சவூதி அரேபிய அரசாங்கம் நிதாகத் என்கிற சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இந்த நிதாகத் சட்டம், உள்நாட்டு சவூதிய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதை உறுதிப்படுத்தும் சட்டமாகும்.

லட்சக்கணக்கான சவூதி இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பதைக் கருத்தில் கொண்டு, கொண்டு வரப்பட்டுள்ள நிதாகத் சட்டத்தால் சவூதிவாழ் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள் என்ற செய்தி பரவி பலரது தூக்கத்தை கெடுத்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த புதிய சட்டத்தால் கேரள மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதால் உடனடியாக ரியாக்ஷன் காட்டியிருக்கும் அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

சவூதி அரசின் புதிய சட்டத்தால் சவூதியில் பணியாற்றும் கேரளாவைச் சேர்ந்த 5 லட்சத்து 70 ஆயிரம் பேர் வேலையிழக் கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், நிதாகத் சட்டத்தை சிறிது காலத்திற்கு தள்ளி வைக்குமாறு சவூதி அரசாங்கத்தை இந்தியா கேட்டுக் கொள்ள வேண்டும் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள் ளார் உம்மன் சாண்டி.

உம்மன் சாண்டியைத் தொடர்ந்து, தமிழகத்திலிருந்து குரலெழுப்பியிருப்பவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்தான். தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பணியாற்றி வருகின்ற குடும்ப உறுப்பினர்களின் வருமானத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றன.

இவர்கள் பொருளாதாரரீதியாக தங்களை வலுப்படுத்திக் கொண்டு தாயகம் திரும்பும் வகையில், சவூதி அரசின் சட்டத்தை சில காலத்திற்கு தள்ளிப்போட இந்திய அரசு கேட்டுக் கொள்ள வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் குறிப்பிட்டிருக்கிறார்.

சவூதி அரேபியா கொண்டு வந்திருக்கும் நிதாகத் சட்டம் என்ன சொல்கிறது? இப்புதிய தொழிலாளர் சட்டத்தின் ஷரத்துகள் என்ன சொல்கின்றன என்ற எந்த விபரத்தையும் தெரிந்து கெள்ளாமல், வெளிநாட்டுத் தொழிலாளர்களை வெளியேற்ற சவூதி அரேபிய அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது என்றும் இதனால் இந்தியர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்றெல்லாம் பீதி கிளப்பப்படுகிறது.

ஆனால், இந்தியர்கள் உள்ளிட்ட சவூதி வாழ் வெளிநாட்டவர் கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்ற வகையில்தான் இந்த சட்டம் அமைந்திருக்கிறது என்கின்றன சவூதி ஊடகங்கள்.

சவூதி அரேபிய தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகளில் 10 சதவீதம் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட வேண் டும் என்கிறது நிதாகத் சட்டம். இந்த சட்டம், சிறு மற்றும் நடுத் தரமான தொழில் நிறுவனங்களில்தான் அநேகமாக அமல்படுத்தப்படும் என்கின்றன சவூதி ஊடகங்கள்.

சவூதியில் பெரும்பாலும் கடைநிலை ஊழியர்களாகவே இந்தியத் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். அரசுப் பணிகளிலும், பெரும் தொழில் நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றும் இந்தியர் களின் எண்ணிக்கை சொற்பமே.

இதில், கடைநிலை ஊழியர்கள் எந்த வகையிலும் பாதிக்கப் பட மாட்டார்கள். ஏனெனில் சவூதி இளைஞர்கள் இதுபோன்ற கடைநிலை பணிகளுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.

பெரும் தொழில் நிறுவனங்கள் கூட, திறமைமிக்க தமது வெளிநாட்டு பணியாளர்களை இழக்கத் தயாராகாது. ஆயினும், நிதாகத் சட்டத்திற்கு கட்டுப்பட்டு, ஓரளவிற்கு வெளி நாட்டுத் தொழிலாளர்களை குறைக்க சவூதி நிறுவனங்கள் முன் வரலாம் என்றாலும், இது பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது.

சவூதி அரேபியாவின் தொழில் நிறுவனங்கள் மூன்று மாதங் களுக்கு முன்பே தங்களின் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிதாகத் சட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது என்பது குறித்து தகவல் தெரிவித்திருந்தன. ஆயினும் அவை பணியாளர்கள் நீக்கத்தில் ஈடுபட்டதில்லை.

சவூதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகமோ இதுவரை ஒரு இந்தியர்கூட நிதாகத் சட்டத்தின்படிதான் வேலை இழப்புக்கு ஆளானதாக புகார் அளிக்கவில்லை என்கிறது.

நிதாகத் சட்டம் குறித்த அச்சவுணர்வு சவூதிவாழ் இந்தியர்கள் மத்தியில் வியாபித்திருப்பதால் பீதி கிளப்பப்படுகிறது.

சவூதி கெஜட் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின்படி ஒரு நிறுவனம் 1 முதல் 10 ஊழியர்களை வைத்திருந்தால் அந்நிறுவ னத்தில் நிதாகத் சட்டம் அமல்படுத்தப்படாது. இதற்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

10 முதல் 49 ஊழியர்களைக் கொண்ட நிறுவனத்தில் அந்நிறு வனம் 5-24 சதவீதம் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும். 50-499 வரை ஊழியர்களைக் கொண்ட நிறுவனம் 6-27 சதவீத உள்ளூர் மக்களுக்கும், 500-2999 ஊழியர்களைக் கொண்ட நிறுவனம் 7-30 சதவீதம்வரை உள்ளூர் மக்களுக்கும், 3000த்திற்கு மேல் தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனம் 8-30 சதவீதம் உள்ளூர் மக்களுக்கும் பணி வழங்க வேண்டும் என்கிறது நிதாகத் சட்டம்.

இந்நிறுவனங்களை சிறிய, நடுத்தர, பெரிய, மிகப் பெரிய என வகைப்படுத்தியிருக்கிறது இந்த சட்டம்.

புளூ சோன், கிரீன் சோன், எல்லோ சோன், ரெட் சோன் என 4 சோன்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, புளூ மற் றும் கிரீன் சோன் அந்தஸ்த்தில் வரும் தொழில் நிறுவனங்க ளுக்கு பல்வேறு சலுகைகளும், எல்லோ மற்றும் ரெட் சோனில் வரும் நிறுவனங்களுக்கு சலுகை குறைப்பு அல்லது தண்டனை நடவடிக்கைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

உதாரணமாக புளூ சோன் அந்தஸ்தில் வரும் நிறுவனங்கள் உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் பணியாளர்களை தருவித்துக் கொள்ள முடியும். இவர்களது விசா தொடர்பான பிராஸஸ் இலகு வாக இருக்கும்.

அதேபோல, இந்நிறுவனங்கள் எல்லோ மற்றும் ரெட் சோனிலிருந்து பணியாளர்களை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு அந்த நிறுவனங்களின் (ரெட் மற்றும் எல்லோ) அனுமதியைக் கூட பெற வேண்டிய தில்லை.

கிரீன் சோன் அந்தஸ்து கொண்ட நிறுவனங்களுக்கும் இதே போலத்தான். ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை புதிய விசாவிற்கு இந்நிறுவனம் விண்ணப்பிக்கலாம். இந்நிறுவ னங்கள் வெளிநாட்டு பணியாளர்களின் தொழிலை (வேறு தொழிலுக்கு) மாற்றிக் கொள்ளலாம்.

உதாரணமாக, டிரைவராக இருக்கும் வெளிநாட்டுப் பணியா ளரை ரிஷப்சனிஸ்டாக மாற்றிக் கொள்ளலாம். இந்நிறுவனம் பணி யாளர்களின் வேலைக்கான பர்மிட்டை புதுப்பித்துக் கொள்ள முடியும்.

அதே சமயம், எல்லோ சோன் அந்தஸ்தில் உள்ள நிறுவனங் கள் புது விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாது. இரண்டு வெளி நாட்டுக்காரரை வெளியேற்றினால்தான் ஒரு விசா கிடைக்கும். தனது பணியாளர்களின் தொழிலையோ, விசாவையோ இந்நிறுவனங்கள் மாற்றம் செய்ய முடியாது.

இந்நிறுவனத்தில் 6 ஆண்டுகள் பணியாற்றிய வெளிநாட்டவ ரின் வேலைக்கான பர்மிட்டை புதுப்பிக்க முடியாது. இதேபோல, ரெட் சோன் அந்தஸ்து கொண்ட நிறுவனங்கள் தொழிலை மாற் றவோ, விசாவை மாற்றவோ முடியாது. புதிய விசாக்களுக்கும் விண்ணப்பிக்க முடியாது.

அதே சமயம், எல்லோ மற்றும் ரெட் சோன் அந்தஸ்து கொண்ட நிறுவனங்கள் தங்களின் அந்தஸ்தை (புளூ மற்றும் கிரீன் சோன்களுக்கு நிகராக) உயர்த்திக் கொள்ள முறையே 9 மாதங்களும், 6 மாதங்களும் சலுகைக் காலம் பெறுகின்றன. இதற்குள் அவை தமது நிலையை உயர்த்திக் கொள்ளலாம்.

ஆக, இந்த நிதாகத் சிட்டம், சவூதியின் தொழில் நிறுவனங்க ளுக்கு சலுகைகளையும், சலுகைக் குறைப்பையும் கூட செய் துள்ளது.

எப்படிப் பார்த்தாலும், ஒட்டுமொத்த வெளிநாட்டவர்களையும் வெளியேற்றும் திட்டம் சவூதி அரசாங்கத்திடம் இல்லை என்றாலும், சிறிது சிறிதாக பணியாளர்களை குறைக்கும் முயற்சிகளையும் அது எடுத்திருக்கிறது. ஆனால், இந்திய அரசு - சவூதியின் உள் ளூர் தொழிலாளர் சட்டத்தில் மூக்கை நுழைக்ககால அவகாசம் கேட்டு கெஞ்ச வேண்டிய தேவை இல்லை.

அதைவிட, இந்தியாவிற்கு பெரும் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் இந்தியர்களின் நலனுக்காக மாநிலங்கள் தோறும் நல வாரியத்தை தொடங்கி அதன் மூலம் தாயகம் திரும்பும் வெளிநாட்டு இந்தியர்களுக்கு வட்டியில்லா கடன் அல்லது மானியம் வழங்கி அவர்களின் எதிர்கால வாழ்விற்கு உத்திரவாதம் தரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதுதான் வெளிநாடு வாழ் இந்தியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சவூதியைத் தவிர, ஏனைய அரபு நாடுகளில் நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. சவூதியிலிருந்து பணி நீக்கம் செய்யப்படும் இந்தியர்கள் ஏனைய அரபு நாடுகளுக்குச் சென்று பணியாற்ற எந்தத் தடையும் இல்லையென்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

Pin It