vavusiபல்வேறு ஆட்சியாளர்கள், பல்வேறு மொழி, பல்வேறு சமயங்கள், பல்வேறு பண்பாடுகள் என்று இருந்த நிலப்பகுதியை, பிரித்தானியர்கள் அவர்களது அதிகாரத்தின் கீழ், படிப்படியாக ஒருங்கிணைத்து, இந்தியா என்ற நாடு உருவாக வழி கண்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியா என்ற அடையாளம் முழுமை பெறுகிறது.

இவ்வாறு கட்டமைக்கப்பட்ட இந்த நிலப்பகுதியில் வர்க்க முரண்கள் மட்டுமின்றி சாதிய முரண்கள் வலுவாக செயல்படத் தொடங்கின. முடியரசு காலங்களில் தொழிற்பட்ட சாதி முரண்களின் தன்மை பிரித்தானியர் காலங்களில் மேலும் கூர்மைப்பட்டது.

நவீன சமூகத்தில் உருவான கல்வியறிவு, பிரித்தானியர் செய்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகியவை சாதியச் செயல்பாடுகளை நவீனத்துவமாக்கியது. இக்கொடுமையைக் கண்டு சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிபெறும் சூழல் உருவானது. இதன் முன்னோடியாக ஜோதிராவ் கோவிந்தராவ் புலே (1827-1890) செயல்பட்டார்.

பார்ப்பனியம் எனும் சாதிய வடிவம் செயல்படும் பல்வேறு கூறுகளை புலே அம்பலப்படுத்தினார். தமிழ்ச் சூழலிலும் இக்காலத்தில் வடலூர் சி. இராமலிங்கன் எனும் வள்ளலார் (1823-1874) மனிதாபிமானக் கண்ணோட்டம் சார்ந்து, தமது இறுதிக் காலங்களில் சாதி குறித்த விமரிசனங்களை முன் வைத்தார்.

அத்திப்பாக்கம் வெங்கடாசலனார் (1800-1897) எனும் பெரியவர் ‘இந்துமத ஆசார ஆபாச தரிசினி’ எனும் நூலை 1882 இல் எழுதினார். இந்து மதம் குறித்த முதல் விமரிசன நூலாக இதனைக் கருதமுடியும். 1878 முதல் 1888 வரை செயல்பட்ட சென்னை இலௌகிக சங்கத்தினர் சமயம், சாதி குறித்த விமரிசனங்களை முன் வைத்தனர். இந்த மரபில் அயோத்திதாசரும் (1845-1914) செயல்பட்டார்.

மேற்குறித்த மனிதர்கள் முன்னெடுத்த கருத்துநிலை சார்ந்து ‘சமூகநீதி’ எனும் கருத்தாக்கம் உருப்பெறத் தொடங்கியது. நிலப்பரப்பில் வாழும் பல்வேறு மக்களும் பல கூறுகளிலும் முரணின்றி வாழ வேண்டும்.அவ்வாறு இல்லையெனில் அங்கு ‘சமூகநீதி’யின் தேவை வருகிறது.

முரண்கள் பொருளாதாரரீதியாக இருந்தால் அங்கு சமத்துவம் தேவைப்படுகிறது. இதனை பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான மார்க்சியத் தத்துவம் உலகிற்கு வழங்கியது. சாதிய சமூகமாகக் கட்டமைக்கப் பட்டிருக்கும் இந்திய நிலப்பகுதியில், சாதிய முரண்களை ஒழித்து எல்லோரும் சமம் எனும் சமூக நீதியை உருவாக்கும் தேவையும் முன்னிலைப்பட்டது.

இதனைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்குறித்தப் பெரியவர்கள் முன்னெடுத்தனர். இந்த சமூக நீதி என்பது இருபதாம் நூற்றாண்டில் புதிய அரசியல் சக்தியாக வடிவம் பெற்றது.

இதில் இரண்டு மனிதர்கள், முதன்மையாக, தமது வாழ்வை சமூக நீதி உருவாக்கத்திற்காக அர்ப்பணித்தனர். ஒருவர் பீம்ராவ் அம்பேத்கர் (1891-1956). இன்னொருவர் ஈ.வெ.ராமசாமி எனும் பெரியார் (1879-1973). இவ்விருவரும் இன்றைய சூழலில் பெரிதும் பேசுபொருளாகியுள்ளனர்.

தமிழ்ச் சமூகத்தின் இருபதாம் நூற்றாண்டு அரசியல் களம் என்பது சமூக நீதியை முதன்மைப்படுத்தும் நீதிக்கட்சி (1916), தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (1917), சென்னை மாகாண சங்கம் (1917), சுயமரியாதை இயக்கம் (1925), திராவிடர் கழகம் (1944), திராவிட முன்னேற்றக் கழகம் (1949) ஆகியவை உருப்பெற்று செயல்படத் தொடங்கின.

இதனை குறியீட்டு வடிவில் ‘திராவிடர் இயக்கம்’ என்று அழைக்கிறோம். இதில் சென்னை மாகாண சங்கம் அதன் அமைப்பு அடிப்படையில்  இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தது.

காங்கிரஸ் அமைப்பு என்பது சமூக நீதியை முதன்மைப்படுத்தும் ‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ என்பதை ஏற்றுக்கொண்ட அமைப்பு இல்லை. ஆனால், அதற்குள் உருவான சென்னை மாகாண சங்கம் வகுப்புரிமையை முன்னெடுப்பதை, ‘பிராமணர் அல்லாதார் நலன் சார்ந்த அமைப்பு’ என்று அறிவித்துக் கொண்டது.

வகுப்புரிமையை மறுக்கும் இயக்கத்திற்குள் வகுப்புரிமை கோரும் அமைப்பாக உருவானது. பிராமணர் அல்லாதார் அமைப்பாகக் கருதப்பட்ட நீதிக்கட்சிக்கு எதிரான அமைப்பாகவும் சென்னை மாகாண சங்கம் அடையாளப் படுத்தப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான சமூகநீதி இயக்கம், அதன் நடைமுறையில் வகுப்புவாரி உரிமையை முன்னெடுத்தது. இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ச் சூழலில் உருவான அரசியல் இயக்கங்கள், வகுப்புரிமை எனும் அரசியல் செயல்பாட்டை மீறிச்செயல்படும் வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்த சூழல் உருப்பெற்று விட்டது.

இதற்கு முதன்மையான காரணம், பார்ப்பனியம் நவீன சமூக இயங்கு திசையில் அனைத்து அதிகாரங்களையும் பண்பாட்டு வடிவில் முன்னெடுக்கும் சூழல் உருப்பெற்றிருந்தது. குறிப்பாக, அரசு சார்ந்த அலுவலக நிர்வாகங்கள், வழக்குமன்றங்கள் ஆகியவற்றில் பார்ப்பனர்கள் 98 விழுக்காடு இடம்பெற்றனர்.

இத்தன்மையை இடதுசாரி கருத்துநிலையாளர்கள் தங்கள் பேசுபொருளாக எடுக்கவில்லை. காங்கிரஸ் அமைப்பிலும் பார்ப்பனியம் அதிகார சக்தியாக செயல்பட்டது. இந்தப் பின்புலத்தில், காங்கிரஸ் தலைவர்கள் சிலர், அதற்குள் பார்ப்பனர் அல்லாதார் அதிகாரத்திற்கான ஒரு வெளியை உருவாக்க முயன்றனர்.

இந்தப் பின்புலத்தில் உருவான சென்னை மாகாண சங்கம் குறித்த திரு.வி.கல்யாண சுந்தர முதலியார் (1883-1953) அவர்களின் சொற்களை இங்கு நினைவுபடுத்திக்கொள்வோம்.

“காங்கிரசின் நோக்கத்துக்கு முரண்படாத வகையில் தென்னாட்டு பிராமணரல்லாதார் நலனை நாடுவதென்று உறுதி செய்யப்பட்டது. திவான்பகதூர் கேசவப்பிள்ளை தலைவராகவும் லாட் கோவிந்ததாஸ், சல்லா குருசாமி செட்டியார், ஈ.வெ. இராமசாமி நாயக்கர், நாகை பக்கிரிசாமிப்பிள்ளை, ஸ்ரீல்லாக் ஜோஸப் முதலியோர் உதவித் தலைவராகவும் தெரிந்தெடுக்கப்பட்டனர்.

அமைச்சராக தி.வி. கோபாலசாமி முதலியாரும், குருசாமிநாயுடும், டாக்டர் வரதராஜலு நாயுடுவும், சர்க்கரைச் செட்டியாரும், யானும் தெரிந்தெடுக்கப் பட்டோம். காரியங்கள் பெரிதும் தி.வி. கோபாலசாமி முதலியாரால் கவனிக்கப்பட்டு வந்தன. சென்னை மாகாண சங்கக் கொள்கை தென்னாடு முழுவதும் பரவ வரதராஜலுவால் பிரச்சாரஞ் செய்யப்பட்டது.

சென்னை மாகாண சங்கத் தோற்றம், ‘ஜஸ்டிஸ்’ கட்சிக்கு இடியாயிற்று.அக்கட்சி கொதித்தது; எரிந்தது. அக்கட்சிப் பத்திரிகைகள் சென்னை மாகாண சங்கத்தைக் கண்டபடி தூற்றத் தொடங்கின. ‘ஜஸ்டிஸ்’ கட்சியார் சென்னை மாகாண சங்கம், பிராமணர் ஏவுதலால், அவர்தம் அடிமைகளால் காணப்பட்டதென்று முழங்கினர். (291:2009)

இதன்மூலம் காங்கிரஸைச் சேர்ந்த பலர் பார்ப்பனர் அல்லாதார் நலத்திற்கு அமைப்பு ரீதியாகச் செயல்படுவது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த அழுத்தம், நீதிக்கட்சியால் இவர்களுக்குள் ஏற்பட்டது. இதன் மூலம் தமிழ்ச் சூழலில் ‘பார்ப்பனர் அல்லாதார்’ எனும் கருத்து நிலை வலுப்பெற்றிருப்பதை அறிய முடிகிறது.

தமிழ்ச் சமூகத்தின் இயங்குதளம் சார்ந்த பார்வையில், இவ்வகையான அரசியல் கருத்துநிலை உருப்பெறுவது, ‘சமூகநீதி’ சார்ந்த கருத்தாக்கத்தின் வடிவமாக இதனைக் கருத முடியும். புலே, அயோத்திதாசர், சீர்திருத்த சைவர்கள், திராவிடக் கருத்துநிலை என்ற தொடர் நிகழ்வாக இதனைப் புரிந்து கொள்ள முடியும். இதனைத் தமிழ்ச் சூழலில் பெரும் சக்தியாக பெரியார் கட்டமைத்தார்.

இந்தப் பின்புலத்தில் வ.உ. சிதம்பரம் பிள்ளை, (1872-1936) எனும் அரசியல் செயற்பாட்டாளரைப் புரிந்துகொள்ள வேண்டும். காங்கிரஸ் அமைப்பிலிருந்து வெளியேறி, மீண்டும் காங்கிரஸ் அமைப்பில் செயல்பட விரும்புவதாக அவர் பதிவு செய்கிறார்.

“கல்கத்தா நகரத்தில் நடந்த விசேஷ காங்கிரஸ் மகாநாட்டில் என் தேசியக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் மாறான கோட்பாடுகள் அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உடனே யான் சென்னைக்கு வந்து, திலகர் சுயாட்சி சங்கத்தின் விசேஷ கூட்டம், ஒன்றைக்கூட்டி மேற்கண்ட விசேஷக் காங்கிரஸ் மகாநாட்டில் தீர்மானங்களை எல்லாம் கண்டித்து தீர்மானங்களை நிறைவேற்றப் பத்திரிகைகளில் பிரசுரித்துவிட்டு யான் காங்கிரஸினின்று விலகி இதுகாறும் ஒடுங்கி இருந்தேன்.

என் கோட்பாடுகளுக்கு மாறான நீதி ஸ்தல பஹிஸ்காரம், கலாசாலை பஹிஸ்காரம், சட்டசபை பஹிஸ்காரம் முதலிய பஹிஸ்காரங்களெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நீங்கிக் காங்கிரஸ் மகாசபை, தனது கல்கத்தா விசேஷ மகாநாட்டிற்கு முன்னிருந்த நிலைமைக்கு வந்துவிட்டபடியால் யான் திரும்பிக் காங்கிரஸில் புகலாம் என்று நினைத்தேன்.

என்னைப் போல காங்கிரஸை விட்டு விலகி நின்ற எனது பிராமணரல்லாத சகோதரர்களில் உண்மையான தேசாபிமானிகள் சிலர் கோவை நகரில் ஒரு விசேஷ மகாநாடு கூட்டிப் பிராமணரல்லாதார்களுடைய தேச சேவைக்குக் காங்கிரஸ் மகாசபையைக் கைப்பற்றி ஒரு கருவியாக உபயோகித்தல் இன்றியமையாதென்று தீர்மானித்தார்கள்.

எனக்கும் என் தேசத்திற்கும் நல்ல காலம் பிறந்துவிட்டதென்று கருதினேன். சென்ற பல ஆண்டுகளாக ஒடுக்கியிருந்த யான் எவ்வாறு வெளிவருவதென்று சிந்தித்துக் கனன்று கொண்டிருந்தேன்.” (191-192: 2002).

வ.உ.சி இதில் கல்கத்தா காங்கிரஸ் என்று குறிப்பிடுவது 1917இல் அன்னிபெசண்ட் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் ஆகும். அன்னிபெசண்ட் குறித்து கருத்து நிலையில் முரண்பட்டிருந்த வ.உ.சி, அந்த மாநாட்டு நிகழ்வுகள் அவரை அந்த அமைப்பிலிருந்து செயல்படுவதைத் தவிர்க்க ஏதுவாயிற்று.

1917இல் தொடங்கி 1926 வரை இவ்வகையான மனநிலையில் இருந்தார். இந்தச் சூழலில் 1917இல் உருவாக்கப்பட்ட சென்னை மாகாண சங்கம் சேர்ந்த காங்கிரஸ்காரர்களால் கோவை மாநாடு 1927இல் கூட்டப்பட்டது. அதில் வ.உ.சி பங்கேற்றார்.

இதற்கு முன் 1919 இல் ஈரோட்டில் சென்னை மாகாண சங்கத்தின் இரண்டாம் ஆண்டு மாநாடு நடைபெற்றது. இதில் வ.உ.சி. பங்கேற்றார். 1920இல் திருநெல்வேலியில் நடைபெற்ற இருபத்தாறாவது சென்னை மாநில அரசியல் மாநாட்டில் பங்கேற்றார். அதில் அரசு வேலை வாய்ப்புகளில் பார்ப்பனர் அல்லாதாருக்கு உரிய வாய்ப்பு வழங்குதல் தொடர்பான தீர்மானத்தை வ.உ.சி. கொண்டு வந்தார். (இந்து ஜூன் 25, 1920-224; 1995).

“இந்த மாநிலத்தில் தற்பொழுதைய நிலைமையைக் கவனத்தில் கொண்டு, அரசு பொது வேலைகளிலும், கௌரவ உத்தியோகங்களிலும் பிராமணரல்லாத சமூகங்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்” (224-225: 1995) என்பது வ.உ.சி. கொண்டு வந்த தீர்மானம் ஆகும்.

1927 ஜூலையில் கோவையில் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டில் வ.உ.சி ஆங்கிலத்தில் ஆற்றிய உரை ‘இந்தியன் காலாண்டு ரிஜிட்டர் - ஜூலை-டிசம்பர் இதழில் வெளிவந்துள்ளது. அதன் மொழியாக்கம் பின்வருமாறு அமைகிறது (225:1995).

இதில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை முழுமையாக வ.உ.சி. ஆதரிப்பதை அறியமுடிகிறது. “காங்கிரஸ் அமைப்பாளர்கள், பிராமணரல்லாதவர்கள். ஆனால் இப்பொழுது அதிகாரம் பிராமணர்களிடம் உள்ளது.இப்பொழுது எடுக்கப்படும் நடவடிக்கை அந்த அதிகாரத்தை மீட்டுக் கொள்வதற்காகத்தான். சுய ஆட்சிக்காகப் பாடுபடும் பிராமணரல்லாத சிறந்த தேசபக்தர்கள் காங்கிரஸில் உள்ளனர்.

இந்தச் சிறந்த பிராமணரல்லாதவர்களுடன், நீதிக் கட்சியின் பிராமணரல்லாதவர்களும் இணைந்து சுய ஆட்சிக்கு பாடுபட்டால், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் களத்தில் இருந்து காங்கிரஸ் விலகி நிற்காது. இந்தியாவில் பல்வேறு வகுப்புகளும் சமூகங்களும் இருக்கின்ற வரையில் அவர்கள் அனைவரும் காங்கிரசில் கண்டிப்பாக சேர வேண்டும்” (225:1995).

மேற்குறித்த வ.உ.சியின் கருத்துநிலைப் பின்புலத்தில் சேலத்தில் 1927 இல் நடைபெற்ற காங்கிரஸ் அரசியல் மாநாட்டில் வ.உ.சி. நிகழ்த்திய தலைமை உரை அமைந்தது. அந்த உரையே 5.11.1927 இல் ‘எனது பெருஞ்சொல்’ எனும் தலைப்பில் சிறுவெளியீடாக வந்தது. இதில் வ.உ.சி.யின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எனும் கருத்துநிலை முழுமையாகப் பதிவாகியுள்ளது.

1917இல் தொடங்கி, தொடர்ச்சியாக வ.உ.சி. பார்ப்பனர் அல்லாதாருக்கான சமூக நீதியான வகுப்புவாரி உரிமையை முன்னெடுத்து வந்துள்ளதை மேற்குறித்த பல்வேறு செய்திகளின் அடிப்படையில் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் பின்புலத்தில் அவருக்கு பெரியாரோடு கருத்து நிலையில் உடன்பாடு உருப்பெற்றதை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.

சமூக நீதிக்காக காங்கிரஸ் மாநாடுகளில் தொடர்ச்சியாக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானங்களைக் கொண்டுவந்த காங்கிரஸ்காரரான பெரியார், அது அங்கு ஏற்றுக் கொள்ளாத நிலையில் 1925இல் சுயமரியாதை இயக்கத்தில் உருவாக்குகிறார். இதே காலங்களில் இவ்வகையான கருத்துநிலைக்கு உடன்பாடு உடைய காங்கிரஸ்காரராக வ.உ.சி செயல்பட்டார் என்பதை அவரது சொற்கள் உறுதிப்படுத்துகின்றன. பெரியார் வெளியேறினார்.

வ.உ.சி. காங்கிரஸ் அமைப்பிற்குள் இருந்தே அதைப் பேசினார். இவ்வகையான கருத்துநிலை, தமிழ்ச் சூழலில் உருவான ‘சமூகநீதி’ அரசியல் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதில் பெரியாரும் வ.உ.சியும் உடன்பட்ட கருத்து நிலையாளர்களாக வெவ்வேறு அமைப்புகள் சார்ந்து செயல்பட்டனர். வ.உ.சி.யின் இந்த வகையான அணுகுமுறை, தமிழ்ச் சமூகப் பொதுவெளியில் பரவலாக அறியப்படவில்லை என்றே கருத முடியும்.

வ.உ.சியின் தொடக்ககால அரசியல் கருத்துநிலை வெளிப்பாடும், அவரது பிற்கால சமூகநீதி சார்ந்த கருத்து நிலைகளில் வெளிப்படும் கருத்து நிலைக்கு உடன்பட்டதாகவே அமைகிறது. இதனை அவரது ‘சுதேசாபிமானம்’ கட்டுரை மூலம் அறிய முடிகிறது. 1906 இல் ‘விவேக பாநு’ எனும் இதழில் அவர் எழுதிய கட்டுரை இது.

“சுதேசத்தார் ஒன்று சேர்வதற்கும் ஒற்றுமையாக இருப்பதற்கும் முக்கிய தடைகள் ஜாதியபிமானம் மதாபிமானங்களே, உலகத்தில் தாழ்ந்த நிலைமையடைந்த ஒவ்வொரு தேசத்தின் சரித்திரத்தையும் கவனிப்போமாயின் சுதேசத்தாருக்குள் ஜாதி பேதம் மதபேதம் ஏற்பட்டுச் சுதேச ஒற்றுமைகளையும் பேதப்படுத்தி சுதேச நிலைமையும் பேதப்படுத்தினதாகத் தெரியவரும்.

சுதேசத்தாரெல்லோருக்கும் பொதுவாயத்தோர் நன்மைகளைப் பயக்கும் செயல்களைச் செய்ய வேண்டுங்கால் சுதேசத்தார் ஒவ்வொருவரும் அவரவர்க்குள் நிகழா நிற்கும் சொந்த வேற்றுமைகளைப் பாராட்டல் கூடாது.” (44-45: 1989).

இவ்வகையில் வ.உ.சி. எனும் ஆளுமை சமூக முரண்கள் குறித்தப் பார்வையுடையவராகவும் அதனைப் பற்றிய புரிதலில் அவருக்கேயுரிய தனித்த பார்வையுடையவராகவும் வாழ்ந்தார் என்பதைப் புரிந்து கொள்ள இயலுகிறது. இதன் ஒரு பரிமாணமாக 1917இல் தொடங்கி, அவர் முன்னெடுத்த பார்ப்பனர் அல்லாதார் நலன் சார்ந்த சமூக நீதி அரசியல் ஆகும்.

இதனை அவரது இறுதிக்காலம் வரை, தமது கருத்து நிலையாகக் கொண்டிருந்தார் என்பதை ‘குடிஅரசு’ இதழில் வெளிவந்துள்ள ‘தமிழர் முன்னேற வழி’ (17.5.1936) என்ற அவரது விண்ணப்பம் ஒன்றின் செய்திகள் உறுதிப் படுத்துகின்றன. 1936 நவம்பர் 18இல் மறைந்த வ.உ.சி. அதே ஆண்டு மே மாதத்தில் செய்துள்ள பதிவு இது. அது பின்வருமாறு அமைகிறது.

“திருச்சியில் 3.5.36இல் கூடிய பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுக்குத் தூத்துக்குடியிலிருக்கும் தேசாபிமானி வ.உ.சிதம்பரம் பிள்ளை செய்த விண்ணப்பம்... பார்ப்பனரல்லாத சகோதரர்களே! ஜாதி வேற்றுமை, மதவேற்றுமை, கட்சி வேற்றுமை, கோட்பாட்டு வேற்றுமை முதலியவற்றை எல்லாம் விடுத்து, நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பார்ப்பனரல்லாதார்கள் சமூகத்தை முன்னிலைக்கும் நன்னிலைக்கும் கொண்டு வருவீர்களாக” (175: 2006).

‘எனது பெருஞ்சொல்’ எனும் வ.உ.சியின் சொற்பொழிவை மேற்குறித்த வரலாற்றுப் பின்புலத்தில் புரிந்துகொள்ள வேண்டுகிறேன். வ.உ.சி. காங்கிரஸ் இயக்கத்தினரால் புறக்கணிக்கப்பட்டார் என்பது அனைவரும் ஒப்புக் கொள்ளும் செய்தி. இதற்கான காரணம் வ.உ.சி. கொண்டிருந்த ‘சமூக நீதி’ குறித்த கருத்துநிலைதான் என்பதை ம.பொ.சிவஞானம் (1906-1995) அவர்களின் பதிவைக் கீழே கொடுக்கிறேன்.

“பிராமணர் - பிராமணரல்லாதார் என்ற வகுப்புவாதப் பூசல் விடுதலைப் பாசறையையே பிளவுபடுத்தி விடுமோ என்ற அச்சம் அந்நாளில் வ.உ.சியைப் போன்ற பிராமணரல்லாத தேசபக்தர்களுக்கு இருந்தது.

அதனால் நீதிக்கட்சி கோரிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைத் தவிர்க்க முடியாத ஒன்றாகக் கருதி வ.உ.சி. அதனை ஆதரித்தார். இதனாற்றான் அன்று தமிழ்நாட்டு காங்கிரசில் முன்னணியில் இருந்த பெருந்தலைவர்கள் வ.உ.சியை வகுப்புவாதியாகக் கருதும் நிலைமை ஏற்பட்டது. தேசத்துரோகி என்று கூட வருணித்துப் பிரச்சாரம் செய்தனர்” (166: 2006).

வ.உ.சியின் ‘எனது பெருஞ்சொல்’ எனும் சொற்பொழிவை அச்சிட்டுப் பரப்புரை செய்யும் நண்பர்களைப் பெரிதும் வாழ்த்தி வரவேற்கிறேன். அந்த சொற்பொழிவை, தமிழ்ச் சூழலில் உருவான ‘சமூக நீதி’ எனும் கருத்துநிலை சார்ந்து புரிந்து கொள்ள எனது இந்தப் பதிவு உதவும் என்று நம்புகிறேன்.

இந்தப் பதிவைச் செய்ய வாய்ப்பளித்த நண்பர்களுக்கு எனது நன்றி. இந்தப் பதிவை எழுதுவதற்கு எனது பெயரை பரிந்துரை செய்த, வணக்கத்திற்குரிய தோழர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களுக்கும் நன்றியுடையேன்.

சான்றாதார நூல்கள்

1. அரசு. மா.ரா. (தொகுப்பு, (1989) வ.உ.சி. கட்டுரைகள் சென்னை.

2. சம்பத் ஆர். என் மணி. பெ.சு. (1995), நவ பாரதச் சிற்பிகள் - வ.உ. சிதம்பரம் பிள்ளை மொழியாக்கம் பெ.சு.மணி, பப்ளிகேஷன் டிவிஷன், செய்தி ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய அரசு.

3. ஜோதிராவ் புலே (1999). நாகரிகம் படைத்த பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பார்ப்பனியம் என்னும் திரைமறைவில் நிலவும் அடிமைத் தனம், தமிழில்: சிங்கராயர் சவுத் விஷன், சென்னை - 2

4. அரசு, வீ. (தொகுப்பு) (2002), வ.உசி. நூல் திரட்டு (பதின்மூன்று நூல்கள்), புதுமைப்பித்தன் பதிப்பகம், சென்னை -83.

5. கல்யாண சுந்தர முதலியார், திரு.வி. (2003), திரு.வி.க.வாழ்க்கைக் குறிப்புகள் (திரு.வி.க.வின் தன் வரலாறு), பதிப்பு: அ. நாகலிங்கம், பூம்புகார் பதிப்பகம் சென்னை - 108.

6. அருணன் (2006) வ.உ.சி கடைசி காலத்தில் தடம் மாறினாரா? வசந்தம் வெளியீட்டகம், மதுரை.

7. அரசு.வீ. (பதிப்பு) (2013) அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு, இந்துமதம் - ஆதிக்க சாதிகள் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகத் தொழிற்பட்ட வரலாறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.சென்னை-98.

- வீ.அரசு