ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் நய‌வஞ்சமாக இரண்டு முறை இந்தியா போரில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், இலங்கையில் ஈழத்தமிழர்களின் மீது எந்தெந்த  வகையிலெல்லாம் இனப்படுகொலை நடைபெற்றாலும் இந்தியாவிற்கு எதிரான எந்த ஒரு நாட்டுடனும் இலங்கை கூட்டு வைத்திருப்பினும் அதை கண்டுகொள்ளாமல் கொழும்பில் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் ஏதோ ஒரு சாத்தானைப் தான் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கும் என்பதை இந்தியா பலமுறை நிரூபித்திருக்கின்றது, ஆனால் ஈழத்தமிழ் மக்களோ இந்த (இந்திய-இலங்கை) சமன்பாட்டை எதிர்கொள்வதற்கு தேவையான ஒரு வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதை நோக்கி நகர்ந்தபாடில்லை.

"இந்து" நாளிதழின் ஆசிரியரான என்.இராமுக்கு அண்மையில் அளித்த செவ்வியில் (Interview) மகிந்த இராசபக்சே "பிரபாகரனுக்கு நாங்கள் எதைக்(ஈழம்) கொடுக்க மறுத்தோமோ அதை(ஈழத்தை) நாங்கள் யாருக்கும் கொடுக்கப்போவதில்லை" என்று கூறியுள்ளார். அது போல, என்னதான் தமிழர்கள் இந்தியாவின் மீது தனித்துவமான சார்பு நிலையைக் கொண்டிருப்பதாக வெளிபடுத்தினாலும், இதுவரைக்கும் செயல்படாத இந்தியா இனிமேலும் ஈழத்தமிழர்களுக்காக செயல்படப்போவதில்லை. இந்த முயற்சியில் இன்னும் ம‌ன‌ம்த‌ளார‌த‌வ‌ர்க‌ள் அதே நிலையிலேயே இருக்க‌ட்டும். அத‌னால் ஏதாவ‌து ப‌ல‌ன்கள் விளைந்தாலும் ந‌ல்ல‌த‌ற்கே. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மைய அர‌சிய‌ல் நீரோடையில் உள்ள‌வ‌ர்க‌ள் ஈழ‌த்த‌மிழ் ம‌க்க‌ளின் விடுதலை விருப்பங்களுக்கு உதவக் கூடிய வகையில் மேற்கூறிய‌ ச‌ம‌ன்பாட்டை எதிர்கொள்ளும் மாற்று வ‌ழிக‌ளைப் ப‌ற்றி சிந்திக்க‌ வேண்டிய‌ கால‌மிது.

- தமிழ்நெட் ஆசிரியர் குழு.

2010 ஆம் ஆண்டு மாவீரர் நாள் முன்னெப்போதும் இல்லாத அரசியல் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

 maaveerar_naalஒரு பக்கம் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மாவீரர் நாளை மிகுந்த உத்வேகத்துடனும், ஒற்றுமையுடனும் கடைபிடிக்க, மறுபக்கம் ஒடுக்குமுறை அரசுகளான இலங்கையும், இந்தியாவும் ஈழ‌த்தமிழர்களைவிட மிகவும் கவனமாக மாவீரர் நாளை இலங்கைத்தீவிலும், தமிழ்நாட்டிலும் கண்காணித்து வந்தார்கள்.

  இந்திய, இலங்கை அரசுகள் ஈழத்தமிழர்களுக்கு எந்த அரசியல் உரிமையும் வழங்காது என்பதையும், அதே நேரம் ஈழத்தமிழ் மக்கள் தங்களின் வேட்கையாக‌வும், உளவியல்பூர்வ தேவையாகவும் வைத்துள்ள‌ அரசியல் தீர்வை நோக்கி நகர்வதில் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் இருப்பதையும் மாவீரர் நாள் வாரத்தில் நடந்த நிகழ்வுகள் நமக்கு தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றன.

  ஈழத்தமிழர்களின் தாயக பூமியில் மாவீரர் நாளன்று மாவிரர்களின் உடன்பிறந்தவர்களோ, பெற்றோர்களோ இறந்த மாவீரர்களை நினைவு கூறுவது அவர்கள் வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு நிகழ்வாகும் ஆனால் இந்நிகழ்வை ஒடுக்குவதற்காக‌ மிகவும் கடுமையான செயல்களில் ஆக்கிரப்பு இராணுவம் ஈடுப்பட்டது. அன்றைய நாளில் ஆலயங்களில் மணிகள் ஒலிப்பதைக் கூட தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலோ தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையின் பெயரால் மாவீரர் நாள் நிகழ்வு ஒடுக்கப்பட்டிருந்தது.

   தமிழ் ஈழத்தில் மாவீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மாவீரர் நாள் நிகழ்வை மிகவும் அமைதியாக கடைபிடிக்க, தமிழ்நாட்டில் வீரவணக்க, மாவீரர் நாள் நினைவு சுவரொட்டிகள் மூலம் மக்கள் மாவீரர் நாளை கடைபிடித்தனர். ஈழத்தமிழர்களை விட மிகவும் உன்னிப்பாக‌ இந்தியாவும், இலங்கையும் மாவீரர் நாளை கண்காணித்து வந்ததாக ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் உள்ள அரசியல் நோக்கர்கள் கூறினார்கள்.

   அதே நேரத்தில் தங்களது மேலாதிக்கத்தை வெளிப்படுத்தும் அரச தந்திர நடவடிக்கையாக‌ மாவீரர் நாளன்று இந்திய வெளியுற‌வுத்துறைச் செயலாளர். திரு எசு.எம்.கிருசுணா யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தர்மடத்தில் இந்திய தூதரகத்தை திறப்பதற்கான நாளாக தேர்வு செய்தார். தமிழர் தாயகத்தில் திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் அரச அலுவலகம் இது தான். வழமை போலவே  அரசியல் தீர்வைப் பற்றியோ, கொழும்பு அரசின் இராணுவ ஒடுக்குமுறையைப் பற்றியோ, அரசு தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளும் சிங்களமயமாக்கல்  மூலம் காலனீயாதிக்கத்தை மேற்கொள்வது பற்றியோ திரு.கிருசுணா எதையும் பேசவில்லை. அன்றும் கூட பொருத்தமில்லாமல் 13ஆவது சட்ட‌திருத்தத்தைப் பற்றியே அவர் பேசினார். இந்த 13ஆவது சட்ட திருத்தத்தை இந்தியா இலங்கையில் நடைமுறைப்படுத்த தவறி இருபது வருடங்களுக்கு மேலாகவே ஆகிவிட்டது. இந்த காலகட்டத்தில் இந்தியா ஈழத்தமிழர்களுடன் இரண்டு முறை போரிலும் ஈடுபட்டாகிவிட்டது. ஒருமுறை நேரடியாக, இரண்டாவது முறை மறைமுகமாக.

   ஆறுமுக நாவலருக்கும், தாமோதரம்பிள்ளைக்கும் இடையேயான நட்புறவைச் சுட்டி ஈழத்தமிழர்களுக்கும், தென்னிந்தியாவிற்குமான உறவைப்பற்றி யாழ்ப்பாணத்தில் பேசிய கிருசுணா, தென்னிலங்கையில் பேசிய போது புத்தர் பிறந்த 2600ஆவது ஆண்டு விழாவிற்க்காக கபிலவசுதுவில் உள்ள சிலைகளை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என பேசினார்.

    ஒருபுறம் தமிழர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே புறக்கணித்த 13ஆவது சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்ற‌ மிக வழமையான‌ பொய்யை யாழ்ப்பாணத்தில் கூறிய கிருசுணா, மறுபுறம் அரசியல் தீர்வை நோக்கிய(மழுங்கடிக்கும்) பல கட்ட பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசுடன் ஒப்புக்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மகிந்த இராசபக்சேவின் திட்டமான ஈழத்தமிழர்களின் தேவையான அரசியல் தீர்வை பயனற்ற ஒன்றாக‌ செய்யும் திட்டத்திற்கு தேன் முலாம் பூசி இந்தியா எதிரொலிக்கின்றது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றார்க‌ள்.

   ஈழத்தமிழர்களின் தேவையான அரசியல் தீர்வு பற்றி பல கட்டங்களாக‌ பேசிக் கொண்டிருக்கும் போதே, தமிழர் தாயகப்பகுதியில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கியும், இராணுவமயப்படுத்தியும் அந்த அந்த அரசியல் தீர்வை மழுங்கடித்து பயனற்ற நிலைக்கு கொண்டு செல்லும் தங்களது கொள்கைக்கு இந்தியா இசைவு(agree) தெரிவித்திருப்பது இலங்கை அரசாங்கத்திற்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
 
    கொழும்பு வழமை போலவே கிருசுணாவின் வருகைக்கு பதில் சொல்லும் விதமாக அழகாக அதற்கு அடுத்த நாள் இராணுவ உடன்படிக்கைகளில் கையெழுத்திடுவதற்காக பாகிசுதான் அதிபரை வரவழைத்தும், அதற்கு முன்பே சீனாவிலிருந்து ஒரு முக்கியமான அமைச்சரையும் வரவழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  "The Economist" இதழில் அண்மையில் வெளியான கட்டுரை ஒன்றில் "காசுமீரில் இந்தியாவும், திபெத்தில் சீனாவும் எவ்வாறு பல ஆண்டுகளாக அந்த மண்ணின் மைந்தர்களை அடக்குமுறை இராணுவப்படைகளைக் கொண்டு ஒடுக்கிவருவகின்றன எனவும், இந்தியா, சீனாவின் இந்த‌ ஒடுக்குமுறையிலிருந்தே இலங்கை அரசு  ஈழத்தமிழர்களை எவ்வாறு ஒடுக்குவது என்பதற்கான முறைகளை கற்றுக்கொண்டிருக்கலாம்" எனக் கூறியுள்ள‌‌து. மேலும் "உண்மை நிலை கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகின்ற இந்த நிலையில் போருக்குப் பின்னரான ஒரு ஒளிமயமான எதிர்காலம் என்பது ஈழத்தமிழர்களுக்கு உண்மையில் சாத்தியமா? என்ற கேள்வியை அந்த கட்டுரை முன் வைக்கின்றது.
 
   மாவீரர் நாளை எல்லா தரப்பு ஈழத்தமிழ் மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் கடைபிடித்த போதிலும், இந்த‌   இக்கட்டான சூழலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற திட்டவட்டமான நடவடிக்கைகளை நோக்கி ஈழத்தமிழர்கள் நகரவில்லை என்பதையும் ந‌ம‌க்கு உண‌ர்த்துகின்ற‌து.

      இந்திய, அமெரிக்க அரசுகள் இன்று ஈழத்தமிழர்கள் தங்களது தேசிய மற்றும் இன அடையாளங்களைப் பற்றி எண்ணக்கூடாது என்றும், ஈழத்தமிழர்கள் "ஒரு சிறுபான்மையினம்" என்றும் கூறிவருகின்றார்கள். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழர்களை இனப்படுகொலை செய்யும் இலங்கை அரசு தமிழர்கள் ஒன்று தங்கள் அடையாளங்களை, சுயமரியாதையை இழந்து வாழ வேண்டும் அல்லது தங்களது விடுதலைக்காக போராட வேண்டும் என்ற தெரிவுகளைத் தான் வழங்கியிருக்கின்றது என்பதை முழுமையாக தெரிந்துகொண்டு தான் அவர்கள் ஈழத்தமிழர்களிடம் உங்கள் அடையாளங்களை மறந்து விடுங்கள் என்று கூறிவருகின்றார்கள்.
    
      ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு நீதிபோத‌னைக‌ளை பிர‌ச்சார‌ம் செய்யும் எல்லோரும் ஈழத்தமிழர்கள் ஒரு பேர‌ழிவுக்கு உட்பட்டு இருந்த‌ நிலையில் கூட தங்களின் க‌ட‌மைக‌ளை செய்ய‌த்த‌வறியவர்கள் என்ப‌து இங்கே குறிப்பிட‌த்த‌க்க‌து.

    பெரிய நாடுகளுக்கு இடையே சிக்கிய தேசிய இனங்களுடைய நிலையிலேயே இன்று ஈழத்தமிழ் தேசம் உள்ளது. கொரிய, மங்கோலிய, பாசுகிய(Basques) தேசங்கள் இதற்கு முன்னர் இந்த நிலையை அனுபவித்துள்ளார்கள்.

    சிங்களவர்களின் "ஈழ‌த்தில் வாழுகின்ற‌ த‌மிழ‌ர்க‌ள் த‌மிழ்நாட்டில் வாழும் த‌மிழ‌ர்க‌ளின் நீட்சி" என்பது எந்த ஒரு ஆதாரமும் அற்ற கூற்று என பல முறை பலரும் சுட்டிக்காட்டியுள்ளார்கள், ஈழ‌த்த‌மிழ‌ர்கள் இலங்கைத்தீவில் தம்மைப்(சிங்களர்களைப்) போல் சரிசமமான உரிமையைக் கொண்ட ஒரு தேசிய இனம் என்ற‌ முழுமையான வரலாற்று உண்மையை ஏற்க மறுப்பதற்கு இந்த அறமற்ற‌ வாதத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.   

    arumuga_navalar_300 19ஆம் நூற்றாண்டில் உருவாகிய நவீன தேசியக் கருத்தாக்கத்தின் அடிப்படையிலேயே ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் தாங்க‌ள் ஒரு தனித்தேசிய‌ இன‌ம் என்று கூறினார்கள்.மேலும் ஈழத்தமிழர்கள் சிங்க‌ளவ‌ர்க‌ளுக்கு ப‌தில‌டி கொடுக்கும் வித‌மாக‌ அல்லாம‌ல் த‌மிழ்நாட்டு த‌மிழ‌ர்கள் அதுவரை அவ‌ர்கள் மேல் வைத்திருந்த பார்வைக்கு தெளிவு கொடுக்கும் விதமாகத்தான் தனித் தேசிய இன கருத்தாக்கத்தை உருவாக்கினார்கள். ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கென்ற‌ ஒரு த‌னித்த‌ வ‌ரலாற்றையும், இல‌க்கிய‌ ப‌ங்க‌ளிப்பையும் கொண்ட தமிழக தமிழர்களுக்கு  இணையான ஒரு தேசிய‌ இன‌ம் என்ப‌தை முத‌லில் அவ‌ர்க‌ளுக்கு எடுத்துக்கூறிய‌து ஆறுமுக‌ நாவ‌ல‌ரே. (ந‌ல்லறிவு‌ச்சுட‌ர் கொழுத்த‌ல், 1869, ஆறுமுக‌ நாவ‌ல‌ர் பிர‌ப‌ந்த‌ திர‌ட்டு)

       19ஆம் நூற்றாண்டில் இல‌க்கியத் தொகுப்பை உருவாக்கிய‌ அதே நேரம் த‌மிழை உல‌க‌ம‌ய‌ப்ப‌டுத்திய‌து வ‌ரை த‌மிழ் மொழிக்கான‌ ப‌ங்க‌ளிப்பில் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் ப‌ங்க‌ளிப்பு அள‌ப்பெரிய‌து. ஆனால் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் த‌ங்க‌ளைப் போல‌வே ஒரு த‌னித்தேசிய‌ இன‌ம் என்ப‌த‌ற்கான‌ ஒரு உறுதியான‌ அங்கீகார‌ம் த‌மிழ்நாட்டின் பொதுபுத்தியிலிருந்து இன்னும் வ‌ர‌வில்லை. அவ்வாறான‌ ஒரு அங்கீகார‌ம் இன்னும் த‌மிழ்நாட்டிலிருந்து வ‌ராத பொழுது, எப்ப‌டி நாம் சிங்க‌ள‌ தேசிய‌ இன‌ம் ஈழ‌த்த‌மிழ் தேசிய‌ இன‌த்தை அங்கீக‌ரிக்கும் என‌ எதிர்பார்க்க‌முடியும்?
   
            1936ல் வங்காளிகள் மதத்தின் அடிப்படையில் மேற்கு வங்காளம், கிழக்கு வங்காளம் என்று  தனித்தனியே பிரிகின்றார்கள். மேற்கு வங்காளிகள்(இன்றைய மேற்கு வங்காளம்) கிழக்கு வங்காளிகளை(இன்றைய வங்காள தேசம்)ஒரு த‌னி தேசிய‌ இன‌ம் என்றும், அவர்களின் வ‌ங்காள‌ தேசம் ஒரு தனி தேசம் என்றும்‌ அங்கீகாரமளிக்கின்றனர். இந்த தெளிவு தான் வ‌ங்காள‌ தேச‌த்திற்கான‌ விடுத‌லைக்கு மிக அடிப்படையான‌ பலமாக இருந்தது. இதே போன்ற சிந்தனை (ஈழத்தமிழர்கள் ஒரு தனி தேசிய இனம், ஈழம் ஒரு தனி தேசம்) த‌மிழ்நாட்டு ம‌க்கள் ம‌ன‌தில் தோன்றுவ‌தற்காக நாம் நிறைய‌ வேலைகளை செய்ய‌‌‌ வேண்டும்.

      இல‌ங்கை தீவில் மூன்று த‌மிழ் பேசும் ம‌க்க‌ள் குழுமங்கள் வ‌‌சிப்பதாக‌ கூறுவ‌தில் சில‌ இந்திய‌ எழுத்தாள‌ர்க‌ள் க‌ண்ணும் க‌ருத்துமாக‌ உள்ளார்க‌ள். இதில் இன்னும் சில‌ர் நான்கு த‌மிழ் பேசும் ம‌க்க‌ள் குழுமங்கள் வ‌சிப்பதாக‌வும் கூறுகின்ற‌ன‌ர்.  இவர்களி‌ன் நோக்க‌ம் என்ன‌வென்றால் எல்லா ம‌க்க‌ள் குழுமங்க‌ளையும் "சிறுபான்மையின‌ர்" ஆக்குவதே அன்றி வேறல்ல‌. இல‌ங்கைத்தீவில் தமிழர்கள் எங்கு வ‌சித்தாலும் அவர்கள் சுயமரியாதையுடன் உயிர்வாழ்வதற்கு தமிழீழ‌த்தை உருவாக்க‌ வேண்டிய‌து த‌விர்க்க‌ இயலாத‌ ஒன்று என்ற உணர்வுத்தளத்தை எவ்வாறு கட்டி எழுப்புவது என்று தமிழீழ‌ தேசிய‌ வாதிகள் புதிதாக‌  சிந்திக்கவேண்டும்.

   தங்களைப் போலவே தெற்காசியாவில் விடுதலைக்காக‌‌ போராடிக்கொண்டிருக்கின்ற தேசங்களோடு,  ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் ஒரு கூட்ட‌ணியை கண்டிப்பாக உருவாக்க முடியும். தனிநாட்டுக் கோரிக்கை என்பதை ஒரு மதக் கோட்பாடு போல நாம் பிடிவாதமாக‌  வாதிட‌த் தேவையில்லை. இறுதியாக நமது தேவை என்னவென்றால் எதன் அடிப்படையில் நாம் ஒடுக்கப்படுகிறோமோ அந்த ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்டு சுயமரியாதையுடன் கூடிய ஒரு வாழ்க்கையை உறுதி செய்வதே ஆகும். ஒருவ‌ன் த‌னது தேசிய‌ இன‌ அடையாள‌த்தின் அடிப்படையில் ஒடுக்குமுறைக்கும், இன‌ப்ப‌டுகொலைக்கும் ஆளானால், அவன் அதே தளத்தில் இருந்த அந்த ஒடுக்குமுறையை எதிர்கொண்டு த‌ன் தேச‌த்திற்கான‌ முழுமையான‌ விடுத‌லையையும், இறையாண்மையையும் வென்றெடுக்க வேண்டும். அவ்வாறு போராடும் அதே நேர‌த்தில்  கூட்டமைப்பிலுள்ள சிறிய நாடுகள்  சமமான பங்காளிகளாக நடத்தப்படக்கூடிய ஐரோப்பிய  ஒன்றியம் போன்ற ஒரு கட்டமைப்பைத் தெற்காசியாவில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் தேச‌ங்க‌ள் எல்லாம் ஒன்றிணைந்து கருத்தியல் ரீதியாக உருவாக்க முயற்சி செய்யலாம்.

 தமிழீழத் தேசிய இனத்திற்கும், சிங்களத் தேசிய இனத்தின் மீள் இணக்கப்பாடு ஏற்படுவதற்கே நாம் முதலில் பிரிந்தாக வேண்டும் என்ற கருத்தியலைச் சிங்கள தேசத்தில் உள்ள புரிந்துகொள்ளக் கூடிய பக்குவம் கொண்ட குழுமங்களுக்கு நாம் எடுத்துக்கூறவேண்டும்.

   த‌ங்க‌ளை சில‌ வ‌ல்ல‌ர‌சுக‌ளின் கொல்லைப்புற‌த்தில் தஞ்சம்‌ வைத்துக்கொள்வ‌தே ச‌ரியான‌து என‌ சில‌ ஈழ‌த்த‌மிழ் குழும‌ங்க‌ள் நம்பக்கூடும். ஆனால் அந்த குழுக்களில் இருக்கும் ந‌ம்பக்கைக்குரிய‌‌ முக்கிய‌மான‌ அர‌சிய‌ல் ஆற்ற‌ல்க‌ள் தைரிய‌மாக‌வும், திற‌ந்த‌ம‌ன‌துட‌னும், ந‌ம்பிக்கையுட‌னும் பூளோக‌ ஆற்ற‌ல் ச‌ம‌ன்பாட்டை(Global Power Equation) எதிர்கொள்ள‌வேண்டும். ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் சீனாவையும், பாகிசுதானையும் விலக்கி வைத்து பார்க்கக்கூடாது.

  தங்கள் பிர‌ச்ச‌னை உலகளவில் அங்கிகரிக்கப் பட வேண்டிய ஒரு சூழலை உருவாக்க வேண்டிய தேவை  உள்ளது,  அந்த அங்கீகாரத்தை அடையவும், நீண்ட‌கால‌மாக‌ நீடித்துக்கொண்டிருக்கும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னையின் தன்மையை கருத்தில் கொண்டும்,  ஒடுக்குமுறைக்கு உள்ளான‌ ம‌க்க‌ள் அனைத்து சாத்திய‌மான‌ வ‌ழிக‌ளிலும்  முயற்சி செய்ய‌ வேண்டும்.

   ஈழ‌த்த‌மிழ‌ர்களின் நலன்களை உறுதிசெய்வதென்பது இப்போது இந்தப்பிரச்சனையில் தலையிட்டுக் கொண்டிருக்கும் நாடுகளுடைய தவிர்க்க முடியாத தேவை என்று உணர செய்வதற்கான முயற்சியை நாம் மேற்கொள்ளவில்லை என்றால் நாம் அடையப் போவது எதுவுமில்லை.

மொழியாக்க‌ம்: ந‌ற்ற‌மிழ‌ன்.
மூலப்பதிவு: http://www.tamilnet.com/art.html?catid=99&artid=33184

நன்றி: தமிழ் முழக்கம் - திங்களிருமுறை இதழ்