சில நாட்களுக்கு முன் நடந்த தலித் தொடர்பான கூட்டமொன்றில் நண்பர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்தபோது "இக்கூட்டத்தில் வழங்கப்படும் சாப்பாட்டில் மாட்டுக்கறியெல்லாம் இல்லையே ! அதுவும் தலித் கூட்டத்தில் மாட்டுக்கறி இல்லாமல் சாப்பாடா?" என்றார். வேறொரு தருணத்தில் எழுத்திலும், பேச்சிலும் கொச்சையான சொற்களை கையாளும் எழுத்தாளர் ஒருவரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது "அந்த எழுத்தாளர் தலித் அதனால் அவர் அப்படி பேசுவதுதானே சரியாக இருக்க முடியும்" என்றார்.

     மாட்டுக்கறியும், கொச்சையாக பேசுவதும் தலித்துகளின் அடையாளம் என்பது இதன் பொருள். தலித் பிரச்சனையில் கரிசனம் காட்ட விரும்பும் இடது சாரிகள் குறித்து ஒரேவிதமான கருத்தினையே வெளிப்படுத்துகின்றனர். குடி, அழுக்கு போன்றவற்றையும் தலித்துகளின் அடையாளமாக பேசமுனைந்த அறிவுஜீவிகளும் இங்கிருந்தனர்.

     dm_mani_pho_370ஆனால் இது குறித்து தலித் மக்கள் நினைப்பது என்ன? இவை தலித் அடையாளங்கள் தானா? என்பதே இக்கட்டுரை எழுப்ப விரும்பும் வினா. ஒருவகையில் சொல்லப்படும் இந்த அடையாளங்கள் யதார்த்தத்தில் நிலவுவைதான். சாதிரீதியாக தொழிலும், இருப்பிடமும், வாழ்முறையும் பாகுபடுத்தப்பட்டு திணிக்கப்பட்டுள்ளது. தலித்து களுக்கென்று ஒதுக்கப்பட்ட அடையாளத்திலிருந்து மாறுபடுவது சாதி மீறலாகும். அதை சாதிசமூகம் அனுமதிப்பதில்லை. விரும்பும் தொழிலை, உணர்வை, வாழ்முறையை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான சுதந்திரத்தை சாத்தியப்படுத்துவதே சாதிய மறுப்பாக இருக்க முடியும்.

     எனில் தலித்துகளிடம் நிலவும் இன்றைய அடையாளங்களை அவர்களுக்கேயுரியது என்று சொல்வது சாதி மறுப்பாகுமா? மாட்டுக்கறியோ, பறையடிப்பதோ அவர்களின் விருப்பமாக இருக்குமானால் அது பிரச்சினையில்லை. ஆனால் அதை அவர்களின் அடையாளம் என்று சொல்வதன் மூலம் இச்சமூகத்தின் பிற தளங்களில் அவர்களின் பங்களிப்பு மறுக்கப்படுகிறது. பொதுத்தளத்தின் மீதான அவர்களின் உரிமை மறுக்கப்படுகிறது. உண்மையில் தலித் மக்கள் அவர்களின் இன்றைய அடையாளங் களிலிருந்து விடுபட்டு சுயமரியாதை மிக்க வாழ்வை அடைய விரும்புகின்றனர். ஆனால் அத்தகைய புரிதலை உள்வாங்கி செயற்படும் அமைப்புகளாக களமும், அரசியல் தளமும் இல்லையென்பது வருத்தமே.    

     இப்புரிதலை நம் சூழலில் பெறாமல் போனதன் காரணம் என்ன? தலித் மக்களின் விருப்பங்களிலிருந்தும், கடந்த கால இயக்கங்களின் தொடர்ச்சியிலிருந்தும் தலித் அடையாளத்தை யாரும் உருவாக்கிக் கொள்ளவில்லை.

     கடந்த கால தலித் அமைப்புகளும், தலைவர்களும் பெரும் திரட்சியை சாத்தியப்படுத்தாவிட்டாலுங்கூட இத்தகைய புரிதலிலிருந்து செயற்பட்டனர். சாதியும், சாதிசார்ந்த கீழான அடையாளங்களும் தலித் மக்கள் மீது சுமத்தப்பட்டதன் தொடர்ச்சியாகவே அவர்களுக்கு உணவு, தொழில் இருப்பிடம் போன்றவை ஒதுக்கப்பட்டன. எனவே திணிக்கப்பட்ட தொழிலை, உணவை, மறுப்பதும். மறுக்கப்பட்ட அடையாளங்களை தங்களுக்குரியதாக பேசி மீட்டெடுத்தும் செயற்பட்டனர். அத்தகைய முன்னோடி முயற்சிகள் அறியப்படாமல் போனதின் அடிப்படையான பின்னணி எதுவெனில் தலித் மக்களின் போராட்டம்.

     இயக்க வரலாறு போன்றவற்றை யாரும் அறிய மறுத்ததே ஆகும். ஒவ்வொரு இயக்கமும் தங்களின் வருகைக்குப் பின்னர்தான் இம்மக்கள் கண்விழித்தனர். அதுகாறும் அடிமை நிலையிலேயே இருந்ததாக கருதுவதும் இதனால்தான் ஆனால் இத்தகைய எண்ணங்களை மறுக்கும் பதிவுகள் இப்போது எழுத்துகளாக வந்துக் கொண்டிருக்கின்றன. அத்தகைய பதிவுகள் குறித்து நிலவும் மௌனத்தை கடக்க இக்கட்டுரை முயற்சிக்கிறது.

     தலித் எழுத்து, வரலாறு, பண்பாடு என்று நிலவி வரும் கருத்துக்களிலிருந்து முற்றிலும் விலகிய தலித் எழுத்தை அண்மையில் வாசிக்க முடிந்தது. டி.எம். உமர் ஃபாரூக் என்றழைக்கப்படும் டி.எம். மணி என்ற தலித் தலைவர் எழுதிய நூல்களே அவை. 1960கள் இறுதி தொடங்கி தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணம், திருப்பனந்தாள் வட்டாரங்களில் இயற்றப்பட்ட நீலப்புலிகள் இயக்கத்தின் தலைவர் அவர். அமைப்பாக நின்று இப்பகுதி கிராமங்களில் இயங்கியபோது எற்பட்ட அனுபவங்களையும், அதன் வாயிலாக பெற்றுக் கொண்ட கருத்தியல்களையும் 'சாதி ஒழிந்தது' 'செந்தமிழ் நாட்டு சேரிகள்' என்னும் இரண்டு நூல்களாக எழுதியுள்ளார்.

     சாதாரண நடைமுறையாகி விட்ட தலித்துகளின் இழிவாழ்வு. அதற்கு எதிரான தொடர் போராட்டங்கள், சளைக்காத அர்ப்பணிப்பு என்று இயங்கியதால் தலித் மக்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களைச் சொல்வது இந்நூல்கள் 30 ஆண்டுகால ஆவணமாய் மாறிநிற்கின்றன. தலித்துகள் குறித்த பழமையான சித்தரிப்புகளோடு முரண்படாத எழுத்துக்களே 'தலித்வாழ்வாக' மாறிவிட்ட சூழலில் இந்நூல்கள் வாசகர்களுக்கு வேறொரு உலகை காட்டுகின்றன. இவ்வாறு காட்டப்படும் இப்பதிவுகளே எதார்த்தமானவை. தான் இழிவு படுத்தப்பட்டதை இப்பதிவுகள் மறைக்கிறது. என்பது இதன் பொருளல்ல, 'எதார்த்தமாகி விட்ட இழிவுகளுக்கு எதிரான போராட்டங்களையும் அதில் பெற்ற வெற்றிகளையும் இவை சொல்கின்றன என்பதே தனித்துவத்திற்கு காரணமாகின்றன'

     இழிவுகளை மறுத்து, மறுக்கப்பட்ட கல்வி உள்ளிட்ட தன்மான வாழ்வுக்கான அம்சங்களைப் பெற முயற்சிக்கிற அப்போராட்டங்கள் சாதி இழிவுகளை சுயமானதாக கருதுவதில்லை இவ்விடத்தில் சாதி தங்கள் மீது திணிக்கப்பட்டவை தானே ஒழிய 'விரும்பி' ஏற்றக் கொண்டவை அல்ல என்னும் புதிய உள்ளடக்கத் தினையும் அவர்கள் உருவாக்குகின்றனர். அதனால்தான் இழிவை சுமத்துவதைக் காட்டிலும், அதற்கு எதிரான போராட்டத்தில் கடுமையாக நடந்து கொள்கின்றனர் ஆதிக்க வகுப்பினர். ஆனால் பெறவிருக்கும் விடுதலையுணர்வுகளுக்கு முன்னால் போராட்டத்தின் வலி தலித்துகளுக்கு லேசாகிப்போகின்றன. தலித் விடுதலைக் கருத்தியலுக்கு இத்தகைய புரிதலை இந்நூல்கள் தருகின்றன.

     சுய அனுதாபத்தை வேண்டாமல் எழுதப்பட்ட தலித் எழுத்துக்கள் மிகக் குறைவே, தலித்துகள், தவிர்த்தமற்ற எழுத்தாளர்கள் யாரும் தங்கள் முன்னோர்களும். வகுப்பினரும் நடத்திய சாதிநடைமுறைகளைக் குறித்து வெளிப்படையாக எழுதவே இல்லை. ஆனால் உலகத்தின் எந்த பாகுபாடுகளுக்கும் குறையாத சாதிப்பாகுபாடு இங்குதான் நிலவுகிறது. இக்குறைகளைத் தவிர்த்த தலித் அனுபவத்தை தரக்கூடிய நூல்களாக இவை மாறியிருக்கின்றன. எழுதுவது இந்நூலாசிரியரின் முன்கூட்டிய திட்டமோ, முழுநேர வேலையோ, அல்ல, நான் இலக்கியவாதியோ எழுத்தாளனோ இல்லை என்று அறிவிக்கும் அவரின் அசாதாரண எழுத்து நடை இது.

     அடர்ந்த காடு, இருண்ட சூழ்நிலை, உடைந்த மனம், பதுங்கி முடங்கிக் கிடக்கிற அற்பமான வாழ்க்கை ஏன் இந்த அவலம்? எதை வாரிக்கட்டிக் கொள்ள இப்படி அவதிப்படுகிறோம்? சொத்துசுகம் சேர்த்துக் கொள்ளவோ? இந்துக்களின் நிலபுலத்தில் மாடி மனையில் பங்கு கேட்கவோ? இல்லையே! நாங்களும் மனிதர்கள் தானே.. என்று விரிகிறது அந்த எட்டாம் வகுப்பு மட்டுமே படித்தவரின் எழுத்து.

      முதல் நூலின் தொடர்ச்சிதான் இரண்டாம் நூல் அமைப்பு கட்டி போராட்டம் நடத்திய ஊரின் பெயர் சாதிப் பிரச்சினைக்கு எதிராக பேராடியவரின் பெயர் போன்றவற்றை தலைப்புகளாகக் கொண்டு சாதி ஒழிந்தது நூலில் கட்டுரைகளையும், செந்தமிழ் நாட்டு சேரிகள் நூலில் கட்டுரைகளையும் கொண்டுள்ளார். சில கட்டுரைகளை மட்டும் சமூகம் தொடர்பான தம் கருத்துக்களையும், விமர்சனங்களையும் எழுத பயன்படுத்தியிருக்கிறார். இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நிகழ்விற்குள்ளும் டி.எம். மணி இருக்கிறார் நேரடி அனுபவத்திலிருந்து குறிப்பிடத்தக்க சம்பவங்களை மட்டும் தொகுத்து எழுதியுள்ளார்.

     கும்பகோணம், திருப்பனந்தாள் வட்டாரம் காவிரிப்பாயும் நிலப் பரப்பு யாவும் கோவில்களுக்கும், மடங்களுக்கும் உரிமை. இந்நிலங்களில் உழைக்கும் பண்ணையடிமைகளாய் தலித்துகள் இருந்தனர். "உயர்ந்த மதில் சுவர்களுடைய மடம் ஒருபுறம்,. சிவன் கோவில் மறுபுறம்... ஒவ்வொரு சிவன் கோவிலுக்கும் ஒரு தலவரலாறு இருக்கும். இப்படி ஒவ்வொரு சேரிக்கும் ஒரு தல வரலாறு போல. இது கட்டுக் கதையல்ல, காலங்காலமாக சாட்சியங்களாய் இன்னும் சேரிகளில் உயிரோடு இருக்கிறார்கள்." என்பதை சொல்லும் டி.எம். மணி அவ்வாறான 'தலவரலாறு' ஒன்றையும் சொல்கிறார். திருலோகி என்னும் கிராமத்தின் சேரிப்பெண் ஆயிபொன்னு என்பவர் வழக்கமாக செல்லும் மணியக்காரர் பண்ணை சாணியள்ளும் வேலைக்கு 3 நாட்களாக செல்லவில்லை. காரணம் அவருக்கு பிரசவம் ஆகியிருந்தது. இருந்தும் மூன்றாம் நாளே பண்ணை வேலைக்குத் திரும்பினார், கோபத்தோடு அவளை திட்டித்தீர்த்த மணியக்காரர் அவளின் மேலாக்கை பிடித்துக் கொண்டு மூங்கில் கழியால் அடித்தார். பண்ணையாரின் 'மண்ணான' சேரியிலிருக்கும் அவரின் குடிசையில்யாரும் நுழையாதவாறு வேலியும் வைத்தார்.

     ஆயிப்பொன்னுவின் கணவரையும் பண்ணைக்கு வரும்படி சொல்லி அனுப்பினார். கணவனுக்கு நேரவிருக்கும் கதி, தனக்கு ஏற்பட்ட அவமானம் இரண்டும் சேர்ந்து இரண்டு வயதான தன் மூத்த மகன் மணிக்குஞ்சுவை பிறந்த குழந்தைக்கு காவல் வைத்துவிட்டு கூரையிலேயே தூக்குமாட்டி செத்தார் ஆயிபொன்னு. இவைதவிர படி நிலை சாதியமைப்பில் மேலேயுள்ள எல்லா சாதிகளுக்கம் இழிவு வேலை செய்யவேண்டிய நிலை டி.எம்.மணி விவரிப்பதைப் போல "இந்து வீட்டில் ஒருவர் இறந்து விட்டால். முன்னதாகச் சென்று வெட்டியான் சுடுகாட்டில் காத்திருக்க வேண்டும்.

     பிணம் வருவதற்குள் சுடுகாட்டை சுத்தம் செய்து எரிபொருள் சேகரித்து விறகுக் கட்டைகளை அடியில்வைத்து அதன்மேலே விராட்டிகளை அடுக்கி அஸ்திவாரமிட்டு வைத்திருக்க வேண்டும். பிணம் சுடு காட்டிற்கு வரும்போது கட்டாயம் தயார்நிலையில் இருக்க வேண்டும். அடுத்து வண்ணான் செத்தவர் வீட்டிற்குச் சென்று மூங்கில் வெட்டிவந்து பாடைசெய்யும் பணியைச் செய்யவேண்டும். பிணம் தூக்கிச் செல்லும்போது. நோக்கர் கொம்பு ஊதியும், சேங்கண்டி அடித்தும் செல்லவேண்டும். பிணம் இறக்கும்போது வெட்டியான் விலகிக் கொள்ள வேண்டும். அவன் தீண்டாத சாதி அல்லவா? வண்ணானும் அம்பட்டரும் பாடையிலருந்து பிணத்தை எடுக்க வசதி செய்து கொடுக்க வேண்டும். இதற்குள் நாவிதர் கத்தியை எடுத்துக் கொண்டு கொள்ளிவைப்பவர் முடியைச் சிரைப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

     இதில் யாராவது ஒருவர் கடமை தவறினால் அந்தக் கிராமத்தில் சிக்கல் ஏற்பட்டுவிடும். கடமை தவறிய வருக்கு எந்த மாதிரியான தண்டனை என்பது ஊரைப் பொறுத்து. சூழ்நிலையைப் பொறுத்தது" இவை கிராமங்களின் நிலை. இழிதொழில்களுக்கு எதிரான தலித்துகளின் போராட்டம் எந்தக் கிராமத்திலும் எளிதில் நடந்தேறிவிடவில்லை. பெரும் கலவரங்களை ஏற்றபடியே போராட்டங்கள் நடந்தன கலவரத்தோடு பிரச்சினை நிற்பதில்லை. ஏற்கனவே சொந்தமாக நிலமற்ற இம்மக்களுக்கு வேலை மறுப்பு, தானாகவே எரிவதைப் போல கொளுத்தப்படும் குடிசைகள், தாக்குதல், வழக்கு அலைக் கழிப்பு என்பவைகளாக நீடித்தன. இப்படியே முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள்.

     இப்பகுதி அரசியல் கட்சிகளென்றால் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், போன்றவை இருந்தன. கீழ்த்தஞ்சை மாவட்டம்போல கம்யூனிஸ்ட் கட்சி இப்பகுதியில் பரவலாகியிருக்கவில்லை. நக்சல்பாரி பாதையை ஆதரிக்கும் இடது சாரிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலித்துகளிடம் தென்பட்டனர். பொதுவாக சுடு காட்டுப்பாதை போன்ற சிவில் உரிமைகளை வலியுறுத்தும் கம்யூனிஸ்ட்கள் சுடுகாட்டில் பிணம் புதைப்பதும் யார் என்பன போன்ற அழுத்தமான பார்வையை இன்று வரையிலும் பெறவில்லை.

     சாத்திர இழிவு ஒழிப்புக்காக பாடுபட்ட திராவிடர் கழகம் அச்சாத்திரர்களால் தலித்துகள் மீது சுமத்தப்படும் இழிவுகளைக் கண்டித்து போராடிய வரலாற்றைப் பெறவில்லை. இந்நிலையில் இழிவு ஒழிப்பு போராட்டங்களை தலித்துகளே தனியாகவும் அமைப்பாகவும் நடத்தவேண்டிய நிலை. அப்படித் தான் தனித்துப் போராடியது நீலப்புலிகள் இயக்கம். இவ்வட்டாரத்தை ஒட்டி தென்னார்க்காடு அமைந்திருந்தமை சாதகமான அம்சமாய் இருந்தது. அப்பகுதியில் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்து வெற்றிப் பெற்றிருத்தார் எல். இளையபெருமாள்.

     நீலப்புலிகளின் போராட்டத்திற்கு கைக்கொடுப்பவராக, காங்கிரஸில் இருந்த தலித்தலைவராக இவர் இருந்தார் இந்த இரண்டு நூல்களிலும் பல்வேறு கட்சிகளை, தலைவர்களை விமர்சித்து எழுதிச் செல்லும் டி.எம்.மணி மதிப்போடு 'தலைவர்'என்று விளிக்கிறார் என்றால் அவர் எல். இளையபெருமாள்தான் இதேபோல் வடஆர்காடு பகுதியிலும் இழிவு ஒழிப்புப் போராட்டங்களை குடியரசுக்கட்சி நடத்தியது தமிழகத்தின் பிறபகுதிகளைக் காட்டிலும் தலித்துகள் சற்றுமுன் கூட்டியே 'மேம்பாடு' பெற்றதற்கு இத்தகைய அரசியல் விழிப்புணர்ச்சியும் ஒரு காரணம் இப்பகுதியில் கிராமங்கள்தோறும் இவ்வகையான போராட்டங்களை தொகுக்கும்போது தலித் போராட்டத்தின் வலிமை உணரப்படும் கிராமங்களில் பெரும்பான்மை ஆதிக்கசாதியினருக்கு எதிராக நடத்தப்படும் சாதி மறுப்பு போராட்டங்கள் சாதாரணமானவை அல்ல. இவ்வாறான போராட்டங்களை தலித்சார்ந்து எழுதுவோரும்கூட அறியவில்லை. இப்போராட்ட வரலாற்றை ஏற்காமல் தலித் அடையாளத்தை "செஞ்" சோற்று கடனுக்காய் கம்யூனிஸ்டுகளிடம் விற்றுக் கொண்டிருக்கும் ஒருவர் கிராமங்களில் தலித் இயக்கங்களில் போராடிய துண்டா? என்று அண்மையில் எழுதியிருக்கிறார். போராட்ட வரலாற்றை பதிவுசெய்ய வாய்ப் பில்லாமல் போனதற்கு தலித்துகள் மட்டுந்தான் பொறுப்பா?

     இழிவு ஒழிப்பு போராட்டங்களாகவே இப்போராட்டங்கள் நின்று போய் விடவில்லை. கிராமங்கள்தோறும் "கல்விப்பணிகள் நடந்து கொண்டிருந்தன ஊக்கத் தொகை, உதவித் தொகை, உயர்கல்வி நிதி, பகுதி நேரக்கல்வி, இப்படி ஏராளமான பட்டதாரி இளைஞர்கள் தொண்டாற்றிச் கொண்டிருந்தனர். சட்டப் பூர்வமாகவும். சாதுர்யமாகவும் சாதிக் கொடுமைக்கு எதிராகப் போராடி வந்தார்கள் இவ்வகை மாற்றங்கள் இழிவுமறுப்பு போராட்டங்கள் நடந்த மற்ற பகதிகளிலும் நடைபெற்றன. வடஆர்காட்டுப் பகுதியில் தொடங்கி நடத்தப்பட்ட இரவுப்பள்ளிகள் ஏராளம். தொடக்கம் முதலே தலித் தலைவர்கள் கல்வி மேம்பாட்டுக்காகப் பாடுபட்டனர்.

     இத்தகைய செயற்பாடுகள் சாதிகுறித்த தனித்துவமான கருத்தியல்களை உருவாக்கிவிட்டன. அதாவது சாதி இழிவோடு இருந்தாலும் அந்த இழிவுதான் நம்முடைய காலகாலமான அடையாளம் என்ற பார்வை அவர்களிடம் இல்லை. அவ்வாறு கருதும்போதுதான் அதிலிருந்து விடுபடுவதற்கான நியாயம் உருவாகிறது. சாதியற்ற தளத்தில் இவர்களின் இடம் என்ன? எனும் கேள்வியும் எழுகிறது. அப்போது தான் சாதிக்கென்று பகுக்கப்பட்ட தொழில் உள்ளிட்ட அடையாளங்களை மறுத்துவிட்டு, மறுக்கப்பட்ட கல்விமேம்பாடு போன்ற சுயமரியாதைமிக்க அடையாளங்களை கையெடுக்கின்றனர். இம்மாற்றத்தின் கருத்தியல் வகிபாகம் என்ன? சாதிசார்ந்த அடையாளங்களை ஏற்பதை மறுத்து விரும்பும் தொழிலையும், அடையாளத்தையும் ஏற்பதே சாதிமறுப்பு என்பதாகிறது. தலித் தலைவர்களின் போராட்டம் இத்திசை நோக்கி இயங்கியிருக்கிறது.

     பண்ணையின் விசுவாசியாக இருந்து பட்டினிகிடந்தே மடிந்த தாத்தா, அடிமைப்பட இன்னொரு பண்ணையைத்தேடி கிடைக்காமல் ஊர் ஊராய் கூலி வேலைக்கு அலைந்த தாய் தந்தை, ஆறாவது தலைமுறையாக அடிமை முறை வந்தபோது நீதிக்கட்சிக்கு ஓட்டுப் போடவில்லையென பண்ணையார் மாணிக்கம் பிள்ளையால் பறிக்கப்பட்ட வேலை என்ற குடும்பப் பின்னணியைக் கொண்ட டி.எம்.மணி யின் அப்பா ஒருமுறை ஈரத்துண்டை உலர்த்துவதற்காக தோளில் போடப்பட்ட போது மணியக்காரரை விட அவர் எத்துணை சிறந்த அறிவாளி. "அப்பா எவ்வளவு நாகரீகமானவர், அந்தக் காலத்திலேயே இலக்கணம் (நிகண்டு) படித்தவர். ராமாயணம், மகாபாரதம், அரப்பலிசதகம், குமரேச சதகம், சீவகசிந்தாமணி போன்ற நூல்களிலுள்ள பாடல்களை யெல்லாம் மனப் பாடமாகவேபாடுவார்" இதையெல்லாம் எந்த சூழ்நிலையில் அவர் படித்தார்.

     இந்துக்களின் தெருவிலுள்ள பள்ளியில் நுழைய தீண்டாமை தடுத்ததால் வெளியே அரசமர நிழலில் அமர்ந்து படித்தவர். அந்தக் காலத்தில் முக்கியப் படிப்பான நிகண்டுகளைப் படிப்பதில் அவர் தேர்ந்தவர் தலித்துகளின் இழிவை மட்டும் சொல்ல விரும்பினோமென்றால் இத்தகைய ஆற்றல்களை யார் சொல்வது? தலித்துகளின் நிலவும் இழிவையே நிரந்தர அடையாளமாக தக்கவைப்பதில்தான் இன்றைய தலித் கலை, இலக்கிய முயற்சிகள் நிற்கின்றன. இந்நிலையை மாற்றும் கல்வி, பொருளாதாரம் குறித்த எவ்வித பார்வையும் செல்வாக்குப் பெற்றுள்ள தலித் இயக்கங்களுக்கு இல்லை. இந்நிலைமை சாதிமறுப்பதாக மாறுவதில்லை. இதை சார்ந்து டி.எம். மணி இந்நூல்களில் எழுதியுள்ள விமர்சனங்கள் முக்கியமானவையாகும் அவை "பறை எனப்படும் தப்பு ஒரு ஓசைக் கருவிதான் சேரியை ஒதுக்கினார்கள், அதற்காக தொழிலை ஒதுக்கினார்கள், தீண்டாமை பாராட்டி மனிதர்களை ஒதுக்கினார்கள். (அதன்படியே அவர்களுக்கென்று) இசையும் கலையும் ஒதுக்கப்படுகிறது.

     நண்பர் கே.ஏ. குணசேகரன் போன்ற அறிவுஜீவிகளுக்கு நன்றாக தப்பு அடிக்கத்தொரியும் என்பதற்காக அதையே இசையாகத் தலையில் கட்டுகிறார்கள். அதைப் போலவே கல்வி மறுக்கப்பட்டதால் தலித்துகளிடம் உருவான ஊனத்தமிழ் வார்த்தைகளை நன்றாகப் புரிந்துக் கொண்ட 'பாமா' போன்ற எழுத்தாளர்கள், இந்த ஊனத் தமிழுக்கு வடிவம் கொடுத்து தலித் இலக்கியம் என்று அதை எங்கள் தலையில் கட்டுகிறார்கள்" என்று எழுதுகிறார்.

     சாதி கற்பிக்கப்பட்ட காலத்தில சாதிக்கென்று ஒதுக்கப்பட்ட தொழில்களை மறுப்பதற்கு பதிலாக அதையே தங்களின் அடையாளமாக சொல்லிக் கொள்ளும்போது சாதிசார்ந்த கருத்தியல் மறுஉற்பத்தி செய்யப்படுகிறது. பொதுத்தளத்தில் மறுக்கப்பட்ட அடையாளங்கள் மீது உரிமையை கோருவதற்கான அரசியலையும் மறுக்கிறது. பறை மட்டுமல்ல சாதியின் பெயரால் பகுக்கப்பட்ட தொழிலையும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்ட அடையாளத்தையும் அனைத்து சாதியினருக்கும் தேர்வுசெய்துகொள்வதற்கான கோரிக்கையோடு செயற்படுவதே சாதிமறுப்பாக இருக்க முடியும். செத்த மாடெடுத்தல் என்ற சுகாதாரப்பணி தலித்துகள் மீது சுமத்தப் பட்டதால் அத்தோலினால் செய்யப்பட்ட பறையும் அவர்கள் மீது சமத்தப்பட்டது.

     மலமெடுக்க மறுக்கும் அருந்ததியரின் குலத் தொழில் மலமெடுப்பதுதான் என்பது எத்துணை அவதூறு. "தப்புதான் தலித்கலை என்றால் குழல், யாழ் போன்றவை எமக்கு உரிமையில்லை? அகராதியில் அழிக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள் கூட இன்னும் தாய்வழி கூட்டத்திற்கு ஊனத்தமிழ்தான் உரிமையா? தலித் இலக்கியம், தலித் கலை, தலித் பண்பாடு என்பதெல்லாம் ஒதுங்குதல், ஒதுக்குதல் அடிப்படையிலான வர்ணதர்ம கோட்பாடே அம்பேத்கர் சொன்ன சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இங்கு வேலையே இல்லை. எனவே தப்பு அடிக்க மறுப்பதை சமத்துவத்திற்குகான போராட்ட அடித்தளமாகவே பார்த்தோம். தப்புகளை செய்ய செத்த மாடுகள் எங்களுக்குத் தேவையில்லை என்று கோஷமிட்டோம்" என்று அவர் விளக்குகிறார். அவரின் இந்தப் பார்வை தலித்துகளின் நீண்ட போராட்ட மரபிலிருந்தும் தலித் மக்களின் விருப்பங்களிலிருந்தும் எடுக்கப்பட்டமையால் தான் தத்துவமானதாக விளங்குகிறது.

     இந்நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள மற்றுமொருச் செய்தியும் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமானதாகிறது. குடிதாங்கி பிரச்சினைதான் அது. குடிதாங்கி கிராம தலித் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை 'கொள்ளிடக்கரையில்' சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்பதுதான். டி.எம். மணி தலைமையிலான இயக்கம் கிளை அமைக்க சென்ற போது அக்கோரிக்கையை வலியுறுத்திய போராட்டத்தைத் தான் முதலில் எடுத்தனர்.

     உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று தொடங்கி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை போன்றோரிடமும் பிரச்சினையை கொண்டு சென்றனர். 1988 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23இல் செல்வம் என்பவர் இறந்து தூக்கிச் சென்றபோது நூற்றுக் கணக்கான வன்னியர்களால் தலித்துகள் மறிக்கப்பட்டனர். அதுநாள்வரையில் மறிக்காதவர்கள் மறிப்பவர்களாக மாறியிருந்ததற்கு காரணம் அவர்களிடம் வன்னியர் சங்கம் உருவாகியிருந்ததுதான். பிரச்சினையின் காரணமாக பிண அடக்கத்தை மறுநாளுக்கு ஒத்திவைக்கச் சொன்ன காவல் துறையின் அறிவுரையின் பேரில் அவ்விடத்திலேயே பிணத்தை வைத்துச் சென்றனர் மறுநாள் பிணத்தை காவல்துறையே எங்கோ வீசிவிடுகின்றனர். அதனையட்டி தலித்துகளுக்கும் காவல்துறையினருக்கும் நடந்த மோதலில் காவல் ஆய்வாளர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டார். மறுநாள் அங்கிருந்த 9 சேரிகளில் புகுந்த காவல்துறை அவர்களை அடித்து நொறுக்கியது.

     குடிதாங்கியைச் சேர்ந்த 22 தலித் பெண்கள் உள்ளிட்ட 104 பேர் மீது கொலைமுயற்சி வழக்கு (307) உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கை பதிந்தனர். இதனால் இடர்பாடுகளுக்கு பின்னும் அம்மக்களின் பிணங்களை பழைய சுடுகாட்டில் புதைப்பதில்லை. பொதுச் சாலையில்தான் எடுத்துச் செல்வோம் என்ற முடிவிலிருந்தும் மாறவில்லை. அதனால் வீதிகளிலும் வாய்க்காலிலும் பிணங்களை புதைக்கவேண்டிய நிலை. இந்த காலக்கட்டத்திலும் பல்வேறு வழக்குகளை அம்மக்கள் சுமந்தனர்.

     சுமார் 4 ஆண்டுகாலம் இப்போராட்டம் நீடித்தது. இவை எல்லாவற்றின் பின்னணியில்தான் அப்பிரச்சினை முடிவுக்கு வந்தது. அன்றைக்கிருந்த அதிமுக அரசு சுடுகாட்டுப் பயன்பாட்டுக்காக பொதுப்பாதையை அனுமதித்த சூழல், 82 வன்னியவகுப்பினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலை. அச்சூழலில்தான் ராமதாஸின் வருகை நிகழ்ந்தது. அப்பகுதி சேரிமக்கள் அவரின் வருகையை விரும்பாத போதும் அவரை சுடுகாட்டுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றவர்களும் தலித்துகளே, ஆனால் இன்றைக்கு குடிதாங்கிப் போராட்டம் என்றாலே அறியக் கூடியவராக ராமதாஸின் பெயராகிவிட்டது.

     நான்கு ஆண்டுகால தலித்துகளின் நெடிய போராட்டத்திற்கு கிடைக்காத அங்கீகாரம் தலித் அல்லாத ஒருவரின் சிறிய தலையீட்டிற்கு பெரிய அளவில் கிடைத்து விடுகிறது. தமிழகத்தில் இதுபோன்று சொல்லப்படாத போராட்ட உண்மைகள் ஏராளமுண்டு அண்மைக்கால உதாரணம். கடைசி இரண்டு வருடங்களில் தலையிட்ட கம்யூனிஸ்டுகளின் போராட்டமாகிவிட்ட பாப்பாப்பட்டி பிரச்சனை.

     குடிதாங்கிப் பிரச்சினை குறித்து கள ஆய்வு செய்து வெளியிட்ட நிறப்பிரிகை இதழும் இந்த வரலாற்றுப் பொய்க்கு காரணம் என்று டி.எம். மணி கூறுகிறார். ராமதாஸின் வருகையை தூக்கிப் பிடிப்பதிலேயே கவனம் செலுத்திய அவ்விதழின் கள ஆய்வு விழிப்புணர்வும், போர்க்குணமும் உடைய தலித் அமைப்புகளே அங்கில்லை யென எழுதியிருந்ததை சுட்டிக் காட்டுகிறார். பிறகு திருமாவளவனும் ராமதாஸை தமிழ்க்குடிதாங்கி என்று பாராட்டினார். பிராமணரல்லாதோர். தமிழர் போன்ற பொது அடையாளங்களை காட்டும் வரலாற்றில் இவ்வாறு சிதைந்த வரலாறு அதிகம். இதற்கு மறுதலையாக ராமதாஸ் தலித் தலைவர்களோடு பூண்ட உறவுகுறித்த நோக்கத்தினையும் டி.எம்.மணி குறிப்பிடுகிறார். எல். இளையபெருமாளின் எதிர்ப்பை சரிக்கட்டும் நோக்கிலேயே அவர் தென் மாவட்டங்களில் செயற் பட்டுக் கொண்டிருநத திருமாவளவன், பசுபதி பாண்டியன் போன்றோரை வடக்கே அழைத்தார். ராமதாஸின் அரசியல் நோக்கத்திற்கு தடையாயிருந்த தலித்துகளும் தாங்கள் எதிரியில்லை என்ற நிலையை உருவாக்குவதற்காக, தன் பிடிக்கு உட்படும் தலித் தலைவர்களை ஆதரிப்பது அவரின் நடவடிக்கையில் இருந்தது என்றும் அவர் கூறுகிறார்.

     ராமதாஸின் நடவடிக்கைகளை கவனித்துவரும் யாரும் இதை பொய் என்று சொல்ல மாட்டார்கள். தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் திருமாவளவனோடு இணைந்து பணியாற்றிய போதும் சாதிஒழிப்பு சார்ந்த தளங்களில் இந்த ஒற்றுமையை விரிவுபடுத்திக் கொள்ளவில்லை என்பது இளையபெருமாள் ராமதாஸோடு 1991 இல் சமாதான உடன்பாட்டை மேற்கொண்டபோது இழிதொழில்களை வலியுறுத்தக் கூடாது என்பதை உடன்பாட்டின் மைய நோக்காக்கி யிருந்தார். உடன்பாடு அப்படியே நின்றுபோனது இளையபெருமாளும் ஏமாற்றப் பட்டார் என்பதே அனுபவம்.

     இந்நூல்கள் தரும் தலித்மக்களின் போராட்ட உணர்வுகுறித்த பதிவுகள் இதுவரை தமிழில் சொல்லப்டாதவையாகும். தற்சார்பற்ற வாழ்நிலை, மறுக்கப்பட்ட கல்வியால் நிலைபெறும் அறியாமை போன்றவற்றால் குறுகிக் கிடந்த அம்மக்களிடம் இயல்பாக உள்ள எதிர்ப்புணர்வு, துணிச்சல், இயக்கம் ஒன்றின் பின்னணியோடு வலுப்பெறும் எழுச்சி, இழப்புகளைத் தாண்டி உடனடியாக மறுவாழ்வை நிர்மாணிக்கம் திண்மை என்று நகருகிறது. இப்பிரதிகள் இயக்கம் உருவானபின் இந்துக்களின் வீடுகளில் சோறெடுத்தல், பண்டிகை பலகாரங்கள் வாங்குதல், கோயில் விழாக்களில் கஞ்சி வாங்குதல் போன்றன நிறுத்தப்படுகின்றன.

     நிலங்களை உரிமையாக்குதல், மடத்துக்கு சொந்தமான குளத்தில் நீரெடுத்தல் என்று போராட்டங்கள் விரிவாயின. மடத்திற்கு சொந்தமான குளத்தில் நீரெடுக்கும் போராட்டம் நடந்தபோது தலித்துகளுக்கு எதிராக நில ஆதிக்கம் கொண்டிருந்த வெள்ளாளர்களுக்கு ஆதராவான பிற்பட்ட வகுப்பினர் கலவரத்தில் இறங்கினர். இருந்தும் தோல்வியைப்பற்றி நினையாமல் அம்மக்கள் போராடினர். அம்மோதலின் ரவுடிப் பட்டியலில் இருந்த ராஜேந்திரன் என்பவர் இறந்துபோனார். ஏற்கனவே தாக்கப்பட்டு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டிருந்த தலித் தரப்பு மோகன் என்பவரை ஆத்திரத்தினால் ஆதிக்க வகுப்பினர் கொன்று விடக்கூடும் என்று மனம் வருந்தி நின்றபோது உடல் முழுவதும் வியர்த்தவாறு 4 இளைஞர்கள் ஓடிவருகிறார்கள்.

     ராஜேந்திரன் கொலையானதும் ஆதிக்க வகுப்பினர் சிதறி ஓடிய தருணத்தில் மருத்துவமனையிலிருந்த மோகனை தூக்கிக் கொண்டு பின்புறச் சுவற்றில் ஏறிக்குதித்து மறைவான இடத்தில் வைத்து விட்டு அந்நால்வரும் வருகிறார்கள். இச்சம்பவத்தை எழுதும் டி.எம்.மணி "எப்படி இவ்வளவு தைரியமாக இவர்களால் சாதிக்க முடிந்தது?" என்று வியக்கிறார். சாதி, சாதியின் செயற்பாடு போன்றவற்றை அனுபவிக்கும் இம்மக்களிடம் அத்தளத்தில் ஒன்று நடந்தால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை எளிதாக யூகித்துக் கொள்ள முடிகிறது டி.எம்.மணி அரசு அலுவலர் ஒருவரை சந்திக்க செல்லுகிறாரென்றால் அக்குறிப்பிட்ட அலுவலர் தங்களிடம் என்னவெல்லாம் சொல்லுவார் என்று தங்கள் தோழர்களிடம் சொல்லிச் செல்லுவாராம். அவர் சொல்லிச் சென்றது போலவே அலுவலர் பேசுவாராம்.

     இச்செய்தியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் நேர்பேச்சில் குறிப்பிட்டார். இது எப்படி சாத்தியம்? சாதிரீதியான அணுகு முறையில் சாதி இந்துக்களும், அதிகாரிகளும் வழமையாய் சொல்லும் காரணம் ஒரே மாதிரி இருப்பதும், வாக்குறுதிகளின் ஏமாற்றம் போன்றவற்றை சந்தித்துப் பழகிப்போன இம்மக்களுக்கு சூழலை வாசிப்பது எளிமையாகிவிடுகிறது. அதற்கு எண்ணும் எழுத்தும் கற்க தேவையில்லை.

     காவற்கூடம் என்னும் ஊரில் செத்த மாட்டை அப்புறப்படுத்த வெட்டியான் வரவில்லை என்பதற்காக வெட்டியான் குடிசைகளை ஆதிக்கவகுப்பினர் கொளுத்தினர். இதனை காவல்துறையில் புகார் செய்த 'குற்றத்திற்காக' அவ்வூரைச் சேர்ந்த 40 சேரிக் குடிசைகளை எரித்தனர். கட்சி பிரமுகர்கள். காவல்துறை, தாசில்தார், துணை கலெக்டர் போன்றோர் எரிக்கப் பட்ட குடிசைகளை கணக்கில் கொள்ளாமல் சாதி இந்துக்களுக்கு ஆதரவாக பேசினாலும் தலித் சமூகத்தைச் சேர்ந்த கலெக்டர் 'கங்கப்பா' என்பவரின் வழிகாட்டுதலோடு இந்துக்களின் தெருவழியே போகாத வண்ணம் முற்றிலும் புதிய இடத்தில் வீடு கட்ட இடத்தை வழங்கியபோது 52 குடிசைகளையும் உற்சாகத்தோடு கட்டிகொண்டனர். இழப்புதரும் வலியிலிருந்து மாறி மற்றுமொரு வாழ்க்கையை உருவாக்கிக் கொள்கின்றனர். குடிசைகள் கட்டப்பட்ட பகுதிக்கு நன்றியோடு கங்கப்பா நகர் என்று பெயரும் சூட்டிக்கொண்டனர் அம்மக்கள்.

     போராட்டக் களங்களில் ஏற்படும் ஏமாற்றங்கள், கிராம அமைப்பொன்று சாதியை தக்கவைத்துக் கொள்ளும் சாதுர்யம் அசாதாரண சூழலில் பரப்பப்படும் சொல்லாடல்கள் குறித்த புரிதல் போன்றவை தலித்மக்களுக்கு அத்துப்படி. காவற்கூடம் கிராமங்களில் நடத்தப்பட்ட வன்முறையை எழுதத் தொடங்கும் டி.எம். மணி "முதல் நாள் செய்தித்தாளில் கோஷ்டி மோதல், தீவைப்பு என்ற தலைப்பில் செய்தி வெளியானது. பெரும்பாலும் கோஷ்டி தலித்துகளாகவும், அது பாதிக்கப்பட்ட தரப்பினராகவும் இருப்பர் என்பது தலித்துகளுக்கு பரிந்து பேசுபவராக வந்து தலித் இளைஞர் ஒருவரின் நடத்தை 'மீறலால்' மோதல் எழுந்தது என்றும் அரிஜனங்களே தங்களின் சில குடிசைகளுக்கு தீவைத்துக் கொண்டனர் என்றும் சொல்லுவதோடு சமாதானமாக போய்விடலாம் என்று சொல்ல தலித்துகளுக்கென சில உதவிகளையும் செய்ய முன் வருகிறார். ஆனால் தலத்துகள் தாங்களே தீவைத்துக் கொண்டதாக புகார் கூறியவர்களிடம் தீப்பெட்டியைக் கொடுக்கும் கலெக்டர் கங்கப்பா, "எங்கே உன்குடிசையை நீயே கொளுத்திக்கொள் பார்ப்போம்" என்று சொன்னபோது அவர்கள் பின்வாங்கினர். இந்த இடத்தில் கலெக்டர் கங்கப்பா தலித்வகுப்பினர் என்பதையும் ராமகிருஷ்ணன் வன்னியர் என்பதையும் டி.எம்.மணி குறிப்பிடுகிறார்.

     வேறுசில இடங்களில் தலித் அதிகாரியாக இருப்பதாலேயே தலித் ஆதரவு முத்திரையால் தனக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சும் அதிகாரிகளைக் குறிப்பிடும்போது அவர்களின் சூழலை யோசித்துப் பார்க்கும் போக்கும் இவர்களிடம் வெளிப்படுகிறது. இந்த சூழல் குறித்து வேறொரு இடத்தில் எழுதும் டி.எம்.மணி "தலித்துகள் தாக்கப்படும் போதும், கொடுமைக்குள்ளாகும் போதும் அனுதாபப்படுவதற்கும் ஆதரவுக்குரல் கொடுப்பதற்கும் மற்ற சாதியில் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் தலித்துகள் எதிர்தாக்குதல் நடத்துவதை அவர்கள் விரும்புவதில்லை" என்பதை நெடிய அனுபவத்திலிருந்து சொல்லுகிறார்.

     கிராமங்களின் ஒற்றுமை என்பது அந்தந்த சாதிக் கடமையை அவரவர் செய்யவேண்டும் என்பதே போன்றவற்றை துல்லியமாக சொல்லும் சாதிகளின் சாதியச் செயற்பாடுகளை குறைத்துவிடாமலும், மிகைப்படாமலும் எழுதுகிறார். பிராமணர் எதிர்ப்பு அவருக்கிருந்தாலும் பிராமணர் அல்லாத சாதிகளன தலித்வெறுப்பை குறைத்து மதிப்பிடவோ, அதன் மூலம் சாதிய பலன்களிலிருந்து அவர்களை தப்பவைக்கவோ அவர் முயற்சிக்க வில்லை.

     கொலை வழக்கு, சிறை என்று பயணித்த டி.எம்.மணி குறைவான எண்ணிக்கையினரோடு இசுலாம் தழுவி இன்று உமர் ஃபாரூக் ஆகி விட்டார். அதற்கான காரணம். மதம் தழுவியவர்களின் படங்கள் என்று சாதி ஒழிந்தது நூலின் இறுதியையும்,'தமிழ் தேசியத்தால்' உள்வாங்கப்பட்ட இன்றைய தலித் அரசியலை குறித்து செந்தமிழ் நாட்டுச் சேரிகள் நூலின் இறுதியையும் எழுதியுள்ளார். இந்நூல்களை வாசித்து முடிக்கிற போது பெரும் துயரமும், ஆற்றாமையும் நம்மை சூழ்ந்துக் கொள்கிறது. நூலின் இறுதிப்பகுதியில் அவர் முன்னெடுக்கும் விவாதத்தில் யாரும் உடன்படவோ, மாறுபடவோ செய்யலாம். ஆனால் அவர் முன்வைக்கும் அனுபவத்தை யாரும் அத்துணை எளிமையாய் கடந்துவிட முடியாது.

     அங்கீகரிக்கப்படாத டி.எம்.மணி போன்றோரின் போராட்ட பலனால்தான் இன்றைய தலித் சமூகம், தலித் இயக்கங்களும் தங்களை ஆசுவாசப்படுத்தக் கொள்கின்றன. பெரும் இயக்கபலம் இல்லாவிட்டாலும் அவர் இன்றும் எழுதுகிறார், செயற்படுகிறார், ஏனெனில் அவர் பெற்றுக் கொண்டுள்ள கருத்தியல் தன்னளவில் விடுதலை பெற்றவராக அவரை உணரவைத்துள்ளது. தன்னளவில் விடுதலை பெறாத யாரும் எத்தகைய கூட்டத்தை திரட்டினாலும் யாரையும் விடுவிக்க முடியாது.

Pin It