தமிழகம் கடுமையான மின்சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஏதாவது மின் நிலையத்தை இயக்கி எப்படியாவது மின்சாரம் வேண்டும் என்கிறோம். மின்மூலங்கள் குறைவாக உள்ள ஒரு இந்திய மாநிலம் எப்படி மின்சிக்கலை குறைத்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்!

அம்மாநிலத்தில் மாலையில் மின் தேவை அதிகமாக இருக்கும். அங்கு தயாரிக்கப்படும் மின் உற்பத்தி அத்தேவையை ஈடு செய்ய முடியவில்லை. அதனால் மின் வெட்டு இருந்து வந்தது.

ஒரே வெளிச்சத்திற்கு சிறு குழல் விளக்குகள் ("சி. எப். எல்.' பல்பு) குண்டு பல்புகளைக் காட்டிலும் குறைந்த மின்திறனே எடுக்கின்றன. அதனால் மின் ஆற்றல் ('யூனிட்') செலவு குறையும். ஆனால், ஒரு சி. கு. வி. ன் விலை 120 ரூபாய்க்கு மேல்; குண்டு பல்பின் விலையோ ரூ.15 க்குள்!

அம்மாநிலத்தில் குண்டு மின்பல்புகள் அதிக அளவில் பயன்பட்டு வந்தது.

சி. கு. வி. களின் கூடுதல் விலையே இதற்கு முக்கியக் காரணம். இதனால் அம்மாநில அரசு ஒவ்வொரு வீட்டுக்கும், சி. கு. வி. ஒன்று ரூ.15 என்ற விலையில் தரமான  2 சி. கு. வி. களைக் கொடுத்தது. அப்படி சி. கு. வி. களைக் கொடுத்த போது ஏற்கனவே பயன்பட்டு வந்த நன்கு எரியும் நிலையில் உள்ள 2 குண்டு பல்புகளை வீட்டாரிடம் இருந்து வாங்கிக்கொண்டது. சி. கு. வி. க்கு ஆகும் கூடுதல் தொகையை அம்மாநில அரசு தன் நிதியில் இருந்து முன்பணமாகப் போட்டது. இப்படிச் செய்ததற்குக் காரணம் இந்தக் கூடுதல் தொகையை வளர்ந்த நாடுகளில் இருந்து க்யோட்டோ ஒப்பந்தப்படிப் பெற்று விட முடியும் என்பதால்!

2010ல், மார்ச் 15 முதல் சிறு குழல் விளக்குகளை விநியோகிக்கத் துவங்கி ஆகஸ்டிற்குள் மாநிலத்தின் 75 லட்ச வீடுகளுக்கு சுமார் 1.3 கோடி சி. கு. வி. களை விநியோகித்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் சி. கு. வி. களில் கோளாறு ஏற்பட்டால் அதற்கு மாற்றை அரசே கொடுத்துவிடும். கோளாறான அல்லது வாழ் நாள் முடிந்து செயல் இழந்து போன சி. கு. வி. களை அரசே திரும்பப் பெற்று பாதுகாப்பான முறையில் அவற்றைக் கழித்துவிடும்.

இப்படி மாலை நேரங்களில் அதிகமாக இருந்த மின் தேவையை 350 மெகா வாட் (மெ. வா.) குறைத்தது. ஒவ்வொரு வீட்டிலும் மாதத்திற்கு 5 யூனிட்களுக்கு மேல் குறைகிறது. மக்களின் மாதாந்திர மின் கட்டணம் குறைந்துள்ளது. அரசு மின்சாரத்திற்காகச் செலவு செய்ய வேண்டியிருந்த மானியத் தொகை குறைந்துள்ளது!

இப்படி மின் தேவையை குறைத்ததற்கு ஏற்ப, மின்சார உற்பத்தியால் திட்டகாலத்தில் மட்டும் வந்திருக்கக் கூடிய 20 லட்சம் டன் கரியமில வாயு உருவாக்கத்தைத் தவிர்க்கிறது. இதன் மூலம் 20 லட்சம் 'கார்பன் கிரெடிட்'டுகளை ஈட்டும். இது குறைந்த கணக்கீடே!

"க்யோட்டோ' ஒப்பந்தப்படி வளர்ந்த நாடுகள் குறிப்பிட்ட அளவு "கார்பன் கிரெடிட்' வைத்திருக்க வேண்டும். அதனால் அந்நாடுகள் வளரும் நாடுகளில் இருந்து "கார்பன் கிரெடிட்'டை வாங்கத் துடிக்கின்றன. ஒரு "கார்பன் கிரெடிட்டின்' தற்போதைய விலை ரூ. 484; ரூ. 900 மேல் செல்லும் என்கிறார்கள். அதை விற்றால், அந்த அரசுக்கு ரூ. 89 கோடி முதல் ரூ. 166 கோடி, கிடைக்கும். ஆக அந்த அரசு போட்ட முன் பணம் ரூ.95 கோடி, அதற்கு இந்த வகையில் மட்டும் ரூ.71 கோடி லாபம் கிடைக்கும் வாய்ப்பு!

தூய்மையானதாகச் சொல்லப்படும் மின் நிலையத்தை புதிதாக அமைத்தாலும் 350 மெ. வா. க்கு கூடங்குளத்துக்குச் சொல்கிற கணக்கிலேயே குறைந்தது கட்டுமானத்திற்கு மட்டும் ரூ.2300 கோடி செலவு செய்ய வேண்டி இருக்கும். இது தவிர, மின் நிலையத்தை இயக்குவதற்கான மூலப்பொருள் உள்ளிட்ட செலவுகள், பாதுகாப்புச் செலவுகள் போன்றவை.

மேற்சொன்ன சேமிப்பு மின்விளக்குத் திட்டத்தின் மூலம் மின் தேவையை குறைக்காமல் இருந்து, வெளி மாநில மின் நிலையங்களில் இருந்து மின்சார எக்சேன்சின் (இது பங்குச் சந்தையைப் போல, மின்சாரத்தை விற்கலாம், வாங்கலாம்) மூலம் மின்சாரம் வாங்கியிருந்தால், வருடம் ஒன்றிற்கு 350 மெ. வா. மின்சாரத்திற்கு குறைந்தது ரூ. 518 கோடி செலவு செய்துகொண்டே இருக்க வேண்டும்!

இதெல்லாம் வேண்டாம் என்று எளிமையாக 350 மெ. வா. மின் தேவையை குறைத்திருக்கிறது அந்த அரசு! ' கார்பன் கிரெடிட்' இல்லாமலே கூட போட்ட முன்பணம் 6 மாதத்திற்குள் திரும்பக் கிடைத்துவிடும்!

தமிழகத்தில் தற்போது 150 லட்சம் வீட்டு மின் இணைப்புகள். இங்கும் பெரும்பாலான வீடுகளில் குண்டு பல்புகள் உள்ளன. கலாச்சார ரீதியாக இங்கு மின்பளு மாலை மட்டுமல்லாமல் காலையிலும் உச்சத்திலே இருக்கிறது.

தமிழக மின்துறை, தமிழகத்தில் குண்டு பல்புகளை சி.கு.வி. களால் மாற்றினால் 500 முதல் 600 மெ.வா. மின்திறனை இவ்வேளைகளில் தேவையற்றதாக்கலாம் என்கிறது. இது குறைந்த கணக்கீடே!

தமிழகத்தில் நாள் தவறாமல் காலை, மாலையில், 600 முதல் 700 மெ. வா. வரை 'மின்சார எக்சேன்சி'ல் இருந்து விலைக்கு வாங்கி வருகிறோம். சராசரியாக இந்த 'மின்சக்தி எக்சேன்சி'ல் இருந்து வாங்கும் மின் யூனிட்டின் விலை ரூ. 11.60 மாலை நேரங்களில் மின்சாரத்திற்கு கடுமையான கிராக்கி இருப்பதால் விலை சராசரியைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும்!

தமிழகத்தில் சேமிப்பு மின்விளக்குத் திட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பதால் தேவைப்படுகிற 500 முதல் 600 மெ. வா. மின்திறனுக்காக கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டி வருகிறது. "மின்சார எக்சேன்சி'ல் இருந்து வாங்கும் சராசரி "யூனிட்'டின் விலையை வைத்து மாலை நேரத்திற்கு மட்டும் கணக்கிட்டால் கூட, இதற்காக வருடத்திற்கு தமிழக அரசு கொடுக்கும் தொகை ரூ. 741 கோடி முதல் ரூ. 889 கோடி. இதனாலும் ஏற்படுகிற அரசு நிர்ணயிக்கிற மின் கட்டண உயர்வு என்ற பொருளாதாரப் பளு வீடு, குறுந்தொழில், சிறு தொழில், பெரிய தொழிற்சாலைகள் என அனைவரின் மீதும்தான் விழுகிறது!

தமிழகத்தில் சேமிப்பு மின் விளக்குத் திட்டத்தை தமிழக அரசே எடுத்து மேற்சொன்ன மாநிலத்தின் பாணியில் கூட நடத்தலாம்! தமிழக அரசு முன்பணமாகப் போட வேண்டிய தொகை, அதிகம் போனால் ரூ. 360 கோடி. திட்டத்தை மேற்கொள்வதால், 'மின்சக்தி எக்சேன்சி'ல் இருந்து மின்சாரம் விலைக்கு வாங்குவது குறைவதால் இந்தத் தொகையை 6 மாதத்திற்குள் அரசு திரும்பப் பெற்றிட முடியும். அதுபோக, குறைந்தது 50 லட்சம் முதல் 60 லட்சம் "கார்பன் க்ரெடிட்'கள் அரசுக்குக் கிடைக்கும். தற்போதைய விலையில் இதற்கு ரூ. 240 கோடி முதல் ரூ. 288 கோடி வரை கிடைக்கும்!

ஒட்டுமொத்த மின்சார பயன்பாட்டில் விளக்குகள் 22 % ஐயும், மின் மோட்டர்கள் 70% க்கு மேலும் பயன்படுத்துகின்றன. வீட்டுமனை சேமிப்பு மின் விளக்குத் திட்டம், தெரு விளக்குகள், அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் பயன்படும் விளக்குகளில் செய்யக்கூடிய திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளுள் ஒன்று. இதேபோல் சேமிப்பு மின்மோட்டர் திட்டம், சேமிப்பு மின்பம்புத் திட்டம் என திட்டங்களை விரிவாக வகுத்து வருகிறார் கட்டுரையாளர். தமிழகத்தில் மட்டும் எந்நேரத்திலும் 2000 மெ.வாட்டை குறைந்த செலவில், குறுகிய காலத்தில் அனைவருக்கும், புவிக்கும் நன்மைகளை ஏற்படுத்தும் வகையில் சேமிக்கும் உறுதியான வழிகள் இம்முறைகளில் உள்ளன!

மேற்சொன்ன திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறையிலான மின்திறன் சேமிப்பை அரூப மின்சார உருவாக்கமாகக் கருதமுடியும். இவ்வித மின்உற்பத்தி நம்பகத்தன்மை வாய்ந்தது. இது மின் தயாரிப்பில் ஏற்படும் பெருமளவிலான மாசைக் குறைக்கிறது. இதில், கொதிநிலையில், கதிர்வீச்சோடு இருக்கும் அணுக்கழிவை எவர் புழங்கும் பகுதிக்கடியில் ரகசியமாகப் புதைக்கலாம் என்று திட்டமிட்டுப் புதைக்க வேண்டிய கவலை இல்லை!

எவ்வகையில் மின்சாரம் உருவாக்கினாலும், இவ்விதமாக நாம் செலுத்தும் மாதாந்திர மின் கட்டணத்தைக் குறைக்க வழிவகுக்காது என்பது உறுதி!

மின்சாரம் மட்டுமல்லாது மண்ணென்னெய், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் என பல்வேறு ஆற்றல் சிக்கல்களுக்கான தீர்வைச் சிந்தித்துச் செயல்படும்போது வளர்ந்த நாடுகள் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளை முதன்மையான ஆற்றல் மூலங்களாக அங்கீகரிக்கின்றன. இவற்றையும் செயல்படுத்தினால், இந்த ஆற்றல்களுக்காக நாம் செலவிடும் தொகைகள் குறையும்.

இம்முறைகளைச் செயல்படுத்தினால் அரசு / பிற அமைப்புகளால் நிர்ணயிக்கப்படுகிற, அதிகரித்து வரும் மின் உள்ளிட்ட கட்டணங்களைக் குறைக்கவும் வழி உண்டு!  இம்முறைகளைச் செயல்படுத்துவதற்கான உற்பத்தி, வர்த்தக, தொழில்நுட்ப நடவடிக்கைகள் போன்றவற்றால் பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது.

இது மக்கள் அறிவியல், மக்கள் பொருளாதாரம்!

எவ்விதத்தில் ஆற்றலை உருவாக்கினாலும் முதன்மையாகச் செய்ய வேண்டியது திறம்பட ஆற்றலைப் பயன்படுத்துவதைத்தான்.

திட்டக்குழு கவனத்திற்கு! தொலை நோக்குப் பார்வை இப்படி இருக்க வேண்டும்! வெறுமனே ஆற்றல் சேமிப்பு முக்கியம் என்ற வாய்ப்பேச்சு பத்தாது! ஆற்றல் பிரச்சனைகளை இப்படி அணுகவில்லை எனறால் வீட்டின் தண்ணீர்த் தேவைக்கு ஒழுகுகிற மேல் நிலைத் தொட்டியில் நீர் ஏற்றிக் கொண்டே இருப்பதற்குச் சமம்! வண்டியில் உள்ள ஓட்டை ட்யூபில் நாம் காற்றடித்துக் கொண்டே இருப்பதற்குச் சமம்!

*****

பி.கு.: மேலே குறிப்பிட்ட அந்த மாநிலம்... நம் அண்டை மாநிலம்... கேரளம்...!

கேரளம் அமல்படுத்தினாலும் இது மத்திய அரசு வகுத்த திட்டம். அதன் பெயர் 'பசத் லாம்ப் யோஜனா'. இதில் மத்திய அரசு செலவு எதையும் செய்யத் தேவையில்லை!

இத்திட்டம் ஐக்கிய நாடுகள் சபையின் பருவ நிலை மாற்றத்திற்கான கூட்டமைப்பின் (UNFCC) தூய்மையான வளர்ச்சிக்கான செயல்முறையின் (CDM) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உண்மையிலே மக்களுக்குப் பயனளிக்கும் இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை ஏனோ மத்திய அரசோ, மத்திய அமைச்சர் பெருமக்களோ, அரசு விஞ்ஞானிகளோ தமிழக மக்களுக்கு உணர்த்துவதில் முனைப்புக் காட்டவில்லை.

சேமிப்பு மின்விளக்குத் திட்டம் கேரள அனுபவம்

கேரள மாநில மின் வாரியம் 2009 நவம்பரில் க்யோட்டோ ஒப்பந்த அடிப்படையிலான சிறு குழல் விளக்குத் திட்டமான சேமிப்பு மின் விளக்குத் திட்டத்தில் பங்கேற்க தனியார் துறைக்கு அழைப்பு விடுத்தது. 

திட்ட அமலாக்கத்திற்கு மூன்று தனியார் நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டன. ஆனால் அவை பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை.

கேரள மாநில மின் வாரியம் அந்தப் பாணியில் திட்ட அமலாக்கத்தைக் கைவிட்டு, மத்திய ஆற்றல் துறையின் கீழ் செயல்படும் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான அமைப்புடன் நிலைமைக்கான மாற்று வழி குறித்து ஆலோசித்தது. அதன் அடிப்படையில், கேரள அரசின் கீழ்வரும் தன்னாட்சி நிறுவனமான ஆற்றல் மேலாண்மை அமைப்பு (ஆ. மே. அ.) திட்டத்தில் முதலீடு செய்யும் அமைப்பாக தன்னை திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான அமைப்பில் பதிவு செய்து கொண்டது. திட்டத்தை அமலாக்குவதற்கான நிர்வாக அனுமதியை அரசு வழங்கியது.

ஆ. மே. அ., டெண்டர்களைப் பெற்று, பரிசீலித்து, முடிவெடுத்து, பிப். 1, 2010 ல், பிலிப்ஸ் நிறுவனத்திற்கு வழங்கள் ஆணைகளை வெளியிட்டது.

மொத்த திட்ட செலவு / முன்பணம் ரூ. 95 கோடி.

கேரள அரசிடம் பெற்ற கடன் ரூ. 40 கோடி.

கேரள மாநில மின் வாரியத்திடம் 13.5% வட்டியில் பெற்ற கடன் ரூ. 55 கோடி

கேரளத்தை மொத்தம் 23 திட்டப் பகுதிகளாகப் பிரித்துக் கொண்டது.

திட்டம் தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி செயற்படுத்தப்பட்டது.

திட்டத்தை சிக்கலின்றி செயல்படுத்த கிராம பஞ்சாயத்து அளவில் இருந்து குழுக்களை அமைத்தது.

ஊடகங்களின் மூலம் திட்டம் நன்கு விளம்பரப் படுத்தப்பட்டது.

14 'வாட்' சிறு குழல் விளக்குகள் மொத்தம் 1,44,17,466 வாங்கப்பட்டன.

கேரளத்தில் 75 லட்சம் வீட்டு மின் இணைப்புகள்.

சிறு குழல் விளக்கு விநியோகம் 2010ல், மார்ச் 15 முதல் துவங்கி ஆகஸ்டில் முடிவடைந்தது.

ஒவ்வொரு வீட்டுக்கும், சி. கு. வி. ஒன்று ரூ.15 என்ற விலையில் தரமான இரு 14 'வாட்'சி. கு. வி. களைக் கொடுத்தது. அப்படி சி. கு. வி. களைக் கொடுத்த போது ஏற்கனவே பயன்பட்டு வந்த நன்கு எரியும் நிலையில் உள்ள இரு 60 'வாட்' குண்டு பல்புகளை வீட்டாரிடம் இருந்து வாங்கிக்கொண்டது.

1,26,14,020 சிறு குழல் விளக்குகளை விநியோகித்தது.

அதாவது அரசு திட்டமிட்டதில் 81.81% ம் வீடுகளுக்கு விநியோகித்துவிட்டது.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் சி. கு. வி. களில் கோளாறு ஏற்பட்டால் அதற்கு மாற்றை ஆ. மே. அ. கொடுக்கும்.

கோளாறான, வாழ்நாள் முடிந்து செயல் இழந்து போன சி. கு. வி. களை ஆ. மே. அ. திரும்பப் பெற்று பாதுகாப்பான முறையில் அவற்றைக் கழித்துவிடும்.

கேரளத்தில் மாலை நேரங்களில் அதிகமாக இருந்த மின் தேவையில் 350 மெகா வாட் குறைந்தது.

சேமிப்பு மின்விளக்குத் திட்டத்தின் மூலம் மின் தேவையை குறைக்காமல் இருந்து, வெளி மாநில மின் நிலையங்களில் இருந்து 'மின்சார எக்சேன்சி'ன் மூலம் மின்சாரம் வாங்கியிருந்தால், வருடம் ஒன்றிற்கு 350 மெ. வா. மின்சாரத்திற்கு குறைந்தது ரூ. 520 கோடி செலவு செய்துகொண்டே இருக்க வேண்டும்!

350 மெ. வா. ட்டிற்கான புதிய மின் நிலையத் தேவை தவிர்க்கப்பட்டுள்ளது.

தூய்மையானதாகச் சொல்லப்படும் மின் நிலையத்தை புதிதாக அமைத்தாலும் 350 மெ. வா. க்கு கூடங்குளத்துக்குச் சொல்கிற கணக்கிலேயே குறைந்தது கட்டுமானத்திற்கு மட்டும் ரூ.2300 கோடி செலவு செய்ய வேண்டி இருக்கும். இதுதவிர, மின் நிலையத்தை இயக்குவதற்கான மூலப்பொருள் உள்ளிட்ட செலவுகள், பாதுகாப்புச் செலவுகள் போன்றவை.

இப்படி மின் தேவையை குறைத்ததற்கு ஏற்ப, மின்சார உற்பத்தியால் திட்டகாலத்தில் மட்டும் வந்திருக்கக் கூடிய 20 லட்சம் டன் கரியமிலவாயு உருவாக்கத்தைத் தவிர்க்கிறது. இதன் மூலம் 20 லட்சம் 'கார்பன் கிரெடிட்'டுகளை ஈட்டும். இது குறைந்த கணக்கீடே!

'க்யோட்டோ' ஒப்பந்தப்படி வளர்ந்த நாடுகள் குறிப்பிட்ட அளவு 'கார்பன் கிரெடிட்' வைத்திருக்க வேண்டும். அதனால் அந்நாடுகள் வளரும் நாடுகளில் இருந்து 'கார்பன் கிரெடிட்'டை வாங்கத் துடிக்கின்றன.

ஒரு 'கார்பன் கிரெடிட்டின்' தற்போதைய விலை ரூ. 484; ரூ. 900 மேல் செல்லும் என்கிறார்கள். அதை விற்றால், அந்த அமைப்புக்கு ரூ. 89 கோடி முதல் ரூ. 166 கோடி கிடைக்கும். ஆக அந்த அமைப்பு போட்ட முன் பணம் ரூ.95 கோடி, அதற்கு இந்த வகையில் ரூ.71 கோடி லாபம் கிடைக்கும் வாய்ப்பு!

கேரள அரசு மின்சாரத்திற்காகச் செலவு செய்ய வேண்டியிருந்த மானியத் தொகை குறைந்துள்ளது!

ஒவ்வொரு வீட்டிலும் மாதத்திற்கு 5 யூனிட்களுக்கு மேல் குறைகிறது. மக்களின் மாதாந்திர மின் கட்டணம் குறைந்துள்ளது.

Pin It