜினி ரசிகர்களும், விஜய், அஜித் ரசிகர்களும் அவர்களின் படங்கள் வெளிவருவதற்காக காத்திருக்கின்றார்களோ, அதே போல இந்த அடிமைக் கூட்டமும் சீமானின் அடுத்த புளுகு மூட்டை கதைக்காக காத்திருக்கின்றது. அண்ணன் ஒரு நாளும் தம்பிகளை ஏமாற்றுவதில்லை. கூடிய விரைவில் மிகச் சிறப்பான ஒரு மசாலா மாஸ் கதையுடன் அண்ணன் ரீஎன்ரீ கொடுப்பார். அநேகமாக அந்தக் கதை மனிதக் கறி தின்றதாகக் கூட இருக்கலாம்!.

- செ.கார்கி