தமிழ்க் கல்வி வரலாற்றில் அச்சு நூல்களின் உருவாக்கம் அறிவுத்தேடலில் ஒரு புதிய பரி மாணத்தைத் தந்தது. ஏறத்தாழ கி.பி. 1800 வரைக்கும் ஏடுகளைச் சார்ந்தே தமிழ்க்கல்வி அமைந்திருந்தது. பழந்தமிழறிஞர்கள் ஏடுகளின் வாயிலாகவே தம்புலமையை வளர்த்துக் கொண்டு அடுத்த தலைமுறைக்கு அதனைப் பதிவு செய்தனர்.

படியெடுக்கும் ஆர்வம்

ஒரு நூலினை ஏட்டில் படியெடுப்போர் தம் பெயரைக் குறிப்பது மரபு. சங்க இலக்கியத்தை ஏட்டில் எழுதிப் படியெடுத்த ஒருவர் தன்னைப் பற்றிக் கூறும் போது இவ்வாறு எழுதுவார். ‘சங்கத் தமிழை அனுசரிக்கும் மகாவித்துவான்களுக்குத் தொண்டு செய்யும் நெல்லைநாயகம் எழுத்து’, தமிழ்நாட்டின் தென்பகுதியில் கிடைத்த ஏடு ஒன்றின் இறுதியேட்டில் காணப்படுவது. இது படி யெடுப்பதில் இருந்த ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் காட்டும். கல்கத்தா தேசிய நூலகத்தில் இவ்வேடு உள்ளது.

ஏடுகளில் இருந்த அரிய தமிழ்ச் செல்வங் களை அறிஞர்கள் அச்சுவடிவில் நூலுருவாக்கம் செய்யாமல் இருந்திருந்தால் எல்லோருக்கும் கல்வி பரவலாகச் சென்று சேர்ந்திருக்காது.

சுவடிகளினின்றும் அவற்றைப் பதிப்பிப்பதற்குப் புலமையும் பொறுமையும் கடின உழைப்பும் இன்றி யமையாதன. முன்னையோர் இப் பண்புநலம் வாய்க்கப்பெற்றவர்களாய் அமைந்து அரிய நூல் களை அடுத்த தலைமுறைக்கு வழங்கி அரிய தொண்டாற்றினர்.

அச்சுச்சூழல்

அச்சுருவாக்கச் சூழலை உருவாக்கித் தந்த பெருமக்களாய் அயல்நாட்டுப் பாதிரிமார்களும் அறிஞர்களும் விளங்குகின்றனர், முதன் முதலில் இந்திய நாட்டில் போர்த்துக்கீசியப் பாதிரிமார்கள் அச்சியந்திரங்களை நிறுவி நூல்களை வெளி யிட்டனர். 1556ஆம் ஆண்டில் கோவாவில் அச்சியந்திரம் நிறுவப் பெற்றது. 1712இல் சீகன் பால்கு அச்சகம் தொடங்கினார். அக்காலத்தில் காகிதம் கிடைப்பது அரிதாக இருந்தமையால் காகித ஆலையை நிறுவினார். காகிதச் சிக்கனத்தை முன்னிட்டுத் தாமே சிறிய அச்சு எழுத்துக்களையும் உருவாக்கினார்.

சீகன்பால்கு

சீகன்பால்கு அவர்களால்தான் முதன்முதலில் தமிழில் அச்சுநூல்கள் தமிழ் மக்களிடையே புழக்கத் திற்கு வந்தன. சீகன்பால்கு பைபிள் நூலைப் போர்த்துக்கீசிய மொழியிலும் தமிழிலும் மொழி பெயர்த்தார். சிறுசிறுநூல்கள் வடிவில் இவை மக்களுக்கு வழங்கப்பெற்றன. சீசன்பால்கு தமிழ் இலக்கணம் ஒன்றினையும் இயற்றியுள்ளமை குறிப் பிடத்தக்கது. இவர் 1716ஆம் ஆண்டில் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியையும் ஏற்படுத்தினார். சென்னையில் ஐரோப்பியருக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் இரு பள்ளிகளைத் தொடங்கி நடத்தினார். இத்தகைய பணிகளுக்கு அச்சு நூல்கள் மிகவும் தேவையாய் இருந்தன.

வீரமாமுனிவர்

1700ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு வந்த சோசப்பெஸ்கி தமிழ் நூல்கள் பல இயற்றித் தமிழுக்கு வளம் சேர்த்தார். தன்னுடைய பெயரையும் வீரமாமுனிவர் என அழைத்துக் கொண்டார். தமிழ் மொழிக்கு முதன்முதலில் அகராதி ஒன்றையும் தொகுத்தவர் இவர் தாம். தொன்னூல் விளக்கம் இலக்கண நூலையும், தேம்பாவணி என்னும் காப்பியத்தையும் இயற்றினார். இவருடைய கல்வித் தொண்டினைப் பாராட்டி வேலூர் நவாப்பாக விளங்கிய சந்தாசாகிப் நான்கு கிராமங்களையும் இலக்கிய வளர்ச்சிக்கென இவருக்குக் கொடையாக அளித்தமை குறிப்பிடத்தக்கது.

கிறித்துவ அறிவு வளர்ச்சிக் கழகம்

தமிழ்க்கல்வி பரப்பும் பணியில் ‘கிறித்துவ அறிவு வளர்ச்சிக்கழகமும் (Society for promoting Christian knowledge) பெருந்தொண்டாற்றியது. இது 1698இல் தொடங்கப்பெற்றது. சீசன்பால்கு 1719இல் மறைந்தார். அவருக்குப் பின்னர் ச்யூல்ட்ஸ் பாதிரியார் பள்ளிகளை நிறுவிக் கல்வித் தொண் டாற்றினார்.

பேப்ரிசியஸ்

பேப்ரிசியஸ் பாதிரியார் தமிழ் ஜெர்மன் அகராதி தயாரிப்பதற்குப் பெரும் தொண்டு புரிந் தார். இந்த அகராதியைத் தயாரிப்பதற்கு அவருக்குப் பெரும் தொகை செலவாகியது. இவருக்குப் பணம் கொடுத்துதவிய லேவாதேவிக்காரன் வழக்குத் தொடுத்து இவரைச் சிறைக்கு அனுப்பினான். கடன்பட்டும் தமிழ்த்தொண்டாற்றிய பெருந்தகை பேப்ரிஷியஸ் பாதிரியார்.

சீவார்ட்ஸ்

சீவார்ட்ஸ் பாதிரியார் 1750ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு வந்தார். திருச்சியிலும் தஞ்சையிலும் பள்ளிகள் தொடங்கிக் கல்விப் பணியாற்றினார். 1744ஆம் ஆண்டில் ஜார்ஜ் கோட்டையின் கவர் னரின் சார்பில் ஹைதர் அலியிடம் சீவார்ட்ஸ் பாதிரியார் தூது சென்று வெற்றிகண்டார். ஹைதர் அலி பாதிரியாருக்குப் பெரும் பொன்முடிப்பைப் பரிசாகத் தந்தார். இம்முடிப்பை சீவார்ட்ஸ் பாதிரியார் கவர்னரிடம் தந்தபோது கவர்னர் அத்தொகையை அவருக்கே திருப்பித் தந்தார். சீவார்ட்ஸ் இத்தொகையைக் கொண்டு பள்ளி தொடங்க விரும்பினார். கவர்னர் தஞ்சையில் பள்ளி தொடங்க இடத்தையும் அளித்தார். சீவார்ட்ஸ் தொடங்கிய அப்பள்ளி ‘தஞ்சை ஆங்கில தர்ம பள்ளிக்கூடம்’ (The Tanjore English Charity School) என வழங்கப் பெற்றது. ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் (1749-1798) தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு சீவார்ட்ஸ் பாதிரியார் தொண்டாற்றினார்.

சீவார்ட்ஸ் பாதிரியாரும் தஞ்சை அரசரின் அரண்மனையில் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் பிரதிநிதியாக இருந்த ஜான் சல்லிவனும் இணைந்து ஆங்கிலக் கல்வியை விரிவாக்கினர். அவர்கள் தோற்றுவித்த பள்ளிகளில் கணிதம், ஆங்கிலம், கிறித்துவமத போதனைகள் என விரிவான பாடத் திட்டங்கள் இருந்தன. இவற்றுடன் தமிழும், அரபி மொழியும் கற்றுத்தரப்பெற்றன.

டாக்டர் ஆண்ட்ரூ பெல் அவர்களின் கல்வி பயிற்றுமுறை அக்காலத்தில் பெரும்புகழ் பெற்று விளங்கியது. தமிழ்க்கல்வி முறை குருவும் சட்டாம் பிள்ளையும் இணைந்து போதிப்பதாக அமைந்தது. இம்முறை பெரிதும் பாராட்டிப் போற்றப்பட்டது. இதனை ஆங்கிலேயர்கள் பெல்முறை (Bell system) என்றும் சென்னை முறை (Madras System) என்றும் சட்டாம் பிள்ளை முறை (Monitorial System) என்றும் புகழ்ந்தனர். இந்தக் கல்விமுறையை ஆண்ட்ரூபெல் இங்கிலாந்திலும் அறிமுகப்படுத்தி வெற்றி பெறச் செய்தார்.

கோட்டைக் கல்லூரி

அயல்நாட்டறிஞரின் வருகைக்குப் பிறகு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்தின் (1700-1800) கல்வி வளர்ச்சிக்குப் பிறகு தமிழ்க்கல்வி வளர்ச்சி ‘கோட்டைக் கல்லூரி’யின் வாயிலாகத் தொடங்கு கிறது எனலாம். பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் அவர் களால் தொடங்கப்பெற்ற கோட்டைக் கல்லூரி மொழிகளைக் கற்பித்தலை முதன்மையாகக் கொண்டு விளங்கியது.

1812ஆம் ஆண்டு எல்லிசு தலைமையில் தொடங்கப்பெற்ற இக்கல்லூரியில் அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய தமிழறிஞர்கள் பணி யாற்றினர். சிதம்பர பண்டாரம், தாண்டவராய முதலியார், முத்துசாமிபிள்ளை, புதுவை நயனப்ப முதலியார், திருவாசகத்தை முதன் முதலில் பதிப் பித்த கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் முதலானோர் தமிழ்க்கல்விப் பணிகளில் ஈடுபட்டு உழைத்தனர்.

கல்விச்சங்கம்

தமிழ்ச்சுவடிகளைத் தொகுக்கும்பணி, கல்விப் பணி, தமிழ் நூல் வெளியீட்டுப்பணி ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டு அறிஞர்கள் உழைத்தனர். சென்னைக் கல்விச் சங்கம் வழியாக இலக்கணச் சுருக்கம் (1813) திருச்சிற்றம்பல தேசிகராலும், இலக்கண வினாவிடை (1828) இலக்கணப்பஞ்சகம் (1834) ஆகியன தாண்டவராயமுதலியாராலும் வெளியிடப் பெற்றன. இவை உரைநடை நூல் களாகத் தொடக்கநிலையில் கற்போருக்குத் துணை யாகும் நிலையில் அச்சிடப் பெற்றன. பெரும் பாலும் தமிழ் இலக்கணக் கல்வி வரலாற்றில் உரை நடை நூல்களே தொடக்கத்தில் அச்சுருப் பெற்றன. ஐரோப்பிய ஆங்கில அலுவலர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் பயன்படும் வண்ணம் இந் நூல்கள் அமைந்தன.

எல்லிஸ், திருக்குறளில் ஒரு பகுதியை ஆங் கிலத்தில் 1811ஆம் ஆண்டில் மொழிபெயர்த்தார். தமிழில் முதன்முதலில் அச்சான இலக்கிய நூல்கள் திருக்குறளும் நாலடியாரும் ஆகும். இருநூறு ஆண்டுகளுக்குமுன் அச்சான இருசெவ்வியல் நூல்கள் திருக்குறளும் நாலடியாரும் ஆகும். இருநூல்களும் இணைந்தே அச்சு நூலாகியது.

திருக்குறள் நாலடியார் முதல் பதிப்புகள்

திருக்குறளின் மூலப்பதிப்புகளுள் தமிழில் மிகத்தொன்மையான பதிப்பாக இன்று நமக்குக் கிடைப்பது கி.பி.1812இல் வெளியான ‘திருக்குறள் மூலபாடம்’ என்னும் தலைப்பில் அமைந்த நூலாகும். ‘இலக்கணவிலக்கியவாராய்ச்சியுடையவர்களாலி கிதப் பிழையற வாராய்ந்து சுத்த பாடமாக்கப் பட்டது’ என்னும் குறிப்புடனும் ‘தொண்டை மண்டலம் சென்னைப் பட்டினத்தில் தஞ்சை நகரம், மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப் பிரகாசனால் அச்சிற்பதிக்கப்பட்டது. மாசத் தினசரிதை அச்சுக்கூடம் இ.ஆண்டு அளயஉ’ (1812) எனத் தமிழ் எண்ணில் தரப்பட்டுள்ளது) என்னும் குறிப்புடனும் தலைப்புப் பக்கம் திகழ்கின்றது. இந்நூலுடன் நாலடியார் மூலபாடமும், திரு வள்ளுவ மாலை மூலபாடமும் சேர்ந்து வெளி யிடப்பட்டுள்ளது.

மரவெழுத்தால் அச்சடிக்கப்பட்டுள்ள இப் பதிப்பே திருக்குறள் பதிப்பு வரலாற்றில் முதல் நூலாகத் திகழ்கின்றது. தமிழகத்தில் முதன் முதலாக கி.பி.1712இல் தரங்கம்பாடியில் முதல் அச்சுக்கூடம் ஏற்பட்டது. எனவே சரியாக ஒரு நூற்றாண்டிற்குப் பின்னர் இப்பதிப்பு நமக்குக் கிடைத்துள்ளது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய இப்பதிப்பில் காணப்படும் சில அரிய குறிப்புகள் மூலபாட ஆய்வியல் பற்றிய சிறந்த கருத்துகள் எனலாம்.

மூலபாட ஆய்வியல்

நெடிய கால இடைவெளிக்குப் பின்னர் ஒரு நூலினைப் பதிப்பிக்கும்போது ஆசிரியரின் உண்மைப் பாடத்தைத் தெளிந்து பதிப்பிப்பது என்பது சிக்கலான செயலாகும். கிடைக்கின்ற பல்வேறு சுவடிகளையும் திரட்டி நுணுகி ஆராய்ந்து மூல பாடத்தைத் துணிதல் வேண்டும். நூலுக்குள்ளேயே கிடைக்கின்ற ஆதாரங்கள் நூலின் நடை, நூலில் கையாளப்படும் சொற்களின் தன்மை, வரலாற்றுக் குறிப்புகள் முதலாயின கொண்டு மூல பாடத்தைத் துணியலாம் என்பர். இரண்டாவதாக நூலுக்கு வெளியில் கிடைக்கின்ற ஆதாரங்கள் நூலாசிரியருடைய பிற படைப்புகள், அவர் காலத்திய பிற படைப்புகளில் காணப்படும் அந்நூலைப் பற்றிய குறிப்புகள், மேற்கோள்கள் முதலாயினவும் மூலத்தைத் துணிதற்குப் பயன் படும்.

அச்சுப் பெறவேண்டிய இன்றியமையாமை

1812இல் தோன்றிய ‘திருக்குறள் மூலபாடம்’ என்னும் இம்முதல் பதிப்பின் பதிப்புரையில் மேற் கண்ட மூலபாட ஆய்வியல் இலக்கணக் கூறு களுள் சில விதந்து கூறப்படுவது பெரிதும் எண்ணத் தக்கதாகும். ‘வரலாறு’ என்னும் தலைப்பில் அந் நூல் தரும் செய்தி வருமாறு:

“கற்றுணர்ந்த தமிழாசிரியர்களருமையினி யற்றிய இலக்கண விலக்கியங்களாகிய அரிய நூல்களெல்லாம் - இந்நாட்டில் அச்சிற் பதிக்கும் பயிற்சியின்றிக் கையினா லெழுதிக் கொண்டு வருவதில்-எழுத்துக்கள் குறைந்தும் - மிகுந்தும் - மாறியும் சொற்கடிரிந்தும் - பொருள் வேறுபட்டும் பாடத்துக்குப் பாடம் ஒவ்வாது பிழைகள் மிகுதியுமுண்டாகின்ற வால் - அவ்வாறு பிழைகளின்றிச் சுத்த பாடமாக நிலைக்கும்படி- அச்சிற் பதித்தலை வழங்குவிப்பதற்குத்தேசித்து - நூலாசிரியர் களுள் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாய னாரருளிச் செய்த - அறம் பொருளின்ப மென்னும் முப்பாலையும் நுட்பமாக விளங்க வுணர்த்துந் திருக்குறள் மூலபாடமும் முனிவர் களருளிச் செய்த நீதி நூலாகிய நாலடி மூல பாடமும் இப்போதச் சிற்பதிக்கப்பட்டன.”

இக்குறிப்பினால் ஏறத்தாழ 200 ஆண்டுகட்கு முன் தமிழிலக்கியங்கள் அச்சுப் பெறாதிருந்த நிலை யினால் ஏற்படும் குறைகளையும் மூலபாடங்கள் வேறுபடுவதற்கான காரணங்களையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

பதிப்பு நெறிகள்

இந்நூலினை அச்சிற்பதிப்பதற்கு முன் அவர்கள் மேற்கொண்ட அடுத்த பகுதி எடுத்துரைக்கும். “இவை அச்சிற்பதிக்கு முன் தென்னாட்டில் பரம் பரை ஆதீனங்களிலும் வித்துவசெனங்களிடத்திலு முள்ள சுத்த பாடங்கள் பலவற்றிற்கு மிணங்கப் பிழையற இலக்கணவிலக்கியவாராய்ச்சியுடையவர் களாலாராய்ந்து சுத்த பாடமாக்கப்பட்டன.” என்னும் குறிப்பு, திருக்குறளின் அனைத்துச் சுவடிகளையும் தொகுத்துப் பார்த்த செய்தியை அறிவிக்கும். சுத்த பாடங்களைத் தீர்மானிப்பதற்குத் தனி ஒருவரின் முயற்சி பெரிதும் பயன் தராது; எனவே அறிஞர் குழு கூடி முடிவெடுத்தமையையும், அவ்வாறு எடுத்த முடிவையும் பல்வேறு அறிஞர்களுக்கு அனுப்பிக் கருத்துரை பெற்றதையும் முதல் பதிப்பின் வரலாறு நமக்குக் காட்டுகின்றது.

“இஃதுண்மை பெற- திருப்பாசூர் பிள்ளை திருநெல்வேலிச் சீமை - அதிகாரி ம. ராம சாமி நாயக்கர், முன்னிலையிலந்தாட்டிலிருந் தழைப்பித்த சுத்த பாடங்களுடனெழுதி வந்த வரலாறு. இந்தப் பொத்தகத்திலெழுதிய தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனா ரருளிச் செய்த திருக்குறள் மூலபாடமும் நாலடியார் மூலபாடமும் திருவள்ளுவ மாலையும் - ஆக - மூன்று சுவடியும் வெகு மூல பாடங்கள் உரை பாடங்களாதற்குக் கருவியாக வேண்டும் - இலக்கணவிலக்கியங் களெல்லாம் வைத்துப் பரிசோதித்துப் பாடந் தீர்மானஞ் செய்து ஓரெழுத்து - ஓர்சொல் - நூதனமாகக் கூட்டாமற் குறையாமலனேக மூலபாடங்க ளுரைபாடங்களுக்கிணங்க னினிதாகத் தீர்மானம் பண்ணிய சுத்த பாடம் பார்த்தெழுதிச் சரவை பார்த்த பாடமாகை யாலும் அந்தப் படி தீர்மானம் பண்ணி யெழுதின பாடமென்பது - இவ்விடங்களி லிருக்குந் தமிழாராய்ச்சியுடைய மகாவித்துவ செனங்களாற் பார்க்கும்போது மவர்கள் கருத்திற்றோன்றப்படும் ஆகையாலும் பாடங் களிலென்ன வேனுஞ் சந்தேகப்பட வேண்டு வதின்று- இப்படிக்கு திருநெல்வேலி அம்பல வாண கவிராயர்.”

இவ்வரிய பதிப்புரையினால் மூலபாடத்தை நிர்ணயிப்பதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் நெறிமுறைகளும் புலனாகின்றன. மூல பாடத்தை அறிதற்கு இலக்கியங்களையும் பிற இலக்கணங்களையும் ஆராய்ந்து முடிவெடுத்தனர்; எழுத்தோ சொல்லோ கூட்டாமலும் குறையாமலும் சுத்த பாடத்தைக் கணித்தனர். ‘சரவை பார்த்த பாடம்’ என்றும், மகாவித்துவான்கள் எந்த அளவிலும் சந்தேகப்பட வேண்டுவதின்று என்று உறுதி மொழியும் தந்தனர். இதற்குப் பின்னரும் பதிப்புரையில் பின்வரும் குறிப்புக் காணப்படு கின்றது; ‘இந்தப் பாடங்களை இவ்விடம் வந்திருந்த திருவாவடுதுறை ஆதீன வித்துவான் அம்பலவாணத் தம்பிரான், சீர்காழி வடுகநாத பண்டாரம் இவர்களாலும் மறுபடி கண்ணோட்டத் துடனாராயப்பட்டன. எனவே பல்வேறு அறிஞர் குழாம் கூடி மூலபாடம் தெளிந்த முயற்சி இவற்றால் புலனாகும்.

இங்ஙனம் பல்வேறு அறிஞர்களிடம் அனுப்பியும், ஆய்ந்தும் முடிவுகண்ட இப்பதிப்பின் மூல பாடங்களிலும் பிழைதிருத்தம் கண்ட வரலாறு பெரிதும் குறிப்பிடத் தகுந்ததாகும். இந்நூல் அச்சானதிற்குப் பின்னரும் இந்நூலினைப் பார்த்து ஓலையில் படியெடுத்து எழுதி வைத்துள்ளனர். இங்ஙனம் படியெடுத்தவர்கள் பாட பேதங்களைக் கூர்ந்தாராய்ந்து பிழை திருத்தியுள்ளனர்.

பாடபேத ஆராய்ச்சி ஏடு

கல்கத்தா தேசிய நூலகத்தில் கிடைக்கும் திருக்குறள் ஓலைச் சுவடிமூலம் இவ்வரலாறு தெரிய வருகின்றது. அந்த ஓலைச் சுவடியில் தரும் குறிப்பு வருமாறு:

“இது பொத்தகம் கலியுகாப்தம் 4900க்கு ஆங்கிரச வருடம் தொண்டை மண்டலம் சென்னைப் பட்டினத்தில் தஞ்சை நகரம் மலையப்பிள்ளை குமாரன் ஞானப் பிரகா சனால் அச்சிற்பதிக்கப்பட்டது. மாசம தினச்சரிதையின் அச்சுக்கூடம். ஆண்டு 1812.

திருநெல்வேலி அம்பலவாணகவிராயர் பிழை தீர்த்துச் சென்னைப் பட்டினத்துக்கு அனுப்பி விச்சு அவ்விடத்திலிருந்து திருவாவடுதுறை ஆதீன வித்துவான் அம்பலவாணத் தம்பிரான், சீர்காழி வடுகநாத பண்டாரம் அவர்கள் மறுபடிக் கண்ணோட்டத்துடன் ஆராயப் பட்டு அச்சிற்பதித்த காயிதப் பொத்தகத்தை ஆழ்வார் திருநகரியில், தேவர்பிரான் கவி ராயர், ஆதிநாத பிள்ளை தலத்தேடுகள் வைத்துச் சோதித்து வேறேடு எழுதியிருப்பது. மறுபடி திருநெல்வேலியில் அம்பலவாண கவிராயரிடத்தில் தீர்மானமானது. ஆழ்வார் திருநகரியில் சோதித்தது. 999 தை மீ... நம் முடைய ஏடு சுத்தமாய்த் திருத்தியிருக்கிறது.

என்னும் குறிப்பினால் அச்சேறிய திருக்குறளின் முதல் பதிப்பிலும் மூல பாடங்களைத் திருத்தி மீண்டும் பதிப்பாசிரியருக்கே அனுப்பித் தீர்மானம் செய்த பதிப்பு வரலாறு தெரிய வருகின்றது. பிழையான பாடங்கள் நூலில் புகுந்துவிடக் கூடாது என்னும் உயரிய நோக்கம் இதனால் தெளிவாகும். இவ்வோலைச் சுவடியில் பிழை திருத்தங்கள்பற்றி விரிவான குறிப்புகள் இருப்பது மல்லாமல் அட்டவணைப்படுத்தியும் எழுதியுள்ளனர். இந்த அட்டவணை.

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

அதிகாரம்      குறள் ஆழ்வார் திருநகரி ஏடு       அச்சடி பிழை

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

என்னும் நான்கு தலைப்புகளின்கீழ் அமைக்கப் பட்டுள்ளது. எனவே இச்சுவடி ‘திருக்குறள் பாட பேத ஆராய்ச்சி ஏடு’ எனலாம். அச்சு நூலிலும் வரும் பிழைகளைக் களைகின்ற ‘பாடபேத ஆராய்ச்சி ஏடு’ என இதனைக் குறிக்கலாம்.

முடிவுரை

திருக்குறளுக்குக் கிடைத்த முதல் அச்சுப் பதிப்பு நூலிலேயே பதிப்புநெறிகள் குறித்த பல அரிய விவரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. முன்னையோர் ஒரு நூலினைப் பதிப்பிக்குமுன் மேற்கொண்ட குழு முயற்சிகள் புலனாகின்றன.

தமிழிலக்கிய அச்சுநூல்கள் வரலாற்றில் திருக்குறளும் நாலடியாரும் முதன்முதலில் அச்சான செவ்வியல் நூல்களாக விளங்குகின்றன.