சமூக வரலாறும் சாதிகள் வரலாறும்

தமிழ்ச் சமூக வரலாறு முழுமையாக எழுதப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் அவா நீடிக்கிறது. ஆனால் சமூக வரலாறு எழுதுவதற்குத் தொடங்கப்படும் முயற்சிகள் தொடக்கத்திலேயே முடங்கி விடுகின்றன. சமூக வரலாறு எழுதப்படுவதற்குப் பல போதாமைகள், தடைகள் உள்ளன. அவற்றில் ஒன்று, சாதிகள் வரலாறு பற்றிப் போதுமான அளவுக்கு சமூக அறிவியல் நோக்கிலான ஆய்வுகள் இல்லாமை ஆகும். சமகால சமூகத்தில் சாதி உணர்வு முக்கியமான மெய்மையாக நிலவுகிற போது, கடந்த காலம் பற்றிய தேடலில் அவ்வுணர்வு இடையீடு செய்து, உணர்நிலையோடோ உணர்நிலையற்றோ பொய்மைத் தோற்றப்பாடுகளை உருவாக்குகிறது.

aa sivasubramanian book on dhobiஆகவே சாதி உணர்வு ஏற்படுத்தும் மனத் தடைகளைக் கடந்து செல்வதற்கு, சாதிகள் வரலாறு பற்றிய அறிவியல் பூர்வான எழுத்துகளைப் பெறுதல் அவசியமானது ஆகும். இந்த வகையிலான ஒரு எழுத்தாக “தமிழக வண்ணார்: வரலாறும் வழக்காறுகளும்” என்ற புத்தகத்தை அண்மையில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நூலை நன்கு அறியப்பட்ட நாட்டார் வழக்காற்றியல் புலமையாளர், மார்க்சியக் கருத்துநிலையாளர் ஆ.சிவசுப்பிரமணியன் எழுதியுள்ளார்.

“தமிழக வண்ணார்: வரலாறும் வழக்காறுகளும்” புத்தகம் ஒன்பது பகுதிகளையும் ஏழு பின்னிணைப்பு களையும் கொண்டுள்ளது. பின்னிணைப்பிலும் “தமிழ்ச் சமூகத்தில் கழுதை” என்ற முழுநீளக் கட்டுரை உள்ளது. இவை அனைத்தும் வண்ணார் வரலாறு தமிழ்ச் சமூக வரலாற்றின் பிரிக்க முடியாத பகுதி எனக் காட்டுகின்றன. இந்த நூலின் முறையியல், நோக்கம் பற்றி முன்னுரையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

குறிப்பிட்ட சாதியன்றை மையமாகக் கொண்டு நிகழும் ஆய்வு, அச்சாதியின் கடந்த காலம் - நிகழ் காலம் - எதிர்காலம் ஆகியனவற்றை மையமாகக் கொண்டே நிகழுதல் வேண்டும். இதன் அடிப்படையில், வரலாறு, மானிடவியல், சமூகவியல், நாட்டார் வழக்காறு ஆகிய அறிவுத் துறைகளின் துணை அவசியமான ஒன்று. எழுத்தா வணங்களுடன், கள ஆய்வுத் தரவுகளும் இணையும்போதுதான் இவ்வாய்வு சிறப்பாக அமையும். இதை உள்ளத்தில் இருத்தியே வண்ணார் சமூகம் குறித்த நூலை எழுதும் முயற்சியில் ஈடுபட்டேன்.

ஆனால் இந்நூலாசிரியரின் முயற்சி, இடையில் அவருக்கு நேர்ந்த விபத்தால் தடைப்பட்டு, “பெரிய அளவிலான நூலாக உருவாக வேண்டிய ஒன்று, குடுகுடுப்பைக்காரரின் சட்டை போன்று, கட்டுரைகளின் தொகுப்பாக” வந்துள்ளது என்று முன்னுரை கூறுகிறது. ஆயினும், சாதிகள் வரலாறு பற்றிய ஆய்விற்கான முன்மாதிரியை இந்நூல் வழங்குகிறது. இந்நூல் ஆராய்ந்த செய்திகளை எடுத்துக் கூறுவதனூடே, இப்புத்தகத்தின் முக்கியத்துவத்தை இந்த அறிமுகம் எடுத்துக்காட்ட விரும்புகிறது.

தமிழ்ச் சமூகத்தில் வண்ணார்

18ஆம் நூற்றாண்டியின் இறுதியில், தமிழ் நிலப் பகுதியில் காலனிய ஆட்சி வேரூன்றி நிலைத்தது. அப்போது, காலனிய அரசு சமூகக் குழுக்களை வகை தொகைப்படுத்த முயன்றது. அதன் வகைதொகைப் படுத்தலில் சாதிகளின் வருணநிலை, படிநிலைத் தரவரிசை முக்கியமான இடம்பெற்றது. இச்செயல்பாடு, சாதிக்குழுக்கள் வரலாறு பற்றிய உணர்வு கொள்ளலை, அதாவது வருணநிலையில் உயர்ந்த அந்தஸ்தைக் கோரும் உணர்வு, சாதிப் படிநிலைத் தரவரிசையில் உயர்ந்த இடத்தைக் கோரும் உணர்வு என்ற எதிர் விளைவைத் தோற்றுவித்தது.

அவ்வுணர்வின் செயல் வடிவமாக சாதிப் புராணங்கள், சாதி வரலாறுகள் தோன்றின. அப்படிப்பட்ட சாதி வரலாறுகள், பொதுவாகப் புராண மூலங்களில் தோற்றுவாய்களைத் தேடிக் கொண்டன; கிடைக்கும் இலக்கிய, கல்வெட்டுத் தரவுகளைக் கொண்டு, புகழ்பூத்த கடந்த காலத்தைக் கட்டமைத்துக் கொண்டன. இந்த வகையிலான சாதி வரலாறை வண்ணார் குழுமம் படைத்துக் கொண்டு உள்ளதா என்று தெரியவில்லை. எவ்வாறாயினும், இந்த நூலில் ஆ.சிவசுப்பிரமணியன், வண்ணார் சமூக வரலாற்றை சமூக அறிவியல் நோக்கில் எழுத முயன்றுள்ளார்.

வண்ணார் வாழ்வும் வரலாறும், துரும்பர், வண்ணார் சமூகத்தின் எதிர்காலம் ஆகிய மூன்று கட்டுரைகளில் தமிழ்ச் சமூகத்தில் வண்ணார் வரலாறு, நிலை பற்றி ஆராயப்படுகின்றது. இந்த ஆய்வின் மூலம் இன்று தமிழகத்தில் உள்ள பிற சாதிகளைப் போலவே, வண்ணார் சாதியும் பல சாதிகளின் தொகுப்பு எனத் தெரிகிறது. கடந்த இரு நூற்றாண்டுகளாக வட்டாரம் கடந்து, ஒரே மாதிரியான சாதிகள் பெருங் குழும அடையாளத்தை உருவாக்கிக் கொள்வது பலவிதமான சமூக நிர்பந்தங்களால் நடைபெற்று வருகிறது.

 அவ்வகையில் வண்ணார்களும் ஒரே குழுமமாக மாறுவது தொடங்கியுள்ளது. ஆனால் ஊர் வண்ணார், சாதி வண்ணார் என்ற பெரும் வகையினம் வண்ணார் ஓரே குழுமமாக மாறுவதற்குப் பெருந்தடையாக உள்ளது. பள்ளர், பறையர் முதலான குடிகளுக்கு வெளுக்கும் வண்ணார், சாதி வண்ணார்களாக உள்ளனர்.

வெள்ளாளர் முதலான சாதிகளுக்கு வெளுக்கும் வண்ணார், ஊர் வண்ணார்களாக உள்ளனர். மருத நாட்டு வண்ணார், பாண்டிய வண்ணார் என்பன போல வட்டார அடிப் படையிலும், பணிக்க வண்ணார், புதிரை வண்ணார் என்பன போல தாம் தொழில் செய்யும் குழுமங்களின் அடிப்படையிலும் வண்ணார் பல சாதிப் பிரிவுகளாக உள்ளனர்.

1976இல் சட்டநாதன் அறிக்கை சுமார் ஐந்து லட்சம் மக்கள்தொகை கொண்டதாக வண்ணார் சமூகத்தை மதிப்பிட்டது. தமிழகத்தில் உள்ள சிறுபான்மை சாதிக் குழுமங்களில் ஒன்று வண்ணார் குழுமம். வண்ணார்கள் பெரும் நகரங்களில் மட்டுமே குறிப்பிடத்தக்க எண்ணிக்கை அளவில் வாழ்கின்றனர். கிராமங்களில் இரண்டொரு குடும்பங்களாக மட்டுமே வசிக்கின்றனர். அதனால் ஊரில் உள்ள பெருஞ் சாதிக் குழுமங்களால் பல்வேறு வகையிலான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகுகின்றனர்.

துரும்பர் போன்ற சாதி வண்ணார்கள் மீது, பார்த்தாலே தீட்டு என்னும் வகையில் சாதி இந்துக்கள் கடுமையான தீண்டாமையைக் கைகொண்டனர். இதனால் அவர்கள் மீது பகலில் வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பாட்டை சாதி இந்துக்கள் விதித்து இருந்தனர். இரவில் மட்டும்தான் அவர்கள் வெளியே நடமாடியுள்ளனர். இந்தக் கட்டுப்பாடு 1932-இல் நீதிக்கட்சியின் ஆட்சியில்தான் நீக்கப்பட்டது.

மேலும், சாதி வண்ணார் யாருக்குத் தொழில் செய்கின்றார்களோ, அந்த ஒடுக்கப்பட்ட சாதியினரும்கூட சாதிரீதியான ஒடுக்குமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது சாதிமுறையின் மிக மோசமான தன்மைக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

வண்ணார்கள் பற்றிய செய்திகள் பண்டைக் காலம் முதல் கிடைக்கின்றன. ஆனால் அப்போது வண்ணார்கள் குடி ஊழியக்காரர்களாக இல்லை; ஊதியம் பெறும் தொழிலாளர்களாக இருந்துள்ளனர். இதற்குச் சான்றாக, வண்ணார் காணம், வண்ணார் கற்காசு முதலான தொழில் வரிகள் வண்ணாரிடமிருந்து பெறப்பட்ட கல்வெட்டுச் செய்தியை ஆ.சிவசுப்பிரமணியன் எடுத்துக் காட்டியுள்ளார்.

வண்ணார்கள் துணிக்கு வண்ணம் ஊட்டுபவர் களும், துணிகளில் ஓவியம் தீட்டுபவராகவும் இருந் துள்ளனர். மேலும் வண்ணார்கள் நில உடைமையாளர் களாகவும், கோயிலுக்கு நிலக் கொடை, கோயில் புழங்கு பொருள் கொடை கொடுத்தவர்களாகவும் இருந்துள்ளனர். இப்படி இருந்தவர்கள் எப்போது குடி ஊழியக்காரர் களாக மாறினர் என்று தெரியவில்லை என்று ஆ.சிவசுப்பிரமணியன் கூறுகிறார். ஆயினும் அவர், 14ஆம் நூற்றாண்டில் கரிசூழ்ந்தமங்கலம் பெருமாள் கோயிலுக்குக் கொடைப்பொருளாக வண்ணார்கள் வழங்கப்பட்ட செய்தியைக் குறிப்பிட்டு, “இது அடிமை முறையின் ஒரு வடிவமாகும்” என்று கூறுகிறார்.

இது முக்கியமான ஒரு குறிப்பு ஆகும். குடி ஊழிய முறைகூட அடிமைமுறையின் பல கூறுகளைக் கொண்டு உள்ளது. அடிமைமுறையையும் சாதிமுறையையும் ஒப்பிட்டு அம்பேத்கர் எழுதிய கட்டுரை இந்த இடத்தில் கூடுதல் வெளிச்சங்களைத் தரக் கூடியது. ஆயினும் தமிழ் நிலத்தில் குடி ஊழிய முறையும் சாதிப்படிநிலை முறையும் மாறாப் பண்புடைய சுயதேவை பூர்த்தியுடைய கிராம சமூக அமைப்பின் அல்லது நிலக்கிழமை சமூக அமைப்பின் நிரந்தர அம்சமாகக் கொள்ளாது, 14ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைமையின் விளைவு என எ.சுப்பராயலு, நொபொரு கரோஷிமா ஆகியோர் வாதத்தின்படி கொண்டால், ஆ.சிவசுப்பிர மணியன் போகிற போக்கில் தரும், வண்ணார் கோயிலுக்குக் கொடைப்பொருளாக வழங்கப்பட்டமை பற்றிய குறிப்பு முக்கியத்துவம் உடையது ஆகிறது.

வண்ணார் சமூகத்தின் மீதான, பொதுவாகக் குடி ஊழிய சமூகத்தின் மீதான பிரதான ஒடுக்குமுறை வடிவங்களில் ஒன்று “ஊர்ச்சோறு எடுத்தல்” ஆகும். ஊர்ச்சோறு எடுத்தலின் மூலம் வண்ணார் சமூகம் அனுபவித்த கொடுமையைத் தத்ரூபமாக ஆ.சிவசுப்பிர மணியன் எடுத்துக்காட்டியுள்ளார். ஆனால் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் தினசரி ஊர்ச்சோறு எடுக்கும் முறை இருந்ததா எனச் சந்தேகம் தோன்றுகிறது. மேட்டுநிலப் பகுதியான கொங்குப் பகுதியில், வண்ணார்கள் “கிராமத் தொழிலாளியாக” கருதப்பட்டு, ஆண்டுக்கொரு முறை குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் மடாக் கணக்கில் நெல் அளக்கும் முறை இருந்தது.

பொங்கல், தீபாவளிக் காலத்தில் “ஊர்ச்சோறு” எடுத்தல், அதாவது பலகாரங்கள், கறிக்குழம்பு, மதிப்பு மிக்கதாக இருந்த காலத்தில் நெல்லஞ்சோறு ஆகியவற்றை மட்டும் வாங்கிச் செல்லும் முறை இருந்தது. அது அவர்களின் ஒரு “உரிமை”யாக இருந்தது. கேட்கும்போது மறுக்க முடியாது. மறுத்தால் அது அவமானம். ஆயினும் இந்த “உரிமை”கூட வண்ணார் நோக்கிலிருந்து பார்க்கும் போது மோசமானதுதான்.

பொதுவாக, தொன்மையான சாதிமுறை தோற்றம், நிலைத்த சாதிப் படிநிலை தரவரிசை ஆகியவை பற்றி பொதுமைப்படுத்தப்பட்ட பார்வைகள் கடந்த காலத்தில் சாதி எதிர்ப்புப் போராட்டங்களுக்கு நியாய உணர்வை வழங்கின. ஆயினும், பொதுமைப்படுத்தப்பட்ட பார்வை முழு உண்மையானது இல்லை. ஒவ்வொரு சாதியின் வரலாறும் கால அளவிலும், இட அளவிலும் பல தனித் தன்மைகளைக் கொண்டுள்ளன. மேலே கண்ட செய்திகள் மூலம் வண்ணார் சமூக வரலாறும் இந்த உண்மையை வலியுறுத்துகிறது.

உலகமயமாக்கலுக்குப் பின், வண்ணார் சமூகம் மிக மோசமான அழிவை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக, பாலிஸ்டர் துணி வந்த பிறகு வெள்ளாவி வைத்து வெளுக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. இந்நிலை கிராமப்புறங்களில் வண்ணார் சமூக இருப்பைத் துடைத்து அழித்துள்ளது; சடங்குநிலைத் தேவை மட்டுமே இன்னும் இருப்பிற்கான சிறிய வெளியை வழங்கியுள்ளது. அது இன்னும் சில இழிவுகளைச் சுமத்துவதற்கான, சுமப்பதற்கான வெளியாகவும் உள்ளது.

கல்வி வாய்ப்புகளிலும், அரசு வேலைவாய்ப்புகளிலும், நகர வெளிகளிலும் வண்ணார் சமூகம் மிக பின்தள்ளப்பட்டு உள்ளதை, ஆ.சிவசுப்பிரமணியன் பின்னிணைப்பாகத் தந்துள்ள புள்ளி விவரங்களும் சட்டநாதன் அறிக்கையும் காட்டுகின்றன. இன்று சலவைத் தொழில் ஒரு புறம் அயர்னிங்காக மட்டும் சுருங்கிவிட்டது. மற்றொருபுறம் “லாண்டரி” தொழில் வலைப்பின்னலாக மாறியுள்ளது. பெரு மூலதனம் இடப்படும் லாண்டரித் தொழிலில் வண்ணார் சமூகத்தினர் தொழிலாளர்களாக மாற்றப்பட்டு வருகின்றனர். இதனை “பாட்டாளி வர்க்கமயமாதல்” என்று அழைக்க முடியுமா?

வாழ்க்கை வட்டச் சடங்குகளும் வண்ணாரும்

வாழ்க்கை வட்டச் சடங்குகளும் வண்ணாரும் என்ற கட்டுரையில் மாராயம் சொல்லுதல், பூப்புச் சடங்கு, இறப்புச் சடங்கு ஆகியவற்றில் வண்ணார் வாழ்க்கை வட்டச் சடங்குகளில் இடம்பெறும் விதத்தை ஆ.சிவசுப்பிரமணியன் விளக்குகிறார். ‘பல்வேறு மங்கல சடங்குகளிலும் வண்ணார், நாவிதர் சாதியினர் சடங்கு நடத்துவோராக இருந்த நிலை பார்ப்பனியத்தை நோக்கிய மிக அண்மைக்கால நகர்வினால் மாறி விட்டது. பிராமணர்கள் சடங்கு நடத்துவோராக மாறி விட்டனர். ஆனால் அமங்கலச் சடங்குகளில் மட்டும் வண்ணார், நாவிதர் இருக்கவேண்டும் எனப் பிற்பட்ட சாதியினர் விரும்புகின்றனர்’. இந்நிலை வண்ணார்கள் மீது செலுத்தும் ஒடுக்குமுறைகளில் ஒன்று ஆகிவிடுகிறது.

இக்கட்டுரையில் மாராயம் சொல்லுதல் என்ற சடங்கு நிகழ்வை விவரிப்பதன் வழியாக, தொல் காப்பியத்தில் வரும் ‘மாராயம் பெற்ற நெடுமொழி யானும்’ என்பதற்கு நல்ல செய்தி கூறிப் பரிசு பெறுதல் என்று சரியான பொருளைத் தருவிக்கின்றனர்.

பூப்பு, இறப்பு சடங்குகளில் மூட்டுத்துணி எடுத்தல், மாத்துத் துணி விரித்தல் என்பன போன்ற, தீட்டு என ஒதுக்கும் அல்லது இழிநிலைக்கு ஆளாக்கும் வேலைகளைச் செய்ய வண்ணார்கள் நிர்பந்திக்கப் படுகின்றனர் என்று ஆ.சிவசுப்பிரமணியன் காட்டு கின்றார். இது சடங்குகளின் மூலம் சாதிகளிடையே உள்ள உறவு கட்டமைக்கப்படுகிறது எனக் காட்டுகிறது. திருமணம் போன்ற மங்கல நிகழ்வுகளில் வண்ணார் பெற்றிருந்த சடங்குநிலை, ஏன் அந்நிலையை இழந்தனர், கொங்கு வட்டாரத்தின் எழுதிங்கள் போன்ற வட்டாரச் சடங்குகளில் வண்ணார் பெற்றிருக்கும் முதன்மைநிலை ஆகியவற்றை விரிவாக ஆராய வேண்டும். அதற்கான தூண்டுதலை இக்கட்டுரை விதைக்கின்றது.

வண்ணார் குறித்த கதையாடல்

வண்ணார் குறித்த வாய்மொழிக் கதைகள், அண்ணாமலையாரும் வண்ணாரும், கதைப்பாடல் களில் வண்ணார், தெய்வமாக்கப்பட்ட வண்ணார் ஆகிய நான்கு கட்டுரைகளில் தமிழ்ச் சமூகத்தில் உள்ள வண்ணார் குறித்த கதையாடல்களை விரிவாக ஆ.சிவசுப்பிரமணியன் ஆராய்கின்றார். இதுவும் ஒரு வகையில், வண்ணார் வரலாறு குறித்த ஆய்வாக உள்ளது. மற்றொரு வகையில் வண்ணார் குறித்த கதையாடல் எவ்வாறு தமிழ்ச் சமூகத்தில் மேற்கொள்ளப் பட்டு உள்ளது என்ற ஆய்வாகவும் உள்ளது. இந்தக் கதையாடல் வண்ணார்கள் குறித்து வண்ணார் உருவாக்கியது, பிறர் உருவாக்கியது என இரு வகையானவை.

“துரும்பர்” என்னும் இரண்டாவது கட்டுரை யிலேயே துரும்பர் சாதித் தோற்றம் குறித்த கதைகள் ஆராயப்பட்டு உள்ளன. இதைப் போல ஐந்தாம் கட்டுரையில் ஈரங்கொல்லியார், பாண்டி வண்ணார், ஈரோடு மாவட்டத்தில் உள்ள புரோதி வண்ணார், வடுவ வண்ணார், சாயக்கார வண்ணார், ஆண்டிக்குல வண்ணார் ஆகிய வண்ணார் சாதிகள் குறித்த தோற்றக் கதைகள் ஆராயப்பட்டு உள்ளன.

துரும்பர் குறித்த முதல் தோற்றக் கதை வருமாறு: சிவபெருமான் வெளுக்கக் கொடுத்த துணிகளில், வண்ணார் பரிவட்டத்தை மட்டும் தன் மகனிடம் கொடுத்து யானை மீதும், மீதியைப் பணியாளரிடம் கொடுத்துக் குதிரை மீதும் அனுப்பி வைத்தார். குதிரையில் வேகமாகச் சென்றதால் பணியாள் கோவிலுக்குள் சென்றுவிட்டார். வண்ணார் மகன் யானை மீது மெதுவாகச் சென்றதால் நேரமாகி, கோயில் கதவு பூட்டப்பட்டுவிட, வெளியே நின்றார். அதனால் வண்ணார் மகன் புறத்து வண்ணார் ஆகிவிட்டார். இதே கதை, ஈரங்கொல்லியார், பாண்டி வண்ணார் தோற்றக் கதையாகவும் சற்று மாற்றமடைந்து வருவது கவனிக்கத் தக்கது.

இன்னொரு தோற்றக் கதை பின்வருவது: பறையர் சாதிப் பெண்ணும், பள்ளர் சாதி ஆணும் திருமணம் செய்துகொண்டர். இதற்குத் தண்டனையாக அந்த இரு சமூகத்தாரும் அவர்கள் அழுக்குத் துணியை வெளுக்கும் பணியை இவர்கள் பரம்பரை மீது சுமத்தி விட்டனர். அவர்களே புரத வண்ணார்.

இக்கதைகளை ஆ.சிவசுப்பிரமணியன் ‘சமூக விழிப்புணர்வு இல்லாத காலத்தில் தம் அவல நிலைக்கு அமைதி காணும் வகையில் படைக்கப்பட்டவை’ என்று விமர்சனம் செய்கின்றார். மேலும், இக்கதைகள் துரும்பர் போராட்ட உணர்வைத் தடுத்துநிறுத்தும் பணியைச் செய்துள்ளன என்றும் விமர்சனம் செய்துள்ளார். இக்கதைகள் புரத வண்ணார் குறித்து பிறர் உருவாக்கிய கதைகள் என்றும் கூறுகிறார்.

முதல் கதையில் பிற வண்ணார் பிரிவினர் மேல் இருப்பது தங்களுக்குக் கிடைத்த பரிசு என்றும், புரத வண்ணாருக்குக் கிடைத்த தண்டனை என்றும் கதையாடல் உள்ளது. இரண்டாவது கதையில், சாதி கடந்து திருமணம் செய்த மீறலுக்காகத் தண்டனை என்ற கதையாடல் உள்ளது. “தண்டனை” என்ற கருத்துருவம் இரண்டு கதைகளிலும் வலியுறுத்தப்படுகின்றது.

ஆனால் இரண்டாவது கதையில் சகோதர உறவு உள்ளது. சாதி குறித்து வைதீகக் கதையாடல்கள் போன்று அல்லாமல், இவை எதிர்நிலையில் சாதிகளுக்கு இடையிலான சகோதர உறவை வலியுறுத்துவதற்குப் பயன்படும் தன்மை பெற்றுள்ளன என்பது கவனிக்கத் தக்கது.

ஈரங்கொல்லியார் குறித்த முதலிரண்டு தோற்றக் கதைகளும் துரும்பர் குறித்த முதல் தோற்றக் கதையைப் போலவே உள்ளன. அண்ணன் - தம்பி, யானை-குதிரை, கோயிலுக்கு உள் சென்று விடுதல் - வெளியே நிற்றல் என்ற எதிர்வுகள் உள்ளன. இக்கதைகள் இரண்டும் பாண்டி வண்ணாருக்கும் ஈரங்கொல்லியாருக்கும் சகோதர உறவை வலியுறுத்துகின்றன. இவ்விடத்தில் ஈரங்கொல்லியார் கோவிலுடன் தொடர்புடைய வண்ணார் என்பது நினைவில் கொள்ள வேண்டும். பிற வண்ணார்களை விட தங்களை உயர்வானவர்களாகக் கருதிக் கொள்கின்றனர். ஈரங்கொல்லியார் குறித்த பிற இரண்டு கதைகள் திருவரங்கப் பெருமாளுடனும், காஞ்சி வரதராஜப் பெருமாளுடன் தொடர்புப் படுத்துவன ஆகும்.

பாண்டி வண்ணார் குறித்து மூன்று கதைகள் ஆராயப்பட்டு உள்ளன. முதல் இரண்டு கதைகள் சிவன் - பார்வதி ஆகியோருடன் தொடர்புறுத்தியும், மூன்றாவது கதை சீதையுடன் தொடர்புறுத்தியும் கதையாடுகின்றன. முதல் கதையில் இயல்புநிலையில் பார்வதியின் தீட்டுத்துணி துவைக்கும் தேவைக்காக வண்ணார் தோற்றுவிக்கப்படுகிறார். பிறகு வண்ணார் தேவைக்காக வண்ணாத்தியும் அரச மரத்திலிருந்து வருவிக்கப்படுகிறார்.

தெய்வங்களுடன் தொடர்புறுத்திக் கொள்ளும் கதைகள் மூலம், “தாங்கள் இழிவானர்கள் அல்ல என்ற கருத்தை” வண்ணார்கள் வெளிப்படுத்தியுள்ளனர் என்று ஆ.சிவசுப்பிரமணியன் கூறுகிறார். இத்துடன், தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டங்கள் என்ற கட்டுரையில் நா.வானமாமலையின் ‘தெய்வங்களுடன் தொழில்களைத் தொடர்புறுத்தல், எல்லாத் தொழில் களும் சமமானவைதான் என்பதை வலியுறுத்துவதற்கு ஆகும்’ என்ற கருத்தையும் நினைத்துப் பார்க்கலாம்.

இரண்டாவது, மூன்றாவது கதைகள் தோற்றக் கதைகள் அல்ல, ஆனால் வண்ணார் துன்பம் குறித்த கதையாடல் உள்ளது. அது சிவன் - பார்வதி சாபம் என்றோ, சீதையின் சாபம் என்றோ கதையாடல் செய்கிறது. இதைப் போலவே ஈரோடு மாவட்ட வண்ணார் குறித்த கதைகளும் “சாபம்” என்ற பொருண்மையில் அமைகின்றன. இக்கதைகள் எல்லாம் நிச்சயமாக, பிறர் வண்ணார் குறித்து வழங்கிய கதைகள் என்று சொல்லலாம். இவை அமுக்குப்பேய்கள் என்று ஆ.சிவசுப்பிரமணியன் கூறுகின்றார்.

இந்நூலில் இல்லாத ரிதொரு கதை இங்கு நினைவுகூரத்தக்கது. ஒரு வெள்ளாளக் கவுண்டர் பையனும் ஒரு வண்ணார் பெண்ணும் காதலிக்கின்றனர். அவர்கள் ஒருநாள் திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழ ஊரைவிட்டு செல்கின்றனர். அவர்களைக் கொங்கு வெள்ளாளர் துரத்திக்கொண்டு செல்கின்றனர். அக்காதலர்கள் கரைபுரண்டோடிய பவானி ஆற்றை நீந்திக் கடந்து, வேட்டுவ கவுண்டர்களிடம் திருமணம் செய்து வைக்கக் கோருகின்றனர். அவசரத்திற்கு, வில்லில் இருந்த நாணை அறுத்து, தாலியாகக் கட்டச் சொல்லி வேட்டுவர்கள் திருமணம் செய்து வைக்கின்றனர். இவர்கள் வழிவந்தவர்களே நரம்புக்கட்டி கவுண்டர் அல்லது வடகரை வெள்ளாளர் ஆவர். இது கொங்கு வெள்ளாளரில் ஒரு பிரிவினர் பற்றிய தோற்றக் கதைகளில் ஒன்று ஆகும். வண்ணாரோடு தொடர்புடையது ஆகையால் இக்கதையும் கவனிக்கத்தக்கது.

அண்ணாமலையாரும் வண்ணாரும் என்ற கட்டுரை திருவண்ணாமலையில் வழங்கும் வாய்மொழிக் கதைகள், கோயிலில் நடைபெறும் சடங்குகள் வாயிலாகவும் வண்ணார் சமூகக் கோயிலைச் சைவ சமயம் ஆக்கிர மித்துக் கொண்ட வரலாற்றைக் காட்டுகிறது என ஆ.சிவசுப்பிரமணியன் கூறுகிறார்.

கதைப்பாடல்களில் வண்ணார் என்ற கட்டுரை தடிவீரசாமி கதை, சின்னணைஞ்சான் கதை, புலமாடன் கதை ஆகிய மூன்று கதைப்பாடல்களை ஆராய் கின்றது. இம்மூன்று கதைப்பாடல்களிலும் சாதி மீறிக் காதலித்தமைக்காகக் கொல்லப்பட்ட வண்ணார் இளைஞனின் கதை, ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவனின் பாலியல் வேட்கைக்குப் பலியான வண்ணார் பெண்ணின் கதை, சிறு குற்றத்திற்காகக் கொல்லப்பட்ட வண்ணார் அண்ணன்-தங்கை கதை உள்ளதையும் அவற்றின் சமூகப் பின்புலத்தையும் ஆ.சிவசுப்பிரமணியன் எடுத்துக்காட்டி யுள்ளார். இதைப் போலவே தெய்வமாக்கப்பட்ட வண்ணார்கள் என்ற கட்டுரையிலும் சாதி மீறிக் காதலித்தமைக்காகக் கொல்லப்பட்ட மூன்று வண்ணார் இளைஞர்கள் தெய்வம் ஆக்கப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டியுள்ளார்.

வண்ணார் தொழில்நுட்பம்

வண்ணார் தொழில்நுட்பம் கட்டுரையில் குறி போடுதல், அழுக்கெடுத்தல், துவைத்தல், உவர் முக்குதல், வெள்ளாவி வைத்தல், பசை போடல் ஆகியவை குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் ஆராய்ந்துள்ளார். மேலும் வண்ணார்கள் துணிகளுக்கு வண்ணமேற்றும் கலைஞர் களாகவும், தையல் கலைஞர்களாகவும் விளங்கியுள்ளனர். இத்தொழில்நுட்பங்கள் அனைத்தும் வேதிவினை மாற்றங்களுடன் நெருக்கமான தொடர்புடையன. நமது சொந்த மரபின் அறிவியல் அறிவைக் காட்ட வல்லன. தமிழ் அறிவியல் வரலாற்றை உருவாக்குவதற்குக் குடித் தொழில்நுட்பங்கள் ஆய்வு அவசியம். அத்துடன் இத்தொழில்நுட்பங்கள் குறித்து மேலும் ஆராய்வதன் மூலம் சுற்றுச்சூழலுக்குக் கேடற்ற வகையில் சில வெளுத்தல், வண்ணமிடல் நுட்பங்களை மீட்டெடுக்க முடியும் எனவும் தோன்றுகிறது.

குறிப்பாக, குறிபோடுதல் குறித்த ஆ.சிவசுப்பிர மணியன் ஆய்வு மிகுந்த முக்கியத்துவம் உடையது. குறி போடுதல் கோடுகளையும் புள்ளிகளையும் கொண்டு, துணிகள் இன்னார் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று அடையாளம் காணும் முறை ஆகும். ஒலிக்குறியீடு களான எழுத்துக் கண்டறிவதற்கு முந்தைய கால பழமை யுடையது இந்த முறை. சங்க காலத்தில் கோடிட்டு எண்ணும் முறை இருந்ததை ஆ.சிவசுப்பிரமணியன் எடுத்துக்காட்டியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் அகழ்வாய்வின் மூலம் கண்டெடுக்கப்பட்ட பானை களின் மீது உள்ள குறியீடுகளும் இதுபோன்ற குறி போடுதல் நுட்பமா என்பது ஆராய்வதற்கு உரியது. ஏனென்றால், பண்டம் நிரம்பிய பானைகளை ஓரிடத்தில் வைக்கும்போது உரிமையாளரை அடை யாளம் காணவே இந்தக் கீறல்கள் இடப்பட்டு இருக்கலாம்.

இதே போன்று, உரிமையாளரை அடையாளம் காணக் குறிபோடும் முறை, சில வகையான மண்டிகளிலும்கூட உண்டு. இனவரைவியல் தரவு தொல்பொருள்களை அர்த்தப்படுத்திக் கொள்ள அவசியமானது என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்த இனவரைவியல் தகவலும் தொல்தமிழக வரலாற்றை விளக்க உதவலாம்.

முன்னோடியான முன்மாதிரி முயற்சி

மேலே எடுத்துக்காட்டியதுபோல, “தமிழக வண்ணார்: வரலாறும் வழக்காறும்” என்ற இந்நூல் இலக்கியம், கல்வெட்டு, பழமொழி, தோற்றக் கதை, பழமரபுக் கதை, தொன்மம் முதலான வழக்காறுகள் ஆகியவற்றைக் கொண்டு, ஒருதலை சார்பற்று, முன் ஊகங்களைக் கை கொள்ளாது வண்ணார் வரலாற்றை ஆராய்ந்துள்ளது. சான்றுகளைப் பயன்படுத்தும் முறையிலும், பொருள் கொள்ளும் முறையிலும் தருக்கவியல் பாங்கு உள்ளங் கொள்ளத் தக்கது.

வண்ணார் சாதி வரலாற்றைப் புகழ்பூத்த வரலாறாகவோ அல்லது நிரந்தர சாதிப் படிநிலை வரிசை பற்றிய முன்கற்பிதங்கள் அடிப்படை யிலான வரலாறாகவோ படைக்காமல், சான்றுகள் அடிப்படையிலான அசைவியக்கமுடைய வரலாறாக ஆ.சிவசுப்பிரமணியன் படைத்துள்ளார். இந்த முறை பிற சாதிகள் வரலாற்றையும் ஆராய ஒரு முன்மாதிரியாக உள்ளது.

 சாதிகள் வரலாறு சமூக வரலாற்றின் ஒரு பகுதியாக மட்டுமல்லாமல், அறிவியல், தொழில்நுட்ப, பண்பாட்டு வரலாறுகளின் பகுதியாகவும் உள்ளதை இந்நூல் திறம்பட எடுத்துக்காட்டுகிறது. ஆகவே சாதிகள் வரலாற்றைப் புறக்கணித்தல், சமகால சாதி உணர்நிலை கொண்டு வரலாறு வரைதல் ஆகிய இரண்டுமே தவறான நிலைப்பாடுகள். இவை சமூக மாற்றப் போராட்டங்களில் தாக்கம் செலுத்தும் அளவுக்கு வலு மிகுந்தவை.

தமிழக வண்ணார் வரலாறும் வழக்காறுகளும்

ஆ.சிவசுப்பிரமணியன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

ரூ.135/-