டில்லியில் நேரு முன்னிலையில் நடந்த ராமலீலா விழாவில் இராவணன், இரண்யன், இந்திரஜித் போன்ற உருவங்களுக்குக் கொள்ளி வைத்து மகிழ்ந்தார்களாம், வடநாட்டார். அதைப் போலவே நாமும் ஏன் இராமன்-கிருஷ்ணன் போன்ற கொலைகார கோட்சேக்களின் உருவங்களுக்குக் கொள்ளி வைத்துக் கொண்டாடக் கூடாது? என்று மதுரை திராவிடர் கழகச் செயலாளர் எனக்கு எழுதிக் கேட்டிருக்கிறார்.

வடநாட்டார் அந்த நாட்டு மன்னனாகிய இராமனின் எதிரியை (உருவத்தை)க் கொளுத்தும்போது தென்னாட்டராகிய நாம் இந்த நாட்டு மன்னனான இராவணனின் எதிரியான இராமனைக் கொளுத்துவதில் தப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அப்படிச் செய்யு முன்பு பொதுக்கூட்டத்தில் அதன் அவசியத்தை விளக்கிக் கூற வேண்டும். பிறகு கூட்டத்தாரின் பிரியத்தையும் கேட்டுக் கொள்ள வேண்டும்.

பெரியாரை வகுப்புத் துவேஷ குற்றத்திற்காக திருச்சியில் சிறைப்படுத்தியவுடனே ஹிந்து சுதேசமித்திரன் - போன்ற ஆரியப் பத்திரிகைகளைப் பொது மேடையில் கொளுத்தினார் களே, தெரியுமா?

சென்னையில், கும்பகோணத்தில், பட்டுக்கோட்டையில்! இன்னும் பல ஊர்களில்? அப்போது கூட்டத்தாரின் விருப்பத்தைக் கேட்டுக் கொண்டு, அவர்கள் ஒரு மனதாக, கொளுத்தலாம் என்று கூறிக் கைதூக்கிய பிறகுதான் கொளுத்தினார்கள்!

ஆட்சியாளரின் அதிகாரிகள் பார்த்துக் கொண்டுதானே இருந்தார்கள்? கொளுத்தியவர்களை என்ன செய்ய முடிந்தது? இது மட்டுமா? பட்டப்பகலில், அதுவும் மாலை நேரத்தில், மவுண்ட் ரோடில் ஆனந்த விகடன் நிலையத்துக்கு முன்பு அந்தப் பத்திரிகை நடுத்தெருவில் போட்டுக் கொளுத்தப் பட்டதே! என்ன செய்து விட்டார்கள்?

தென்னாட்டில் இராமனுக்கு மரியாதை கிடையாது. இங்கு இராவணன் உருவம் கொளுத்தப்பட்டால் என்னவாகும் என்பதைப் பற்றி நம்மைவிட நன்றாக அக்கிரகாரத்துக்குத் தெரியும். இங்கு ராமாயண காலட்சேபம் நடக்கின்ற இடம், ஆரியர் சேரிகளில் அல்லது அவர்களது அடிமைகளில் வீடுகளில்தான்! இராமாயணப் பிரசாரஞ் செய்கிறவர்களும் ஆரியர் அல்லது அவரது கால்வருடிகள்தானே?

மானமுள்ள தமிழன் மறைமலையடிகளின் ஆராய்ச்சி நூல்களைப் படித்துணர்ந்த தமிழன், பூர்ணலிங்கம் பிள்ளையின் இராவணப் பெரியார் என்ற நூலைப் படித்த தமிழன், வரலாறு உணர்ந்த தமிழன் மூளைக்கு வேலை கொடுக்கின்ற தமிழன், ஆரியத்துக்கு அடிமைப்படாத தமிழன் - எவனாவது இராமனைப் போற்றுகின்றானா?

அயோக்கிய இராமன் என்ற பெயரால் யாராவது அயோத்தி ராமனைப் பற்றி ஓர் ஆராய்ச்சி நூல் எழுதினால், இன்று ஆயிரக்கணக்கில் விற்கும்! அவ்வளவு தூரத்துக்கு இராமன் சங்கதி தமிழகத்தில் நாறிப் போயிருக்கிறது!

(30.10.1951, விடுதலை)