(இஷிகாவா தொக்குபுக்கு, ஜப்பான், 1885- 1912)

1.
ஒரு போதும்
மறக்க முடியாது
எனக்கு காட்ட
கண்களில் நீர் வழிய
ஒரு கைப்பிடி மணலை
எடுத்து நீட்டியவனை

2.
“மகத்துவமானது”
என்று நூறு முறை
மணலில் எழுதி
சாவை ஒத்திப் போட்டு
வீடு சென்றான்

3.
அவனுக்கு நான்
ஒரு உபயோகமற்ற கவிஞனைத் தவிர
வேறொன்றுமில்லை
அவனிடம்
கடன் வாங்கி இருக்கிறேன்

4.
சும்மா வேடிக்கைக்காக
அம்மாவை முதுகில் ஏற்றுகிறேன்
ரொம்ப லேசாய் உணர
அழ ஆரம்பிக்கிறேன்
மூன்று அடிகள் கூட
எடுத்து வைக்க முடியவில்லை

5.
சாலையோரமாய்
நீண்ட கொட்டாவி விடுகிறது
நாய் ஒன்று
திரும்பி விடுகிறேன் நானும்
வெறும் பொறாமையினால்

6.
உழைக்கிறேன்
இன்னும் உழைக்கிறேன்
ஆனாலும் வாழ்வு
சதா வறுமையிலே
கைகளை வெறிக்கிறேன்

7.
புதைச் சேற்றில்
வெண் தாமரை மலர்வது போல்
குழம்பும் என் மனதில்
மிதக்கிறது துக்கம்

8.
தற்செயலாய்
ஒரு தேநீர் கோப்பையை உடைக்க
எதையாவது உடைப்பதன்
உவகையை அறிந்தேன்
இன்று காலையிலும் என் மனதில்
அதுதான் உள்ளது

தமிழில் ஆர்.அபிலாஷ்

Pin It