“நாளை யானையின் குடல் பிடுங்கியெறியப்படும் வெற்றியைத் தீர்மானிப்பது ஆயுதங்களல்ல.. வெகு மக்களே” என்ற உண்மையை உலகுக்குப் பறைசாற்றியது தீரமிகு வியட்நாம். பிரெஞ்சு, அமெரிக்க ஆதிக்கத்திற் கெதிராகப் போராடிய வியட்நாமியர்களிடம் “யானையை எதிர்க்கும் வெட்டுக்கிளிகளின் போர் ’’ என்று சொன்னவர் களைப் பார்த்து வியட்நாமின் தலைவர் ஹோசிமின் “விமானங்களையும், பீரங்கிகளையும் எதிர்க்க மூங்கில் குச்சிகளைத் தவிர நம்மிடம் ஒன்றும் கிடையாது. ஆனால் மார்க்சியம், லெனினியம் என்ற வழிகாட்டுதலில் நிகழ்காலத்தை மட்டுமல்ல... எதிர்காலத்தையும் பார்க்க முடிகிறது’’.

hosimin“இன்று வெட்டுக்கிளிகள் யானையுடன் சண்டை போடுகிறது. ஆனால் நாளை யானையின் குடல் பிடுங்கி யெறியப்படும்’’ என்று சொன்னது உற்சாகப்படுத்த மட்டுமல்ல... உண்மையில் நடந்தேறியது.

அமெரிக்க வல்லரசை மண் கவ்வ வைத்த வியட்நாம் விடுதலைப் போர்த் தலைவர் தோழர் ஹோசிமின் அவர்களை “ஹோமாமா” என வியட்நாம் மக்கள் அன்புடன் அழைத்ததிலிருந்தே அம்மக்கள் அவர் மீது வைத்திருந்த அளப்பரிய அன்பையும் மதிப்பையும் உணரலாம்.

உலகத்தின் அசைக்க முடியாத வல்லரசு எனக் கருதப்பட்ட அமெரிக்கா வியட்நாம் மக்களிடம் படுதோல்வியைச் சந்தித்தது. 30 லட்சம் மக்களின் உயிர்த் தியாகத்தில் வியட்நாம் வெற்றியை ஈட்டியது. அமெரிக்காவின் படையில் 58000 பேர் கொல்லப் பட்டனர். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளைக் கைப்பற்றும் பிரிட்டனுக்கும் பிரான்சுக்குமிடையிலான போட்டியில் வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்ஸ் தேசத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டன. எனினும் வியட்நாம் மக்கள் ஆக்கிரமிப்புக்கெதிரான போரைத் தீரமுடன் நடத்தினர். விடுதலைக்கான சுதந்திரப் போரை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஒன்றிணைந்து போராட்டத்தை வீச்சாகக் கொண்டு சென்றனர். அதன் விளைவாக பிரான்ஸ் வெளியேறியது. வியட்நாம் தெற்கு நோக்கி முன்னேறியது. ஐ.நா.சபை தலையிட்டு வெகுமக்களின் வாக்கெடுப்பின் மூலம் வியட்நாம் ஒன்றிணைக்கப்பட்டது. ஹனோயைத் தலைநகராகக் கொண்ட வியட்நாமும் சைக்கோனைத் தலைநகராகக் கொண்டு தென் வியட்நாமும் உருவாகின.

ஐ.நா.சபை வெகுமக்களின் வாக்கெடுப்பை நடத்தாத நிலையில் தென் வியட்நாம் மீது வட வியட்நாம் தாக்குதலைத் தொடங்கியது. 1955ல் மீண்டும் போர் ஆரம்பமானது. அமெரிக்கா தென் வியட்நாம் அரசுக்கு ஆதரவாக 1964ல் வட வியட்நாம் மீது விமான குண்டுத் தாக்குதல் நடத்தியது, அமெரிக்க வியட்நாம் போராகப் பரிணமித்தது. நச்சு ரசாயன நாபாம் குண்டுகளை ஏவி வீடு, வயல், நிலங்களை அழித்தது அமெரிக்கா. எத்தகைய தாக்குதலுக்கும் அஞ்சாமல் வியட்நாம் மக்கள் போராடி 1975ல் அமெரிக்காவை விரட்டி அடித்தனர். 58000 போர் வீரர்களை இழந்து அமெரிக்கா அவமானத்துடன் வெளியேறியது.

அமெரிக்கா ஏவிய நச்சுப்பொருட்கள் மற்றும் நாபாம் குண்டுகளால் வியட்நாம் மக்கள் மிகப்பெரிய பாதிப்பை அடைந்தனர். இத்தகைய மானுட விரோதச் செயல்களை எதிர்த்தும் அமெரிக்கா வியட்நாமை விட்டு முற்றாக வெளியேறவும் வலியுறுத்தி உலக அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.

1945ல் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டுகளைப் போட்டு லட்சக் கணக்கான மக்களைக் கொன்று குவித்த ரத்தவெறி பிடித்த ட்ரூமன் வழியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாம் யுத்தத்தின் போது பல மடங்கு நாசகரமான நாபாம் குண்டுகளை வியட்நாம் மீது வீசி வியட்நாமிய மக்களை அடிபணிய முயற்சி செய்த ஆணவத்திற்கும், அடங்காப்பிடாரி தனத்திற்கும் மொத்தமாக ஆப்பு வைத்து, வெறும் முங்கில் கழிகளையும், குச்சிகளையும் வைத்தே கொரில்லா யுத்தத்தின் மூலம் பீரங்கிகளையும், விமானங்களையும், நவீன குண்டுகளையும் கொண்ட அமெரிக்காவைப் புறமுதுகிட்டு ஒட வைத்தனர் வீர வியட்நாம் மக்கள்.

தோழர் ஹோசிமின் வாழ்ந்த மூங்கில் வீடு மிகவும் எளிமையாக அமைந்துள்ளது. தென்னைமரங்களும், மூங்கில்களும், வாழைமரங்களும் அருகில் ஒரு சிறு குளமும் உள்ள ரம்மியமான இயற்கை கொஞ்சுமிடம். எங்கும் பறவைகளின் கொஞ்சும் ஒலிகள். காற்றின் சலசலப்பில் எழும் இசையில் அமைந்த இடம். செய்தி தாள்களும், புத்தகங்களும், ஒரு தட்டச்சு எந்திரமும், படுக்கைக்கு பதிலாக பாய் விரிக்கப்பட்டுள்ளது. இதுதான் அவரின் வாழிடம். எந்த நேரமும் உழைப்பும், படிப்பு மாக செயலாக்கத்தின் முன்மாதிரியாக இருந்துள்ளார்.

சோவியத்தின் நிருபர் ஒருவர் பேட்டி கண்டபோது அன்றாட வாழ்க்கை குறித்த கேள்விக்குப் பதில் அளிக்கையில் ஹோசிமின்,

“நான் அதற்குப் பழகிவிட்டேன். எப்போது வேண்டுமானாலும் எழுந்து கிளம்பி விடலாம், புரட்சியின் போதும், தலைமறைவு வாழ்க்கையின் போதும் இதனைக் கற்றுக்கொண்டேன். எழுந்து புறப்பட ஐந்து நிமிடங் களே போதுமானது’’ என பதிலளித்துள்ளார்.

ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் வேலை செய்கிறீர்கள் என்று கேட்ட போது, “பறவைகளோடு நான் எழுகிறேன், வானில் நட்சத்திரங்கள் தோன்றும் போது உறங்கச் செல்கிறேன்’’ என்றார்.

தோழர் ஹோசிமின் மிகக்கடுமையான உழைப்பாளி. சிறு வயது முதல் அவர் படிக்கும் காலத்தில் ரூசோவைக் கற்றபோது பிரெஞ்சு புரட்சியின் முழக்கமான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதை எப்படி முழங்கினார், அந்த கோஷங்களின் பின்னுள்ள வரலாறு என்ன என்பதைத் தெரிந்துகொள்ள சிறுவயதிலேயே பிரான்சை நோக்கிச் சென்றார் கப்பலில். அப்போது எதுவும் தெரியாமல், உணவுக்கும், தங்கவும் என்ன செய்வாய் என்று நண்பர் கேட்டபோது “இரண்டு கைகளையும் உயர்த்தி பத்து விரல்களைக் காண்பித்து இதுதான் மூலதனம்’’ என்றார்.

கால்சட்டையும், சுருட்டி விடப்பட்ட மேற் சட்டையும் அணிந்து கொண்டு எங்கு போக வேண்டு மென்றாலும் நடந்தே செல்லும் பழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்தார். மலைகளா? செங்குத்தான சிகரமா? வனம் அடர்ந்த காட்டுப்பாதையா? அனைத்திலும் நடந்தே சென்றார்.

1930ல் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியது முதல் தனது இறுதிநாள் வரை மார்க்சிய லெனினியப் பாதையில் உறுதியாக நின்று அதுதான் அத்தனை செயல்களுக்கும் அடிப்படையான தத்துவம், வளரும் சமூக விஞ்ஞானம், பிரச்சனைகளின் தீர்வு

அதில் தான் உள்ளது என்பதை உரக்கச் சொல்லி அதன் அடிப்படையில் புரட்சியின் பாதை என்ற புத்தகத்தை வியட்நாமின் புரட்சிக்கான கட்டமைப்பு குறித்து எழுதினார். அதுதான் இன்று வரை வியட்நாம் கம்யூனிஸ்ட்களின் அடிப்படையான நூலாகப் போற்றப் படுகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக 1975 வரை நடத்திய கொரில்லா யுத்தத்தின் வீர நினைவுகளை இன்றும் பாதுகாத்து வைத்து வருகின்றனர். குச்சி என்ற பகுதியில் ஆண்களும், பெண்களும் 4, 6, 10 மீட்டர் ஆழத்தில் பூமியில் குழிகளையும், பட்டறைகளையும் உருவாக்கி அதில் பதுங்கி இருந்து போரை நடத்தினார்கள். கையில் வெறும் கட்டைத் துப்பாக்கியும், மூங்கில் குச்சி களையும் வைத்துக்கொண்டு நவீன விமானங்களையும், பீரங்கிகளையும் வைத்து ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்திய அமெரிக்காவை மண்ணைக் கவ்வ வைத்தது.

தன் நாட்டுக்கும், மக்களுக்கும் உண்மையுடனும் நடந்து கொள்வது முதல் கடமை, ஒவ்வொருவருக்கும் பெற்றோர்கள் உடன் பிறந்தவர்கள் உண்டு. அவர் களிடத்தில் அன்பு செலுத்த வேண்டும், உயர்வாக மதிக்க வேண்டும், இது இரண்டாவது கடமை. இந்த இரண்டு கடமைகளான விசுவாசமும், போற்றுதலும் ஒன்றோடென்று இணைந்தவை. அதனால் தான் வெட்டுக்கிளிகளால் யானையின் குடலைப் பிடுங்கி எறியமுடியும் என்று நம்பிக்கையோடு யுத்தகாலத்திற்கு மட்டுமல்ல எதிர்காலத்திற்கும் சேர்த்துச் சொன்னார் ஹோசிமின். ஆம்...

“நம் மலைகள் எப்போதும் நம்மோடுதான்

நம் ஆறுகள் எப்போதும் நம்மோடுதான்

நம் மக்கள் எப்போதும் நம்மோடுதான்

அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் தோற்கடிக்கப்படுவர்

நம் நாட்டை நாம் மீண்டும் உருவாக்குவோம் புதிதாய்

இன்னும் பத்துமடங்கு அழகாக...’’