சூத்திரர் என்கின்ற இழிவு நீக்கக் கிளர்ச்சி செய்வது என்பது சமுதாய சம்பந்தமான (சோஷியலிச)க் காரியமே தவிர, இதில் அரசியல் எதுவும் இல்லை. மற்றும் இதில் பலாத்காரம் என்பதும் இல்லை.

அதிலும் இந்த இழிவு நீக்கக் கிளர்ச்சி என்பது, உலகில் எங்குமே இல்லாத அக்கிரமக் கொடுமையிலிருந்து மனிதன் விடுதலை - மானம் பெற வேண்டும் என்பதற்கு ஆக நடத்தப்படும் கிளர்ச்சியேயாகும். இதில் எந்தவித வகுப்புத் துவேஷமோ வகுப்பு வெறுப்போ இல்லை. நம் நாட்டில் இந்துக்கள் என்னும் சமுதாயத்தில் 100க்கு 97 பேர்களாக உள்ள மக்கள் - அதிலும் படித்தவர்கள், செல்வவான்கள்; உயர்தர அய்க்கோர்ட் நீதிபதிகளாகவும், கலெக்டர்களாகவும், உப அத்தியட் சர்களாகவும் (துணைவேந்தர்கள்); மடாதிபதிகளாகவும், சமீப காலம் வரை மகா ராஜாக்களாகவும், அரசர் களாகவும், ஜமீன்தார்களாகவும் இருந்தவர்கள், இருப்பவர்கள் பல கோடி ரூபாய்க்குச் சொந்தக்காரர்களான பிரபுக்கள் உட்பட உள்ளவர் கள் சமுதாயத்தில் கீழ்ப்பிறவியாக, கீழ் மக்களாக, கடவுள் என்கின்ற (அதுவும் அவர்களுடைய கடவுள்) சிலையிடம் நெருங்கக் கூடாதவர்களாக, அறைக்கு வெளியில் நிற்க வேண்டியவர்களாகத் தலைமுறை தலைமுறையாகத் தடுக்கப்பட்டு, நிரந்தரக் கீழ் மக்களாக ஆக்கப் பட்டிருக்கும் கொடுமைக்கு, இழிவுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதிலிருந்து விலக்கி, மானமுள்ள மக்களாக ஆக்கப்பட வேண்டும் என்பதற்குக் கிளர்ச்சி செய்வதென்றால், இது இதுவரைச் செய்யாமலிருந்ததுதான் மானங்கெட்டத் தன்மையும் இமாலயத் தவறுமாகுமே ஒழிய, இப்போது கிளர்ச்சி செய்வது என்பது ஒரு நாளும் - ஒரு விதத்திலும் தவறாகவோ, கூடாததாகவோ ஆகாது, ஆகவே ஆகாது.

நீக்ரோக்களுக்கும், வெள்ளையருக்கும் உள்ள அளவு பிறவிபேதம் - நிற பேதம் - நாகரிக பேதம் நமக்கும், பார்ப்பனருக்கும், பூசாரிகளுக்கும் கிடையாது. அவ்வளவு பேத முள்ள (மைனாரிட்டி) நீக்ரோக்கள் மெஜாரிட்டியான ஆளும் ஜாதியாரான பிரபுக்களான வெள்ளையர்களோடு எல்லாத் துறையிலும் சரிசமமாகக் கலந்து உண்பன - உறங்குவன - பெண் கொடுக்கல், வாங்கல் உட்பட கலந்து புழங்குகிறார்கள். ஆனால் நம் நாட்டில் 100க்கு மூன்று பேரே உள்ள கூட்டம், பிச்சை எடுப்பதையும், உழைக்காத தையும், கூலிக்குப் புரோகிதம் செய்வதையும் உரிமையாய்க் கொண்ட - பிழைப்பாய்க் கொண்ட கூட்டம் மற்றும் வாழ்வில் யோக்கியமாக, நேர்மையாக நாணயமாக இருக்க வேண்டும் என்கின்ற தர்மம் இல்லாததும் தாங்கள் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம், எது வேண்டு மானாலும் செய்து பிழைக்கலாம் என்கிற அனுபவத்தில் இருக்கிற கூட்டம் தங்களை 'மேல் பிறவி' என்றும், நம்மைக் கீழ்ப்பிறவி, - இழிபிறவி - பொது இடமாகிய கடவுள் என்கிற கல் சிலையிருக்கும் இடத்தில் பிரவேசிக்கக் கூடாத மிக மிக இழித்தன்மையானவர்கள் என்பதான நிபந்தனையை நாம் ஏற்றுக்கொண்டு, கட்டடத்திற்கு - அறைக்கு வெளியில் நின்று வணங்க வேண்டும் என்பதை நிலைக்க விடலாமா? என்பதுதான் கிளர்ச்சியின் தத்துவமாகும்.

வேறு நாடுகளில் இப்படிப்பட்ட கொடுமையான, இழிவான தன்மை எந்த சமுதாயத்திற்கு இருக்குமானாலும் எவ்வளவோ கொலை, பலாத்காரம், நாச வேலைகள் நடத்தி ஒழிக்கப்பட்டிருக்கும்? அப்படிக் கொடுமை இந்த நாட்டில் இருந்து வருகிறதென்றால், இது யாருடைய தவறு? யாருடைய மானங் கெட்ட ஈனத்தனம்? என்று ஒவ்வொரு தமிழனையும் சிந்தித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்கிறேன் மற்றும் இது விஷயத்தில் நாம் கிளர்ச்சி செய்து வெற்றி பெற்றால், அதனால் யாருக்கும் எந்த நபருக்கும் ஒரு தூசி அளவு நட்டமும், கேடும் இல்லாத ஒரு காரியமாகும். கடவுள்களைப் பூசை செய்கிற பூசாரி வேலை, பார்ப்பனருக்குத்தான் - மேல் ஜாதிக்காரருக்குத் தான் உண்டு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் கோயில் பூசை செய்பவன் பார்ப்பானல்ல - மேல் ஜாதிக்காரனுமல்ல . குருக்கள் என்கின்ற ஒரு ஜாதியானாவான் என்றும் சொல்லப்படு கிறது, ஆதாரங்களிலும் இருக்கிறது.

அந்தக் குருக்கள் என்பவர்கள் பார்ப்பன ரல்லாத சைவர்களே ஆவார்கள் என்றும் சில ஆதாரங்களில் இருக்கின்றன. மற்றும் ஒரு குறிப்பிட்ட ஜாதியார்தான் பூசாரியாக இருக்க வேண்டுமென்கின்ற நிபந்தனை எந்த ஆதாரத் திலும் இல்லை.

குருக்கள், அர்ச்சகர்கள் என்பவர்கள் வீட்டில், பார்ப்பனர்கள் என்பவர்கள் சாப்பிடவே மாட் டார்கள்; பெண் கொடுக்கல், வாங்கலும் செய்ய மாட்டார்களாம். இந்த நிலையில் இருப்பவர்கள் பூசை செய்யும் இடத்திற்கு, மற்ற இந்து மக்கள் - பார்ப்பனரல்லாதார் மட்டும் நுழையக் கூடாது என்றால் அது எப்படி நியாயமாகும்?

தமிழ்நாட்டிலேயே பல கோயில்களில் சாத்தாணி என்கின்ற பார்ப்பனர் அல்லாத வர்கள் பூசை செய்கிறார்கள். பல கோயில் களில் ஆண்டிகள், பண்டாரங்கள் என்கின்ற பார்ப்பனர் அல்லாதவர்கள் பூசை செய்கிறார்கள். மற்றும் நாம் மூலஸ்தானம் என்பதற்குள் செல்வதால் அந்த இடத்திற்கோ, சாமிக்கோ எந்தவிதப் புனிதமும் கெட்டுப் போவதில்லை, சிலையைத் தொட வேண்டாம் என்று வேண்டு மானாலும் திட்டம் வைத்துக்கொள்ளலாம். ஆனால் நெருங்கக் கூடாது; அந்த அறைக்குள் "படி தாண்டக்கூடாது' என்பது என்ன நியாயம்? உற்சவக் கடவுள்கள், சிலைகள் என்பவற்றிடம் எல்லாம் எல்லா ஜாதியாரும்; எல்லா மக்களும் நெருங்குகிறார்கள்.

மூலஸ்தானத்திற்கு வெளியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவக் கிரகங்கள் என்கின்ற கடவுள்கள் முதலிய சிலைகளிடம் எல்லோரும் நெருங்குகிறார்கள்.

எனவே இந்தக் "கர்ப்பக் கிரகம்' என்கின்ற பூச்சாண்டிகள், பார்ப்பனரல்லாத மக்களை, இழிமக்கள் - இழி பிறப்பாளர்கள் என்று ஆக்கப் படுவதற்காகத்தான் இருந்து வருகிறதே அல்லாமல் மற்றபடி வேறு எந்த புனிதத் தன்மையையும் பாதுகாக்க அல்ல என்பதே நம் கருத்து. அன்றியும் நாம் உள்ளே சென்று வணங்குவதால் எந்தப் புனிதத் தன்மையும் கெட்டு விடுவதில்லை என்பதும் நம் உறுதி. மற்றும் உள்ளே செல்ல வேண்டும் என்கின்ற நமக்கும் உண்மையில் எந்தப் புனிதத் தன்மையையும் கெடுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் இல்லவே இல்லை.

நம் இழிவு நீக்கப்பட வேண்டும் என்கின்ற காரியத்திற்கு ஆகத்தான் செல்லுகிறோம்.

ஆகவே தோழர்களே, இந்தக் கிளர்ச்சி அவசியமா இல்லையா?

என்ன சொல்கிறீர்கள்?

அவசியம் என்றால் வாருங்கள் போகலாம்.

உடனே பெயர் கொடுங்கள்.

(விடுதலை, 15-10-1969)