நடுவண் அரசும், மாநில அரசுகளும், தாராள மயம், தனியார்மயம், உலகமயம் எனும் கொள்கை களைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருவதால், ‘மக்கள் நல அரசு’ என்ற கோட்பாடு வேகமாகக் கைவிடப்பட்டு வருகிறது.

எனவே மக்களின் அடிப்படைத் தேவைகளையும், உள்ளார்ந்த விழைவுகளையும் நிறைவேற்றுவதை விட, சந்தையைக் கட்டுப்படுத்துகின்ற - பொருள்களின் விலையைத் தங்கள் விருப்பம் போல் மாற்றி அமைக் கின்ற ஆற்றல்களாக உள்ள - பெருமுதலாளிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் முழு முனைப் புடன் அரசுகள் செயல்படுகின்றன. அரசுகள் பெருமுத லாளியக் குழுமங்களின் பூசாரிகளாக மாறிவிட்டன.

“மக்களுக்கு வாழ்வளித்துக் காக்க வேண்டியது அரசின் கடமை அல்ல; அந்தப் பொறுப்பு, தாராளமய உலகச் சந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது; எனவே உலகச் சந்தைதான் இனி உங்கள் கடவுள்; ஆகவே உலகச் சந்தையின் அருள்வேண்டி, கைகூப்பித் தொ ழுங்கள்” என்று அரசுகள், மக்களை நோக்கிக் கூறும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதன்விளைவாக, உணவுப் பொருள்களின் விலை யும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான மற்ற பொருள்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. 2010 திசம்பர் முதல் பொதுப் பணவீக்கம் 9 விழுக்காட்டுக்குமேல் இருந்து வருகிறது. உணவுப் பொருட்களின் பணவீக்கம் கடந்த அக்டோபர் மாதம் 12 விழுக்காட்டைத் தாண்டிவிட்டது. இதனால் வெகுமக்கள் தங்கள் வருவாயில், பெரும் பகுதியை உணவுக்காகவே செலவிடுகின்றனர். மற்ற இன்றியமையாத் தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நோயுற்றால் மருத்துவரிடம் செல்ல இயலாமல், உயிருடன் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

விரைவில் விலைகள் குறைந்துவிடும் என்று ‘பொருளாதாரப் புலி’ பிரதமர் மன்மோகன்சிங்கும், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் ஆரூடம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஓராண்டுக்குமுன் இதே சமயத் தில், நிதி அமைச்சர், “இந்த ஆண்டு இந்தியா முழு வதும் பருவமழை தேவைக்குமேல் பெய்துள்ளது. எனவே காரிப், ரபி (குறுவை, சம்பா) பருவங்களில் வேளாண் அறு வடை முடிந்து, விளைபொருள்கள் சந்தைக்கு வரத் தொடங்கியதும் விலைகள் குறைந்து விடும். 2011 மார்ச்சு மாதத்திற்குள் பணவீக்கம் 7 விழுக்காட்டிற்கும் கீழாகக் குறைந்துவிடும்” என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இவ்வாண்டு, 22.11.2011 அன்று தொடங்கிய குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத் திலும், நிதி அமைச்சர், 2012 மார்ச்சு மாதத்திற்குள் பணவீக்கம் 6 முதல் 7 விழுக்காடு என்ற அளவுக்குக் குறைந்துவிடும் என்று கூறியிருக்கிறார். இப்படிப் பொய்யும் புனைசுருட்டும் சொல்லியே மக்களை ஏய்ப்பதும் வஞ் சிப்பதும் ஆட்சியாளர்களின் வாடிக்கையாகிவிட்டது.

“மக்களின் வாழ்க்கைத்தரமும், வருவாயும் உயர்ந்து வருகிறது. அதனால் மக்கள் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், காய்கறிகள், பழங்கள், பால், முட்டை, இறைச்சி, மீன் முதலானவற்றை அதிகம் வாங்குகின்ற னர். இதனால் இவற்றின் தேவை அதிகமாகி வருகிறது. ஆனால் இவற்றின் விளைச்சல் இத்தேவையை ஈடு செய்யும் வகையில் அதிகமாகவில்லை. தேவை - வழங்கல் (Demand and supply) முரண்பாட்டால்தான் உணவுப் பொருள்களின் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது” என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதி அமைச்சரும் விலை உயர்வுக்கு விளக்கமளிக்கின்ற னர். இக்கூற்றில் சிறுபகுதி உண்மை இருக்கிறது. ஊட்ட மான உணவுப் பொருள்களை உண்பது அதிகமாகி இருக்கிறது. ஆனால் இவற்றை உண்பவர்கள் யார்? தாராளமயச் சந்தையால் பயன் பெறும் - மேல்தட்டு - நடுத்தர வர்க்கமாக உள்ள 30 விழுக்காடு குடும்பத்தினர் தாம் இவற்றில் பெரும் பகுதியைத் துய்க்கின்றனர். பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வும், முன் பேர - ஊகவணிகமும் உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு முதன்மையான காரணங்களாகும். அதனால் தான் 2010-11ஆம் ஆண்டில் முன் எப்போதும் இல்லாத அளவில், உணவுப் பொருள்களின் விளைச்சல் 24 கோடி டன் என்ற அளவுக்கு உயர்ந்திருந்த போதிலும் விலை குறையவில்லை.

மேலும் மேலும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்வது - அதாவது அரசின் கட்டுப்பாடுகளை நீக்குவதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்த முடியும் என்று எப்போ தும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார் மன்மோகன் சிங். இதன் அடிப்படையில் பெட்ரோல் விலையை, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப, நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையை 2010 சூன் மாதம் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப் பட்டது. அதே சமயத்தில்தான், உரங்களின் விலையை நிர்ணயிக்கும் உரிமையும் உர நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டது.

“பெட்ரோலியப் பொருள்களுக்குத் தொடர்ந்து பெருந் தொகையை மானியமாக அளிப்பதால், அவற்றின் உற் பத்திச் செலவைக்கூட ஈடுகட்ட முடியவில்லை. இந்த இழப்பை ஈடுகட்ட அரசு பெருந் தொகையை அளிப்ப தால், அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படுகிறது. எனவே பயனடைவோரே - நுகர்வோரே பெட்ரோலியப் பொருள் களின் உற்பத்திச் செலவை ஏற்க வேண்டும்” என்பதை அரசு கொள்கையாக வகுத்துள்ளது. இதன் முதல்கட்ட மாகத்தான் மகிழுந்துகளில் மோட்டார் சைக்கிள்களில், நேரடியாகப் பயன்படுத்தப்படும் பெட்ரோலின் விலையை முடிவு செய்யும் உரிமை, எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று நடுவண் அரசு விளக்க மளிக்கிறது.

பெட்ரோலியப் பொருள்களின் உற்பத்திச் செலவை நுகர்வோரே ஏற்க வேண்டும் என்ற அரசின் கொள் கையின்படியும், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவளி ஆகியவற்றுக்கு அரசு அளித்துவரும் மானியச் சுமையைக் குறைக்கும் நோக்குடனும், 2011 சூலை மாதம், டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.3.00; மண்ணெண் ணெய் ஒரு லிட்டருக்கு ரூ.2.00; சமையல் எரிவளி உருளைக்கு ரூ.50.00 என விலை உயர்த்தப்பட்டது.

சரக்குந்துகள் அனைத்தும் டீசலால் இயங்குகின்றன. இதனால் எல்லாச் சரக்குகளின் விலையும் உயருகிறது. வேளாண்மையில் நீர் இறைக்க 60 விழுக்காடு அளவுக்கு டீசல் என்ஜின்தான் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் உள்ள 24 கோடி குடும்பங்களில் 9 கோடி குடும்பங்களுக்கு மின் இணைப்பு இல்லை. இந்த வீடுகளில் இரவில் மண்ணெண்ணெய் விளக்கே பயன்படுத்தப்படுகிறது. நகர்ப்புறங்களில் சாதாரணக் குடும்பங்கள்கூட சமையல் எரிவளி இணைப்புப் பெற் றுள்ளன. ஆனால் இவ்வாறு வெகுமக்கள் இந்த விலை உயர்வால் பாதிக்கப்படுவது பற்றி அரசு கவலைப்பட வில்லை. மாறாக, பெட்ரோல் விலையைப் போலவே, டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவளி ஆகிய வற்றின் விலையை முடிவு செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கே விரைவில் அளிக்கப் போவதாக அரசு அவ்வப்போது கூறிக் கொண்டிருக் கிறது.

“2011 நவம்பர் 1 நிலவரப்படி, ஒரு லிட்டர் டீசலில் ரூ.8.58, மண்ணெண்ணெயில் ஒரு லிட்டருக்கு ரூ.25.66, சமையல் எரிவளி உருளையில் ரூ.260-50 என அவற்றின் உற்பத்திச் செலவைவிடக் குறைவாக விற்கப்படுகிறது. இதனால் இந்த நிதி ஆண்டில், இவற்றுக்கு மானியமாக அளிக்கும் வகையில், அரசுக்கு ரூ.1,30,000 கோடி இழப்பு ஏற்படும்” என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி கூறியுள்ளார் (தி இந்து 3.11.11).

பெட்ரோலியப் பொருள்களை மானிய விலையில் மக்களுக்கு அளிப்பதால், அரசுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது என்று அரசு திரும்பத் திரும்பக் கூறிவருவது அப்பட்டமான பொய். பெட்ரோல் விலையில் 48 விழுக்காடும் மற்ற வற்றின் விலையில் 20 விழுக்காடும் நடுவண் அரசுக் கும், மாநில அரசுகளுக்கும் வரியாகச் செல்கிறது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான அரசின் வரிகள், அமெரிக்கா, கனடா, பாக்கிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளின் விரிவி கிதங்களைவிட அதிகமாக உள்ளன (பிரண்ட்லைன் 2011, சூலை 29).

மக்களுக்குக் குறைந்த செலவில் - இவர்களுக்குச் சுமையாக இல்லாத வகையில் - பொதுப் போக்கு வரத்து வசதி களைச் செய்துதர வேண்டியது அரசின் தலையாயக் கடமைகளுள் ஒன்று என்பதை மறந்து விட்டு, தமிழ் நாட்டு முதலமைச்சர் செயலலிதா 17.11.11 அன்று அதிரடியாக ஒரே இரவில், பேருந்துக் கட்டணத்தைக் கிட்டதட்ட இரண்டு மடங்காக உயர்த்திவிட்டார். “2001 ஆம் ஆண்டு ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.18.26ஆக இருந்தது. இப்போது ரூ.43.95 ஆக உயர்ந்து இருக் கிறது. இதனால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அனைத்துக்கும் சேர்த்து ரூ.6,150 கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே கட்டணத்தை உயர்த்த வேண்டி யது தவிர்க்க இயலாததாகிவிட்டது” என்று அறிக்கை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் டீசல் மீது விதிக்கப்படும் வரி மூலம் கிடைக்கும் வருவாய் பற்றி எவரும் ஏன் வாய் திறப்பதில்லை.

நடுவண் அரசுக்கு உற்பத்தி வரி மூலம் கிடைக்கும் வருவாயில் 5இல் 2 பங்கு பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரிகள் மூலமே கிடைக்கிறது. 2010-11ஆம் ஆண்டில் பெட்ரோலியத் துறை மூலம் நடுவண் அரசுக்கு ரூ.1,36,000 கோடியும், மாநில அரசுகளுக்கு ரூ.80,000 கோடியும் வருவாய் கிடைத்தது. கடந்த ஆண்டில் அரசு அளித்த மானியம் (பொதுத்துறை நிறுவனங்கள் வெளியிட்ட கடன் பத்திரங்கள் உட்பட) ரூ.40,000 கோடியாகும். அதாவது அரசுக்குப் பெட்ரோலியப் பொருள்கள் மூலம் கிடைத்த வருவாயில் 20 விழுக்காடு மட்டுமே மானியமாக அளிக்கப்பட்டது. மக்கள் வரியாகவும் தீர்வையாகவும் ரூ.100 அரசுக்கு அளித்ததில், ரூ.20 மட்டுமே மானியமாகப் பெற்றனர். இந்த உண்மையை மறைத்துவிட்டு மானியம் அளிப்ப தால் அரசுக்குப் பெரும் இழப்பு ஏற்படுகிறது; இந்த மானியத் தொகையை மக்கள் நலத் திட்டங்களுக் காகச் செலவிட முடியாமல் போகிறதே என்று ஆட்சி யாளர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.

இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் எண்ணெய்த் தொழிலில் உள்ளன. 2006-07 முதல் 2009-10 வரையிலான 4 நிதி ஆண்டுகளில் இம்மூன்று நிறு வனங்களும் சேர்ந்து, ரூ.36,653 கோடி இலாபம் பெற்றுள்ளன. நடுவண் அரசுக்கு இதே காலத்தில் இவற்றின் மூலம் ரூ.4,73,000 கோடி இலாபம் கிடைத்துள்ளது. 2010-11ஆம் ஆண்டில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியன் ஆயில் நிறுவனம், வரிப் பிடித்தங்கள் போக ரூ.7,445 கோடி இலாபம் ஈட்டியிருக்கிறது. இந்த நிறுவனம் அரசுக்கு இலாப ஈவுத் தொகையாக மட்டும் ரூ.39,658 கோடி கொடுத்திருக்கிறது. இதேபோல், பாரத் பெட்ரோலிய மும், இந்துஸ்தான் பெட்ரோலியமும் பலகோடி உருபா இலாபம் ஈட்டியுள்ளன (தினமணி 20.10.2011).

இவ்வாறு எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நல்ல இலாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கையில், இவை உற்பத்திச் செலவைக் கூட ஈட்ட முடியாத அள வுக்குப் பெரும் இழப்பில் இருப்பதாக ஆட்சியாளர்கள் ஆந்தைகள் போல் அலறி ம்க்களை மிரட்டிக் கொண்டி ருக்கிறார்கள். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ள சி. ரங்கராசன், “பண வீக்கத்தின் அளவு குறையத் தொடங்கியதும் டீசல், சமையல் எரிவளி ஆகியவற்றின் விலையைப் பன் னாட்டுச் சந்தையுடன் இணைத்திட அரசு முடிவு செய் துள்ளது. ஏனெனில் எண்ணெயைச் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (OMCs) தொடர்ந்து இழப்பை இனியும் தாங்க முடியாது. ‘அரசின் கட்டுப்பாட்டில் விலைகளை நிர்ணயம் செய்தல்’ என்ற பழையக் கோட்பாட்டி லிருந்து விலகி வெகுதொலைவு வந்துவிட்டோம். இனியும் பழைய நிலைக்குத் திரும்ப முடியாது” என்று கூறியுள்ளார் (தி இந்து 9.11.11).

எண்ணெய் நிறுவனங்கள் - குறிப்பாக ரிலையன்சு போன்ற தனியார் நிறுவனங்கள் கொள்ளை இலாபம் அடிப்பதற்காகவே பொய்யான இழப்புக் கணக்குக் காட்டப்படுகிறது. பெட்ரோலியப் பொருள்கள் மட்டுமின்றி, எல்லாப் பொருள்களையும் உலகச் சந்தையுடன் இணைப் பதன் மூலம், பன்னாட்டு நிறுவனங்களின் பகல் கொள்ளைக்கு வழி அமைப்பதே நடுவண் அரசின் கொள்கையாகக் கடந்த இருபது ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. உலகச் சந்தையில் எல்லாச் சரக்குகளின் விலையையும் ஊசலாட்டமான நிலைக்கு உட்படுத்தி - ஊகபேர வணிகத்தின் மூலம் கொள்ளை இலாபம் பெறவேண்டும் என்பதே பன்னாட்டு நிறு வனங்களின் - நிதி ஆதிக்க நிறுவனங்களின் நோக்க மாகும்.

“இயந்திரங்கள் மூலமான பொருள் உற்பத்தியை அச்சாணியாகக் கொண்டு வளர்ந்த முதலாளியம், நிதி மூலதனத்தை முதன்மையாகக் கொண்டதாக மாறி வருவதே ஏகாதிபத்தியத்திற்கு அடிப்படையாகும்” என்று லெனின் சொன்னார். நிதி ஆதிக்கக் கும்பல்களின் தில்லுமுல்லுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண் டும் என்றார். லெனின் குறிப்பிட்டதை விட, இன்று, இந்த நிதி ஆதிக்கக் கும்பல், பன்மடங்கு ஆதிக்கச் சக்தி யாக வளர்ந்துள்ளது. உலகமயச் சூழலில், கணினியின் உயர்தொழில்நுட்ப வலைப்பின்னல் மூலம், உலகச் சந்தையையே தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு ஆட்டிப்படைக்கிறது.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் சராசரி விலை உயர்வின் ஏற்றத்தாழ்வு வரைபடமாகக் கீழே தரப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தியின் அளவில் திடீர் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதில்லை. தேவை - வழங்கல் என்பதில் திடீரென்று பெரிய இடைவெளி உண்டாவ தில்லை. உலக அளவில் எண்ணெயின் தேவை ஆண்டிற்கு 1 முதல் 2 விழுக்காடு என்ற அளவில்தான் அதிகமாகிறது. எனவே கச்சா எண்ணெய் விலையின் ஊசலாட்டங்களுக்கும், திடீர் ஏற்ற இறக் கங்களுக்கும் இந்த வணிகத்தில் நிகழும் முன்பேர - ஊகவணிகமே காரணமாகும். நியூயார்க்கில் மெர்க் கண்டைல் எக்ஸ்சேன்ஜ்-இல் முன்பேர வணிகத்தின் அளவு 2001ஆம் ஆண்டு இருந்ததைவிட 400% அதிகமாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 60% உயர்ந்திருக்கிறது.

கச்சா எண்ணெய் வணிகம், உலகில் பிரென்ட் குரூட், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடி யேட், துபாய் குரூட் ஆகிய மூன்று பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப் பாட்டில் உள்ளது. 1970கள் முதற்கொண்டு, பெரும் பாலும் அரபு நாடுகளைக் கொண்ட அமைப்பான பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கட்டுப்பாட்டில் தான், கச்சா எண்ணெய் விலை நிர்ண யம் செய்வது இருந்தது. ஆனால் 2005க்குப்பின் இது மேலே குறிப்பிட்டுள்ள மூன்று பன்னாட்டு நிறுவனங் களின் கைக்கு மாறிவிட்டது. எனவே கச்சா எண்ணெய் விலை உயர்வின் இலாபங்களின் பெரும்பகுதி முன் பேர வணிகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கும், பெட்ரோலியப் பொருள் வணிகத்தில் உள்ள எக்சான் மொபைல், செவ்ரான், கோனோகோ பிலிப்ஸ், ஆங்கிலோ-டச்சு, இராயல் டச்சு ஷெல் போன்ற பன்னாட்டு நிறு வனங்களுக்கும் சென்று குவிகிறது.

இந்தியாவில் முகேஷ் அம்பானியின் ரிலையன்சு நிறுவனம், மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் பெறும் இலாபத்தைவிட அதிகமான இலாபத்தைக் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, சுத்திகரித்து, பெட்ரோலியப் பொருள்களாக ஏற்றுமதி செய்வதன் மூலம் பெறுகிறது. ரிலையன்சு நிறுவனம் எண்ணெய் யைத் துரப்பணம் செய்தல், உற்பத்தி செய்தல் ஆகிய தொழில்களையும் செய்கிறது. கோதாவரிப் படுகையின் எண்ணெய் வயல்களில் உற்பத்தி-பகிர்வு ஒப்பந்த (PSC) விதிகளுக்குப் புறம்பாக ரிலையன்சு செயல்படு கிறது என்று அந்நிறுவனத்தின் மீது இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலகம் குற்றஞ்சாட்டியுள்ளது. கோதாவரிப் படுகை டி6 எண்ணெய் வயலில் 1.85 பில்லியன் டாலர் அளவுக்கு உற்பத்திச் செலவைப் பொய் யாகக் காட்டியுள்ளது. இதை ரிலையன்சு நிறுவனத்திடம் வசூலிக்க வேண்டும் என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

பெட்ரோல் விலையை உயர்த்துவதற்கு நடுவண் அரசு இப்போது புதிய காரணத்தைக் கண்டுபிடித் துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான உருபாயின் மதிப்பு சரிந்து கொண்டே போவதால், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை அதிகமாகிறது. இதைச் சரிக்கட்டுவதற்காக என்று கூறி 3.11.11 அன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.1.80 உயர்த்தப் பட்டது. அப்போது ஒரு டாலருக்கான உருபாயின் மதிப்பு ரூ.49.15 ஆக இருந்தது. இந்த விலை உயர்வுக்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. பெட்ரோல் விலையை முடிவு செய்யும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களிடம் உள்ளது; இதில் நடுவண் அரசு தலையிட முடியாது என்று நிதி அமைச்சர் கூறினார்.

ஆனால், 15.11.11 அன்று பெட்ரோல் விலை ரூ.2.35 குறைக்கப்பட்டது. 21.11.2011 அன்று நாடாளுமன்றத் தில் விலை உயர்வுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவிப்பதை மட்டுப்படுத்த வேண்டும் என்பதற் காகவே இந்த விலைக் குறைப்பு. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 5 டாலர் குறைந் துள்ளது என்பது விலைக் குறைப்புக்குக் காரணமாகக் காட்டப்பட்டது. கடந்த 33 மாதங்களில் உலகச் சந் தையில் கச்சா எண்ணெய் விலையில் இறக்கம் ஏற் பட்ட போதெல்லாம் அரசு ஏன் விலையைக் குறைக்க வில்லை? மேலும் 21.11.11 அன்று டாலருக்கு நிகரான உருபாயின் மதிப்பு ரூ.52.20 ஆக இருந்தது.

டாலருக்கு நிகரான உருபாயின் வீழ்ச்சியால் இறக்கு மதியாகும் கச்சா எண்ணெய் விலை உயர்வதாகக் கூறும் நடுவண் அரசு, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி யாகும் பெட்ரோலியப் பொருள்கள் மூலம் இதே காரணத்தால் கூடுதல் வருவாய் கிடைப்பதை மறைக் கிறது. 2010-11ஆம் நிதி ஆண்டில் இந்தியா 41,918 கோடி டாலர் மதிப்பு கொண்ட பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. நாட்டின் மொத்த ஏற்றுமதியின் மதிப்பில் இது 16.53% ஆகும்.

கச்சா எண்ணெயின் மொத்தத் தேவையில் 70% மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தி யாவில் 30% உற்பத்தியாகிறது. இந்த உண்மையும் மறைக்கப் படுகிறது. இவ்வாறு அரசால் மறைக்கப்படும் பல உண்மைகளின் அடிப் படையில்தான், பெட்ரோலியப் பொருள்களின் விற்பனையால், எண்ணெய் நிறு வனங்களும், அரசும் தொடர்ந்து பெருத்த இலாபம் பெற்று வருகின்றன. ஆனால் ‘இழப்பு-இழப்பு’ என்று அரசு ஒப்பாரி வைத்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறது.

“பணவீக்கத்திற்கு நிலையான தீர்வு காணப்பட, வேளாண் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்; உணவு வழங்கல் முறையை மேலும் வலுப்படுத்த வேண்டும்; தொழில்துறையில் முழுத்திறனை அடையவேண்டும்” என்று 22.11.11 அன்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். கடந்த இருபது ஆண்டுகளாக வேளாண்மையை அரசுகளே அடியோடு புறக்கணித்துவிட்டன. வேளாண் விளைபொருள்கள் கொள்முதலிலும் முன்பேர வணிகத்திலும் தனியாரை அனுமதித்துவிட்டு, வேளாண்மையில் வளர்ச்சியை எப்படி எய்த முடியும்?

இருபது ஆண்டுகளுக்குமுன் 75 கிலோ நெல் மூட்டை ரூ.500-550க்கு விற்றது. இன்றும் இதே நிலை நீடிக்கிறது. ஆனால் வேளாண் இடு பொருட் களான இரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் முதலான வற்றின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. உர நிறுவனங்களே, உரங்களின் விலையை நிர்ணயம் செய்து கொள்ளும் நிலை இருப்பதால், விவசாயிகளால் வாங்க முடியாத அளவுக்கு உர விலைகள் உயர்த் தப்பட்டுள்ளன.

2011 மார்ச்சு மாதம் டி.ஏ.பி. 50 கிலோ மூட்டை விலை ரூ.486 ஆக இருந்தது. இப்போது ரூ.910 ஆக உயர்ந்துள்ளது. இதே காலத்தில் பொட்டாஷ் ஒரு மூட்டை ரூ.230லிருந்து ரூ.565ஆகவும், 15 : 15 : 15 காம்ப்ளக்ஸ் உரம் ரூ.267லிருந்து 556 ஆகவும் உயர்ந்துள்ளது. 2011 அக்டோபர் மாதத்தில் மட்டும் 16 : 20 காம்பளக்ஸ் உரம் ஒரு மூட்டை ரூ.533லிருந்து ரூ.720ஆகவும், 20:20 உரம் ரூ.510லிருந்து ரூ.740ஆகவும், 14:28:14 உரம் ரூ.545லிருந்து ரூ.755ஆகவும் டி.ஏ.பி. ரூ.686லிருந்து ரூ.925 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இக்கொடிய விலை உயர்வைக் கட்டுப்படுத்த வக்கற்ற மன்மோகன் சிங் ஆட்சி ஏன் நீடிக்க வேண்டும்? இந்நிலையில் வேளாண் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று மானம் வெட்கம் இல்லாமல் பிராணப் முகர்ஜி கூறுகிறார். மு.க. அழகிரி உரங்களுக்கான அமைச்சராகப் பதவியில் நீடிக்கிறார்.

அரசு நிறுவனங்களுக்கு, தனியார் நிறுவனங்களுக்கு, அரசுக்கு இழப்பு - நிதி பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாய் இருக்கும் அரசுகள், பணவீக்கத்தால், பொருள்களின் விலை உயர்வால், மக்கள் எவ்வளவு தொல்லைகளும் துன்பங்களும் பட்டாலும் அவை பற்றிக் கவலைப்படாதவைகளாக உள்ளன. ஆனால் அதே சமயத்தில் பெருமுதலாளி களுக்கு மேலும் மேலும் வரிச்சலுகைகளையும் பற்பல உதவிகளையும் தொடர்ந்து செய்கின்றன.2005-06 முதல் 2010-11 காலத்திலான 6 ஆண்டுகளில் நடுவண் அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வருமான வரிச் சலுகையாக ரூ.3,74,937 கோடி, உற்பத்தி வரிச் சலுகையாக ரூ.7,49,623 கோடி, சுங்கவரிச் சலுகை யாக ரூ.10,00,463 கோடி என மொத்தம் ரூ.21,25,023 கோடி அளித்துள்ளது. அதாவது ஒரு நாளைக்குக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.240 கோடி தள்ளு படி செய்துள்ளது. ஆனால் பெட்ரோலியப் பொருள் களுக்கு மானியம் வழங்குவதால் அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ.319 கோடி இழப்பு ஏற்படுவதாகப் பொய்யான புள்ளிவிவரத்தை அரசு அளிக்கிறது.

1995 முதல் 2010 வரையிலான காலத்தில் அரசின் கணக்குப்படியே, 2,56,913 உழவர்கள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அதை மறந்துவிட்டு உரங்களின் விலை ஒரே மாதத்தில் 50 கிலோ மூட்டைக்கு ரூ.250 உயர்த்தப் படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த அரசு ஒழிக்கப்பட வேண்டியதல்லவா? ஆனால் கடந்த 19 மாதங்களில் 13 முறை வங்கிகளில் முக்கிய கடன் களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று ரிசர்வ் வங்கி மூலம் நடுவண் அரசு ‘ஜீபூம்பா’ வேலை காட்டுகிறது.

‘அண்ணன்’ மன்மோகன் சிங் தலைமையிலான நடுவண் ஆட்சி நடக்கும் வழியிலேயே, ‘தங்கை’ செயலலிதா தலைமையிலான தமிழ்நாட்டு அரசு, நடந்து, ஒரே சமயத்தில், பேருந்துக் கட்டணம், பால் விலை, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியுள்ளது. பிரதமரும், பிரணாப் முகர்ஜியும் விலை உயர்வை நியாயப்படுத்தி அறிக்கை விடுவதைப் போலவே, முதலமைச்சர் செயலலிதாவும், நடுவண் அரசையும், முன்பு ஆட்சி செய்த தி.மு.க. ஆட்சியையும் காரணங் காட்டி, கடுமையான விலை உயர்வை நியாயப்படுத்து கிறார்.

கிராமப்புறங்களில் ஒருவர் ரூ.26, நகர்ப்புறத்தில் ரூ.32 வருவாயுடன் வாழ முடியும் என்று உச்சநீதி மன்றத்தில் அலுவாலியா தலைமையிலான திட்டக் குழு அறிக்கை அளித்திருக்கிறது. இந்த வருவாயைக் கொண்டு பால் வாங்க முடியுமா? பயணம் செய்ய முடியுமா? இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தமிழக அரசு விலையை உயர்த்தி உள்ளது. தமிழ் நாட்டில் உற்பத்தியாகும் பாலில் ஆறில் ஒரு பங்கு தான் ஆவின் நிறுவனம் வாங்குகிறது. ஆரோக்கியா போன்ற பல பெரிய பால் நிறுவனங்கள் செயல்படு கின்றன. பால் விலை உயர்வால், உண்மையில் பெரும் இலாபம் அடையப் போகிறவர்கள் இத்தனியார் நிறுவனங்களே! ஆனால் சாதாரண குடும்பங்களின் குழந்தைகளுக்காகப் பால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உழைப்பாளித் தோழன் விரும்பும் போது தேநீர் குடிக்க முடியாது.

பேருந்துக் கட்டண உயர்வால், தனியார் பேருந்து முதலாளிகளுக்கு மேலும் கொள்ளை இலாபம் கிடைக்கும். நாள்தோறும் கூலி வேலைக்காகப் பேருந்தில் பயணம் செய்யும் பல இலட்சம் ஆண்-பெண் தொழிலாளர் களின்-பொதுமக்களின் வயிற்றில் அடிக்கிறது பேருந்துக் கட்டண உயர்வு. அதை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்த்தியிருப்பது மாபெரும் கொடுமை!

வீடுகளுக்கான மின்கட்டணம் 50 யூனிட் வரை 75 காசு, 51-100 வரை 85 காசு, 101-200 வரை ரூ.1.50, 201-600 வரை ரூ.2.20, 600 யூனிட்டுக்கு மேல் ரூ.4.05 என்று அயந்து அடுக்காக இருந்த கட்டண முறை, இப்போது 200 யூனிட் வரை ரூ.2.00, 201-500 வரை ரூ.3.50, 500க்குமேல் ரூ.5.75 என உயர்த்தப்படப் போவதாகச் செய்திகள் வெளி வந்துள்ளன. மொத்த மின்நுகர்வில் வீடுகளில் 23% மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மொத்த மின் இணைப்பில் 65% வீடுகளின் மின் இணைப் பாகும். எனவே வெகுமக்களைப் பாதிக்கும் மின்கட்ட ணத்தை உடனே திரும்பப் பெற வேண்டும்.

அரசியல் ஆதாயத்திற்காக இலவசங்கள் வழங்கு வதைத் தமிழக அரசு உடனே நிறுத்த வேண்டும். பொது விநியோகத் திட்டத்தின்கீழ் இலவசமாக அரிசி வழங்குவது, வேளாண் தொழிலையே இழிவுபடுத்து வதாகும். தரமான அரிசி ரூ.25, ரூ.30 என்று விற்கப் படும் நிலையில், பொது விநியோகத்தில், கிலோ அரிசி ரூ.3 அல்லது ரூ.5 விலையில் வழங்கப்பட வேண்டும். தொலைக்காட்சிப் பெட்டி, மிக்சி, மின் விசிறி, கிரைண் டர், ஆடு, மாடு போன்ற இலவசங்கள் அடியோடு நிறுத்தப்பட வேண்டும்.

மின்கடத்தல்-பகிர்மானம் மூலமான இழப்பைக் குறைத்தல், மின் திருட்டைத் தடுத்தல், நிருவாகத்தைச் சீர்செய்தல் போன்ற நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மின்துறைச் செலவைக் குறைக்க முடியும். போக்குவரத்துக் கழகங்களின் முறைகேடுகளையும், ஊழல்களையும் ஒழிப்பதன் மூலம் அதனால் ஏற்படும் இழப்பைக் குறைக்க முடியும்.

பணக்காரர்களுக்கும், முதலாளிகளுக்கும் வழங்கும் சலுகைகளை நிறுத்தி, அவர்கள் மீது கூடுதல் வரி விதித்து, பொது மக்களுக்கான திட்டங்களின் பற்றாக் குறையை ஈடுசெய்ய வேண்டும். நடுவண் அரசும், மாநில அரசும் ஒரு பனியாவைப் போல் வெறும் இலாபக் கண்ணோட்டத்துடன் செயல்படாமல், மக்களுக்கான அரசுகளாகச் செயல்பட வேண்டும்.

உழைக்கும் மக்கள் தொடர்ந்து போராடுவதன் மூலம், அரசுகள் இவ்வாறு செயல்படுமாறு செய்ய வேண்டும். அமெரிக்காவில் 1% ஆக உள்ள பெரும் பணக்காரர்கள் நாட்டின் வருவாயில் பெரும் பகுதியைக் கொள்ளை யிடுகின்றனர் என்று கூறி, ‘99% மக்கள் போராட்டம்’ என்ற பெயரில் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். நாம் எப்போது வீதிக்கு வரப் போகிறோம்?

Pin It