ஆட்சி அதிகாரக் கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்ட நிலையை எதிர்த்து, பார்ப்பனர் அல்லாதவர்கள் போராடியதன் விளைவாக ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்குக் கல்வியிலும், அரசு வேலை வேலைகளிலும் வாய்ப்பு கிடைக்கத் தொடங்கியது. அவ்வாறு வாய்ப்பு கிடைத்த உடனேயே ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் பார்ப்பனர்களைவிடத் திறமைசாலிகள் என்று மெய்ப்பிக்கப் பட்டுவிட்டது. இதனால் கதிகலங்கிப் போன பார்ப்பனர்கள் நாம் ஆட்சி அதிகாரக் கல்வி பெறுவதை எப்படியும் தடுத்து விட வேண்டும் என்று துடியாய்த் துடித்துக் கொண்டு இருந்தார்கள். (இன்னும் அப்படியே தான் இருக்கிறார்கள்.)

இந்நிலையில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை "இந்தியர்களிடம்" (அதாவது பார்ப்பனர்களின் நேரடி ஆட்சியில்) விட்டு விட்டு வெளியேறினார்கள். ஆங்கிலே யர்கள் நாட்டை விட்டு வெளியேறிய உடனேயே, நாம் பெற்றுக் கொண்டு இருந்த கல்வி வழியை அடைக்கும் பணியை அவாள் தொடங்கிவிட்டார்கள்.

தமிழ் நாட்டில் இராஜாஜி குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். இதன் மூலம் அதிகார வேலை வாய்ப்புகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் பார்ப்பனர்களுக் குப் போட்டியாக வருவதைக் கிள்ளி எறிய முயன்றார். ஆனால் பெரியாரின் கடுமையான போராட்டத்தின் முன் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடி விட்டார். அதன் பின் பெருந் தலைவர் காமராசர் பொறுப்பேற்ற உடன் தமிழகத்தில் அனைத்துக் குழந்தைகளும் கல்வி பெறும் வண்ணம் கிராமப்புறங்களில் பள்ளிகளைத் திறக்கும் திட்டத்தை வரைந்து கொண்டு வருமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

அன்று அதிகாரப் பதவிகளில் அமர்ந்து இருந்தவர்களில் மிக மிகப் பெரும்பாலோர் பார்ப்பனர்களே. அவாள் எல்லாம் இணைந்து ஒரு திட்டத்தை "வரைந்து" முதல் அமைச்சரிடம் சமர்ப்பித்தார்கள். அவாள் "வரைந்து" இருந்த திட்டப்படி, கல்விக்காகச் செலவிடப்பட வேண்டிய தொகை நிச்சயமாக நடைமுறைப்படுத்த முடியவே முடியாத அளவில் மிக மிக ...  மிக மிக ... மிக மிக ... மிக மிக அதிகமாக இருந்தது. பெருந்தலைவர் திகைத்துப் போய் விட்டார். அவர் திகைத்துப் போனதைப் பார்த்த (எதிர் பார்த்த) அந்த அதிகாரிகள் பெருந்தலைவரின் கல்வி வழங்கும் திட்டம் எல்லாம் மேடைப் பேச்சுக்குத் தான் பொருந்தும் என்றும் நடைமுறைக்குப் பொருந்தாது என்றும் "பணிவாக" உணர்த்த முயன்றார்கள்.

அதிகாரிகள் அளித்த இயலாமைத் திட்டத்தை எண்ணி என்ன செய்வது என்று பெரும் கவலையில் மூழ்கி இருந்த பெருந்தலைவரை, அன்று சாதாரண அலுவலராக இருந்த நெ.து.சு. என்று சுருக்கமாக அழைக்கப்படும் நெ.து.சுந்தர வடிவேலு பார்க்க வந்தார். பெரியார் அவரைப் பெருந் தலைவரிடம் புத்திசாலிப் பையன் என்ற அடைமொழியுட னும், பல விஷயங்களில் உதவிகரமாக இருப்பார் என்றும் கூறி அறிமுகப்படுத்தி இருந்தார். (நெய்யாடுபாக்கம் துரை சாமி சுந்தரவடிவேலு,

நெ.து.சு. பெருந்தலைவரிடம் கிராமப்புறங்களில் பள்ளிக் கூடங்கள் திறக்கும் திட்டம் பற்றி விசாரித்தார். பெருந் தலைவர் அதிகாரிகள் அளித்த இயலாமைத் திட்டத்தைப் பற்றிச் சலிப்புடன் கூறினார். நெ.து.சு.வே அப்படி எல்லாம் இல்லை என்றும் மிகக் குறைந்த செலவிலேயே திட்டத் தைச் செயல்படுத்த முடியும் என்றும் கூறினார். பெருந் தலைவரின் கண்களில் மின்னலைப் போல் ஒளி வீசியது. "எப்படி? எப்படி? எப்படி?" என்று தாங்க முடியாத ஆவலு டன் கேட்டார். உடனே நெ.து.சு. அதிகாரிகள் அளித்த திட்டத் தில் வலுவான கட்டிடங்கள், சேதனைச் சாலைகள், நீள் இருக்கைகள், நீள் மேசைகள்  இன்னும் பல செலவினங் களைக் குறிப்பிட்டு அவை எல்லாம் இருக்குமே என்று கேட்டார். உடனே பெருந்தலைவர் கோப்பை வரவழைத் துப் பார்த்தார். நெ.து.சு. சொன்னபடி அவை அனைத்தும் இருந்தன. இவை எல்லாம் தேவை இல்லை என்றும், நம் திட்டப்படி ஒவ்வொரு கிராமப் பள்ளிக்கும் ஆசிரியர்களை அமர்த்துவது, கரும்பலகைகள் எழுதுகோல்கள்  ஆகிய வற்றை அளிப்பது மட்டுமே அரசின் பொறுப்பில் போது மானது என்று கூறிவிட்டு, பள்ளியை அந்தக் கிராமத்து மக்கள் கல் கட்டிடத்திலேயே, கீற்றுக் கொட்டகையிலேயே, மரத்தடியிலே கூட அவரவர் வசதிக்கேற்ப நடத்திக் கொள்ள விட்டுவிடலாம் என்று விளக்கமாகவும் எடுத்துரைத்தார். அவ்வாறு செய்தால் பெருந்தலைவர் மனதில் திட்டமிட்டு வைத்து இருந்த செலவினத்தைவிடக் குறைந்த செல விலேயே திட்டத்தைச் செயல்படுத்த முடியும் என்று மேலும் கூறி முடித்தார். இதைக் கேட்ட உடன் பெருந்தலைவர் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார். உடனே யாரும் எதிர்பாரா வண்ணம் நெ.து.சு.வைக் கல்வி அதிகாரியாக நியமிக்க ஆணையிட்டார்.

சாதாரண அலுவலரைக் கல்வி அதிகாரியாக நியமித்த உடன், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளாக இருந்த பார்ப்பனர்கள் போர்க் கோலம் பூண்டனர். அத்தகைய பதவிகளுக்கு இந்திய ஆட்சிப் பணியில் தேர்வு பெற்றவர் களைத் தான் நியமிக்க வேண்டும் என்றும் இவ்வாறு சாதாரண அலுவலர்களை நியமிப்பது நிர்வாகத் திறமையைக் குலைத்துவிடும் என்றும் கூறி கடுமையாக வாதிட் டனர். ஆனால் பெருந்தலைவர் உறுதியுடன் இருந்து மிகக் கடுமையான சொற்களால் அவாளை எல்லாம் அடக்கி விட்டார். அதனால் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் கல்வி பெற்று அரசுப் பணிகளில் அமர்ந்தனர்; பொறியாளர்களாக, மருத்துவர்களாக, அறிவியல் அறிஞர்களாக உருவானது மட்டும் அல்லாமல் அனைத்துத் துறைகளிலும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உயர் சாதிக் கும்பலினரை விட, திறமை சாலிகள் என்று மெய்ப்பித்துக் கொண்டும் உள்ளனர். இதற்கு அடித்தளம் இட்டவர் அறிஞர் நெ.து.சுந்தரவடிவேலு தான்.

இப்படிப்பட்ட கடும் போராட்டங்களுக்குப் பின் கல்வியும் அதிகார வேலை வாய்ப்பும் பெற்ற ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில், அவாளின் நீடித்த நிலையான சதித் திட்டங்களை உணர்பவர்கள் இருந்தாலும், அதைப் பற்றிய தெளிவு இல்லாதவர்கள் மிகப் பலர் இருப்பது வேதனையைத் தருகிறது.

பெருந்தலைவரின் காலத்திற்குப் பிறகு, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை ஆட்சி அதிகாரக் கல்வி அரங்கில் இருந்து விரட்டுவதற்கு அவாள் மெதுவான ஆனால் உறுதியான நடவடிக்கைகளைச் சிறிதும் சளைக்காமல் எடுத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். அதன் தொடக்கமாக அரசுப் பள்ளிகளைச் சீர்குலைத்து, கல்வியை வணிகமயமாக்கி னார்கள். அப்படிச் செய்துவிட்டு "ஐயோ கல்வி வணிக மயமாகி விட்டது; ஐயோ கல்வி வணிகமயமாகி விட்டது" என்று அவாளே கூப்பாடும் போடுகிறார்கள். ஆனால் கல்வி வணிகமயம் ஆனதினால் அவாள் இம்மி அளவும் பாதிக்கப் படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளாமல் இருந்து விடக் கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே.

கல்வியை வணிகமயம் ஆக்கிய பிறகு ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் பலவிதங்களில் பாதிக்கப்பட்டு இருந்தாலும், தங்கள் வாழ்க்கைச் சுகங்களைத் தியாகம் செய்து, எதிர் நீச்சல் அடித்து, முழுவதுமாக அழிந்து போகாமல் நெ.து.சு. ஈட்டித் தந்த கல்வி அரங்கில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதைக் கண்டு வயிறெரிந்து கொண்டு இருந்த / இருக்கின்ற அவாளுக்கு வாகாய் அமைந்தது கும்பகோணம் தீ விபத்து.

ஒரு பள்ளிக்கூடம் அல்லது எந்த ஒரு கட்டிடத்திலேயே தீ விபத்து ஏற்பட்டால், அதற்கான காரணங்களைக் கண்டறிந்து மீண்டும் அவ்விபத்து ஏற்படாமல் பார்த்துக் கொள்வது தான் அறிவுடைமை. வணிக வளாகங்கள், திரையரங்குகள், தெழிற்சாலைகள் இன்னும் பல இடங் களில் தீ விபத்துகள் நடந்து இருக்கின்றன. ஆனால் அதற்காக அக்கட்டிடங்கள் மீது, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மட்டுமே கூறுகிறார்களே ஒழிய அவற்றை ஒரேயடியாக மூட வேண்டும் என்று யாரும்  கூவவில்லை. ஆனால் கும்பகோணம் தீ விபத்தைக் காரணம் காட்டி, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்; இல்லை என்றால் பள்ளிக்கூடங்களை மூடி விட வேண்டும் என்று அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். நீதிமன்றங் களும் இதைப் பற்றி "அக்கறையுடன்" விசாரித்து அழுத்த மான ஆணைகளைத் தருகின்றன.

கும்பகோணம் தீ விபத்து நடந்து பதினான்கு ஆண்டு கள் ஆகி விட்டன. ஆனால் அதைச் சாக்கிட்டுக் கொண்டு, கணிசமான அளவில் பள்ளிகளை மூட முடியவில்லையே என்று எரிச்சல் அடையும் ஆதிக்க சக்திகள் பெருந் தலைவரிடம் காட்டிய வாலை இப்பொழுது மீண்டும் நீட்டிக் காட்டுகின்றனர். அன்று அவாள் சொன்ன வலுவான கட்டிடங்கள், சோதனைச் சாலைகள் இன்னும் நிறைய வசதிகளைக் குறிப்பிட்டு, அவை எல்லாம் இல்லாமல் பள்ளிக் கூடங்கள் இயங்கக் கூடாது என்று வழிகாட்டு நெறிகளைப் பொழிந்து கொண்டு உள்ளனர்.

காவிகளுக்கு அடிமையாகத் தெண்டனிட்டுக் கொண்டு இருக்கும் தமிழ்நாடு அரசும் 30.4.2018 அன்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் இந்த வழிகாட்டு நெறிகளை அனுப்பி அவை கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அதில் சிறு பிறழ்வு இருந்தாலும் அப்பள்ளிக்கூடங்களை மூடி விட வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது. எந்தக் காரணத்தைக் கொண்டும் பள்ளிக்கூடங்களை மூடக்கூடாது என்றோ வழிகாட்டு நெறிகளை நடைமுறைப்படுத்தாதவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றோ கூறவில்லை.

இந்நிலையில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் போராட் டங்கள் என்ன வழிமுறையில் இருக்க வேண்டும்? ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் படிக்கக் கூடிய பள்ளிக் கூடங்களை மூடி விட வேண்டும் என்று அவாள் மறைமுகமாகத் திட்டமிடுகிறார்கள். இதற்கு எதிராக, பள்ளிகளில் விகிதாச்சாரப் பங்கீட்டு முறையைச் செயல்படுத்த வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றால், அவாளுடைய சதித் திட்டங்கள் ஊசியால் குத்தப்பட்ட பலூன் போல் ‘புஸ்' என்று காற்று இறங்கிவிடும். எத்தனை பள்ளிகள் வேண்டுமானாலும் திறக்கப்படட்டும்; எத்தனை பள்ளிகள் வேண்டுமானாலும் மூடப்படட்டும். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்குக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டால் அதே விகிதத்தில் பார்ப்பனர்களுக்கும் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும். பார்ப்பனர்கள் அனைவரும் கல்வி பெற வேண்டும் என்றால் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் அனைவரும் கல்வி பெற்றாக வேண்டும் என்ற நிலையை உருவாக்கினால்தான் அவாள் நமக்கு எதிராகச் சதி செய்வதைத் தடுக்க முடியும். அதற் கான வலுவான கருத்தியலுக்கும் தெளிவான விவாதங்களுக்கும் நம்மை நாம் ஆயத்தப் / வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அன்று அறிஞர் நெ.து.சுந்தரவடிவேலு அவாளின் சதித் திட்டத்தை உடைத்து எறிந்து நம் உரிமைகளை விதைத்தார். அவர் நம் அனைவராலும் நினைக்கப்பட வேண்டியவர். அவருடைய விதைப்பில் வளர்ந்த நாம் அவரைப் போலவே இயங்கி இன்றைய நிலைக்குத் தேவையான விகிதாச்சாரப் பங்கீட்டு முறையை வென்றெடுக்க வேண்டும், வாருங்கள்.