எண்பதுகளின் துவக்கத்திலிருந்து தொண்ணூறுகளின் மத்தி வரை ஆளும் வர்க்கதிற்கும் அடக்குமுறையாளர்களுக்கும் தூக்கம் கெடுத்த சிம்மசொப்பனம்...

தனக்கென பெரிய அமைப்பில்லை... தனியான அலுவலகமில்லை... பின்பற்றி வரக்கூடிய தொண்டர்படையில்லை... சொந்த சமுதாயதிற்குள்ளும் பெரியளவில் ஆதரவில்லை... எந்தவிதமான அதிகாரப் பதவியும் இல்லை... ஆனால் மேற்குறிபிட்ட அனைத்தும் இருப்பவர்களால் சாதிக்க முடியாத பலவற்றை சாதித்த தனிமனித இராணுவம்தான் பழனிபாபா...

palanibaba_340கண்ணியத் தலைவர் காயிதே மில்லத் அவர்களின் மறைவிற்குப் பிறகு தமிழக இஸ்லாமிய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளை, உரிமைகளை அரசுக்குக் கொண்டு செல்லக்கூடிய வீரியமான தலைமை வெற்றிடமாகிப் போனபோது... முஸ்லிம்களுக்கு எதிராக சங் பரிவாரங்கள் தங்களது கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துவிட்டபோது தட்டிக் கேட்க யாருமே இல்லையா என்கிற ஏக்கப் பொருமல்கள் முஸ்லிம் சமுதாய சாமானிய மக்களிடம் பரவிவந்தபோது, தனது வீரியமான வீரமான உரைகளால் தமிழக முஸ்லிம்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தைரியமூட்டியவர் பழனிபாபா.

"நாங்கள் கைபர் போலன் கணவாய் வழியாக ஆடுமாடுகளை ஒட்டிக்கொண்டு இந்திய தேசத்திற்குள் அத்துமீறி நுழைந்த கூட்டமல்ல... இந்த மண்ணின் மைந்தர்கள்... ஆரிய அடிமைத்தன‌த்தில் இருந்து எம்மக்களை மீட்டெடுக்க இஸ்லாம் என்கிற மார்க்கத்தைத்தான் நாங்கள் இறக்குமதி செய்துகொண்டோம். மாறாக நாங்களே இறக்குமதி செய்யப்பட்ட மக்கள் அல்ல..." என வீரியமாக முழங்கி இஸ்லாமிய மக்களின் இந்தியப் பற்றை பறைசாற்றியவர் பழனிபாபா. செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்திட்டபோதும் தன்னைச் சுற்றி நடக்கும் அநீதிகண்டு வெகுண்டெழுந்து சுகபோக வாழ்க்கையைத் துறந்தவர். முஸ்லிம்களுக்கு எதிராக பின்னப்படும் சதிவலைகளுக்கு சொந்தகாரர்கள் யார் என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து களமாடினார் பழனிபாபா.

ஆம். பார்ப்பனியம் மட்டுமே முஸ்லிம்களுக்கு எதிரி; ஆரியம் மட்டுமே முஸ்லிம்களை இந்திய நாட்டின் வெகுஜன மக்களிடமிருந்து பிரித்தாள‌க்கூடிய சூழ்ச்சிகளை முன்னெடுக்கிறது என்பதை பாமரமக்களும் அறியும்வண்ணம் அழகாக தனது பாணியில் எடுத்துரைத்தார். விளைவு பார்ப்பனர்கள் தவிர்த்து தமிழர்கள் பழனிபாபாவை ஏற்றுக்கொள்ளத் துவங்கினார்கள். தந்தை பெரியார் மீதுகொண்ட பற்றால், அறிஞர் அண்ணாவின் கொள்கைகளில் கொண்ட ஈர்ப்பால் தன்னை அறிவிக்கப்படாத திமுக பேச்சாளராகவே ஆரம்பகாலத்தில் அடையாளப்படுத்திக் கொண்டார் பழனிபாபா. கலைஞர் கருணாநிதியின் தலைமைத்துவம் முஸ்லிம்களை கிள்ளுக்கீரையாகப் பயன்படுத்துகிறது என்பதை அறிந்து திமுகவின் துரோகத்தை அன்றே முழங்கி அமரர் எம்ஜிஆரின் அதிமுகவிற்கு ஆதரவானார்.

ஆரம்பகாலத்தில் அமரர் எம்ஜிஆரால் பெரிதும் மதிக்கப்பட்டவர்களில் பழனிபாபா அவர்களுக்குத் தனி இடமுண்டு. அமரர் எம்ஜிஆர் அவர்களுக்கு திமுகவினால் ஏற்ப்பட்ட பல சோதனைகளில் இருந்து விடுபட பழனிபாபா உதவினார் என்பது மறைக்கமுடியாத உண்மை. ஒரு கட்டத்தில் அமரர் எம்ஜிஆர் தனது ஆரிய விசுவாசத்தை வெளிக்காட்டத் துவங்கினார். சென்னை ஈகா திரையரங்க சாலையில் இந்து முன்னணியின் துவக்கவிழா நடைபெற்றது. அப்போது பேசிய அமரர் எம்ஜிஆர் "முஸ்லிம்களுக்கு முஸ்லிம் லீக் இருக்கும்போது இந்துக்களுக்கு இந்து முன்னணி அவசியம்" என்றார். அதனை வன்மையாகக் கண்டித்த பழனிபாபா எம்ஜிஆருடனான தனது உறவை முறித்துக்கொண்டார்.

தனது நாவன்மையின் மூலமாக அமரர் எம்ஜிஆரின் ஆற்றாமைகளை தமிழக மக்களிடம் தோலுரித்தார். விளைவு அதிமுகவின் ஆட்சி அடக்குமுறைகளினால் பழனிபாபா பலவழிகளிலும் பழிவாங்கப்பட்டார். இருப்பினும் தனது நிலையில் மிக உறுதியாகக் களமாடினர். எம்ஜிஆர் அவர்களே பழனிபாபா அவர்களின் செயல்களால் அச்சப்பட்ட காலங்களும் உண்டு. அந்த அச்சங்களின் காரணமாக பலமுறை பழனிபாபா பொய் வழக்குகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு எதிராக வாய்ப்பூட்டு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசு அலுவலகங்களுக்குள் பழனிபாபா நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. எந்த சூழலிலும் தனது போர்க்குணத்தை இழக்காத பழனிபாபா எவருடனும் சமரசமில்லாத வீரத்தால் முஸ்லிம்கள் மட்டுமல்லாது ஏனைய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகமக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். திமுகவின் துரோகம், அதிமுகவின் நம்பிக்கை மோசடி இவற்றை முறியடிக்க பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுடன் கைகோர்த்தார். அவ்வேளையில் அண்ணல் அம்பேத்கரையும் தந்தை பெரியாரையும் அரசியல் குறியீடாகக் கொண்டு களமிறங்கிய மருத்துவர் இராமதாஸ் பழனிபாபா அவர்களின் முழுமையான அன்பைப் பெற்றார்.

மருத்துவர் இராமதாஸ் அவர்களால் முன் மொழியப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியல் பழனிபாபா அவர்களை வெகுவாக கவர்ந்தது. வடக்கே வன்னியர்கள்... தெற்கே தேவேந்திரர்கள்... பரவிவாழும் முஸ்லிம்கள் இணைந்தால் ஆட்சியையும் அதிகாரத்தையும் நம்மால் கைப்பற்ற முடியும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கொள்கைப் பிரகடனம் செய்தது பழனிபாபா அவர்களால்தான். முன்னைவிடவும் வீரியமாக பாமகவின் வளர்ச்சிக்கு களமாடினர் பழனிபாபா. பெருவாரியான முஸ்லிம்களும் தலித்துக்களும் பாமகவில் அங்கம்பெறக் காரணமே பழனிபாபா அவர்களின் எழுச்சிகரமான பரப்புரைகள்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது.

பழனிபாபா தனது மார்க்கத்தில் தெளிவான நிலைப்பாடு கொண்டவர். எத்தகைய கடவுள் மறுப்பு கூட்டமானாலும் இஸ்லாத்தின் புனிதத்தன்மையை எடுத்துச் சொல்ல தயங்கியதில்லை. ஆனால் ஒரு குறுகிய வட்டத்திற்குள் தன்னையும் தனது சமூகத்தையும் அடைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை... நாம் வாழக்கூடிய நாட்டில் வெகுஜன மக்களுடன் கலந்து புரிந்துணர்வுடன் அதே வேளையில் இஸ்லாமிய கோட்பாடுகளில் எவ்விதமான சமரசத்திற்கும் இடமில்லாமல் வாழ அரசியல் பொருளாதாரம் போன்ற துறைகளில் முக்கியத்துவம் பெறக்கூடிய வழிமுறைகளை கற்றுத்தந்தவர் பழனிபாபா...

சமஷ்கிருத மொழியின் முகமூடியில் பார்ப்பனர் இல்லாத மக்கள் எப்படியெல்லாம் கீழ்த்தரமாக நடத்தபடுகிறார்கள், பார்ப்பனர்களால் பிறப்பால் வளர்ப்பால் அசிங்கப்படுத்தப்படுகிறார்கள் என்பதையெல்லாம் பட்டியலிட்டு பகிரங்கப்படுத்தியவர் பழனிபாபா என்பது மறைக்கப்பட்ட உண்மை. தாழ்த்தப்பட்ட சமூகமக்களின் விடுதலைக்காக அவர்களது மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாமல் செயல்பட்ட பழனிபாபா அவர்களால் ஈர்க்கப்பட்டுதான் ஜான்பாண்டியன், பசுபதி பாண்டியன் போன்றோரெல்லாம் பாமகவில் இணைந்தார்கள். வழக்கப்படியே பாமகவும் பழனிபாபா அவர்களுக்கு... இல்லை இல்லை முஸ்லிம்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் துரோகம் இழைத்தது. எப்போதும் இல்லாத வகையில் பழனிபாபா கவலைகொண்டார். காரணம் பாமகவை திமுக அதிமுகவைவிட அதிகமாக நம்பினார். பாமக நேரடியாகவே இந்துத்துவ சக்திகளுடன் நட்புகொண்டது பழனிபாபா அவர்களை கவலைக்குள்ளாகியது.

மாற்று அரசியலை சிந்திக்கவேண்டிய கட்டாயத்திற்கு பழனிபாபா பாமகவினால் கொண்டு செல்லப்பட்டார். அதற்கு தற்போதைய சாட்சியங்கள் நிறைய உண்டு... தேவைப்பட்டால் வெளிப்படுத்துவோம். தலித் மக்கள் ஆதிக்க சக்திகளால் தாழ்த்தப்பட்டார்கள். முஸ்லிம்கள் ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தலால் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொண்டார்கள். ஆக தாழ்த்தப்பட்டவர்களும்... தாழ்த்திக்கொண்டவர்களும் ஒருங்கிணைந்தால் மட்டுமே இத்தகைய துரோகங்களை வென்றெடுக்க முடியும் என்கிற தெளிவான மனநிலைக்கு பழனிபாபா வந்தார்.

முஸ்லிம்களின் மிகப்பெரிய கட்டமைப்பான முஹல்லாஹ் ஜமாத்துக்களை கூட்டமைப்பாக உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்தார். அதே வேளையில் ஜான்பாண்டியன், பசுபதி பாண்டியன் போன்றவர்கள் மூலமாக தலித் மக்களை ஒருங்கிணைக்கவும் செயல்திட்டங்களை வகுத்தார். ஒவ்வொரு ஊருக்கும் தானே தனிமனிதனாக சென்றார். முஸ்லிம்களின் முஹல்லாஹ் ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்தார். தனது திட்டங்களை சொன்னார். ஏற்றுக்கொண்டார்கள்; இணைந்து களமாட தயாரானார்கள். தலித் மக்களை சந்தித்தார். இழிநிலை நீங்க சிறப்பான செயல்திட்டங்களை சொன்னார். தலித் மக்கள் பழனிபாபா அவர்களின் பின்னால் அணிவகுக்கத் தயாரானார்கள். தேர்தல் அரசியலை புறக்கணித்து தீவிரமாக மக்கள் விடுதலைக்காக களமாடிய திருமாவளவன் பழனிபாபா அவர்களின் கவனத்தை ஈர்த்தார். அவரையும் அழைத்து ஆலோசனைகளை மேற்கொண்டார். வெண்ணை திரண்டு வந்தது; ஆனால் பழனிபாபா என்கிற தாளி சமூகவிரோதிகளால் உடைக்கப்பட்டது.

ஆம்... ஒடுக்கப்பட்டோரும் ஒதுக்கப்பட்டோரும் ஒருங்கிணைந்து அதிகாரத்தை வென்றெடுப்போம் என்ற சமூகப்புரட்சியாளர் பழனிபாபா அவர்களின் கோஷம் ஆதிக்க சக்திகளின் உறக்கத்தை கெடுத்தது. பழனிபாபா என்கிற மாமனிதன், தனிமனிதப் போராளி படுகொலை செய்யபட்டார். சுமார் 238 வழக்குகள், 136 கைதுகள், 124 சிறைகள் இவற்றை எல்லாம் கடந்து மக்களின் உரிமைகளுக்காக கடைசி நிமிடம் வரை குரல்கொடுத்த ஒரு மாவீரன் கோடாளிகளால் குடல்சரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். தடா வழக்குகளில் சிறைபடுத்தப்படாமலேயே வழக்கை தவிடுபொடியாக்கிய வரலாறு பழனிபாபா என்கிற ஆளுமையற்ற அதிகாரமற்ற ஒரு தனிமனிதனால் மட்டுமே சாத்தியமானது... காரணம் பழனிபாபா என்றால் சத்தியம் உண்மை நேர்மை..
.
பழனிபாபா என்கிற தனிமனிதனை ஒழித்துவிட்டால் சாதியம் தழைத்தோங்குவதற்கான தடை அகற்றப்பட்டுவிடும்... முஸ்லிம்கள் முடங்கிவிடுவார்கள்... என்று மனப்பால் குடித்த கயவர்கள் இன்றைக்கு கலங்கிப் போய் நிற்கிறார்கள்... காரணம் ஒரு பழனிபாபாவை கொலைசெய்தார்கள்.... ஆனால் அவர் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பழனிபாபாக்கள் முளைத்து வந்துவிட்டார்கள்...

பழனிபாபா அவர்களின் வார்த்தைகள்தான் இன்றைக்கு முஸ்லிம் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களின் ஜீவ முழக்கம். இனத்தால் திராவிடர்கள்... மொழியால் தமிழர்கள்... தேசத்தால் இந்தியர்கள்... ஏற்றுக்கொண்ட மார்க்கத்தால் மட்டுமே நாங்கள் முஸ்லிமகள்... இது பழனிபாபா அவர்களின் கொள்கைப் பிரகடனம்... ஏற்க மறுப்பது அறீவீனம்...

மனிதனை மனிதனாக மாற்ற முயற்சித்த தந்தை பெரியாரை, அடிமை விலங்கை உடைக்க அரும்பாடுபட்ட அண்ணல் அம்பேத்கரை வாசித்த தமிழர்கள் பழனிபாபா என்கிற வரலாறையும் வாசிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

- வேங்கை.சு.செ.இப்ராஹீம்