ஊரே வேண்டியும், தில்லி
உணராத போக்கியா?
பேரறி வாளன் முருகன்
சாந்தன் உயிர் தூக்கிலியா?
கண்ணுக்குக் கண்வாங்கும்
காட்டுமிராண் டிகள்தானா?
விண்ணப் பங்கள் போட்டு
வேண்டியதும் வீணா?
"கொல்லாமை'யை உரைத்த
குறள் பிறந்த நாடு!
பொல்லார்க்கும் அருள்புரிந்த
காந்தியின்தாய் வீடு!
தூக்குக் கயிற்றுக்கு
நீதி துணை வந்திடுமா?
காக்க வேண்டிய "கை'
கட்டாரி ஏந்திடுமா?
சோனியா மன்னித்துச்
சொன்னதெலாம் பொய்யுரையோ?
ஏனிந்த நாடகம்!
எவரைத்தான் நம்புவதோ!
தமிழனாய் பிறந்ததற்குத்
தண்டனையால் மிரட்டுவதா?
தமிழர்குலம் முழுசையுமே
சாவுக்குள் விரட்டுவது?
முதல்வரே! நீர் எங்கள்
முறையீட்டைக் கேளுங்கள்!
புதல்வர்களைக் காக்கப்
புதுவழியைக் காணுங்கள்!
முரண்இன்றித் தமிழகமே
இதில் உங்கள் பின்னாக!
மரண தண்டனையே
மண்ணோடு மண்ணாக!