தலைவர் காமராசர் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் வந்த நேரத்தில் ஒரு கிராமத்தில் பாழடைந்த கோயிலைப் பார்த்தார். அந்தக் கோயில் பழம்பெருமை வாய்ந்தது. ஆனாலும் சிதிலமடைந்து கிடந்தது. சுற்றுப்புற மதில்கள் உடைந்து பிரகாரம் திறந்து கிடந்தது. அங்கங்கே ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. கோயில் கோபுரத்திலெல்லாம் மரம், செடி, கொடிகள் வளர்ந்து கிடந்தன. கோவில் குருக்கள் எப்போதாவது வந்து பூஜை செய்து மணியடிப்பார்.

சற்றும் எதிர்பாராமல் தலைவர் கோயிலுக்குள்ளே போய்விட்டார். சுற்றியிருந்த நாங்களனைவரும் அவருடன் சென்றோம். நான் கடவுள் நம்பிக்கையில்லாத நாத்திகன். இது தலைவருக்கும் தெரியும். தலைவர் கோயில் வாசலில் இருந்த கல்வெட்டுக்களையெல்லாம் பார்த்தார். புதராக மண்டிக் கிடந்த சாசனங்களையெல்லாம் துடைத்து விட்டுப் பார்த்தார். பலிபீடம், கொடிமரம், நந்தி இவைகளிடமெல்லாம் போய் நின்று உற்றுக் கவனித்தார். இவரது ஒவ்வொரு செய்கையும் கட்சிக்காரர்களுக்கு வியப்பாயிருந்தது. கோவிலுக்கு வந்து உள்ளே சாமி கும்பிடப் போகாமல், எது எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறாரே என்று மற்றவர்கள் பேசிக் கொண்டனர்.

ஆனால், எனக்கு அவரைப் பற்றி நன்றாகத் தெரியும். கோவில்களில் கொடுக்கும் பிரசாதங்களை வாங்கிக் கொள்வார். விபூதி பூசிவிட்டால் மறுக்க மாட்டார், பரி வட்டமும் கட்டிக் கொள்வார். தீபாரதனையைத் தொட்டுக் கொள்வார். கோவிலை விட்டு வெளியில் வந்த மறுநிமிடமே பழம், தேங்காய் மூடி, மாலைகளை யார் பக்கத்திலிருக்கிறார்களோ அவர்களிடம் கொடுத்து விடுவார். விபூதி, குங்குமத்தை வீட்டுக்கு எடுத்துப் போகமாட்டார். பையில் பத்திரப்படுத்தவும் மாட்டார். கேட்டால், “கோவில்ல செய்ற மரியாதை வாங்கிக்கணும். அதுதான் மனுஷ நாகரிகம், குருக்கள், அறங்காவலர், ஊர் ஜனங்க மனசு புண்படக் கூடாதில்லியா... அதுக்கு மேல அதில ஒண்ணுமில்லே...!” என்பார்.

தலைவர் இந்தக் கோவிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்த கோவிலின் குருக்களும் அறங்காவலரும் வந்துவிட்டனர். பிரகாரத்தைச் சுற்றி வந்த தலைவர் குருக்களைப் பார்த்து, “இந்த கோவிலக் கட்டி எவ்வளவு காலமாச்சு...?” என்றார். குருக்களும், நிருவாகிகளும் பதில் சொல்ல முடியாமல் விழித்தனர்.

“ஏன்ய்யா... குருக்கள்... நீங்க எவ்வளவு காலமா இந்தக் கோவிலுக்கு மணியடிச்சுகிட்டு இருக்கீங்க... இந்தக் கோவில பத்தின “தல வரலாறே” உங்களுக்குத் தெரியாதா...? எந்த வருஷத்து பஸ்ஸு? எத்தனை கிலோ மீட்டருக்கு எவ்வளவு பெட்ரோல் ஆகும்னு தெரியாம, ஒரு டிரைவர் அந்தக் காரை ஓட்டலாமான்னேன்?” என்று காமராசர் ஆரம்பித்ததும் குருக்கள் உள்பட எல்லோரும் ஆடிப் போனார்கள்.

தலைவரே மேலும் தொடர்ந்தார். “இந்தக் கோவிலக் கட்டி எண்ணூத்து எழுபது வருசத்துக்கு மேலாகுது. சோழமாதேவி தானமா கொடுத்த “இறையிலி” நிலங்கள் தான் இந்தக் கோவில சுத்தி இருக்குது. இந்த ஊரும், இந்த தாலுக்காவுமே இந்தக் கோவில் சொத்துதான். அதிலேருந்து வர்ர வருமானத்துலதான் சாமிக்குப் பூஜை, புனஸ்காரமெல்லாம் பண்ணணும். குத்தகைதாரர்கள் அளக்கிற பகுதி நெல்லை வாங்கித்தான் சாமியாடிகளுக்கு, தேவரடியார்களுக்கு, பூக்குடலைத் தூக்குறவங்களுக்கும் சம்பளம் போடணும். சாமி நெலத்த விவசாயம் பண்ணிச் சாப்பிட்டுக்கிட்டிருக்கிற ஒருத்தனும் ஒரு பிடி நெல்லைக் கூட கோவிலுக்கு அளக்கல போலிருக்கு... அதனால தான் சாமி இருட்டில கிடக்குன்னேன்...!” என்று காமராசர் பேசப் பேச அத்தனை பேரும் அதிர்ந்து போய் நின்றனர். அந்தக் கோவில் சொத்தைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருந்த பெருச்சாளிகள் பலரும் அங்கே நின்று கொண்டிருந்தனர்.

தங்கள் அடிமடியிலேயே கைவைக்கிறாரா என்று அந்தக் குத்தகைதாரர்கள் நடுங்கிப் போயிருக்கக் கூடும். இதற்குள் குருக்கள்மார் சிலர் வந்து, பிரசாதம், பொங்கல், வடையெல்லாம் தயாரா இருக்கு...! என்று ஆரம்பித்தனர்.

“சாமியை இருட்டிலே போட்டுட்டு ஆசாமியெல்லாம் சாப்பிட்டுக் கிட்டிருக்கீங்க. பொங்கல், வடையெல்லாம் ஏழை ஜனங்களுக்குச் சேரிப் பிள்ளைகளுக்குக் கூப்பிட்டுக் கொடுங்க...!” என்று சொல்லிவிட்டு வேகமாகத் தலைவர் கோவிலை விட்டு வெளியே வந்துவிட்டார். அறங்காவலர் குழு திகைத்துப் போய் நின்றது.

தலைவர் அடுத்த ஊர் நிகழ்ச்சிக்குப் போவதற்காகக் காரில் ஏறினார். நானும் அவரோடு பயணம் செய்தேன். “கடவுள் பற்றி காமராசர் என்ன நினைக்கிறார்... பூஜை, வழிபாடு, நேம நைவேத்தியங்கள் பற்றி அவரது கருத்து என்ன?” என்பதையெல்லாம் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் நெடுநாளைய அவா. இதுதான் சரியான சந்தர்ப்பம் என எண்ணி நான் தலைவரிடம் மெதுவாக ஆரம்பித்தேன்.

“கடவுள் ஒருத்தர் இருக்கார்னு உங்களுக்கு நம்பிக்கை உண்டா...?”

“இருக்கு, இல்லைங்கிறதைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்றது நல்ல காரியமா இருந்தா போதும். பக்தனா இருக்கிறதைவிட யோக்யனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணிக்கிட்டு கோவிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியா போச்சா...?” என்றார்.

நான், “கடவுள் விஷயத்துல நேரு கொள்கையும், உங்க கொள்கையும் ஒண்ணாயிருக்கும் போலிருக்கே...” என்று ஆரம்பிக்கவும் அவரே “அக்னாடிஸ்ட்டுன்னு” சொல்றீயா...? நேரு ரெண்டப் பத்தியும் கவலைப்படாதவர் தான். ஆனா... மனிதனை முன்னேற்றணும், சமூகம் வளரணும்கிறதுல அவர் கவனமாயிருந்தார். அதுக்கு மதமோ, கடவுளோ தடையாயிருந்தா அதைத் தூக்கிக் குப்பையிலே போடணும்கிற அளவுக்கு அவர் தீவிரவாதி. எப்படி யோசிச்சுப் பார்த்தாலும், சாதாரண மனிதனைக் கைதூக்கி விடணும்கிறதத்தானே எல்லா மதமும் சொல்லுது. சமுதாயத்துல பேதம் போகணும்... ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாதுங்கிறதத் தானே மகான்கள் சொல்றாங்க. ஆனா, இன்னிக்கு நம்ம மதங்கள் அதப்பத்தி கவலைப் படுதான்னேன்...? எவன் தலையை தடவியாவது, எவனை அழிச்சாவது தான் முன்னேறணும்னுதானே ஒவ்வொரு மடாதிபதியும் நினைக்கிறான். இதுக்குக் கடவுள் சம்மதப்படுறாரா...? என்று கேட்டார்.

நான் உடனே, “அப்படியானா ஆண்டவன்னு ஒருத்தர் இல்லேன்னுதான் நீங்களும் நினைக்கிறீங்களா...? இருந்திருந்தா இந்த அயோக்கியத்தனத்தையெல்லாம் ஒழிச்சிருப்பாரே...! தன்னோட எல்லா பிள்ளைகளையும் மேல் சாதி, கீழ் சாதின்னு படைச்சிருக்க மாட்டாரே...?” என்றேன்.

“மேல் சாதி, கீழ் சாதி எல்லாம் இடையில வந்து திருட்டுப் பயலுக பண்ணினதுதான். சுரண்டித் திங்கிறதுக்காகச் சோம்பேறிப் பசங்க பண்ணின ஏற்பாடுன்னேன். எல்லாரும் ஆயா வவுத்துல பத்து மாசம் இருந்துதானே பெறக்கிறான். அதுலே என்ன பிராமணன், சூத்திரன்...? ரொம்ப அயோக்கியத்தனம்...!” என்றார் காமராசர். எனக்குள் பெருமையும் பூரிப்பும் பிடிபடவில்லை. காமராசரைக் கட்டிப்பிடித்து ஆலிங்கனம் செய்ய வேண்டும் போலிருந்தது. இவருக்குள் இவ்வளவு சிந்தனை ஊற்றா...? இத்தனை கம்பீரமா? அடங்காத சீற்றமா? ஆத்திர நெருப்பா? அவர் பேசப் பேச நான் வானுக்கும், பூமிக்குமாய்க் குதித்தேன்.

“நீங்கள் ஏன் உங்களை ஒரு முழு நாத்திகராய் அறிவித்துக் கொள்ளவில்லை...?” என்று கேட்டேன்.

“நான் ஒரு சமுதாயத் தொண்டன். நாத்திகவாதி - ஆத்திகவாதி எல்லாருக்கும் சேவை செய்றவன். எனக்கு எதிரே வர்ரவனை “மனுஷன்”னுதான் பாக்குறேனே தவிர, அவனை பிராமணன், சூத்திரன்னு பாக்கறதில்லை... அப்படி எவனும் என்கிட்ட பேசிட்டு வர முடியாது. நாத்திகாவாதம்கிறது ஒரு தனி மனிதக் கொள்கை. அரசியல்வாதி ஒரு பொதுவானவன். ஒரு கோவிலை நிருவாகம் பண்ணி நிதி கொடுக்க வேண்டியது “கவர் மெண்ட்ஸ்” பண்றவனோட வேலை, “நான் நாத்திகவாதி. எனவே கோவிலை இடிப்பேன்”னு எவனும் சொல்ல முடியாது. கம்யூனிசச் சமுதாயத்திலேயே கோவிலும் பூசையும் இருக்கே...! தனிப்பட்ட முறையில் நான் கோவில், பூசை, புனஸ்காரம்னு பைத்தியம் பிடிச்சு அலையிறதில்லே. மனிதனோட அன்றாட கடமைகள் தான் முக்கியம்னு நெனைக்கிறவன்...” என்று மிகத் தெளிவாக பேசினார்.

“அப்படியானா, நீங்க பூசை, பிரார்த்தனையெல்லாம் பண்றதில்லையா...?” எனக் கேட்டேன்.

“அதெல்லாம் வேலை, வெட்டியில்லாதவன் பண்றதுன்னேன். அடுத்த வேளைச் சோத்துக்கில்லாதவன், கடன் வாங்கி ஊர், ஊரா “ஷேத்ராடனம்” போறான்... எந்தக் கடவுள் வந்து “நீ ஏண்டா என்னப் பாக்க வரலைனு இவர்கிட்டே கோவிச்சுக்கிட்டான்...?” அபிஷேகம் பண்றதுக்காகக் கொடம் கொடமா பாலை வாங்கி வீணாக்குறானே மடையன்... அந்தப் பாலை நாலு பிள்ளைங்க கிட்டே கொடுத்தா, அதுங்க புஷ்டியாவாவது வளருமால்லியா...?”

“பதினெட்டு வருஷமா மலைக்குப் போறேன்னு பெருமையா சொல்றான். அதுக்காக அவனுக்குப் பி.ஷெச்.டி.யா கொடுக்கிறாங்கா...? பதினெட்டு வருஷமா கடன்காரனா இருக்கான்னு அர்த்தம். பணம் படைச்சவன் போடுற பக்தி வேஷம். “சோஷியல் ஸ்டேடசு”க்காக நாலு பேர் தன்னைப் பக்திமான், பெரிய மனுஷன்னு பாராட்டணும்கிறதுக்காக. ஒரு அனாதை இல்லத்துக்கோ, முதியோர் இல்லத்துக்கோ கொடுக்கலாமில்லியா... ஊருக்கு நூறு சாமி... வேளைக்கு நூறு பூஜைன்னா... மனுஷன் என்னிக்கு உருப்படறது...? நாட்டுல வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, சுகாதாரக் கேடு இத்தனையும் வச்சுக்கிட்டு பூசை என்ன வேண்டி கிடக்கு... பூஜைன்னேன்...? ஆயிரக்கணக்கான இந்த “சாமிகள்” இதப் பாத்துகிட்டு ஏன் பேசாம இருக்குன்னேன்...?

தலைவர் போடு போடு என்று போட்டுக் கொண்டே வந்தார். அவருக்குள் ஆயிரம் இங்கர்சாலை, பெரியாரை நான் கண்டெடுத்தேன். “அப்படியானா... நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா... இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா...?” என்று கேட்டேன்.

அவர் கொஞ்சம்கூடத் தாமதிக்காமல்... “லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சு வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம்பிச்சுட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல வந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவர் செத்ததும் கடவுளாக்கிட்டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா...? அரேபியாவில இருக்கிறவன் “அல்லா”ன்னான். ஜெருசலத்தில இருக்கிறவன் “கர்த்தர்”னான். அதிலேயும் சில பேரு மேரியக் கும்பிடாதேன்னான். கிறிஸ்துவ மதத்திலேயே ஏழு, எட்டு “டெனாமினேஷன்” (வகை) உண்டாக்கிட்டான். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமியச் சொன்னான். நம்ம நாட்டுப் பூர்விகக் குடிமக்களான திராவிடர்கள், காத்தவராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே “என் பேரு இதுதான்னு சொன்னான்...?” அவனவனும் அவனவன் இஷ்டத்துல ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான்...

காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் - தி.மு.க. மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி. யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான்... மதம் மனிதனுக்குச் சோறு போடுமா? இந்த குறைந்தபட்ச அறிவு கூட வேண்டாமா மனுஷனுக்கு...? உலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா... நான் பெரிசான்னு மோதிகிட்டு இரத்தம் சிந்துதே...! நாட்டுக்கு நாடு யுத்தம் வருதே...! இப்படியெல்லாம் அடிச்சுகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்...?”

தலைவர் தெளிந்த நீரோடை மாதிரி பேசிக்கொண்டே வந்தார். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு அழுத்தமான முடிவை அவர் வைத்திருப்பதைப் பார்த்து நான் வியந்தேன்.

“அப்படியானா... உங்களுக்கு புராணம், இதிகாசம் போன்ற விஷயங்கள்ல நம்பிக்கையோ, ஈடுபாடோ கிடையாதா...?” என்று நான் கேட்டேன்.

“புராணம், இதிகாசமெல்லாம் அந்தக் காலத்துல இருந்த மகான்கள் எழுதி வச்சது. அவங்களுக்கு எந்த உள்நோக்கமும் இருந்திருக்காது. பாரதம், இராமாயணத்துல பல நல்ல விஷயங்கள் மனுஷனுக்கு இருக்கு... பாவ, புணணியத்துக்குப் பயப்படணும். கெட்டவன் அழிஞ்சு போவான். நல்லவன் வாழ்வான்னு சொல்லப்பட்டிருக்கு. மண்ணாசை, பொன்னாசை கூடாது. அடுத்தவன் மனைவியைத் தப்பாக்கக் கருதக் கூடாதுன்னு எச்சரிச்சிருந்தாங்க. ராமன் மாதிரியான ஒரு “யோக்யனை”ச் சிருஷ்டிச்சி அவனை நல்லவனுக்கு உதாரணமாகக் காட்டியிருக்காங்க.

இதையெல்லாம் மனுஷன் எடுத்துக்கணும். அரசாங்கம் போடுற வெறும் சட்டதிட்டங்கள் மட்டும் மனுஷனுக்குப் போதாது. தீமை செஞ்சவனுக்குச் சட்டத்துல தண்டனை உண்டு. தீமையை நினைக்கறவனுக்குத் தண்டனை உண்டா? மனசாலையும் தப்பு நெனக்காதேன்னு நம்ம இதிகாசங்கள் சொல்லுது!”

நான் இடைமறித்து அந்த “இதிகாசங்களிலும் பல நம்ப முடியாத விஷயங்கள், மூடநம்பிக்கைகள் மலிந்து கிடக்கே...?” என்று கேட்டேன்.

உடனே அவர், “எது, எது ஆகாததோ அதையெல்லாம் விட்டு வேண்டியதுதான். எத்தனை ஆயிரம் வருஷத்துக்கு முன்னே எழுதி வைக்கப்பட்ட விஷயங்கள் அவை. இன்னிக்கு அதெல்லாம் அப்படியே பொருத்தமாயிருக்குமான்னே? சமுதாயத்தில அன்னிக்கு இருந்த நடைமுறையை எழுதி வச்சிருப்பாங்க... சாரத்த எடுத்துகிட்டு சக்கையைத் தூக்கிப் போட்டுடணும்னே...” என்றார்.

“நீங்க சொல்றத பார்த்தா இராமன், கிருஷ்ணனை யெல்லாம் கடவுளாக்கிட்டானே... அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே...?” என்று வினாத் தொடுத்தேன்.

தலைவர் குலுங்கக் குலுங்கச் சிரித்தார். “டேய் கிறுக்கா, நான் சொல்றது உனக்கு விளங்கலியான்னேன்...? ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதாபாத்திரம்னேன். அதையெல்லாம் நம்மாளு கடவுளாக்கிட்டான்னேன்...! இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற நாயகனுக்குக் ‘கட்அவுட்’ வைக்கிறானில்லையா... அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப்பட்ட ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் கோவில் கட்டிபுட்டான். அந்தப் புத்தகங்களில் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள எடுத்துக்கணும். ஆசாமிய விட்டுபுடணும்.”

காலப்போக்குல என்னாச்சுன்னா... இலட்சக்கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவங்கள வச்சு கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி. அவனுக்குத் தெரியும், ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சுப் பொழப்ப நடத்தப் பாக்குறானுங்க களவாணிப் பசங்க... புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சித்தான் நம்ம ஜனங்களை அடிமையா ஆக்கி வச்சுருக்கான்.

நரகாசுரன் கதையை வச்சு தீபாவளி கொண்டாடுறான். நவராத்திரி கதையைச் சொல்லிச் சரஸ்வதி பூசை பண்றான். விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளைச் செஞ்சி ஏழை ஜனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான்.

நான் தீபாவளி கொண்டாடுனதுமில்ல... எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல... புதுசு கட்டுனதுமில்ல... நம்ம சமூகம் அதை ஒட்டுன விழான்னேன் என்று விளக்கினார்.

“மதம் என்பதே மனிதனுக்கு அபின்...! அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடம்பாடுதான் போலத் தோணுதே...?” என்று ஒரு கேள்வியைக் கேட்டேன்.

தலைவர், “நான் தீ மிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல... பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத்தாலி வச்சிப் படைக்கலாமா? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக்கூட வழியில்ல. இவன் இலட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டிவிடறான்.

கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம்; ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலாமில்லையா? அதையெல்லாம் செய்ய மாட்டான். “சாமிக் குத்தம் வந்திடும்”னு பயந்துகிட்டுச் செய்வான். மதம் மனிதனைப் பயமுறுத்தியே வைக்குதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன்...” என்றார்.

“கோவில் பிரார்த்தனை, நேர்த்திக் கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா...? அதிலேயிருந்து எப்போ விலகுனீங்க...?” இது நான்.

“சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா நடக்கும். அந்தக் கோவில் சிலைக்கு ஒரு நாடாரே பூசை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930-க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன். அவர் மொட்டை போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுக்கிட்டேன். அப்பொறம் யோசிச்சுப் பார்த்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போயும், போயும் கடவுள் தலைமுடியைத் தானா கேக்குறாரு... எல்லாம் “பார்பர் ஷாப்காரன் செட்-அப்” அப்படீன்னு சிந்திச்சேன். விட்டுட்டேன். ஆனா, சஞ்சீவ ரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலையில் இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான்; ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப்பானா...?” என்று கேட்டுவிட்டு விழுந்து, விழுந்து சிரித்தார்.

“அப்படியானா... மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே... அதப்பத்தி...?” என்று கேட்டேன்.

“ஆ...த்தா மனுஷன் நல்லாருக்கணும்கிறதுதான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை. இதுல நாம சரியா இருந்தா, தெய்வம்னு ஒண்ணு இருந்தா அது நம்மள வாழ்த்தும்ன்னார்...!”

காமராசர் என்கிற அந்த மனிதாபிமானி என் மனத்தில் அந்த நிமிடமே சிம்மாசனம் போட்டு உட்காருகிறார்.

சட்டென்று காரை நிறுத்துகிறார். வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டையோ இல்லாமல் நடந்து போன சிறுவர்களைப் பார்த்து, “ஏன் பள்ளிக்கூடம் போகலியா...?” அவர் இவ்வளவு நேரம் பேசிய பேச்சின் விளக்கம் எனக்குக் கிடைத்து விடுகிறது.

தகவல் : திரு. சீர்காழி பெ.எத்திராஜ், முன்னாள் மேலவை உறுப்பினர்

“ஆகட்டும் பார்க்கலாம்” என்னும் நூலிலிருந்து

நன்றி : தமிழாலயம், நவ.- திச.2019 இதழ்