பாபரி மஸ்ஜித் வழக்கின் வழக்கறிஞரும், இவ்வழக்கை நீண்ட நாட்களாக நடத்தி வருபவருமான ஜஃபர் பாய் ஜீலானி அவர்கள் தொலைபேசியில் வைகறைக்கு அளித்த பேட்டி

babri masjid 600

கேள்வி : நீண்ட நாட்களாக நடைபெறும் பாபரி மஸ்ஜித் வழக்கின் தற்போதைய நிலை என்ன?

பதில் : வழக்கு தொடர்பான எல்லா ஆவணங்களையும் நம்மால் உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் ஆவணங்களை ஹிந்தியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க கேட்டு கொண்டுள்ளது. இதற்கான மொழிபெயர்ப்பு இன்னும் தொடங்கவில்லை. மொழிபெயர்ப்பு தொடங்காததால் வழக்கு விசாரணை தொடங்கும் தேதி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.

கேள்வி : பாபரி மஸ்ஜித் இடத்தில் கோவிலைக் கட்டும் அளவிற்கு சட்டங்களில் மாற்றம் கொண்டுவந்து கோவிலைக் கட்டுவோம் என பாரதீய ஜனதா தனது தேர்தலின் அறிக்கையில் கூறியுள்ளதே அப்படி கூறுவது சட்டப்படி சரிதானா?

பதில் : பாரதீய ஜனதா வால் வெளியிடப்பட்ட இந்த தேர்தல் வாக்குறுதி சட்டப்படி சரியானதல்ல,

கேள்வி : பாரதீய ஜனதா தனது தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் பாபரி மஸ்ஜித் விடயத்தில் இதுவரை என்ன செய்துள்ளனர்?

பதில் : அவர்கள் இதுவரை எதுவும் செய்யவில்லை. பாரதீய ஜனதா வாக்குகளுக்காகவே அப்படி ஒரு வாக்குறுதியை அள்ளி வீசியுள்ளது.

கேள்வி : வழக்கினை துரிதபடுத்த உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

பதில் : நாமும் நமது பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து உச்சநீதிமன்றத்திடம் வழக்கு விசாரணைக்கான தேதியை அறிவிக்கும்படி கோரிக்கையை வைக்கச் சொல்ல வேண்டும் அப்படி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தால் வழக்கை நாம் வெல்வதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன.

குறிப்பு : உச்சநீதிமன்றம் பாபரி மஸ்ஜித் வழக்கு சம்பந்தமாக எல்லா ஆவணங்களையும் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்க வேண்டும் என்று சொல்லியுள்ளது நம்மில் பல ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆவணங்களை மொழிப்பெயர்த்து முடிப்பதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். இதற்குள் உத்திரபிரதேச அரசை தங்களுடைய கரங்களுக்குக் கொண்டுவந்து பாரதீய ஜனதா கோவிலைக் கட்டலாம்.

அப்படி கட்டினால் உச்சநீதிம்ன்றம் கட்டும்வரை வேடிக்கை பார்த்துவிட்டு எந்த நிலையில் இருக்கிறதோ அதை அப்படியே பாதுகாக்க வேண்டும் என்கின்ற தீர்ப்பை சொல்லி கட்டப்பட்ட கோவிலை பாதுகாப்பதற்கான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பல உச்சநீதிமன்ற நீதீபதிகளும், உயர்நீதிமன்ற நீதிபதிகளும், மனித உரிமை ஆர்வலர்களும் பாபரி மஸ்ஜித் வழக்கை இத்தனை ஆண்டு காலம் திட்டமிட்டு இழுத்தடிப்பது உச்சநீதிமன்றம்தான் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

பாபரி மஸ்ஜித் சம்பந்தமான மேலதிக விபரங்களுக்கு மு. குலாம் முஹம்மது அவர்கள் எழுதிய வேர்கள் வெளியீட்டகத்தின் வெளியீடான " பாபரி மஸ்ஜித் அடிப்படைத் தகவல்கள் " எனும் நூலை வாங்கிப்படிக்கவும்.

இப்போதும் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் இழுத்தடிக்கவே முயற்சி செய்கின்றது.