இன்முகத்தோடு
கனிமொழியால் வினவியதில்லை
எந்தக் குழந்தையிடமும் பெயரை
பிஞ்சுகளின்
மென்கன்னம் வருடி
பரவசபடுத்தியதில்லை ஒருபோதும்
குழவிகள் சிந்தும்
குறுநகையை பெற்றுக் கொள்வதுமில்லை
பதிலுக்கு ஒரு புன்னகை உதிர்ப்பதுமில்லை
சின்னஞ்சிறுசுகளின் நோய்க்கேட்டு
மருந்து சீட்டெழுதி மட்டுமே
அனுப்பிவிடும் உன்னை
அழைப்பதெப்படி
குழந்தை மருத்துவரென்று
பாடம்
சகல வசதியுடன் கூடிய
நவீன கட்டட வீட்டில்
தனியறையில் படிக்கும்
தலைமுறை அறியுமா?
ஒழுகும் கூரை வீட்டு
ஒட்டுத்திண்ணை
சிம்னி விளக்கில்
அப்பா கற்ற பாடத்தை
களவு
கரும்பந் தோகை விளிம்பு சிராய்ப்பைத்
துச்சமாய் கருதி
பால்ய சகாக்களுடன்
ஆளுக்கிரண்டு கழிமுறித்து
முள்வேலி தாண்டிய போது
கையுங் களவுமாய் பிடித்த
கொல்லைக்காரர் கலியமூர்த்தியை
இப்போது கண்டாலும்
கசக்கிறது
அன்று களவாடிய
திருட்டுக் கரும்பு