நாம் எப்போதும் தாத்தாக்களை தாத்தாக்களாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் எல்லா தாத்தாக்களும் எப்போதும் தாத்தாக்களாக இருப்பதில்லை. அவர்களில் சிலர் சில நேரம் தாதாக்களாகவும் இருக்கின்றார்கள். தாதாக்கள் என்றால் சாதாரண தாதாக்கள் கிடையாது, அவர்கள் காமசூத்திராவையும், செளந்தர்ய லகிரியையும் வரிக்கு வரி தங்கள் முன்னோர்களைப் போலவே வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த விரும்பும் லட்சியவாத தாதா தாத்தாக்கள். அவர்கள் அவ்வாறு இருப்பது ஒன்றும் வியப்பில்லை. ஏனெனில் தாத்தாவின் தாத்தாவும், அவரது தாத்தாவும் அப்படித்தான் இருந்தார்கள். ஏன் இந்த தாதா தாத்தாக்கள் அப்படி இருந்தர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? தாதா தாத்தாக்கள் எப்பொழுதும் உழைத்து சோறு தின்ன விரும்பாதவர்கள். அதனால் உண்டு கொழுத்துப் போய் தினவெடுத்த தனது உடலை ஊர்மேய்வதற்காகவே வரலாற்றில் கடவுளின் பெயரால் அர்ப்பணித்தவர்கள். அவர்கள் உழைத்ததாக ஏதேனும் சில குறிப்புகள் ஆங்காங்கே இருந்தாலும் அதுவும் காட்டிக் கொடுத்ததும், கூட்டிக் கொடுத்ததுமாகவே இருக்கின்றது. அதனால்தான் இப்படிப்பட்ட அரிய சேவையாற்றிய இந்த தாதா தாத்தாக்களை அதிகார வர்க்கம் தங்கள் பக்கத்திலேயே எப்போதும் வைத்துக் கொண்டது.

child abuse 620இப்போதோ அந்தத் தாதா தாத்தா வர்க்கமே அதிகார வர்க்கமாக நாட்டில் மாறியிருப்பதால் அவர்களின் கொழுப்பு பன் மடங்கு அதிகரித்திருக்கின்றது. ‘கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்பதுபோல இந்த ஆபாச தாதா தாத்தாக்கள் தங்கள் சென்ற இடமெல்லாம் அந்தப்புரமாக மாற்றிவிடும் வல்லமை பெற்றவர்கள். அவர்களுக்கு எதைப் பற்றியும் அச்சம் கிடையாது. அவர்களின் அந்தப்புரங்கள் எப்பொழுதும் பெண்களால் நிரம்பி வழிகின்றன. அந்தப்புரத்துக்குத் தேவையான பெண்களை தாத்தாவின் முன்னோர்களிடம் ‘வைப்பாட்டி மகன்’ என்ற உயரிய பெருமைமிகு பட்டம் பெற்றவர்கள், தங்கள் கட்சிகளின் மூலம் கல்விநிலையங்களில் வேட்டையாடி ‘கரசேவை’ செய்து அனுப்பி வருகின்றார்கள். கொடுத்து மட்டும் கரங்கள் சிவப்பதில்லை, கூட்டிக்கொடுத்தும் கரங்கள் சிவக்கின்றன.

அந்தப்புரத்தில் இருந்து கேட்கும் தாத்தாவின் அசிங்கமான முனகல் சத்தம் மாநிலம் முழுவதும் பேரிரைச்சலாய் கேட்கின்றது. தாத்தா இருக்கும் அந்தப்புரத்தின் வழியாக இப்பொழுதெல்லாம் கிழவிகள் கூட செல்வதில்லையாம். தாத்தா என்றால் அவர் ‘நிர்மலமாக’ இருப்பார் என்று நினைத்து உள்ளே சென்ற பலர் திடுக்கிட்டதாக தகவல். காரணம் தாத்தா பல சமயங்களில் நிர்வாணமாக இருப்பதாகவே அந்தப்புர ஒற்றர்கள் பேசிக் கொள்கின்றார்கள்.

‘ஆட்டுக்குத் தாடி எதற்கு நாட்டுக்கு தாத்தா எதற்கு’ என்று இனி யாரும் கேள்வி எழுப்ப முடியாது. ஏனென்றால் அவர் தாத்தா இல்லை என்பது தற்போது ஊரறிந்த உண்மையாகி விட்டது. தாத்தா மிக மகிழ்ச்சியாகவே எப்பொழுதும் இருக்கின்றாராம். காரணம் அந்தப்புரத்தில் மின்தடை ஏற்படும் பொழுதெல்லாம் அமைச்சர் பெருமக்களே விளக்கு பிடிக்கின்றார்களாம். விளக்கு என்றால் சாதாரண விளக்கு இல்லை ‘அணையா விளக்காம்’. அப்புறம் என்ன பிரச்சினை, தாத்தா வழக்கம் போல தம்முடைய ஆன்மீக சேவையை காலம் நேரம் கருதாமல் பகவான் சித்தமாகக் கருதி அர்ப்பணிப்போடு ஆற்றி வருகின்றார்.

தாத்தா தனது தள்ளாத வயதில் ஆன்மீக சேவையாற்றி கண்ணயர்ந்த சமயம் சிலர் அந்தப்புர ஜன்னல்களை கள்ளத்தனமாக எட்டிப் பார்த்து தாத்தாவை தாத்தா இல்லை என வெளி உலகிற்கு அம்பலப்படுத்தி விடுகின்றனர். ஆனாலும் தாத்தா அதனால் தடுமாறி விடுவதில்லை. ஊர் உலகமே காறித் துப்பினாலும் தாத்தாவின் அந்தப்புர பணியாட்கள் அதற்கும் முட்டுக் கொடுத்தார்கள். ஏனென்றால் அவர்கள் முட்டுக் கொடுப்பதற்காகவே இந்தப் பிறவி எடுத்தவர்கள். அதன் மூலம் அவர்களும் தாத்தாவின் ஆன்மீக சேவையில் தங்களின் பங்களிப்பை உறுதி செய்து கொண்டதுடன் மோட்சமடைந்து சொர்க்கத்துக்குப் போக முன்பதிவும் செய்து கொண்டார்கள். தாத்தாவின் நிர்வாண செய்தியை பொய் என்று கட்டமைக்க அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தங்களின் ஆதி நூல்களை அக்குவேராக ஆணிவேராக அலசி ஆராய்ந்து தாத்தாவைக் காப்பதற்காக சிறப்பான ஒரு பதிலைக் கண்டுபிடித்தார்கள். தாத்தாவின் அந்தப்புர ஜன்னல்களை எட்டிப் பார்த்தவர்கள் தேசவிரோதிகள் என்றும், அவர்கள் பாகிஸ்தான் கைக்கூலிகள் என்றும், சீனாவிடம் இருந்தும், ரஷ்யாவிடம் இருந்தும் பணம் வாங்கும் ஏஜென்ட்டுகள் என்று அறிவித்தார்கள்.

இதையும் மீறி தாத்தா தாத்தா இல்லை, அவர் தாதா என அம்பலப்படுத்தியவர்களை சிறைப்படுத்தினார்கள். அவர்கள் ஆணித்தரமாக, தாத்தா தாத்தாவாகவே இருப்பதால் அவரால் தாதா போன்று நிச்சயம் செயலாற்ற முடியாது, அவர் கற்பின் மீது களங்கம் கற்பிக்கவே குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன என கை கால்கள் நடுங்க முட்டுக் கொடுத்தார்கள். தயவு செய்து தாத்தாவை தாத்தா என ஒப்புக்கொள்ளுமாறு கண்ணீர் வடித்தார்கள். தாத்தாவின் கற்புக்கு ஏற்பட்ட களங்கத்தை எண்ணி நம்மையும் அனுதாபப்படச் சொன்னார்கள்.

தாத்தாவின் அந்தப்புரத்திற்கு நாலுமுறை அல்ல, நாலாயிரம் முறை பெண்கள் வந்து போனாலும் அவர்களோடு தாத்தா அதிதீவிர ஆன்மீக ஆராய்ச்சி மட்டுமே செய்வார் என்றும், அதைத்தாண்டி அவருக்கு தனிப்பட்ட முறையில் அவர்கள் மீது எந்தவிதப் பற்றும், பாசமும் கிடையாது என்றும், காரணம் அவர் தாத்தா என்றும் திரும்பத் திரும்ப மந்திர உச்சாடனம் போல சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் வந்து போன பெண்கள் அனைவரும் தாத்தாவின் செயல்பாடுகள் தாத்தா போன்று இல்லை என்றும், அவரின் பேரெழுச்சியைப் பார்க்கும் போது ‘லோக குருவைப்’ பார்த்தது போன்று இருந்தது என்றும் சொன்னார்கள்.

தாத்தாவின் வீரியத்தைப் பார்த்து இன்று தமிழ்நாட்டில் உள்ள பெண்களை மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவே அச்சப்பட்டுக் கிடக்கின்றது. சிட்டுக்குருவி லேகியத்திற்கு விளம்பரத் தூதராக தாத்தாவை நியமிக்க இப்போதே கடும் போட்டி உலகச் சந்தையில் ஏற்பட்டிருக்கின்றது. எங்கு பார்த்தாலும் தாத்தாவின் பேச்சாகவே இருக்கின்றது. தாத்தாவும், அவர் சார்ந்த கட்சியும் கூட்டாக சேர்ந்து ஒட்டுமொத்த மாநிலத்தையே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றார்கள். ஆனால் இதற்கு எதிராக ‘இலைகள்’ கூட நாட்டில் அசைவதில்லை. இலைகளும், மயிர்களும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால்தான் மதிப்பு. உதிர்ந்து விட்டால் ஒருவரும் மதிக்க மாட்டார்கள்.

கதை சொல்லும் நீதி: நாட்டில் உள்ள தாத்தாக்கள் அனைவரும் தாத்தாக்கள் இல்லை என்பதும், அவர்களில் சிலர் தாதாக்களாக இருக்கின்றார்கள் என்பதும், அவர்களிடம் நாட்டில் உள்ள பெண்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதும்தான். இது போன்ற தாத்தாக்கள் எங்கும் இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் தொலைக்காட்சிகளிலும், நாளேடுகளிலும் பார்த்து உண்மையை உணர்ந்து கொள்ளலாம்.

- செ.கார்கி