எரிக் ஹாப்ஸ்வாமின் ‘உலகை மாற்றுவதெப்படி? மார்க்ஸும் மார்க்சியமும் குறித்த வரலாற்றாய்வுகள் 1840 2011'

“மறந்து கொண்டேஇருப்பது மக்களின் இயல்பு, நினைவூட்டிக் கொண்டே இருப்பது வரலாற்றாசிரியரின் கடமை''                  எரிக் ஹாப்ஸ்வாம் 

"திடப்பொருளனைத்தும் காற்றில் கரைந்துவிடும்" "கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் மார்க்ஸ்.

மார்க்ஸ் மற்றும் மார்க்சியம் பற்றி அறிந்து கொள்வதில் மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது

முதலாளித்துவத்துக்கு ஏற்பட்ட உலகளாவிய நெருக்கடி காரணமாக, சோசலிஷக் கருத்துகளை அறிந்து கொள்வதில் உலகெங்கிலும் மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. மெரியம்வெப்ஸ்டர் நிறுவனம் தனது ஆன்லைன் அகராதி வலையகத்தில் 2008ஆம் ஆண்டில் தேடப்பட்ட சொற்களில் 'சோசலிஷம்' என்ற சொல் மூன்றாவது இடம் வகிக்கிறது எனத் தெரிவித்துள்ளது. ஒரு மாதத்துக்குச் சராசரியாக 12 கோடியே 50 லட்சம் பேர் சோசலிஷம் பற்றி அறிந்து கொள்ள அந்த வலையகத்தை நாடியுள்ளனர்.

அமெரிக்க, ஐரோப்பிய வங்கிகள் திவாலாகத் தொடங்கிய பிறகு, மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையின் விற்பனை 700% அதிகரித்துள்ளதாக அமேசான் ஆன்லைன் புத்தக விற்பனை நிறுவனம் அறிவித்துள்ளது. (இங்கிலாந்து டைம்ஸ்'' பத்திரிக்கை, 09112008).

பெர்லினில் கார்ல் மார்க்ஸ் எழுதிய 'மூலதனம்'' நூலின் அனைத்து பிரதிகளும் பல மாதங்களுக்கு முன்பே விற்றுத் தீர்ந்துவிட்டன. மார்க்ஸ் எழுதிய நூல்களின் முழுமையான தொகுப்புகளை வெளியிட்டு வரும் ஜெர்மன் பதிப்பாளர் ஜோர்ன் ஷட்ரம் கூறுவதாவது: ''2004ஆம் ஆண்டுவரை மூலதனம் நூல் ஆண்டுக்கு 100 பிரதிகளுக்கும் குறைவாகவே விற்று வந்தது. 2008ஆம் ஆண்டில் கடந்த 10 மாதத்தில் 2500 பிரதிகளுக்கும் அதிகமாக விற்றுள்ளது. கார்ல் மார்க்ஸ் எழுதியசுமூலதனம்'' நூலின் விற்பனை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முதலாளித்துவம் ஏன் வெற்றி பெறவில்லை என்பது பற்றி மார்க்ஸ் என்ன கூறுகிறார் என்பதை அறிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளதையே இது காட்டுகிறது.'' (இன்டர் பிரஸ் சர்வீஸ், 07112008).

ஜப்பானில் கனிகோஷன் என்னும் கம்யூனிஸ நாவல் 2008இல் 5 லட்சம் பிரதிகள் விற்றுள்ளது. முந்தைய ஆண்டில் இதன் விற்பனை 5000 பிரதிகள் ஆகும். 1929ஆம் ஆண்டில் ஒரு கப்பலில் இருந்த கொடுமையான பணி நிலைமைகளை எதிர்த்துத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தைப் பற்றிய நாவல் இது. (இங்கிலாந்து ''டெலிகிராஃப்'' பத்திரிகை, 18112008).

·     ஏகபோகமும் எதேச்சதிகாரமும் ஏகாதிபத்தியமும் பிரிந்தும் பிணைந்தும் செயலாற்றும் இன்றைய உலகமயமாக்கல் சூழலில், மார்க்சியத்தின் தேவை முன்னெப்போதையும்விட அதிகரித்திருக்கிறது. முதலாளித்துவப் பொருளதார அறிஞர்களாலும்கூட புறக்கணிக்கமுடியாத பங்களிப்பை கார்ல் மார்க்ஸும் பிரெட்ரிக் எங்கெல்ஸும் அளித்துள்ளார்கள். முதலாளித்துவம் பற்றிய மார்க்சிய ஆய்வுகளை உள்ளடக்கிய மூலதனம், உலகின் தலை சிறந்த அரசியல் பொருளாதார நூலாக இன்றளவும் கருதப்படுகிறது. முதலாளித்துவப் பொருளாதாரக் கோட்பாடுகளைக் கறாரான முறையில் அறிவியல் கண்ணோட்டத்துடன் அலசி ஆராய்கிறது மூலதனம். "முதலாளித்துவ உற்பத்தி முறையையும் அந்த உற்பத்தி முறையின் விளைவாகத் தோன்றிய முதலாளித்துவ சமுதாயத்தை ஆளும் சிறப்பு விதியையும்' மார்க்ஸ் கண்டறிந்தார் என்கிறார் எங்கெல்ஸ். உயிர்களின் விதிகளை சார்லஸ் டார்வின் கண்டறிந்ததுபோல், மனித வரலாற்றின் இயங்கு விதிகளை மார்க்ஸும் எங்கெல்ஸும் மூலதனத்தின் வாயிலாகக் கண்டறிந்தனர். மூலதனம் நூல் விற்பனை உலகம் முழுவதிலும் தொடர்ந்து அதிகரித்து வருவது, இந்நூலின் இன்றைய பொருத்தப்பாட்டையும் முக்கியத்துவத்தையும் துல்லியமாக உணர்த்துகிறது.

''நான் லண்டனில் வசிப்பதால், எனது கட்சித்தொடர்புகள் குளிர்காலத்தில் கடிதப் போக்குவரத்தோடு சரி; கோடையிலோ அவை பெரிதும் நேர்முகமானவை. இந்த நிலைமையும், சீராக அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான நாடுகளிலும் இன்னும் வேகமாக அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான ஏடுகளிலும் இயக்கத்தைக் கவனிக்கிற அவசியமும், தடங்கலுக்கு இடம்தராத விஷயங்களைக் குளிர்கால மாதங்களில், பிரதானமாக ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பூர்த்தி செய்வதற்கென ஒதுக்கிக் கொள்ளுமாறு என்னை நிர்ப்பந்தித்துள்ளன. ஒரு மனிதனின் வயது எழுபதைத் தாண்டியிருக்கும்போது, அவனது மூளையின் மெய்னெர்ட் இணைப்பு நரம்புகள் எரிச்சலூட்டும் மதமதப்புடன் செயல்படுகின்றன. சிரமமான தத்துவப் பிரச்னைகளில் ஏற்படும் தடங்கல்களை இனியும் அவன் முன்போல சுலபமாகவும் துரிதமாகவும் சமாளிப்பதில்லை. ஆகவே ஒரு குளிர்காலத்தின் பணி, பூர்த்தியாகாவிட்டால், அடுத்த குளிர்காலத்தில் பெரும்பாலும் புதிதாகத் துவக்கப்பட வேண்டிய நிலைமையே ஏற்பட்டது. மிகமிகக் கடினமான ஐந்தாம் பகுதியின் விஷயத்தில் நடந்தது இதுவே.'' எங்கெல்ஸ் முன்னுரையிலிருந்து

·     மார்க்ஸ் சாதனை:

தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதர சிக்கலுக்குப் பிறகு மறுபடியும் மார்க்சிசம், சோசியலிஸம், கம்புனிஸம் பற்றிய பொதுவான பார்வை மாறியுள்ளது. தேடல்கள் அதிகரித்துள்ளது. சமீபத்தில், ஜெர்மனியில், கார்ல்டைட்ஸ் வெர்லாஃக் பதிப்பகம் 1500க்கும் மேற்பட்ட கார்ல் மார்க்ஸ் எழுதிய "மூலதனம்" நூலின் பிரதிகளை விற்றுள்ளது. "1867ல் எழுதப்பட்ட மூலதனம், ஆண்டிற்கு பொதுவாக விற்பனை இரண்டு இலக்கம் தாண்டுவதே அரிதாக இருக்கும்போது, தற்போது விற்பனை அதிகரித்துள்ளது", என்று அதன் பதிப்பாளர் கூறுகிறார்.

·     “தத்துவவாதிகள் இதுவரை உலகை பலவழிகளில் வியாக்யானம் செய்து வந்துள்ளனர். இங்கு பிரச்சினையே உலகை எவ்வாறு மாற்றுவது என்பது தான்''

என்ற புகழ்பெற்ற மார்க்ஸின் பாயர்பாக் மீதான பதினோராவது பிரகடனத்தி லிருந்து எரிக் ஹாப்ஸ்வாம் தமது நூலுக்கு உலகை மாற்றுவதெப்படி? என்று தலைப்பிட்டுள்ளார். ஆசிரியரே பொதுவாக வெறுக்கும் சேகுவாரா படம் போட்ட அட்டை இந்நூலுக்கு வேறொரு அர்த்தத்தைக் கொடுக்கிறது. எந்த லௌகீக தத்துவங்களுமே இதுவரையிலும் உலகை விளக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கின்றன. மார்க்சியம் மட்டுமே உலகை மாற்ற செயல் திட்டத்திற்கு வழிவகுத்தது. கடுமையான பொருளாதார நெருக்கடியும் புரட்சியின் வரலாறும் / புரட்சியின் தோற்றுவாய்கள் / பொருளாதார நெருக்கடியும் புதிய சமூக முரண்பாடுகளும் /'ஸ்பெயின் சிவில் வார்சூ, ஸ்பெயின் மற்றும் இத்தாலியின் சமூக எழுச்சி இயக்கங்கள், கியூபா கொரில்லாப் புரட்சி அனுபவங்கள்'' போன்ற எழுச்சிப்பேரலையில் பங்கெடுத்துக்கொண்ட ஆசிரியர் மேற்படி தலைப்புகளிலும்; புரட்சியாளர்கள் மற்றும் எழுச்சிகள் போராட்டங்கள் குறித்தும்; எல்லைகளின் காலகட்டம்,புரட்சியின் காலகட்டம், மூலதனத்தின் காலகட்டம், வல்லரசின் காலகட்டம் என்று காலம் குறித்தும் எழுதித்தள்ளிய எரிக் ஹாப்ஸ்வாமின் மார்க்சியத்தின் காலம் குறித்த இந்நூல் வெறும் மார்க்சிய வரலாற்றைச் சொல்வதற்கல்ல; இன்றைய நவீன உலகமயமாக்கல் சூழலை விளங்கிக்கொள்வதற்கும் ஏகாதிபத்தியத்தின் சந்தைப்போட்டி நெருக்கடியைப் புரிந்துகொள்வதற்குமான அறிவொளியாக மார்க்சியம் திகழ்கிறது என்பதை பல வரலாற்று நிகழ்வுகளின் படிப்பினையைச் சொல்லி வலியுறுத்துவதற்கே இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.. உலகமயமாக்கல் எவ்வாறு புதியபுதிய அரசியல் நகர்வுகளை பொதுவல்லாத பிற ஜன இயக்கங்களை வெகுமக்கள் போராட்டங்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டுகிறது இந்நூல்.

·     முதலாளித்துவத்திற்குப் பிறகு சோசலிசம் வந்தே தீரும். இது வரலாற்று நியதி என்று கொள்வோமானால் பின் ஏன் வர்க்கப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்? முதலாளித்துவம் உச்சக்கட்ட சுரண்டலை ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடும் நிலையில் போர்க்குணமிக்க ஆணும்பெண்ணுமான பாட்டாளிவர்க்கம் வலுவான சக்தியாக அரசியல் அறிவில் திரட்சிபெற்றதும் கூடிய பலத்துடன் முதலாளித்துவத்தின் பலவீனமான கண்ணியை உடைத்து விடுதலைபெறும் புரட்சி நடந்தேறுமென்று மார்க்ஸ் சொன்னார்.

·     லண்டன் ஹைகேட் கல்லறைத் தோட்டத்தில் 19ம் நூற்றாண்டு மார்க்ஸும் நம் காலத்து அரிஸ்டாட்டில் எனப்புகழப்பட்ட ஸ்பென்சரும் அருகருகே பார்த்தபடி வீற்றிருக்கின்றனர். பல பார்வையாளருக்கு ஸ்பென்சர் அங்கிருப்பதே தெரியாது; மார்க்சைப் பார்க்கவருவோர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இரான் மற்றும் ஈராக்கின் நாடுகடத்தப்பட்ட கம்யூனிஸ்டுகள் பலர் அங்கே மார்க்ஸின் நிழலில் தங்களுக்கு இடம் பார்த்திருக்கின்றனர். இப்படி ஆரம்பிக்கும் இந்நூலில் முந்தைய மார்க்சிய சோசலிஸ்டுகள், மார்க்ஸ் அவர்களை விலக்கிக் கொண்டது, மார்க்சின் அரசியல் சகாப்தம், மார்க்சின் எழுத்துக்கள் பாசிச எதிர்ப்பு இயக்கங்களுக்கு பேராதர்சமாக விளங்கியது, உள் நாட்டு யுத்தம் மற்றும் உள் நாட்டு யுத்த த்திற்குப் பின்னுள்ள காலம் போன்ற தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

·     முன்னெப்போதையும்விட இன்றைக்கு மார்க்ஸை வாசிக்கவேண்டிய அவசியத்திலிருக்கிறோம். இன்றைய உலகமயமாக்கல் சூழலில், கடும் சந்தைப்போட்டி யுகத்தில் மார்க்ஸ் குறித்த ஆழமான புரிதலை நாம் மேற்கொண்டாகவேண்டும். நடப்பு நிதி நெருக்கடியானது முதலாளித்துவத்தின் மீதான கடும் அதிருப்தியையும் பீதியையும் கிளப்பிவிட்டபடியால் இன்றைக்கு உலகெங்கும் மக்கள் மார்க்சியத்தின்பால் ஈர்க்கப்பட்டுள்ளனர். இந்த மாற்றம் விரும்பத்தக்கதா அல்லது காலாவதியாகிப்போன அபாயகரமான ஒரு தத்துவத்தை மேற்கொள்கிறார்காளா? என்று ஆய்வுசெய்யும்வேளையில்.. புகழ்பெற்ற பிரிட்டிஷ் மார்க்சிய வரலாற்றுத்திறனாளி 94 வயது எரிக் ஹாப்ஸ்வாம் அவர்கள் மார்க்சின் 'மூலதனம்' (டாஸ் கேப்பிடல்) நூலை ஒரு மீள்கண்டுபிடிப்பே நிகழ்த்தியிருக்கிறார். இன்றைய உலகமயமாக்கல் சூழல் சமூகத்தில் மார்க்ஸின் பொருத்தப்பாட்டை, தீர்க்கதரிசனத்தை மெச்சி வைக்கும் இவரது பதினாறாவது ஆய்வுநூல் பல எதிர்ப்புகளுக்கிடையிலும் உலகெங்கும் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மார்க்ஸ் ஏங்கல்ஸினுடைய பல்வேறு ஆய்வுகளை முன்வைத்தும் 'இங்கிலாந்தில் பாட்டாளிவர்க்கத்தின் நிலைமை என்ற நூலுக்கு சிறியதோர் முன்னுரையிட்டு மார்க்ஸின் " முன் முதலாளித்துவ உருவாக்கம்' "tடஞு எணூதணஞீணூடிண்ண்ஞு' என்ற நூலின் வெளிச்சத்தில் ஏங்கல்ஸினுடைய ஆய்வை விளக்குகிறார்.

·     "மார்க்சிய வரலாற்றாசிரியர்' என்று பலராலும் புகழப்படும் எரிக் ஹாப்ஸ்வாம் உண்மையில் வரலாற்றுப் பகுப்பாய்வில் கூர்மையான முடிவுகளைச் சொல்பவர்; மார்க்ஸினுடைய ஆய்வுமுறையைச் சுவீகரித்துக்கொண்டதின் விளைவு 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த பிரெஞ்சு மற்றும் தொழிற் புரட்சிகளுக்குப் பிறகுள்ள ஐரோப்பிய சமுகத்தினை பகுப்பாய்வு செய்துள்ளார். மார்க்சிய வரலாறு குறித்த ஆய்வை "உலகை மாற்றுவதெப்படி?"மார்க்ஸும் மார்க்சியமும் நூலில் வைத்ததன் மூலம் பெரும்புகழ்பெற்றுவிட்டார் என்றே சொல்லலாம். கட்டவிழ்த்துவிடப்பட்ட சந்தைப் போட்டியினெல்லையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு மார்க்சை வாசித்தல் முன்னேப்போதையும்விட அதிக முக்கியத்துவமுடையதாகிறது.

·     வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில்தான் முதலில் புரட்சி நடக்கும் என்ற தமது கருத்தை மாற்றிக்கொள்வதை மார்க்ஸ் 1869 அக்டோபர் 24இல் ஏங்கல்ஸுக்கு:'மிக நுட்பமான ஆய்வுகள் நேர்மாறான முடிவைச் சொல்கின்றன. அயர்லாந்தை விடுவிக்காமல் இங்கிலாந்து பாட்டாளி வர்க்கத்தினால் எதையும் சாதிக்கமுடியாது; இப்போதைக்கு ஆங்கிலேய அரசருக்கும் சர்ச்சு கும்பலுக்கும் புரட்சிகர அயர்லாந்தில் தான் வளர்ச்சியடைந்த வர்க்கமாக திகழ்கிறது. ஆனால் பிரிட்டிஷாரின் எதிர்வினை இங்கிலாந்து அயர்லாந்தை அடிமைப்படுத்தி உள்ளிணைத்துக்கொள்வதிலிருக்கிறது.'' எனத் தெரியப்படுத்துகிறார். காலனியாதிக்கம் மூலம் முதலாளித்துவத்தின் வாழ்க்கை நீடிக்குமென்றோ வர்க்கப்போரட்டத்தை திசைமாற்றி விடுமென்றோ மார்க்ஸ் தமது படைப்புகளில் சொல்லவில்லை. முன்வரலாற்றுக் குறிப்புகள் தொடங்கி கிராம்சி வரவால் மார்க்சியத்திற்குப் புத்தெழுச்சியும் புதுத்தெம்புமேற்பட்டது எனச்சொல்லி போருக்குப் பிந்தைய மார்க்சிய சிந்தனை வரை அடுக்கிச்சொல்லும்போதே மார்க்சியத்திற்கு ஓர் புதிய பரிமாணம் கிடைத்துவிடுகிறது.

·     பாட்டாளி வர்க்க வரலாற்றிலிருந்து அடித்தள மக்களாய்வு வரை வெகுஜன வாழ்க்கை நிலைமைகளை கலாச்சார பண்பாட்டு மரபுகளை அதீத மதிப்பீடுகளாக போராட்ட வடிவங்களாக முன்வைக்கும் அடித்தள மக்காளாய்வு ஒருபுறம். கண்முன்னால் நடந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான வர்க்கப் போராட்டங்களை கவனித்து ஆய்வு செய்யும் இந்திய மார்க்சியரைத் திசைத்திருப்பவே அடித்தள மக்களாய்வு என்ற ஒருதுறையை உருவாக்கிப் பணங்கட்டிப் படிக்க ஆள்திரட்டும் வியாபாரி பெருமுதலாளிப் பலகலைக்கழகங்கள் மலிந்துவிட்டதை மறுபுறமாகச் சுட்டிக்காட்டுகிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஆதரவளிக்கும் அடித்தளமக்கள் மரபைமீறும் போர்க்குண வடிவங்களை மேற்கொண்டு சமூக உரிமைக்கான புரட்சிப்பதாகையை ஏந்தியவண்ணம் வீதியிறங்கிப் போராடும் இவர்களது கோரிக்கை கோஷங்கள் வர்க்கப்போரட்டத்திற்கு துணைபுரியும் விதமாக தலைமையேற்கப்படவில்லை என்பதுதான் யதார்த்தம்.

·     சம்பள உயர்வு, தொழிலாளர் நலவாரியங்கள், உற்பத்தி வெகுமதி போன்ற இதர பணப்பட்டுவாடாசெய்து தொழிற்சங்கங்களை முடமாக்கி மேற்கத்திய முதலாளித்துவம் மாபெரும் வெற்றிச் சிகரத்தையெட்டிய 1960களில் உருவான புதிய ரேடிக்கல் இடதுசாரி இயக்கங்கள்…. குறித்த விமர்சனங்களை முன்வைக்கிறார். கடும் நெருக்கடிக் குள்ளாகியிருக்கும் / அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவத்தை வன்மையாக எதிர்க்கும் மார்க்சியத்தின் கீழ் வெகுஜன எழுச்சியைக் கட்டியெழுப்புவதெவ்வாறு என்று வரும்போது பரீட்சார்த்த யோசனையாக சிலவற்றைக்காட்டுகிறார். மார்க்ஸிய வரலாற்றாய்வாளர்கள் பின்நவீனத்துவ சிந்தனைகளை எதிர்கொண்டு கடந்துசென்ற காலகட்டம் என தொண்ணூறுகளைச் சொல்கிறார். பிந்தைய முதலாளித்துவத்தின் கலாச்சார பண்பாட்டு தர்க்கமாக பின் நவீனத்துவம் மார்க்சிய சிந்தனையைத் திசை திருப்பும் புதிய மறுப்புவாதமாக கட்டவிழ்த்துவிடப்பட்டதை எச்சரிக்கிறார்.

·     தேச அரசுகள்தான் சந்தைப்போட்டியில் ஆதிக்கம்செலுத்துகின்றன என்று சந்தை அடிப்படைவாதம் குறித்து கூர்மையான விமர்சனங்களை வைக்கும் ஆசிரியர், போருக்கு எதிராக மாபெரும் உலக அமைதி இயக்கங்கள் வைத்த கோஷங்களில் நம்பிக்கைகொள்ளாதவர். சமூகப் பரிணாமம் குறித்த கோட்பாடுகளை பாண்டித்திய உரையாக உதிர்ப்பதில் மிகுந்த கவனமும் தீவிர சிந்தையுமுடைய ஆசிரியர் கால வரிசைப்படி வரலாற்றை வைக்கும்பொழுது இணைத்துப்பார்ப்பதை செய்யவில்லை. 1956 ஹங்கேரி மீதான சோவியத் படையெடுப்பினால் பிரிட்டிஷ் கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து வெளியேறியவர்களைப் பற்றியும் கம்யூனிஸ்டுக் கட்சிக்கு வெளியிலுள்ள இடதுசாரி இயக்கங்களைக் குறித்தும் எந்தத் தகவலுமில்லை. சோசலிச அரசுகளின் வறட்டுக் கோட்பாட்டுவாதத் திணிப்பு குறித்து சொல்லும்போது" இறையியலுக்கு சமமான மதச்சார்பற்ற போராட்டம்" என்று வர்ணிக்கிறார்.

·     தேசியவாதம் குறித்த விவாதத்தில் அர்மீனிய சோசலிசத்தில் ஏற்பட்ட பிளவு; பெல்ஜிய இடதுசாரிகளுக்குளெழுந்த இயற்கைவாதம் குறியீட்டுவாதம் குறித்த கருத்தரங்குகள்; 1930களிலெழுந்த விஞ்ஞானப்பிரச்சினைகள் சோசலிசத் திட்டங்களிலேற்பட்ட குழப்பங்கள்; பிரெஞ்சு "அன்னல்' வரலாற்றுபள்ளியினரின் பங்களிப்பு போன்ற பலவிஷயங்களை மிகுந்த துல்லியத்துடன் அதிகாரப்பூர்வமாக முன்வைக்கிறார். இரண்டாம் மூன்றாம் அகிலத்து சோசலிஸ்டுகள் கொள்கைத் துல்லியமாக்கும் ஆர்வக்கோளாறில் மார்க்ஸ் ஏங்கல்ஸ் படைப்புக்களை ரத்தினச்சுருக்கமாக வெளியிட்ட அபாயத்தை, அந்த அரசியலை நமக்கு எச்சரிக்கிறார் ஆசிரியர்.

·     1917க்குப்பிறகு மேற்கில் உதித்த மார்க்சிய சுய சிந்தனையாளர் கிராம்சியே என்று புகழ்ந்து பேசுவார் எரிக் ஹாப்ஸ்வாம். ஆனால் வால்டர் பெஞசமினே அந்தப் புகழுக்குரியவர். தம்மைச் சுற்றியிருந்த கற்பனாவாத சோசலிஸ்டுகள் முன் வைத்த வரலாற்றுப் பொள்ருமுதல்வாதத்தைதான் மார்க்ஸ் குறிப்பாக விட்டுவிடுதலையானார். ஆனால் ஹாப்ஸ்வாம் இச்சிந்தனையாளர்களுக்கு மார்க்ஸ் பெரிதும் கடன் பட்டுள்ளார் என்று வலிந்து சொல்கிறார்.

·     அடையாள அரசியலும் இடதுசாரிகளும் அடையாள அரசியலை எதிர்ப்பவர் எரிக் ஹாப்ஸ்வாம் : இன்றைக்குப் புழங்கிவரும் கூட்டு அடையாளம், அடையாள குழுக்கள், அடையாள அரசியல்,இனவாதம், நிறவாதம், பாலுமை வாதம் போன்ற சொல்லாடல்களுக்கு நாம் பழக்கப்பட்டுவிட்டோம். இடதுசாரிஅரசியல் சொல்லாடலில் இதுபோன்ற வார்த்தைகளை சர்வசாதாரணமாகப் புழங்குகிறோம். 1968 வாக்கில் வெளியான சர்வதேச சமூக விஞ்ஞானங்களின் சொற்களஞ்சியத்தில் "identity'' என்ற சொல்லுக்கு உளசமூகவிய அடையாளம் வக்காளர் அடையாள அட்டை மற்றும் திடீர் அடையாள நெருக்கடிக்குள்ளான வயசுப் பருவங்களுக்குள் உளவியல் ரீதியாக எழும் நான் யார்? என்ற கேள்வி போன்ற விஷயங்களாகத்தான் என்ற குறிப்பைத் தவிர வேறெந்தப் பதில் விளக்கமும் இடம்பெறவில்லை. 1970களில் வெளியான ஆக்ஸ்போர்டு அகராதியில் இனவாதம் என்ற சொல்லுக்கு நம்பிக்கையற்றவர்களின் உலகம், மூட நம்பிக்கை சார்ந்த விஷயமாகப் பொருள் கொடுத்து ள்ளனர். கற்பித இனக்குழுவாதம், மதவாதம், மொழிவாதம், பாலுமைவாதம், வாழ்க்கைமுறை, மற்றும் பிற கூட்டு அடையாளத்திலெல்லாம் சற்றும் நம்பிக்கையில்லாதவர் எரிக் ஹாப்ஸ்வாம். “இருபதாம் நூற்றாண்டின் பெரும் பிரச்சினையே திருத்தல்வாதமும், ஏகாதிபத்தியமும், தேசியவாதமுமே'' என்கிறார்.