மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு மக்கள் நலப்பணிகளை மட்டுமே கவனத்தில் கொள்ளவேண்டும். அந்த மக்கள் நலப் பணிகளுக்கு தேவையான நிதிகளை உரிய நியாயமான வரி விதிப்பின் மூலம் பெற்று, அதை சரியான வகையில் செலவிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஆனால் அரசுகளோ மக்களின் வரிப்பணத்தில் மட்டுமன்றி உலக வங்கியிலிருந்து பெரும் கடன்களின் மூலம் கிடைக்கும் தொகைகளை தேவையற்ற இலவசங்களை வழங்குவதற்கும், தமிழில் திரைப்படத்திற்கு பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பது போன்றவைகளுக்கும், ஆடம்பர அரசியலுக்கும் பயன்படுத்தி வருகின்றன. இவைகளில் அரசின் கஜானா காலியாகி விடுவதால், நாட்டின் மூலாதாரப் பணிகளுக்கு மேலும் கடன்களை வாங்குவதோடு, டாஸ்மாக் எனும் சாராய வியாபாரத்தை செய்தும் கஜானாவை நிறைக்கிறது.

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை டாஸ்மாக் நிறுவனம் நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் 6696 மதுக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி வருமானம் இதன் மூலம் கிடைக்கிறது. மேலும், தற்போது சரக்குகளின் விலையையும் உயர்த்தி 'குடிமகன்'களை குடிக்காமலேயே தள்ளாட வைத்துள்ளது. குவாட்டர் பாட்டில் ரூ.5, ஆர்ப்பாட்டில் ரூ.10, முழுபாட்டில் ரூ.20, பீர் வகைகள் ரூ.5 என விலை உயர்த்தப்பட்டுள்ளது.

விஸ்கி, பிராந்தி, ரம், பீர் உள்ளிட்ட அனைத்து மது பானங்களின் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வினால் குடிப்பவர்களின் எண்ணிக்கை ஒரு போதும் குறையப்போவதில்லை. மாறாக குடும்பத்திற்கு குடிமகன்கள் வழங்கும் தொகைதான் குறைய வாய்ப்புண்டு.

அடுத்து இன்னும் ஒரு அதிர்ச்சியான செய்தி என்னவெனில், நாடெங்கும் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று சில அரசியல் கட்சிகளும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் போன்ற சமுதாய நலன் நாடும் இயக்கங்களும், சமூக ஆர்வலர்களுக்கும் குரல் கொடுத்து வரும் நிலையில், 280 மதுக்கடைகளை கூடுதலாக திறக்க டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், இது தவிர எலைட் ஷாப், எலைட் பார் என்று சொல்லக்கூடிய புதிய நவீன கடைகளும் திறக்கவுள்ளதாகவும், இவைகளில் பார் வசதியுடன் உயர்தர மதுபானங்கள், வெளிநாட்டு மது வகைகள் விற்க உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

ஏற்கனவே பெட்டிக் கடைகள் போல் அரசின் மதுக்கடையான டாஸ்மாக் மலிந்து பரவிக்கிடக்கும் நிலையில், அதை இன்னும் அதிகப்படுத்துவது மக்கள் நல அரசுக்கு நல்லதல்ல. தாலிக்கு தங்கம் வழங்கும் அரசு, இந்த குடி மூலம் அதே தாலி கீழே இறங்குவதற்கு காரணமாகவுள்ள மதுக்கடையை அதிகரிப்பது அநீதியாகும்.

நாட்டின் குடிமக்களை காக்க வேண்டிய அரசு 'குடிமகன்கள்' அரசாக மாறுவது அரசுக்கு நிரந்தர அவப்பெயரையே பெற்றுத்தரும் என்பதை ஆளும் அரசு உணர்ந்து பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமுல்படுத்தி மக்கள் மனதில் இடம்பெற முதல்வர் முன்வரலாமே!

- முகவையார்

Pin It