ஏழு எட்டு ஆண்டுகள் இருக்கும், குளிர் நிறைந்த மாலைப் பொழுதொன்றில் தமுஎச நிகழ்வு ஒன்றிற்காக நானும் ஆதவன் தீட்சண்யாவும் ஓசூரில் தொழிலதிபர்களுள் ஒருவராக அறியப்பட்ட திரு.வசந்தசந்திரன் என்பவரைக் காணச் சென்றோம். அவரது அலுவலகத்தில் ஒரு போட்டோ மாட்டியிருந்தார். அதில் ஜி.நாராயணம்மாள் தனிநபர் சத்யாகிரகி என எழுதப்பட்டிருந்தது. அவர் குறித்து விசாரிக்க, தனது அத்தை எனத் தொடங்கி 1941இல் காந்தி தனிநபர் சத்யாகிரகப் போராட்டத்தைத் துவங்கினார். காந்தியிடம் அனுமதி பெற்று அத்தையும் ஊரில் சத்யாகிரகப் போராட்டத்தை ஊரில் நடத்தி சிறைப்பிடிக்கப்பட்டுச் சிறையில் தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் அறைந்திருக்கிறார்கள். காந்திக்கு இத் தகவல் அறிய வைஸ்ராய்க்கு கடிதம் எழுதி அந்த சப் இன்ஸ்பெக்டர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். அத்தைக்கு மூன்று மாத தண்டனை அல்லது அபதாரம் விதிக்கப்பட்டது. அபராத தொகைக்காக கோர்ட்டில் அத்தையின் தாலி ஏலத்திற்கு விடப்பட்டது. இந்தச் செய்தி காந்தியின் ஹரிஜன் பத்திரிகையில் வெளி வந்திருக்கு. அதனால் அத்தையைப் பார்க்க அப்போ நிறைய தோழர்கள் வந்து போவார்கள் எனக் கூறியவர் அப்பாவும் இராமநாதபுர ஜில்லாவில் விவசாய சங்கம் அமைத்துப் போராடியவர். சுதந்திரப் போராட்ட போராளி தான் எனக்கூறி ஒரு டைரியை எடுத்துக் காட்டினார்.

பக்கங்கள் மடங்கி எழுத்துக்கள் ஆங்காங்கே அழிந்த நிலையிலும் இருந்த தாளில் ஒரு சில பகுதியை வாசித்து அப்படியே விட்டுவிடாம சீக்கிரம் புத்தகமா கொண்டு வர முயற்சிக்கலாம் தோழர் எனக் கூறி எனக்குக் காட்டினார்.

எனக்குத் தெரிந்த, பாடபுத்தகங்கள், கேட்டறிந்த வரலாறு என்பதன் அர்த்தம் சிதறுண்டது. வரலாறு என்பது பெரும் தலைவர்களோடு மட்டும் சம்பந்தப் பட்டதல்ல சாமானியர்களுக்கும் முக்கிய பங்குண்டு என்பதை அறியத் துவங்கினேன்.

டைரியின் ஒரு பக்கத்தைத் திறந்து வாசிக்கத் துவங்கினேன். “நாங்கள் சிறை சென்ற சமயம் ஐரிஸ் பெண்ணை மணந்த ஆங்கிலேயர் சிறை சூப்பரிண்டெண்டாக இருந்தார். அப்பெண்மணி அயர்லாந்து சுதந்திரப்போரில் ஈடுபட்ட குடும்பத்தைச் சேர்ந்தவராம். அப்பெண்மணி தனது கணவரிடம் அரசியல் கைதி களைத் தொந்தரவு செய்தால் நான் விவாகரத்து செய்துகொண்டு போய் விடுவேன் என்று எச்சரித்தாராம். அதனால் அச்சமயம் திருச்சி சிறை எங்களுக்கு சுதந்திர உலகமாக இருந்தது. சிறையில் நல்ல தேகப்பயிற்சிகள் செய்து வந்தோம்.” என்ற பகுதியை வாசித்ததும் எதையோ கண்டடைந்ததைப்போல உடல் விழித்தது.

அன்றைய இரவு டைரியின் விரிந்த பக்கங்களும் எழுத்துக்களுமாகக் கனவில் ஓடிக்கொண்டிருந்தது. அன்றைய சிப்ட் முடிந்ததும் நேராக வசந்தசந்திரன் அலுவலகம் சென்று நான் அந்த டைரியை உங்கள் கம்ப்யூட்டரில் டைப் செய்து வைக்கவா என அனுமதி கேட்டேன். அவரும் உற்சாகமாகி ஒத்துக்கொண்டார். தினசரி அங்குச் சென்று கொஞ்சம் கொஞ்சமாக அடித்து முடித்தேன். அதன் பிறகு அவரது அலுவலகம் போகும் போதெல்லாம் கேட்டபடியே இருப்பேன். எப்ப சார் புத்தகம் கொண்டு வருவீங்கவென. ஊரில் அண்ணனும் அதற்கான முயற்சியில் இருக்கார் விரைவாக வந்துவிடும் என்ற பதிலோடு இருப்பார். நீண்ட காலங்கள் காத்திருக்கச் செய்து இப்பொழுதுதான் வந்திருக்கு பாவை பப்ளிகேசன் வெளியீடாக. புத்தகத்தைக் கையிலெடுத்த சமயம் உடல் சிலிர்த்து பழைய நாட்களின் நினைவில் கண்கள் பனித்தன.

“தொண்டர் பல்லாயிரவர் சூழ்ந்து நிற்கின்றோம் - என்ற பாடலின் கருத்தைக் கவனித்து அந்தத் தொண்டர் பல்லாயிரவர்களில் நாமும் ஒருவன் ஏன் ஆகக் கூடாது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதன் பின் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தேன்” எனக்கூறும் போராளி ஜி.ராமச்சந்திரன் மதுரையில் அன்னியத் துணி எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைசென்று ஆறுமாதக் கடுங்காவல் தண்டனையை அனுபவித்து, பின்னர் நிறைய சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டவராக இருந்தவர். 1942 ஆகஸ்டில் நிகழ்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரச்சாரப் போராட்டத்திலும் கலந்துகொண்டதால் போலிஸ் படை இவரது வீட்டிற்கு வந்தது.

“வீட்டைச் சோதனை செய்து பிரசுரங்கள் மற்றும் வெள்ளைப் பேப்பர்களை எடுத்துக்கொண்டு நீ எந்த ஊர், எங்கே வந்தாய் எனக் கேட்டனர். நான் உட்கார்ந்து பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். அதைக் கண்ட சிவகாசி சப் இன்ஸ்பெக்டர், “எஜமான் நின்று கொண்டிருக்கிறார், நீ உட்கார்ந்து பதில் சொல்லிக் கொண்டிருக்கிறாய்” என அடித்தான். நான், “பிரிட்டீஸ்காரன் பூட்ஸ் கால் நக்கும் உனக்கு மரியாதையா ராஸ்கல்?” என எழுந்தேன். பத்துபேர் சேர்ந்து என்னை அடித்தார்கள். கைது செய்திருப்பதாகக் கூறினார்கள். சட்டைப் பையில் வைத்திருந்த மற்ற தோழர்களின் விலாசங்களை வாயில் போட்டு மென்றுகொண்டேயிருந்தேன்.” எனக்கூறும் ராமச்சந்திரன் இதற்காக நிறைய இன்னல்களை அனுபவித்திருப்பதைப் படிக்க உடல் சிலிர்த்தது. தொடர்ந்து அலிப்புரம் சிறை சென்றிருக்கிறார். அங்கு கம்யூனிஸ்ட் தேச பக்தர்கள் சிறையில் அரசியல் வகுப்பு நடத்தியிருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்கள் வெறுமனே பஜனை பாடுவதும், காந்தியைப் போற்றுவதுமாய் இருந்ததால் சலிப்புற்றிருந்த ராமச்சந்திரன் அலிப்புரம் சிறையில் முழு கம்யூனிஸ்டாகவே மாறி பி.சீனிவாசராவைச் சந்தித்து அதன் பின் இராமநாதபுரம் ஜில்லாவில் விவசாய சங்கம் கட்டமைத்து விவசாயிகளுக்காக நிறைய போராட்டங்களை நடத்திச் சிறைசென்று வருகிறார்.

வாழ்வின் பெரும் காலம் சிறையிலும் தலைமறைவு வாழ்க்கையிலுமாகக் கடந்துகொண்டிருக்க 1950-இல் கைதான சம்பவத்தை ஒட்டி நிகழ்ந்ததிது. “சப் மாஜிஸ்ட்ரேட்டிடம் அரசியல் கைதியாக நடத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதற்கு, சப்மாஜிஸ்ட்ரேட் அரசியல் கைதியாக நடத்துவதற்குள்ள(செக்சன்) சட்ட விவரம் தெரியாது. நான் புதியவன் தேவகோட்டை ஜில்லா மாஜிஸ்ட்ரேட்டிடம் கேட்டுக்கொள்ளச் சொல்லுங்களென்று சொல்லி எனது வாரண்டில் ‘பயங்கர கம்யூனிஸ்ட்” என்று எழுதிவிட்டான். அதனால் ஸ்டேசனில் லாக்கப்பில் சட்டை போட்டுக் கொள்ள அனுமதிக்க மறுத்து விட்டார்கள். ‘பயங்கர கம்யூனிஸ்ட்’ என்று எழுதப்பட்ட விசயம் போலிஸ்க்கு பீதியை உண்டாக்கிவிட்டது. எனது கை விலங்கில் நீண்ட சங்கிலியைப் பூட்டி எந்நேரமும் பிடித்துக் கொண்டே நின்றனர்” என எழுதியுள்ளதை வாசிக்க சாமானியர்கள் பட்ட பாடு குறித்து எவ்விதப் பதிவும் அற்று ஏனோ தலைவர்களால் மட்டுமே சுதந்திரம் கிடைத்தது போல் வரலாறுகளைத் திரும்பத் திரும்ப புதிப்பித்துக்கொண்டே இருக்கிறார்களே என வலியோடு கடக்க வேண்டியிருந்தது.

இவரின் சுயசரிதையோடு இவரை அடிக்கடி தேடி அலைந்தபடியே இருக்கும் இவரது தாயார் ஒரு முறை இவரைக் கண்கள் வீங்க அடித்த போலிஸ் ஸ்டேசனுக்கு சென்று எவன் என் மகனைக் கைதுசெய்து அடித்து இம்சித்தது எனப் பெரும் சப்தம் போட்டது... தனிநபர் சத்யாகிரகம் துவங்கி, தொடர்ந்து சுதந்திர போராட்டங் களில் பங்கெடுத்த இவரது தமக்கை ஜி.நாராயணம்மாள், தன் குடும்பத்தாருக்குப் பிடிக்காது போனாலும் தன் கணவரின் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்த அவரது துணைவியாருமென மூன்று பெண்களின் வரலாறும் பதிவாகி இருப்பது இப்புத்தகத்தின் மிகச் சிறப்பு.

ஜனசக்தியில் இவர் எழுதிய கட்டுரைகளும், இவர் குறித்துத் தலைவர்களின் கட்டுரைகளும், மற்றும் தாயார் துணைவியார் எழுதிய கடிதங்கள் என முக்கிய ஆவணங் களாக உள்ளன.

விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த ஜி.இராமச்சந்திரனின் சுயசரிதை இப்பொழுதாவது வந்திருக்கென ஆறுதல்கொள்ளும் வேளையில் இவரைப் போன்று எத்தனையோ போராளிகள் எதையுமே பதிய வைக்காது வாய்வழிக்கதையாக மட்டுமே சொல்லி மறைந்திருக்கக்கூடும். எத்தனையோ வரலாறுகள் மண்ணோடு மண்ணாகக் கலந்திருக்கும் என்ற வருத்தமும் மேலோங்கியது...

விடுதலைப் போராளி ஜி.இராமச்சந்திரன்

தொகுப்பு: ஆர்.பாலச்சந்திரன்

வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ்

142, ஜானிஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600014

விலை: ` 80.00