சங்கராச்சாரி மதம் பவுத்த மடங்களில் நெருப்பு வைத்ததும், சைவ மதம் சமணர்களைக் கழுவேற்றினதும், வைணவ மதம் புத்த விக்கிரகங்களை உடைத்து உருக்கினதுமான காரியங்கள் எல்லாம் நினைத்துப் பார்ப்போமானால், அந்தக் காலத்தில் மகமதியர்கள் செய்ததாகச் சொல்லப்படுபவைகள் எதற்கும் இக்காரியங்கள் இளைத்ததல்ல என்று தோன்றும். ஆனாலும், மகமதிய மதம் வாள்கொண்டு பிரச்சாரம் செய்யப் பட்டதா இல்லையா என்பதில் இன்னமும் தகராறு இருக் கின்றது. மகமதியர்கள் அதை ஒப்புக்கொள்வதில்லை. மற்றபடி அதைத் தங்கள் எதிரிகளால் தங்கள்மீது கற்பிக்கப்பட்ட ஓர் பழி என்று சொல்லுகின்றார்கள்.

ஆனால் சமணர்களைச் சைவர்கள் கழுவேற்றி யதை சைவர்களே ஒப்புக்கொண்டு தங்களாலேயே எழுதி வைத்து புண்ணிய சரித்திரமாக இன்றும் பிரச் சாரம் செய்வதுடன், அதன் பெருமையைக் காட்டிக் கொள்ள வருஷந்தோறும் பல ஆயிரம் ரூபாய்கள் செலவில் பல இடங்களில் உற்சவங்கள் நடத்திக் காட்டப் படுகின்றன. அக்கோயில்களில் இன்றும் கழுவேற்றிய காட்சிகள் சித்திர ரூபமாய் எழுதி வைக்கப்பட்டிருக் கின்றன.

அதுபோலவே வைணவர்களும் புத்த மத விக்கிரகத்தை அழித்ததற்கு ஆதாரமாய், ஸ்ரீரங்கம் கோயில் இருப்பதுடன், அவ்விக்கிரகத்தைத் திருடி உடைத்த திருமங்கையாழ்வாரின் சரித்திரத்தில் இதையொரு பெருமையாகவும் எழுதிப் புண்ணிய சரித்திரமாகப் பாவித்துத் தினமும் படிக்கப்பட்டும் வருகின்றன. இவைகள் ஒருபுறமிருக்க, இன்றைய தினமும் எனக்கு வரும் சில கடிதங்களையும், என்னைப் பற்றிப் பேசும் பல பேச்சு களையும் பார்த்தாலும் எனது கொள்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் சைவ வைணவர்களின் வார்த்தைகளைப் பார்த்தாலும் அவைகளும் மகமதியர் செய்ததாய்ச் சொல்லப்படும் வாள்பிரச்சாரத்திற்குச் சிறிதும் இளைத்ததல்லவென்றே தோன்றும்.

கிறிஸ்துநாதர் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்? சாக்ரடீஸ் ஏன் விஷமருந்தச் செய்யப்பட்டார்? மகமது நபி ஏன் மலைக் குகைக்குள் ஒளியப்பட்டார்? என்பவைகளை எல்லாம் கவனித்தால், ஆரம்பகாலம் தொட்டே உலகத்தில் சிறப்பாக நமது நாட்டில் மதப் பிரச்சாரங்களின் கதி இப்படித்தான் இருந்து வந்திருக்கின்றன என்பது விளங்கும். இவை தவிர இன்றைய தினமும் இந்து மத தர்மத்தில் இருக்கும் தர்மங்கள் - அதாவது நாஸ்திகர்களை நாக்கறுக்க வேண்டும், கண்ணைக் குத்த வேண்டும். சித்திரவதை செய்ய வேண்டும். நாட்டை விட்டுத் துரத்த வேண்டும் என்பனவெல்லாம் எந்தத் தத்து வத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கேட்கின்றேன்?

மற்றும் இந்து மத சாஸ்திரங்களைப் படித்தால் நாக் கறுக்க வேண்டும்; கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்; பார்த்தால் கண்ணைக் குத்த வேண்டும்; மனதில் ஏறிவிட்டால், நெஞ்சைப் பிளக்க வேண்டும் என்பன வெல்லாம் எந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது? என்று கேட்கிறேன்.

மற்றும் பெரியோர் வாக்கைப்-புராண இதிகாசங் களை எவன் தர்க்க புத்தியால் விவகாரம் பண்ணுகின் றானோ அவன் நாத்திகனாவான். அப்படிப்பட்டவனை அரசன் தண்டிக்க வேண்டும் என்பனவாகியவெல்லாம் எந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது?

மற்றும் நந்தன் நெருப்பில் பொசுக்கப்பட்டது போன்ற கதைகள் எந்தத் தத்துவத்தை அடிப்படை யாகக் கொண்டது?

ஆகவே, உலகில் மதப் பிரச்சாரம் என்பதே, மூர்க் கத்தனத்தையும் பலாத்காரத்தையும் கொண்டதே யொழிய, அனுபவத்தில் அன்புமயமான மதம் உலகில் ஒன்றுமே இல்லை என்றே சொல்லுவேன்.

இந்து வேதத்தை எடுத்துக் கொண்டாலும் அந்தக் காலத்திய வேத மதக்காரர்களுக்கத் தங்கள் எதிர் மார்க்கக்காரர்களை அடிக்கவும், கொல்லவும் செய்வதும், அப்படிச் செய்யச் சக்தி இல்லாவிட்டால் அவர்களைக் கொல்ல வேண்டும்; அழிக்க வேண்டும் என்று தங்களது கடவுள்களைத் தோத்திரம் பண்ணுவதுமான காரியங்கள் நிறையப் பார்க்கலாம்.

ஆகவே எப்பொழுது மத விஷயத்தில் கையிலான வர்கள் எல்லாம் பலாத்காரத்திலும், கையிலாகாத வர்கள் எல்லாம் கடவுளை வேண்டியும் சாபம் கொடுத்தும்தான் இருக்கிறார்கள். தவிர இந்து மதத்தில் உள்ள தீண்டாமையும், பெண் அடிமையும் சிறிதும் மனிதத்தன்மைக்கு ஏற்றதல்ல என்பதை உலகமே சொல்லுகின்றது.

(“குடிஅரசு”, 24.8.1930)