உலகில் நடைபெற்றுவரும் சகல காரியங்களும் ஈஸ்வரனாகிய உன்னாலேயே நடத்தப்பட்டு வருவதாக நான் நம்பி மதிமோசம் போனேன்! "அவனன்றி ஓரணுவுமசையாது' என்ற சோம்பேறி வேதாந்தத்தை உண்மையாக நம்பி இந்தக் கதிக்கு ஆளானேன். நான் பிறந்ததிலிருந்து இதுவரை அரை வயிற்றுக் கஞ்சிக்கு ஆலாய்ப் பறப்பதற்கு, நான் “முன்ஜென்ம”த்தில் செய்த “பாவமே” காரணமென நம்பி என்னை நானே கெடுத்துக் கொண்டேன்! ஒரு சில ஆசாமிகள் மட்டும் நகத்தில் அழுக்குப்படாமல் என் போன்ற ஏழைத் தொழிலாளிகளின் உதவிகொண்டு இன்ப வாழ்வு நடாத்தி வருவதற்கு அவர்கள் “முன்ஜென்மத்தில்” செய்த “பூஜா” பலனே காரணம் என நம்பி நான் முழுமூடனானேன்! “கடவுளை நம்பினவர் கைவிடப்படார்” என்றதை மெய்யென நம்பி எனது தற்போதைய இழிந்த நிலைக்கு ஆளானேன்!

நான் சுகவாழ்வை அடையவேண்டுமானால் – என்போன்ற ஏழைத் தொழிளிகள் இன்ப வாழ்க்கையை எய்த வேண்டுமானால் முதலில் ஈஸ்வர நம்பிக்கையிலிருந்து விடுவித்துக் கொள்வதன் மூலமே அதை அடையமுடியும் என்ற உண்மையை இப்போதே உணரும் பாக்கியத்தையடைந்தேன். ஆகவே ஏ! “ஈஸ்வரா” இனி நான் மதிமோசம் போகமாட்டேன்! உன் பெயரைக் கூறி அதன் மூலம் சுயநல முதலாளிக் கூட்டங்களும், மன்னர் கூட்டங்களும் இனி என்னை – எனது தொழிலாளர்கள் குழுவை – ஒருக்காலும் ஏமாற்றிவிடமாட்டேன்! இது நிச்சயம்! இது உறுதி!! இது சத்தியம்!!!

என்போன்ற ஏழைத் தொழிலாளர்கள் குடிக்கக் கால்வயிற்றுக் கஞ்சிக்கு வழியின்றியும், வசிக்கக் குடிசையின்றியும், கட்டத் துணியுமின்றியும் கஷ்டப்பட்டு வந்திருப்பதற்கு – வருவதற்கு முக்கிய காரணம் நீயே என்பது பளிச்சென எனக்குப் புலனாகிவிட்டது! எனவே எங்கள் கஷ்ட நஷ்டங்களுக்கு ஆதிமூலமாகியிருந்து வரும் உன்னை ஒழிக்க நான் முன்வந்து விட்டேன்! உன்னை நினைக்க நினைக்க என்நெஞ்சு பகீரென்கிறது! ஓ! பணக்காரர்களின் பந்துவே! உன் ஜம்பம் இனி என்னிடத்தில் செல்லாது.

உன்னாலேயே நான் இந்த இழிநிலைக்கு ஆளானேன் என்பதை இப்போது உணர்ந்து கொண்டு விட்டேனாதலால், நான் முக்கால்வாசி விடுதலையை அடைந்துவிட்டேனென்பது மிகையாகாது. ஆம்! இனி முதலாளிகள், அரசர்கள் என்ற சுயநலக்காரர்களிடத்திலிருந்து வெகு சுலபமாக நான் விடுதலையடைந்து விடுவேன்! உனது பேராலேயே சுயநலக் கூட்டத்தார் எங்களை ஏமாற்றி வந்திருக்கிறார்களாதலால் இப்போது உனது பேர் எங்களிடம்செல்லுபடியாகப் போவதில்லையாதலால் இனி முதலாளிகள் பாடு அந்தரத்தில் தான் தொங்கப்போகிறது. உன்னையே நாங்கள் சட்டை செய்யாதபோது முதலாளிக்கூட்டத்தார்தான் எம்மாத்திரம்?

நான் எனது ஐம்பது வருட அனுபவத்தில் நடத்திருப்பவற்றில் இரண்டொரு விஷயங்களைக் கூற ஆசைப்படுகிறேன். எனது ஏழாவது வயதில் பீடித் தொழிற்சாலையில் மாதம் ஒரு ரூபாய் சம்பளத்திலமர்ந்தேன். எனது பெற்றோர் பரம்பரை ஏழைகளாதலால் நான் அரைவயிற்றுக் கஞ்சிக்கும் வழியின்றி வாழ்ந்தேன். பதினைந்து வயது வரையில் பீடித் தொழிற்சாலையில் ஏழு ரூபாய் சம்பளம் பெற்று வந்தேன். அதன்பின் பஞ்சாலையில் 11 ரூபாய் வேலையில் அமர்ந்தேன். 25 வயதுவரையில் அதே வேலையிலிருந்து வந்தேன். எனது பெற்றோர்கள் வேலை செய்ய சக்தியில்லாதவர்களாக ஆகிவிடவே, குடும்பப் பாரம் என் தலையிலேயே வந்து விழுந்தது. நான் பட்ட பாடு ஒரு நாய்கூடப் பட்டிராது. பதினொரு ரூபாயைக் கொண்டு எப்படி ஜீவிப்பது, நான் தினந்தோறும் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக இருந்து வந்தபோதெல்லாம் எனது பெற்றோர் “நீ ஏன் வருந்துகிறாய்! கடவுள் நமக்குக் கொடுத்து வைத்தது இவ்வளவுதான், இதைக் கொண்டு நாம் திருப்தியடைய வேண்டியது தான்! வீணாக வருத்தப்படாதே” என்பார்கள். எனக்கு இந்தச் சமாதானம் முதலில் சரியானது போலத்தோன்றி வந்ததானாலும் நாளாக ஆக அந்த நம்பிக்கை ஆட்டங்கொடுக்கலாயிற்று. கடவுள் சர்வ தயாபரர் என்கிறார்களே, எல்லாம் செய்ய வல்லவர் என்கிறார்களே அப்படியிருந்தால் என் போன்றவர்கள் சதா துன்பப்படுவதற்கும், ஒரு சிலர் மட்டும் ஷெமமாக வாழ்ந்துவருவதற்கும் காரணமில்லையே என்ற ஒரு எண்ணம் ஏற்பட லாயிற்று. இதற்கு அவரவர் கர்மபலனே காரணம் எனச் சிலர் கூறினார்கள். இதையும் என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் எந்த ஒரு மனிதரையும் முதலில் படைத்தவர் கடவுள் என்று ஒரு கூற்றிருந்து வருவதால், கடவுளாலேயே அப்படிச் செய்யப்பட்டு வருவதாக நான் உணர்ந்தேன். முதலிலேயே கடவுள் ஒவ்வொருவரையும் நல்லவர்களாகப் படைக்காமல் சிலரை ஒருவிதமாகவும், வேறு பலரை மற்றொருவிதமாகவும் படைக்கிறார் என்று நினைக்க இடம் ஏற்படுகிற தல்லவா? அப்படியாயின் கடவுள் சர்வ தயாபரர் என்று எப்படி நம்பவோ, ஏற்கவோ கூடும்? இந்த எண்ணம் எனக்கு உண்டாகவே பலத்த குழப்பமாக விருந்தது. கடவுள் இருக்கிறார் என்பது உண்மைதானா? அவர் இருந்தால் அவர் தயாபரர் தானா? அப்படி அவர் ஜீவதயாபரராகவிருந்தால் எல்லாரும் சுகமாக வாழும்படி செய்யாமல் ஒரு சிலர் மட்டும் சுகமாக இருக்கவும் பெரும்பாலோர் துக்கக் கடலில் ஆழ்ந்திருக்கவும் அவர் செய்வாரா? என்பதைப் போன்ற கேள்விகள் எனக்குள்ளேயே எழுந்து என்னைச் சுயேச்சை சிந்தாக்கிரந்தனாக்கிற்று. ஆகவே கடவுளாவது மண்ணாங்கட்டியாவது என்ற உண்மையை அடையும் பேறு பெற்றேன்!

ஒரு சில சுயநலக்கூட்டத்தார் தாங்கள் மட்டும் சுகமாக வாழவிரும்பி அதற்காகக் கற்பிக்கப்பட்ட கற்பனையே கடவுள் என்பது நன்றாக விளங்கிவிட்டது. ஆகவே அந்தக் கடவுள் நம்பிக்கையிலிருந்து என்று விடுதலை அடைகிறோமோ அன்றே முக்கால் விடுதலையை அடைந்துவிட்டதாகத் திட்டமாகக் கூறலாம்.

கடவுள், கர்மபலன், மறுபிறவி என்ற வெற்று வெடிகளால் நாம் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறோம் இவற்றை நாம் உதறித் தள்ளிவிட்டு மேலே நிமிர்ந்து பார்க்க வேண்டும். நாம் சதா ஈன நிலைமையில் உழல்வதன் காரணங்களைக் கண்டு அதன் அஸ்திவாரத்தில் கைவைக்க வேண்டும். அதுதான் கடவுள் என்ற கற்பனையே என்பது நன்கு விளங்கும். நம்மைச் சதா இக்கட்டுகளில் கஷ்டங்களிலும், இழிநிலைமையிலுமிருக்கச் செய்து வருவது அந்தக் “கடவுளே” யாகும். அவர் தயாபரராகவிருந்தால்நம்மை இப்படித் துன்புறுவும், முதலாளிக்கூட்டம் எப்போதும் இன்புறவும் செய்து வருமா? என்பதை நன்கு யோசித்துப் பாருங்கள்! “முன்ஜென்மத்தால் அவரவர் செய்திருக்கும் செயல்களுக்கேற்ப இப்போது நடக்கின்றன” என்றால் முதலில் எல்லோரையும் படைத்தவர் கடவுளே என்கிற படியால் அப்போதே அதாவது முதலிலேயே ஏன் எல்லாரையும் ஒரே மாதிரியாகப் படைத்திருக்கக்கூடாது என்பதை யோசித்துப் பாருங்கள்.

ஆகவே ஏழைகளை ஏணிகளாக உபயோகித்து அதன் மூலம் சிலர் நகத்தில் அழுக்குப்படாமல் வாழ்ந்து வரச்செய்து வைத்திருக்கும் கடவுள் போன்ற கட்டுப்பாடுகளை உடனே உடைத்தெறியுங்கள், நம்மைக் கண்விழிக்கச் செய்து வரும் சுயமரியாதைக் இயக்கத்தைப் போற்றி, நமது உண்மையான நன்றியையளித்து அந்த இயக்கத்தில் நாமும் இரண்டறக் கலந்து நம்மைக்கெடுத்து வந்திருக்கும் கடவுள், மதம், முடியரசு என்பவைகளை அடியோடு ஒழிக்க ஆண்மையோடு முற்படுங்கள். ஆண்டவன் நம்பிக்கை அடியோடு ஒழிக! புரட்சி ஓங்குக!! பொதுவுடைமை வாழ்க!!!

– குடி அரசு : 13.08.1933