உலகில் எத்தனையோ சமயங்கள் தோன்றி மறைந்தாலும் இன்றைக்கும் புதுக்கோட்டையில் சாகாவரம் பெற்ற சமயம் ஒன்று உள்ளதென்றால், அஃது ‘மெய்வழி’ ஒன்றேயாகும். இதில், இன்று பல்வகைச் சமயங்களைச் சார்ந்த மக்கள் வாழ் கின்றனர். இச்சமயத்திற்கு வேரான அடிப்படைச் சமயம் ஒன்று உண்டெனில் அது பௌத்த சமயமே யாகும். இஃது உலகோருக்கு அன்பைப் போதிக்கும் தம்ம நெறியைக் கொண்ட சமயமாகும்.

இன்றுள்ள எல்லாச் சமயங்களுக்கும் முந்தையதும் காலச் சக்கரத்தின் முதற்கடையாணி எனப் போற்றப்படுவதுமாகிய பௌத்தம் சிறிது நாளில் சமணமாகிய உட்பிரிவைக் கொண்டு திகழ்ந்தது. சமணமும் பௌத்தமும் தழைத்தோங்கிய இப் புதுக்கோட்டை பூமியில் அறநூல்கள் பல முகிழ்த்தன. மிதிலைப்பட்டியில் சிலப்பதிகாரம் முதல் சிறு காசாவயல் முனைவர் சு.மாதவனின் பௌத்தத் திறனாய்வு நூல்கள் வரை இந்த மண்ணிலேயே தமிழுக்குக் கிடைத்த அரிய பொக்கிஷங்கள் ஆகும். சுருக்கமாய்ச் சொன்னால் பௌத்தமும் சமணமும் இல்லையென்றால் தமிழில் அறநூல்களே இல்லை எனலாம். அறத்தைப் போதிக்காத எவையும் நூல் களாக இருக்கமுடியாது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த குடுமியான் மலை, சித்தன்ன வாசல், விராலிமலை, புத்தாம்பூர், அண்ணல்வாயில், இரும்பாழி; வெள்ளனூர், இன்னும் பிற இடங்களில் புத்த சமணத் துறவிகள் வாழ்ந்து மக்களுக்கு நற்றொண்டுகள் பல செய்துள்ளனர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதலாவதாக வைத்து எண்ணப்படும் ‘நாலடியார்’ என்னும் மெய் வழி நூல் சமணமுனிவர் பாடிய நூலாகும். வீர சோழியமும் ஈண்டு எழுந்ததே!

புதுக்கோட்டையில் அமைந்துள்ள இலுப்பூர் சங்ககாலத்தில் இருப்பையூர் (இருப்பை) என வழங்கப் பெற்று, இவ்வூரினை ‘விரான்’ என்னும் மன்னன் ஆண்டு வந்துள்ளான். விரான் ஆண்டதால் இப் பகுதியிலுள்ள மலைக்கு விரான்மலை எனப் பெயருண்டு. பிற்காலத்தில் இம்மலை விராலி மலை என்று மக்கள் சொல் வழக்காயிற்று.

விரான் மன்னனின் சிறப்பை ஐங்குறுநூறு என்னும் தமிழர் வாழ்வியல் நூல் கீழ்வருமாறு எடுத்துரைக்கும்.

விண்டு வன்ன வெண்ணெற் போர் விற்

கைவண் விராஅ னிருப்பை யன்ன

வில்லாண குற்றனை போறி

பிறர்க்கு மனையையால் வாழி நீயே.” (ஐங். 58).

என்பது அப்பாடல், மேலும், நற்றிணையில்,

முனையெழுத் தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன்

மலிபுனல் வாயில் இருப்பை”, (நற்-260)

என்றும்,

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப்

பழனப் பல்புள் இரியக் கழனி, வாங்கு சினை

மிருதத் தூங்கு துணர் உதிரும் தேர்வன்

வீரான் இருப்பை” (நற்-350)

என்றும் விரான் மன்னனின் இருப்பை வானளாவிய செந்நெற்போர் குவிந்து வளம் கொழித்ததென்று ஓரம்போகியாரும் பரணரும் வாழ்த்திப் பாடியுள்ளனர். இவ்வாறு சீரும் சிறப்பும் உடைய விரான் மன்னன் தன்னை நாடிவந்தவரின் மனக்குறை போக்கி ஆறுதல் கூறவில்லை. மாறாக இருமாந்திருந்தான். ஆதலால், அம்மன்னனைக் கீழான அற்பன் எனச் சாடி, ‘மன்னனாகிய நீ! மற்றவரின் மனதைத் தேற்ற வழியில்லாமல் வாழ்வதைக் காட்டிலும் மலை முகட்டில் ஏறி விழுந்து உயிர் விடலாம்’ என்று சமணமுனிவர் தமது நாலடியார் நூலில்,

இனியார் தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்

தணியாத உள்ளம் உடையன்; மணிவரன்றி

வீழும் அருவி விரான்மலை நன்னாட!

வாழின் வரைபாய்தல் நன்று.” (நாலடி-369)

என்று இடித்துரைக்கின்றார். மேலும், ஆராயாமல் சுடுமொழிகளைக் கூறி அடுத்தவரைத் துன்பத்தில் ஆழ்த்தும் உன்னைக் கீழோரும் எள்ளி நகைப்பர் என்கிறார். அப்பாடலாவது,

கடுக்கெனச் சொல்வற்றாம் கண்ணோட்டம் இன்றாம்

இடுக்கண் பிறர்மாட்டு உவக்கும் அடுத்தடுத்து

வேகம் உடைத்தாம் விரான்மலை நன்னாட!

ஏகுமாம் எள்ளுமாம் கீழ்” (நாலடி- 348)

என்னும் பாடலாகும்.

மெய்வழியாரை (பௌத்த சமணர்)ப் பொது வாக ஆதரித்த மன்னன் கொடும்பாளூரை ஆண்டு வந்த சாத்தன் இளங்கோவதிரையன், இவனது மகன் பூதி என்னும் பெருமுத்தரையன் ஆவான். இவன் கொடும்பாளூர் பூதிச்சரம் கோயிலைக் கட்டியவன் (தமிழரசன். பு.சி. புலவர், 2001, ப.85) என இக்கோயில் கல்வெட்டால் அறியலாம்.

பெருமுத்தரையன் விரான் மன்னனால் ஒடுக்கி ஆளப்பட்டவன். விரான் மன்னன் பெருமுத்தரை யனுக்குக் கொடுந்துன்பங்களைக் கொடுத்துள்ளான். பெருமுத்தரையனின் நற்குணத்தையும் கொடைத் தன்மையையும் புகழ்ந்து போற்றும் சமண முனிவர் நாலடியாரில்,

மல்லன் ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்

செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்

நல்கூர்ந்தார் கண்ணும் பெருமுத் தரையரே

செல்வரைச் சென்றிரவா தார்” (நாலடி- 296)

என்று பாடுகின்றார். மூங்கிலைப்போல ஆகாயத்தைத் தொடுமளவு நெற்பொழியுடைய விரான் மன்னனைக் காட்டிலும் வறுமையுற்ற காலத்தில் எவ்வகைச் செல்வர்களையும் சென்று இரவாத நற்பண்பு உடையவன் பெரு முத்தரையன் என்பதே இப் பாடலின் பொருளாம். ஆகவே, நாலடியார் என்னும் “மெய்வழி நூல்” புதுக்கோட்டைச் சமணர் எழுதிய நூலாகும் என்பது தெளிவாகும்.

மேலும், இஃதே போல் “விவேக சிந்தாமணி” என்னும் மெய்வழி நூல் வெள்ளனூரில் வாழ்ந்த ஒரு சமணத் துறவியார் எழுதிய நூலாகும். காரணம் என்ன எனில்,

‘பேரவா பெரு நட்டம்’ என்பது சமண பௌத்த நெறிகளில் ஓன்றாகும். வெள்ளனூர் என்று தற்போது வழங்கும் ஊரின் பழம்பெயர் வெள்ளை நல்லூர் என்பதாகும். இவ்வூரில் வட்டங் கச்சேரிக்கு அருகில் கிடைத்த பெரிய மகாவீரர் திரு வுருவம் புதுக்கோட்டை அருங்காட்சியகத்திற்குக் கொண்டுவரப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது.

இச்சிலையை ஆராய்ச்சி செய்த அருங்காட்சி யகக் காப்பாட்சியர் செ.கோவிந்தராஜ் அவர்கள் கீழ்க்காணுமாறு விளக்குகிறார்.

“இத்திருவுருவம் 3ஙூ அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட கருங்கல்லில் வடிக்கப்பட்டு உள்ளது. மரத்தினடியில் தாமரை மலரில் வீற்றுள்ளார் மகாவீரர். முக்குடைகளைப் பெற்றுள்ளார். இவரது அடியார்கள் இருமருங்கிலும் கவரி வீசி நிற்கின்றனர். திருவாசியும் சிங்கத் தோரணமும் உள்ளன. மரத்தில் இலை, பூ, காய், கொடி இருப்பதுடன் பூவின்மீது 3 அங்குல நீளம் உள்ள காகம் எதையோ கவ்விக் கொண்டிருக்கின்றது. கீழ்ப்பகுதியில் நரி ஒன்று காகத்தினைப் பார்த்துக்கொண்டிருக்கின்றது. இத் திருவுருவம் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.” என்கிறார்.

இச்சிலையில் இக்காட்சி இடம்பெறக் காரணம் யாதெனில், “பேரவா பெருநட்டம்” என்னும் கருத்தை விளக்க வந்ததேயாகும். இக்கருத்தை “விவேக சிந்தாமணி” என்னும் மெய்வழி நூலின் ஆசிரியர் தமது நூலில் வரும் பாடலொன்றில் கையாண்டுள்ளார். அப்பாடலாவது,

சம்புவே என்னபுத்தி சலந்தனில் மீனை நம்பி

வம்புறு வடத்தைப் போட்டு வானதைப்பார்ப்பதேனோ?

அம்புவி மாதே கேளாய்; அரசனை அகல விட்டுப்

புருஷனைக் கைக் கொண்டாற்போலாயிற்றே”

என்பதாகும். இதன் கருத்தாவது, சம்புவாகிய நரி கரையிலே கிடக்கும் கருவாட்டுத்துண்டை உண்ணாமல் நாளை உண்ணலாம் என நினைத்து, நீரிலே வாழும் மீனைப் பிடிக்கச் சென்றது. கரையில் கிடந்த கருவாட்டைக் காகம் தூக்கிக் கொண்டது. இரண்டும் கிட்டாமல் நரி ஏமாந்தது. இஃது பேரவாவில் விளைந்த பெருநட்டம்; இஃதொருத்தி அரசனை நம்பிப் புருஷனைக் கை நழுவ விட்ட கதை போலாம். இந்நூலில் இடம்பெற்ற இக்கதை சமண பௌத்த நெறிவிளக்கக் கதையாகும். இதை மகாவீரரின் சிலையில் வடித்துள்ளனர். பிற்காலத்தில் எழுந்த சமண பௌத்தக் கொள்கை மறுப்பாளர்கள் காக்கை, நரி; பாட்டி, வடை என்று கதையையும் கொள்கையையும் மாற்றியுள்ளனர்.

இருப்பை விராலிமலையில் (விரான்மலை) தோன்றிய நாலடியார் நூல்போலும், வெள்ளனூரில் முளைத்தெழுந்த விவேக சிந்தாமணி போலும் எண்ணற்ற பௌத்த சமண மெய்வழி நூல்கள் இம்மண்ணில் (புதுக்கோட்டையில்) மறைந்த வரலாறாய் உள்ளன. அவற்றைத் தேடிக் கொணர்வதே நம் அனைவரின் கடமையாகும்.

* மெய்வழிச்சாலையில் மெய்வழி மெய்ம்மறை நூல்களில் இன்றும் முதலில் வைத்துப் பாடப் பெறுவது புத்ததேவ அருக சரணமாகும். ஆதியே துணை என்பது இவர்களின் கடவுட்கொள்கை யாகும்.