சூபிக் கோட்பாடு

சூபி அரபுச் சொல் தூய்மை என்ற பொருள் கொண்ட ஸாப்(saaf) மூலச் சொல்லிலிருந்து பிறந்தது என்றும், அணி வரிசை என்னும் பொருள் கொண்ட ஸூப்(suf) மூல வார்த்தையிலிருந்து உருவானது என்றும் கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.

சூபி என்ற சொல்லை சோபோஸ் (sophos) என்ற கிரேக்கச் சொல்லுடன் இணைத்து அறிஞன் என்றும் பொருள் கொள்வதுண்டு. இது உண்மை (wisdom) அறிவு (enlightment) என்பதான அர்த்தங்களையும் கொண்டுள்ளது.

அரபு மொழியில் ஸூ (suf) என்றால் முரட்டு கம்பளி என்றும் அர்த்தம். ஆடம்பர வாழ்வை துறந்து மனோ இச்சைகளை அடக்கி எளிய வாழ்வின் சின்னமாக கம்பளியை விரும்பி அணிந்து கொண்டவர்கள் சூபிகள் என்பதாக இக்கருத்தோட்டம் அமைகிறது. நபிகள்நாயகம்(ஸல்)அவர்களின் வாழ்வோடு நெருங்கிய தொடர்புடைய அஸ்ஹாபுஸ் ஸூபா என்பவர்கள் திண்ணைத்தோழர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள். குரானிய கருத்தாக்கத்-திலிருந்து சூபிசம் பண்பாட்டு மதிப்புகளை தத்துவ இயலாகவும் உள்வாங்கிக் கொள்கிறது.

சூபிசம் - அறிதல் கோட்பாடு

சூபிசம் அறிதல் கோட்பாடு குறித்த சில பார்வைகளை நெகிழ்ச்சியாக முன்வைக்கிறது. மனிதனுக்கு புறத்தே இயங்கிக் கொண்டிருக்கிற உலகை, நிகழ்வுகளின் தொகுப்பை அறிந்து கொள்ள சில நடைமுறைகளை கவனத்திற்-கொள்ளச் சொல்கிறது. தர்க்கமும், பகுத்தறிவும் இணைந்த தத்துவவியலின் கூறுகளை பரிந்துரை செய்கிறது. மனித உணர்விற்கும், பொருளின் இருப்பிற்குமான உறவுநிலையைப் ஒருங்கிணைந்த-தாகவும் இது அமைகிறது.

இல்முல்கீன் (அனுமான ஞானம்), ஐனுல் யகீன் (தரிசனஞானம்) ஹக்குல் யகீன் (அனுபவஞானம்) என்பதாக அறிதலின் வகையினங்களை சூபிசம் பகுத்துக் காட்டுகிறது.

தூரத்தில் புகைவந்து கொண்டிருக்கிறது. ஆனால் கண்ணுக்கு நெருப்பு புலப்-படுவதில்லை. புகையை வைத்துக் கொண்டு நெருப்பு இருப்பதாக அனுமானம் கொள்வது இல்முல்யகீன். இது இறைவனுக்கும் சாதாரண மனிதனுக்கும் இடையிலான உறவுநிலைக் குறியீடாகும்

ஐனுல் யகீன் எரியும் நெருப்பை நேரடியாக கண்ணால் தரிசிப்பதாகும். இது இறைவனுக்கும் மெய்ஞானிகளான வலிமார்களுக்கும் இடையிலான உறவின் வகையைக் குறிப்பதாகும்.

எரியும் நெருப்பை தொட்டுப்பார்த்து அல்லது அதனுள் சென்று நெருப்பு சுடும் என்பதை நடைமுறை ரீதியாக உணரும் அனுபவ ஞானத்திற்கு பெயர் ஹக்குல்யகீன். இது இறைவனுக்கும் நபிமார்களுக்குமான பிணைப்பு பற்றி பேசப்படுகிற சொல்லாட-லாகும்.

உலகம் -உயிர் -மனம் பற்றிய கருத்தாக்கம்

உலகம் பற்றிய சிந்தனைமுறையிலும் சூபிசம் நான்குவித உலகங்களை அடையாளப்-படுத்திக் காட்டுகிறது. சமகால மனித உலகம் நாசூத். மனித ஜீவராசிகள் இல்லாத ஒளியால் படைக்கப்பட்ட இனமான மலக்குகள் என்னும் வானவர்களின் உலகம் மலக்கூத்,

சக்தியின் உலகம் ஐபரூத் இறைவனில் தோயும் உலகம் லாகூத் என்கிற வகையிலே விரிவான தனித்த அடையாளங்கொண்ட உலகங்கள் படைத்துக் காட்டப்படுகிறது.

உயிர் பற்றிய கோட்பாட்டுச் சிந்தனை-யையும் சூபிசம் முன்மொழிகிறது. உலகின் உயிர்கள் பற்றி பகுப்பாய்வு செய்து அதன் தனித்தன்மைகளை கண்டறிந்து விளக்க முற்படுகிறது.

ஜடப் பொருட்களின் உயிர் ரூஹில்ஜிமாத்து என்று அழைக்கப்படுகிறது. ஜடப் பொருட்களுக்கு உயிர் உண்டு. ஆனால் வளர்ச்சி கிடையாது. இடப்பெயர்ச்சித் தன்மையும் இல்லை. இங்கே பூமியின் ஈர்ப்பு விசை உயிர்த்தன்மை சார்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

-தாவர இனங்களின் உயிர் ரூஹில் நபாத்து என்பதாகும். விதையிலிருந்து, முளைகள், கிளைகள், செடிகள், கொடிகள், மரங்களாக வளர்கிறது. உயிர்த்தன்மை இருப்பதாலேயே செடி கொடிகள் வளர்கிறது. ஆனால் இவ்வுயிருக்கு ஓரிடத்தைவிட்டு இடம்பெயர்ந்து இன்னொரு இடத்தில் நிலைகொள்ளும் நகரும் தன்மை கிடையாது. மாறாக இவற்றின் வேர்கள் மட்டுமே பூமிக்குள்ளே நகர்ந்து செல்கிறது.

ரூஹில் ஹைவானி என்பது விலங்-கினங்களின் உயிர்குறித்த சொல்லாக்கமாகும். இதற்கென சில தனித்த பண்புத்தன்மைகள் உண்டு. இவ்வுயிர்களுக்கு வளர்ச்சி உண்டு. ஓரிடம் விட்டு வேறொரிடம் நகர்வதற்கான ஆற்றல் உண்டு. ஆனால் உழைப்பின் மூலமாக பொருளுற்பத்தி செய்யும் படைப்புத்திறன் கிடையாது.

மனித உயிரை குறிப்பதற்கு ரூஹில் இன்சானி சொல்லாக்கம் பயன்படுத்தப்படுகிறது. இடம்பெயர்தல், வளர்ச்சி, சிந்தனை, உழைப்பு, உற்பத்தி உள்ளிட்ட அனைத்துப் பண்புகளையும் உள்ளடக்கிய கருத்தாக்கமாக இது விளங்குகிறது.

மனம் என்னும் கருத்துருவாக்கம்

மனம் என்னும் கருத்துருவாக்கம் பற்றியும், அது பல்வேறு உணர்வு நிலைகளால் பின்னிப் பிணையப்பட்ட விதம் குறித்தும் சூபி ஞானக் கோட்பாடு அதிகம் பேசியது. ஏனெனில் அகமியஞான உணர்வுநிலை முற்றிலும் நப்ஸ் எனப்படும் ஆன்மா சம்பந்தப்பட்ட கருத்து நிலையிலிருந்தே உருவாகி வளர்கிறது.

எல்லாமும் கடந்த இறைநிலை மெய்மையோடு மனிதமனம் இரண்டறக் கலத்தலே இஸ்லாமிய அனுபூதி சிந்தனையின் வழிமுறை. எல்லைக்குட்பட்ட ஒன்று எல்லை கடந்த ஒன்றோடு சேர்ந்து ஒன்றாவது என்பதாக இதற்கு அர்த்தங்கள் உண்டு. அதீத உலகியல் நுகர்ச்சிக்கு மாற்றாக உலக இன்பங்களிலிருந்து விடுபட்ட ஆன்மா பிழைபொறுக்க (தவ்பா) வேண்டி இறையிடம் பூரண நம்பிக்கை (தவக்கல்) கொள்கிறது.

சூபிக் கோட்பாடு மனித ஆன்மாவின் இயல்புகளை ஏழு வகைகளாக பாகுபடுத்திச் சொல்கிறது.

தீயகெடுதியைத் தூண்டுகிற ஆன்மா நப்ஸ் அம்மாரா, மிருககுணம் நீங்கி நற்குணம் திரும்பும் ஆன்மா நப்ஸ் லவ்வாமா, நன்மையான காரியங்களை செய்யும் ஆன்மா நப்ஸ் முல்ஹஇமா அமைதி நிலையில் இருக்கும் ஆன்மா நப்ஸ் முத்மஇன்னா. இறைச் சோதனையை தாங்கி நம்பிக்கை தளராது உறுதியோடு இருக்கும் ஆன்மா நப்ஸ் ராளிய்யா, தன்னைத்தானே நிறைவு பெற்ற ஆன்மா நப்ஸ் மரளிய்யா, இறைஞானம் முழுமையாக ஒளிர்ந்த ஆன்மா நப்ஸ்காமிலா என்பதாக இந்த படித்தரங்கள் விவாதிக்கப்படுகின்றன.

எந்த ஒன்றையும் சொந்தமாக்காமலும், எந்த ஒன்றிற்கு சொந்தமாகாமலும் இருத்தல் என்பதும் நீ உன்னில் இறந்துவிடும்படி இறைவன் உன்னைச் செய்து அவனில் உன்னை வாழும்படி செய்தல் என்பதும் சூபிசத்தின் அடிப்படை.

ஆன்மாவின் தூய்மை, நன்மை தீமைகளை பகுத்துணரும் வல்லமை அன்பினால் அதனை சுடர்விடச் செய்தல் என்பதான நுண்ணிய கருத்தாக்கங்கள் இங்கு முன்வைக்கப்படுகின்றன.

இந்திய பண்பாட்டுச் சூழலில் சூபிமார்க்கம் ஒருபுறம் இறைநேசத்தையும் மறுபுறம் மனிதகுலநேசத்தையும் அடிப்படையாகக் கொண்டே வெளிப்பட்டுள்ளது. எளிமை, சுயஅடக்கம், பரந்தநோக்கு, சமயஒற்றுமை உணர்வு உட்பட்ட லட்சியங்களின் வடிவமாக இது செயல்பட்டுள்ளது.

நீங்கள் விளக்கைப் போலவும் ஊசியைப் போலவும் ஆகிவிடுங்கள்

சூபிகள் இஸ்லாமிய மெய்ஞானிகளாக, சித்தர்களாக, அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

உலகியல் சார்ந்த அறவியல் கோட்பாடுகளையும், ஆன்மீகம் சார் வாழ்வியல் நெறிகளையும் ஒருங்கிணைத்து மனிதகுலத்திற்கு வழிகாட்டும் மார்க்கமாக இஸ்லாம் தன்னைஅர்த்தப்படுத்தியுள்ளது.தொழுகை, நோன்பு, புனித ஹஜ்பயணம் என எல்லாவித கடமைநிறைவேற்றுதல்களிலும் ஒருவித கூட்டு வழிபாட்டுமுறையை முன்வைக்கிறது.

மேல் - கீழ், உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்கிற இறுக்கமான சமுதாய அடுக்கு முறைகளின் அடிப்படையை தகர்த்து எல்லோரும் சமம் என்னும் பேருணர்வை பூமியெங்கும் பரப்பி, மனிதநேயத்தையும், மனித நீதிக்கான அடித்தளங்களையும் வலுவாக்கிக் கொண்டது.

இஸ்லாமியத்தை நபிமுகமது பிரச்சாரம் செய்து நடைமுறைப்படுத்திய மக்கா. மதினா அரேபிய பிரதேசங்களில் இது துவக்கம் கொண்டுள்ளது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நபிகளின் உற்ற ஸகாபாக்கள் அஸ்ஹாபுஸ் ஸூபா திண்ணைத் தோழர்களின் அறிமுகத்-திலிருந்தே இதற்கான துவக்கக் கூறுகள் தென்படுகின்றன.

நபிகள் நாயகத்தின் மறைவுக்குப் பின் இமாம்கள் அபூபக்கர், உமர், உஸ்மான், அலி கலீபாக்களின் ஆட்சிக்குப் பிறகு இஸ்லாம் பேசிய ஒற்றுமை உணர்வு, சமதான சகவாழ்வு, வறியவருக்கு உதவுதல் உள்ளிட்ட மனிதப் பண்புகளின் சிதைவாக்கம் நிகழ்வுத்துவங்கியது. உமய்யாக்கள், அபாசித்துகள் ஆட்சிக்காலத்தில் இதன் கோரம் விரிவானபோது இஸ்லாம் முன்வைத்த எளிமைசார்ந்த மனிதநேய வாழ்வை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில் ஞானிகள் சிந்திக்கவும், செயல்படவும் துவங்கினர்.

சூபிசம் பல்வேறு நாடுகளின், சூழல்களின் தன்மைகளைக் கொண்டு முகிழ்த்தது. துன்னுன் மிஸ்ரி (கி.பி. 796-862) மன்சூர் ஹல்லாஜ் (கி.பி. 858 --- 922) கஸ்ஸஅலி (கி.பி. 1058--1111) முஹயத்தீன் இப்னு அல் அரபி (கி.பி. 1165) அப்துல் காதிர்ஜலானி (1078--1166) காஜா முகீனுதீன் சிஷ்தி, (1141-1236) மெள்லவி ஜலாலுத்தீன் ரூமி (1207--1273) என உலக அளவில் சூபி ஞானிகள் முக்கியத்துவம் பெறத் துவங்கினர்.

இந்திய மண்ணில் அலிய்யுனுல் ஹஜ்வீரி, பரீதுத்தீன் கஞ்சேஷகா (1175-1265), அலாவுத்தெள்லா சிம்னானி (1261--1336), ஷெய்கு நிஜாமுதீன் அவுலியா (1325) ஷாஒலியுல்லா, ஷராபுத்தீன் அகமது மனோ உட்பட்ட முக்கியமான மெய்ஞானிகளின் பங்களிப்பு முக்கியமானதாக அமைந்தது.

சூபிச சிந்தனைகளின் பல்வேறு தத்துவப்போக்குகள் பின்பற்றுதல்கள் நிகழ்ந்ததன் விளைவாக சிஸ்தியா, காதிரிய்யா, சுக்ரவர்த்தியா, நக் ஷபந்தியா, ஷாதிலிய்யா, உள்ளிட்ட ஞானவழி மார்க்க பிரிவுகள் (தரீகாக்கள்) உருவாகின. இஸ்லாமிய சூபிச சிந்தனைப் போக்கு பல்வேறு கருத்துப்-போக்குகளை முன்நிறுத்திய தத்துவ இயலாகவும் பரிணமித்தது.

இறைவனை ஒருவன் என்பதை ஏற்றுக் கொண்ட சூபிகள் இறைவனை அறிதல் குறித்த பாதையைப் பற்றி வித்தியாசமான கருது-கோள்களைக் கொண்டிருந்தனர். இஸ்லாத்தின் அகம்சார் மறைஞான, ஆன்மீக உளவியலின் பரிமாணமாக சூபிசம் முக்கியத்துவம் பெறுகிறது. மனித மனங்களின் உள் ஆழங்களில் நிகழும் இறைத்தேட்ட பயணங்களினூடே இறைவனை அடியான் நெருங்கிச் செல்வதற்கான தடயங்களை சொல்லிச் செல்கிறது.

சூபிகள் ஆடம்பரத்திற்கு எதிராக எளிமை, பொய்மைக்கு எதிராக தூய்மை, சண்டைச் சச்சரவுகளுக்கு எதிராக சமாதானம், ஏற்ற தாழ்வுகளுக்கு எதிராக சமத்துவம் என்கிற அடிப்படை உணர்வுகளுடன் இஸ்லாமிய ஆத்மஞான சிந்தனையை செலவிட ஆரம்பித்தனர்.

இஸ்லாமியத்தை முரண்பாடுகளுள்ள நடைமுறைத் தத்துவமாக ஆக்கபட்டதை சகிக்காமல் ஞானத்தை இந்த நடைமுறை இருப்பியல் வாழ்விற்கு அப்பால் தேடினர். முரணற்ற, நிரந்தரதன்மை கொண்ட உண்மையை எதிர்நோக்கினர். புலன் உணர்வுகளாலும் அறிவாலும் உணரமுடியாத அந்த உண்மையைத் தேடி தியானம் செய்ய முயன்றனர்.

இத்தகைய அனுபூதவியல் தன்மைகொண்ட இறைவனை அறிதலுக்கு, மனதை தூய்மைப்-படுத்துதல் என்கிற உபாயத்தை முன்வைத்தனர். வஞ்சகம், ஏமாற்று, பொறாமை, கோபம், ஆணவம், மனோஇச்சை உள்ளிட்ட உணர்வு-களுக்கு அப்பால் பரிபக்குவ நல்உணர்வுகளால் சூழப்பட்ட தூய பேருண்மையை தரிசிப்பது என்பதான நடவடிக்கையை கோட்-பாட்டுருவமாக்கினர்.

இதற்கென உடல்பற்றிய ஞானத்தை அறியமுற்பட்டனர். உயிரைகாக்க உடலை வலுப்படுத்துதல், பாதுகாத்தல், மரணமில்லா பெருவாழ்வை பற்றி சிந்தித்தல் என்பதாகவும் இது நிகழ்ந்தது.சூபிகளின் இறையியல் கருத்து தனிமைப்பட்ட, வாழ்விலிருந்து துண்டிக்கப்-பட்ட ஒன்றானதுபோல் தெரிந்தாலும் அவற்றின் அடிப்படை புறவாழ்வில் மனிதனை சிறுமைப்படுத்தும் குணங்களை விட்டொழித்து அகவய உயர்பண்புகளின் உணர்வுகளால் மனத்தை தூய்மையுறச் செய்வதே ஆகும். இதன் இன்னொரு பரிமாணமாகவே மனிதகுலத்திற்கு பணியாற்றும் பண்பினை சூபிகள் முதன்மைப்படுத்தினர். எனவே சூபிகளின் சமூக செயல்பாட்டு இயக்கம் குறித்தும் இவற்றினூடே நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

குணங்குடி மஸ்தான் சாகிபு, தக்கலை பீர்முகம்மது சாகிபு, கோடை நகர மெய்ஞானி ஷெய்கு முகியத்தீன் மலுக்கு முதலியார், காலங்குடி இருப்பு மச்சரேகைசித்தர், அய்யம்பேட்டை அப்துல்கனி சாகிபு, காயல்பட்டணம் செய்யது முஹம்மது காதிர், கணியாபுரம் ஷெய்கு அப்துல்காதர் வாலைமஸ்தான் யாகோபுசித்தர் தென்காசி இறசூல்பீவி, கீழக்கரை ஆசியாவும்மா இளையான்குடி கச்சிப்பிள்ளையம்மாள் போன்றோரின் வாழ்க்கை, பாடல் மரபு வழியாக இந்த உண்மைகளை நாம் உணர முற்படலாம்.

பாரசிக பெண் சூபியான ராபியத்துல் அதவியா மனிதகுலத்திற்கு தொண்டாற்றும் நற்செயலை கீழ்கண்டவாறு விளக்குகிறார்.

நீங்கள் விளக்கைப் போலவும் ஊசியைப் போலவும் ஆகிவிடுங்கள் என்று தனக்காக அன்றி பிறருக்காகவே எரிந்து எரிந்து ஒளிதருகின்ற விளக்கு போலவும், நிர்வாணியாக இருந்து கொண்டே கிழிந்த ஆடைகளைத் தைக்கும் ஊசியைப் போலவும் தன்னலமற்று மனிதகுல மேன்மைக்காக பணியாற்ற வேண்டும் என்பதாகவும் இது அமைகிறது.

இந்திய மண்ணில் வர்ணாசிரம மேலாதிக்கத்தாலும் சாதிப்படிநிலை வரிசை முறையினாலும், மனித உடம்பையே தீட்டென சொல்லி ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் சூபிகளின் சகோதரத்துவ உணர்வு ததும்பிய சமயப்பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு சாதீயக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற்றனர்.

இந்திய சூபிஞானி ஷெய்கு நிஜாமுத்தீன் அவுலியா எல்லாமக்களுக்கும் சாந்திவேண்டும் எனவும் மனித குல நலனுக்காக இறைவனை நேசிப்பவரும், இறைவனுக்காக மனிதகுலத்தை நேசிப்பவரும் இறைவனின் நெருக்கத்துக்கு உரியவர்கள் எனவும் பேசினார்.

வட இந்திய பக்திமார்க்கத்தின் முக்கிய மூலவரான கபீர் (1838 - 1440) இந்து முஸ்லிம் சிந்தனை இணைப்பின் முக்கிய சரடாகத் திகழ்ந்தார். சமயங்களின் பெயரால் புறமத அடையாளங்கள், குறியீடுகளை முன்வைத்து நடைபெறும் சண்டைகளுக்கும் அநியாயங்-களுக்கும் முடிவுகட்ட ஒரு சமரச வழித்தடத்தை உருவாக்கினார்.

அன்புத்ததும்பும் ஞானநெறியின் உயர்நிலை அடைந்தவர்கள் புறசமய அடையாளங்களை கறைந்து, வேற்றுமை பாராட்டும் பண்பினை மறுப்பவர்களாக, இருந்துள்ளனர். பரந்த பண்பட்ட நோக்கில் எல்லாமும் அவர்களுக்கு ஒன்றாகவே தெரிந்துள்ளது. எனினும், சைவ, வைணவ சித்தரீய குறியீடுகளின் தாக்கம் பெற்ற சூபிகளின் பாடல்களை இஸ்லாமிய சிந்தனை வட்டாரத்திற்குள் பிறசமயக் குறியீடுகளையும் உள்வாங்க முயற்சித்த சமய நோக்கின் விளைவாகவும் கருதலாம்

ஒவ்வொரு வகுப்பினருக்கும் நாம் ஒரு திருத்தூதரை அனுப்பினோம் (16:36) என்ற திருமறை வசனத்தின் அடிப்படையில் இந்துமக்களையும் அஹ்லேகிதாப் என்னும் வேதம் பெற்ற மக்கள்தான் என்று சூபிஞானிகளில் ஒரு பிரிவினர் கூறியுள்ளதை இங்கு நாம் கவனத்திற் கொள்ளலாம்.