நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து நாடு அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி அடைந்திருக்கின்றது. வேதங்களிலும், உபநிடதங்களிலும், புராணங்களிலும் மறைபொருளாக புதைந்து கிடந்த அரிய அறிவியல் சிந்தனைகள் அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டு, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. புஷ்பக விமானம், பிளாஸ்டிக் சர்ஜரி, சோதனைக் குழாய் குழந்தைகள், நானோ சயின்ஸ் போன்ற தொழில்நுட்பங்களை பழமை மாறாமல் மீட்டெடுப்பதற்காக ஐன்ஸ்டினுக்கு அடுத்தபடி உலகின் சிறந்த அறிவியல் மேதையாக போற்றப்படும் மோடியும், அவர் தலைமையிலான காவியுடை தரித்த சாமியார் மற்றும் சாமியாரிணிகள் அடங்கிய குழுவும் அல்லும் பகலும் பாடுபட்டுக் கொண்டு இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

pragya thakurஇவர்கள் அனைவரும் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்பதால், கடவுளைப் போன்றே அவ்வப்போது ஏதாவது திருவிளையாடல்களை செய்து கொண்டே இருப்பார்கள். உதாரணமாக மசூதியை இடிப்பது, ரயிலில் குண்டு வைப்பது, மசூதியில் குண்டு வைப்பது, கும்பலாக சேர்ந்து அடித்துக் கொல்வது, பாலியல் வல்லுறவில் ஈடுபடுவது, கருவறுப்பது, போர்னோ படத்தில் நடிப்பது, கருப்புப் பணத்தை மாற்றுவது போன்றவற்றையும் செய்வார்கள். இதை எல்லாம் நீங்கள் சாதாரண கண்கொண்டு பார்த்தீர்கள் என்றால், உங்களுக்கு அவர்கள் பொறுக்கிகளாகவும், கொலைகாரர்களாகவும், பாலியல் வக்கிரம் பிடித்தவர்களாகவும், குற்றக் கும்பலாகவும் தெரிவார்கள்.

ஆனால் முக்தி நிலையில் அதாவது பிரம்மத்தை அறிந்த நிலையில் பார்த்தீர்கள் என்றால், இதனுள் ஒளிந்திருக்கும் மறைஞானத்தை கண்டுகொள்வீர்கள். இவை எல்லாம் தெய்வ சங்கல்ப்பம் என்பதையும், நம்மை சோதித்துப் பார்க்க கடவுளால் நடத்தப்படும் திருவிளையாடல்கள் என்பதையும் உணர்வீர்கள். இதை ஆன்மப் பூர்வமாக நாம் உணர்ந்து கொள்ளும் போது நாமும் இவர்கள் செய்யும் திருவிளையாடல்களுடன் மனதொன்றி, அதனால் இந்தப் பூவுலகிற்கு ஏற்படப் போகும் நன்மைகளை மட்டுமே நினைத்து பேரானந்தம் கொள்வோம்.

இந்துவாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் பெருமை கொள்ளும் அளவிற்கு மோடி தலைமையிலான இந்திய அறிவியலாளர்கள் குழு பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றது. தற்போது அந்தக் குழு நாட்டிற்கு அர்ப்பணித்த கண்டுபிடிப்புதான் மாட்டு மூத்திரம், புற்றுநோயை குணப்படுத்தும் என்ற போற்றுதலுக்குரிய கண்டுபிடிப்பு. நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்பதும், காறித் துப்புவீர்கள் என்பதும், கையில் கிடைத்தால் தொடப்பக்கட்டையால் அடிப்பீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். எல்லாவற்றையும் சந்தேகிப்பது கடவுள் நம்பிக்கையற்ற நாத்திக துஷ்டர்களின் செயலாகும்.

வேதியியல் மற்றும் இயற்பியல் துறையில் இரண்டு நோபல் பரிசுகளை வென்ற மேரி கியூரி, தான் கண்டறிந்த ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு தன்மை கொண்ட மூலகங்களால் இறுதியில் அவரே பெரிய அளவிற்கு பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இன்று உலகில் புற்றுநோயை குணப்படுத்துவதில் கதிர் மருத்துவம் (Radiation therapy) என்ற துறை சிறப்புற்று விளங்குகிறது என்றால் அதற்குக் காரணம் அவரின் கண்டுபிடிப்புகளே ஆகும். ஆனால் அவருக்கு வேதங்களைப் பற்றியோ, உபநிடதங்களைப் பற்றியோ எதுவும் தெரியாது என்பதால்தான் இப்படி ஆபத்தான கதிரியக்க மூலகங்களை கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒருவேளை அவருக்கு வேதத்தின் பிரதிகளோ, இல்லை உபநிடதங்கள், புராணங்கள் போன்றவற்றின் பிரதிகளோ கிடைத்திருந்தால் அவர் அதை மிக எளிய முறையில் கண்டறிந்து இருக்க முடியும்.

ஆனால் அவரால் முடியாமல் போன அந்த அரிய கண்டுபிடிப்பை அவருக்கு அடுத்து உலகில் மிகச்சிறந்த பெண் விஞ்ஞானியாக போற்றப்படுபவரும், நோபல் பரிசு பெறத் தகுதி பெற்ற ஒரே பெண் அறிவியல் அறிஞருமான பிரக்யா சிங் தாகூர் அவர்கள், இந்த உலமே பார்த்து மிரண்டு கிடக்கும் மிகக் கொடிய நோயான புற்றுநோய்க்கு மிக எளிய முறையில் மருந்தைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். அதுமட்டும் அல்லாமல் தான் கண்டறிந்த அந்த அரிய மருந்தை இந்த நாட்டின் நலன் கருதி கொஞ்சம் கூட யோசிக்காமல் தன் மீதே சோதித்தும் பார்த்திருக்கின்றார் இந்த வீர மங்கை பிரக்யா அவர்கள். இப்படி ஒரு தேசப்பற்று கொண்ட அறிவியல் அறிஞரை இதற்கு முன் இந்தியா கண்டதில்லை, ஏன் உலகமே கேள்விப்பட்டதில்லை!

இதற்கு முன்னாலும் புற்றுநோயைக் குணப்படுத்த பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அதில் இருந்து எந்த வகையில் இந்திய விஞ்ஞானி பிரக்யா சிங் தாகூர் அவர்களின் கண்டுபிடிப்பு தன்னிகர் இல்லாததாக திகழ்கிறது என்றால், அது மிக எளிய மக்களுக்கும் கைக்குக் கிடைக்கும் தூரத்தில் இருப்பதால்தான். ஒரு மிகச் சிறந்த கண்டுபிடிப்பு என்பதே அது மிகக் குறைந்த விலையில், மிக எளிமையாக கிடைக்க வேண்டும் என்பதுதானே.! அப்படிப் பார்த்தால் இந்திய மக்களுக்கு பிரக்யா தனது கடின உழைப்பின் மூலம் கண்டுபிடித்து அளித்த ‘மாட்டு மூத்திர மருந்து’ உலக அறிவியல் வரலாற்றில் ஒரு மைல்கல் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் இனிவரும் காலங்களில் இந்தத் துறை ‘மூத்திராலஜி’ என்ற பெயரால் மிகப் பெரிய அளவிற்கு வளரும் என்றும் காவி அறிவியல் அறிஞர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

ஆனால் இப்படி இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் உலகமே பார்த்து வியக்கும் மருந்தை கண்டுபிடித்ததை சகித்துக் கொள்ள முடியாத சில அந்நிய சக்திகள் தங்களது கைக்கூலிகள் மூலம் அவதூறு பரப்ப ஆரம்பித்திருக்கின்றார்கள். அதாவது பிரக்யா சிங் தாகூர் அவர்கள் தனக்கு ஏற்பட்டிருந்த புற்றுநோயை மூத்திரத்தின் மகிமையால் குணமாக்கவில்லை என்றும், அவர் அலோபதி வைத்தியம் மூலமே குணப்படுத்திக் கொண்டார் என்றும் கொச்சைப்படுத்தி இருக்கின்றார்கள். இதற்காக ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை பொது மற்றும் ரத்த நாள அறுவை சிகிச்சை மருத்துவர் ராஜ்புத் அவர்களை அந்நிய கைக்கூலிகள் லட்சக்கணக்கான கோடிகள் கொடுத்து விலை பேசி இருக்கின்றார்கள். அந்நிய நாடுகளிடம் விலைபோன இந்தக் கைக்கூலி என்ன சொல்கின்றார் என்றால் “தான் பிரக்யா சிங் தாகூருக்கு புற்றுநோய்க்கான சிகிச்சையை 2008 இல் இருந்து அளித்து வருவதாகவும், 2012 மற்றும் 2017 ஆகிய காலங்களில் அவருக்கு மூன்று முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், இதனால் அவரது இரு பக்க மார்பகங்களும் அகற்றப்பட்டிருப்பதாகவும்” கூறியிருந்தார்.

பார்த்தீர்களா இந்து சொந்தங்களே! நம்முடைய மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் இந்த உலகில் மிகச்சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்திவிட்டதை எப்படியெல்லாம் அந்நிய சக்திகளின் துணையுடன் தடுக்கின்றார்கள் என்று. இதற்குப் பின்னால் நிச்சயம் முஸ்லிம் தீவிரவாத பாகிஸ்தான் மற்றும் கம்யூனிச தீவிரவாத சீனாவின் கை இருக்கின்றது. ஆனால் நீங்கள் கவலைப்படாதீர்கள் இந்து சொந்தங்களே, நம்முடைய பிரக்யா அவர்கள் சாதாரண பெண்மணி அல்ல. அவர் சாபம் விட்டார் என்றால் பச்சை மரம் கூட பற்றி எரியும். இப்படித்தான் அவரிடம் வாலாட்டிக் கொண்டிருந்த தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்காரேவை தனது சாபத்தாலேயே கொன்று போட்டார். எதற்காக இந்த அற்பப் பதரை கொன்றார் என்று தெரியுமா? மாலேகானில் கடந்த 2008 செப்டம்பர் 29-ம்தேதி நம்முடைய பிரக்யா அவர்கள் ஒரு சின்ன ‘பட்டாசை’ வெடித்து விளையாடினார். இந்த விளையாட்டில் 6 அற்ப மனித பதர்கள் செத்துப் போய்விட்டது. இது பெரிய பிரச்சினை என்று இவர் நம்முடைய பிரக்யா மீதே வழக்கு போட்டுவிட்டார். கடவுள் மீதே வழக்கா? அதுதான் போய் சேர்ந்துவிட்டார். இதிலே என்ன அதிசயம் என்றால் அவர் குண்டுதுளைக்காத புல்லட் புரூப் உடையை அணிந்திருந்தார் என்பதுதான். சாபத்தின் சக்தியைப் பார்த்தீர்களா!.

மாலேகானில் மட்டுமல்ல மொத்தம் ஐந்து இடங்களில் பட்டாசு போட்டு விளையாடியவர் நம்ம பிரக்யா அவர்கள். 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 தேதி சம்ஜெளத்தா எக்ஸ்பிரஸ் ரயிலிலும், அதே வருடம் மே மாதம் மெக்கா மசூதியிலும், அக்டோபர் மாதம் ராஜஸ்தான் ஆஜ்மீர் தர்க்காவிலும், 2006 செப்டம்பர் மற்றும் 2008 மகாராஷ்டிராவில் மாலேகானில் இரண்டுவாட்டியும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தார். இதனால் மொத்தம் 119 பேருக்கு முக்தியும் அளித்தார். அவ்வப்போது மகிழ்ச்சிக்காக பட்டாசு வெடிப்பது என்பது இந்துக்களின் பண்படாகும். ஆனால் சில மிலேச்ச சக்திகள் இதைப் போய் இந்து தீவிரவாதம், பயங்கரவாதம் என்று முத்திரை குத்துகின்றார்கள். சாமானிய மனிதர்கள் தீபாவளிக்கு சின்ன சின்ன பட்டாசுகளை வெடிப்பது இல்லையா? அதே போலத்தான் பிரக்யாவும் வெடித்தார், என்ன கொஞ்சம் பெரிய பட்டாசாக வெடித்தார், கடவுளுக்கு இந்த உரிமை கூட இல்லையா?

நாம் முன்பே சொன்னபடி இதை எல்லாம் புரிந்து கொள்ள ஆன்மீகத்தின் உச்சமான பிரம்மத்தை அறிந்த ஞானப் பார்வை வேண்டும். அப்போதுதான் நம்மால் இவர்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள முடியும். நாம் பிரக்யா சிங் தாகூர் என்ற அறிவியல் மேதையை அவரின் கண்டிபிடிப்புக்காக கொண்டாடப் போகின்றோமா? இல்லை அவர் விளையாட்டாக பட்டாசு வெடித்ததை பெரிதாக்கி ஒதுக்கப் போகின்றோமா? என்பதில் தான் இந்தியாவின் எதிர்காலமே அடங்கி இருக்கின்றது. நமக்கு கொஞ்சம் முடிவு எடுப்பதில் சிரமமாக இருக்கலாம், இது போன்ற சமயங்களில் நாம் நம்மைவிட அறிவில் சிறந்தவர்களின் கருத்தைக் கேட்பது தவறல்ல.

அப்படி அறிவில் சிறந்தவர்கள் மட்டுமே இருக்கும் பிஜேபி ஆனது அவரை மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபால் மக்களவை தொகுதியின் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. நமது கடமை என்பது அவரை வெற்றிபெறச் செய்வது மட்டுமே. ஏற்கெனவே குஜாரத்தில் பல திருவிளையாடல்களை நிகழ்த்தி சில ஆயிரம் மிலேச்ச உயிர்களுக்கு மோச்சம் அளித்த மோடிக்கு எப்படி வாய்ப்பு கொடுத்து இந்திய மக்கள் வேட்டியோடு சேர்ந்து கோவணத்தையும் நாட்டுக்காக தியாகம் செய்துவிட்டு மகிழ்ச்சியோடு இருக்கின்றோமோ, அதே போல இவரையும் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். நாடு அறிவியல் துறையில் சிறப்புற, நாட்டில் பல திருவிளையாடல்கள் தினம் தினம் அரங்கேற நாம் இன்றே இந்துக்களாய் அணிதிரண்டு தர்மத்தின் வெற்றிக்குப் பாடுபடுவோம் இந்து சொந்தங்களே!

- செ.கார்கி