தாளாச் சுமையில் தடுமாறும் என்பேனா/முனை மழுங்கிக் கிடக்க/என்னைத் தூரநின்று வேடிக்கை பார்க்கின்றன/யார்யாரோ எழுதிச் செல்லும் கவிதைகள்

கவி ந. நாகராஜனின் இந்த வரிகளில் உண்மை யில்லை என்பதை அவரது கவிதைகளே நமக்கு உணர்த்திச் செல்கின்றன. அவர் எழுதிய கவிதைகள் அவரிடமே வேடிக்கைகாட்டுகின்றன, தூர நின்று கவனித்துக் கொண்டிருந்த வாசகன் மிகுந்த நெருக்கத் தோடு அக்கவிதைகளுக்குள் தன்னைக் கரைத்துக் கொள்ள முயல்கிறான்.

நீண்டதொரு மக்கள் சார்பு இலக்கியப் பாரம் பர்யத்திலிருந்தும் கலை இலக்கியப் பெருமன்றப் பண் பாட்டுக் களத்தை உருவாக்கிய பேராசான் பிறந்த பூதப்பாண்டிமண்ணிலிருந்து உருவாகி வந்துள்ள கவி.ந. நாகராஜன் சிறுபத்திரிகை எழுத்துக்கள் வழியாகத் தமிழ்வாசகர்களுக்கு அறிமுகமானவர். பரந்துபட்ட வாழ்வின் அனுபவப் பரப்பைப் பெற்றிருந்தாலும் அத்தி பூத்தாற்போல் அபூர்வ மாகவே கவிதைகள் எழுதுபவர். இதுவே அவரது பலமும் பலவீனமும் ஆகியுள்ளது. பிரபலப் படைப் பாளிகள் ஆண்டிற்கு இரண்டு மூன்றென கவிதை நூல்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகிற வணிகமயச் சூழலில் படைப்பு அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்வதே ஒரு சிரமமான போராட்ட மாகும். படைப்பின் உருவாக்கம் தன்னெழுச்சியி லிருந்து உருவாக வேண்டும். மற்றவற்றால் அழுத்தப் பட்டு, திணிப்பின் அடிப்படையில், செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் படைப்புகள் தோல்வியடைந்து விடும்; அவை தயாரிப்புக் கவிதைகளாக மாறிப் போய்விடும் என்பதிலும் தீர்க்கமாக நம்பிக்கை கொண்டவர்.

எனவேதான் அவர் தனது கவிதையைப் புணர்ச்சி யோடும், கருத்தரிப்போடும், பிரசவத்தோடும் உருவகப்படுத்திக் காட்டுகிறார்.

வலுவில்லாதபோது புணர்ச்சியும்/கருத்தரிக்காத போது பிரசவமும்/எனக்கு நிர்ப்பந்திக்கப்படுகிறது./எனக்கான புணர்ச்சி/எனக்கான பிரசவிப்பு/என்னில்நிகழும்/அப்போது என் குழந்தையைக் கொஞ்சு./

பெண்மீதான பாலியல் நிர்ப்பந்தமாக மட்டும் இதனைக் கருதிவிடமுடியாது. கவிதை உருவாக்கத்திற்கான சூழலாகவும் கூட இது அமை கிறது. வாழ்வுச் சூழலின் பிரதியாக்கம் என்றும் கூறலாம். ஒவ்வொரு தருணமும் நிர்ப்பந்தங்களால் உருவாக்கப்படுகிறது. வலுவில்லாத போது புணர்ச்சியும் கருத்தரிக்காதபோது பிரசவமும் செய்ய அதிகார சாட்டைகளும் துப்பாக்கிமுனைகளும் தொடர்ந்து நம்மை மிரட்டிக் கொண்டிருக்கின்றன.

chitram-varandha-_450கவி ந. நாகராஜனின் படைப்பின் தனித்த ஆளுமை என்பதே பன்முகத்தளத்தில் படர்ந்து செல்லும் ஆற்றல்மிக்க கவிதை மொழியை அவர் கையாளுவதுதான். இதனை ஒற்றைவாசிப்புக்குள் அடக்கிவிடமுடியாது. பண்பாட்டிற்கும் சூழலுக்கும் ஏற்ப வாசிக்க வாசிக்க அர்த்தங்களைப் பெருக்கிக் கொள்கிற கவிதை மொழி அவருக்குக் கைகூடி வந்திருக்கிறது. எதையும் உரத்துப் பேசாமல் நடப் பியல் சார்ந்த குறியீட்டுத்தன்மையோடு அர்த்தங் களைப் புலப்படுத்தும் அழகியலை அவரது கவிதை களில் கண்டடையலாம். ஒற்றை அடையாளத்திற்குள் புதையுண்டிருக்கும் பன்மைத்துவத்தை அகழ்ந்து வெளிக்காட்டும் தருணங்களும் உண்டு,

தயாராகிவிட்டது/வாசனைகூட வரத்துவங்கிவிட்டது/ உணவைக் கைப்பற்றி/சுவையறிந்தவர்களிடையே போட்டி/ உணவைப்/ படைத்தவனுக்குப் பங்கிட/எவனுக்கும் மனசில்லை/

கவிதை எழுதிச் செல்லும் இவ்வரிகளில் உணவு என்பது எளியவகைக் குறியீடுதான். ஆனால் இது வாசகனுக்கு வெவ்வேறு விதமாக உணர்வுநிலை களை எழுப்பிச் செல்கிறது. முதல்நிலையில் உணவை உணவாகவே பார்க்கலாம். உணவைத் தங்கள் கைகளில் வைத்திருப்பவர்களுக்கும் பசித்திருப்பவர் களுக்குமான முரணாக வெளிப்படுகிறது. இரண்டாம் நிலை வாசிப்பில் திடீரெனத் தேர்தலரசியல் மூலம் கைப்பற்றப்படும் ஆட்சி அதிகாரமாக உணவு தோற்றமளிக்கிறது. சுவையறிந்தவர்கள் திராவிடக் கட்சிகளாக மாறுகிறார்கள். இப்படி எண்ணற்ற சாத்தியங்களோடு இக்கவிதையை வாசிக்கமுடியு மெனத் தோன்றுகிறது.

நாகராஜனின் கவிதைகளில் ஒரு குறியீடே பல்வித மனநிலைகளில் கவிதையாக்கம் பெற்றிருப் பதைக் குறிப்பிடவேண்டும். நீர்ப்பண்பாடு இவரின் கவிதைகளில் நிரப்பப்பட்டுள்ளது. இது சிற்றாறாக, குளமாக, ஆற்றின்படித்துறையாக, குவளைகளில் உருகிக் கலையும் பனிக்கட்டிகளாக, மழையாக, கடலாகத் தன்னை உருமாற்றிக் கொள்கிறது.

நிதானமாகவும், நீரோடையாகவும் பெருக் கெடுத்து ஓடுகிற சிற்றாற்றில் குளிக்கத் தடையில்லை தான். ஆனால் எருமைகள் அதில் நீச்சலடிக்கின்றன. இதே குளம்தான் சூரியனின் வரவுக்காகத் தாமரை களைத் தன்னுள் தேக்கிவைத்துக் கொள்கிறது. பனைமரங்களுக்கிடையே கசிந்துவரும் நிலவொளியில் தன்மீது சித்திரங்களை வரைந்து பார்த்துக் கொள் கிறது. நீச்சலில் மிதந்து செல்கையில் தண்ணி பாம்பு கடித்து கெண்டைச் சதை சேதாரப்படுகிறது. வைத்தியர் பாம்பைப் பற்றியோ பாம்பின் விஷத்தை இறக்கு வதைப்பற்றியோ தீர்மானகரமாக எதையும் கூற வில்லை. வேறு குளம் இல்லாததால் தினம் தினமும் பாம்பு கடித்த குளத்திலேதான் குளித்தாக வேண்டி யிருக்கிறது. நிகழ்காலக்கட்சி அரசியலையும், பண் பாட்டையும், ஊடகவெளியையும் கட்டுடைக்கும் குறியீட்டுச் சொல்லாடலாக இங்குக் குளம் மேலெம்பி வருகிறது. எனினும் சுத்தம்/ அசுத்தம் என்பதான எதிர்வுகள் உருவாக்கியிருக்கும் பண்பாட்டு அரசியல் மறுவிவாதத்திற்கு உள்ளாகியே வருகிறது. எருமை களை எருமைகளாகப் பார்க்காமல் கீழானதாக, சுத்தத்தை அசுத்தப்படுத்துவதாகக் குறிப்பீட்டாக்கம் செய்வதிலும் நுண்ணரசியல் சார்ந்த பிரச்சினை எழாமலும் இல்லை.

கடவுளுக்குரிய இடத்தில் இருந்து கொண்டு/என்னை பிணமாக்கிக் கொண்டிருக்கிறாய்/நீ கடவுளா... சாத்தானா... கடவுள்சாத்தானா...

புனிதங்களும் புனிதநீக்கமும் சந்திக்கும் தருண மிது. இவ்வரிகளை வாசித்ததும் ரஷ்ய நவீன கவி ஜோஸப் பிராட்ஸ்கியின் கவிதைப் பகுதி ஞாபகத் திற்கு வருகிறது. அக்கவிதை குழந்தையாகப் பிறந்து தேவனாகிப் போன இயேசுகிறிஸ்துவை நோக்கி அன்னைமேரி தாய்மையின் நிமித்தம் மெலிதாக எழுப்பும் கேள்வியது.

மேரி இப்போது இயேசுவிடம் கேட்கிறாள்/நீ என் மகனா.. இல்லை தேவதூதனா...

இதுவும் உலக வரலாற்றில் நிகழ்ந்துள்ள அதீத நிலையின் மீதான நிழலாகப் படர்கிறது. பன்மை அடையாளங்கள், பன்மைப் புரிதல் எனப் பன்மையை அங்கீகரிப்பதே நமது காலத்தின் பண்பாட்டுக் குரலாக வெளிப்படுகிறது. இந்திப் பேரடையாளத்தை உயர்த்திப்பிடிக்கும்போது தமிழ், தெலுங்கு, மலை யாளம் என பிரதேச மொழி அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. இந்தியப் பண்பாடு என்பதை இந்துப் பண்பாடு என்ற ஒற்றைவார்த்தைக்குள் அடக்கிவிடும்போது சீக்கிய, கிறிஸ்தவ, முஸ்லிம், தலித், பழங்குடிப் பண்பாடுகள் அழித்தொழிக்கப் படுகின்றன. இச்சூழலில் இந்த மற்றமையைக் குறித்த அவதானிப்பை ஆடை குறியீட்டுக் கவிதையின்வழி நாகராஜன் உரையாடிச் செல்கிறார். மற்றமையை நிராகரிப்பது ஜனநாயகத்திற்கு உதவாது. இது அடிப்படைவாதத்தை உருவாக்குவது.

நமக்குப் பிடித்த ஆடை/பிறருக்கு எரிச்சலைத் தரலாம்./தனக்குப் பிடிக்காதது/மற்றவருக்கேனும் பிடித்திருக்குமென யாரும் எண்ணுவதில்லை.

பின்காலனியச் சிந்தனையாளர் ஹோமிபாபா போலச்செய்தல் கருத்தாக்கம் குறித்துப் பேசுவார். இது கீழைதேய மக்கள் ஐரோப்பிய நாடுகளின் கலாசாரத்தை, மேன்மையானதாக பாவனை செய்வது குறித்து முன்வைத்த சிந்தனையாகும். இங்கு நாகராஜனின் கவிதை மீன்களின் போலச் செய்தல்பற்றிப் பேசுகிறது. இவற்றில் நீரோட்டத்தின் நெளிவையும், சுளிவையும் அறிந்திருக்கும் ஆற்று மீன்கள் நீளமும் பரப்பும் அறிந்த கடல்மீன்களென இருந்தாலும் கடல்மீன்களால் ஆற்றில் வாழ முடியவில்லை. ஆற்று மீன்கள் கடல் மீன்களைப் போலப் பாவிக்கத் தொட்டிமீன்கள் ஆறும் அறியாது கடலும் அறியாது தம்மை ஆற்றுமீனாகவும், கடல் மீனாகவும், பாவனை செய்து கொள்கின்றன. ஏன் இந்த மீன்கள் பாவனை செய்கின்றன.. பாவனை செய்வது மீன்கள் மட்டும்தானா.. இந்த பாவனை களை நாம் வாழும் சமூகத்தடம் முழுவதிலும் கண்டுணரலாம். இந்தியனாக இருந்தும் ஆங்கிலேய னாகவும், தமிழனாக இருந்தும் இந்தியனாகவும், மார்க்ஸியனாக இருந்தும் மத உபவாசனாகவும் பல்வேறு விதமாய்ப்போலிமைப் பிம்பமாகவும் மாறிப் போகிறோம்.

நாகராஜனின் கவிதையில் நடப்பியல் வாழ்வுச் சித்திரமாக அப்பா முக்கியதொரு இடத்தைப் பெற்றுவிடுகிறார்.

அப்பா எப்போதும் அப்பாவாயினும்/அப்பா எப்போதும் அப்பாவாய்த் தெரிவதில்லை.

நாகராஜனின் கவிதைப் பரப்பில் எல்லாத் திசைகளிலும் அப்பா உலவிக் கொண்டிருக்கிறார்.

சிறுவயதில் எல்லாமாய்த் தெரிந்த அப்பா/பள்ளிவயதில் ஆசானாய்த் தெரிந்தார்./பதின்வயதில் பாதுகாவலனாய்த் தெரிந்த அப்பா/கல்லூரிக் காலத்தில் வள்ளலாய்த் தெரிந்தார்./ தண்டச் சோறு காலத்தில் விரோதியாய்த் தெரிந்த அப்பா/ பெண்பார்க்கையில் தேவதூதனாய்த் தெரிந்தார்./சொத்துப் பங்கீட்டின் போது அற்பமாய்த் தெரிந்த அப்பா/நான் அப்பாவான போது அற்புதமாய்த் தெரிகிறார்.

பல்வேறு காட்சி அடுக்குகளில் அனுபவத்தின் ஈரம் கசிந்துகொண்டிருக்கிறது. இந்த வார்த்தை களுக்குள் அப்பா கண்விழித்துக் கொண்டும் மூச்சு விட்டுக் கொண்டும் தூங்காமல் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். இது விருப்பு, வெறுப்பு, கோபம் கலந்த உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் அப்பாவைப் பன்முகத் தோற்றத்தில் படிமப் படுத்தும் யதார்த்தக் கவிதையாகி உள்ளது.

இன்னுமொரு அப்பாவும் நாகராஜனின் கவிதையில் புனைவின் நுட்பங்களோடு வந்து போகிறார். குழந்தை வரையும் ஓவியத்தில் தெரியும் அப்பா அது. ஆழ்மனத்தில் மனோபாவமாய் மாறி விட்ட அப்பா குறித்த அதிபயங்கர பிம்பமும் அந்தக் குழந்தை வரைந்த கோட்டுச் சித்திரத்தில் வெளிப்படுத்திக் கொள்கிறது.

குழந்தை வரைந்த என் கோட்டுச் சித்திரத்தில்/கண்களைக் காணவில்லை/காதுகள் கொம்புகளாயின/தொங்கிய நாக்கில் வழிந்த சொட்டுகள்/எச்சிலா ரத்தமா எனத் தெரியவில்லை./ முடிகள் முள்ளம்பன்றியின் முட்கள் போலிருந்தன./சிதைக்கப் பட்ட உடல்போல் சிறுசிறு கோடுகள்/சித்திரம் வரைந்த குழந்தை/விளையாடிக்கொண்டிருந்தது.

இது தன்னுணர்வற்ற நனவிலி மனச் சித்திரம். அப்பாவின் மீது உறைந்து கிடக்கும் எதிர்ப்பு உணர்வின் அடையாளம். நவீன வாழ்வில் குடும்ப அமைப்புக்குள், குழந்தைகளிடத்தில் அப்பா ஒரு பயங்கரவாதியாகிப் போகிறார் அல்லவா...

நவீனத்துவத்தின் சாயலையும், நகுலனின் பற்றற்ற தொனியையும் கடந்த நாகராஜனின் கவிதை நானில் அந்நியப்படுத்தலும், குற்ற உணர்வும், ஒரு தரப்பாக வெளிப்படுகிறது. மறுதரப்பாக இந்த நான் சமூக நானாகவும், விளிம்புநிலை நானாகவும் தன்னை வடிவமைத்துக் கொள்கிறது. ஏழுகடல் ஏழுமலை தாண்டி குருவியின் உடலிலிருக்கும் அரக்கனின் உயிரைக் கண்டுபிடிப்பது சுலபமாகிவிட்ட போதிலும் அருகாமையின் இதயத்தை அறிந்துகொள்ள முடிய வில்லையென இந்த மனம் ஆதங்கப்படுகிறது.

இயலாமை நிறைந்த கூச்ச சுபாவமிக்க கவுரவம் பார்க்கின்ற மத்தியதர வர்க்க மனத்தின் குரலை இதில் கண்டடையலாம். என்னை என்னிலிருந்து காண்பவர் யாரெனக் கேள்வி எழுப்பும் நாகராஜனின் கவிதைப்பிரதியின் நான் மற்றமையால் கட்டமைக்கப் பட்டிருப்பதையும், மனச்சாய்வுகளுக்கும் கண் ணோட்டங்களுக்கும் ஏற்ப வடிவமைக்கப்படு வதையும் சுயம் அழிந்து போவதையும் பேசுகிறது.

இக்கவிதைப் பிரதிகளில் பிளவுண்ட நான்களை கண்டறியலாம். மனத்தின் கவிதைகளாக அடை யாளப்படுத்திக் கொள்ளும் வேளையில் சோம்பல் மனமும், குற்றமனமும், தாராளமனமும், குரூரமனமும் மாறிமாறி இயங்குகிறது. படுக்கையைக் கூடத் தட்டிப் போட சோம்பல்பட்டு உடலைக் குப்பை யாய்ப் புதைத்துக் கொள்ளும் மனம் ஜன்னல் தூசிக்காக விடுதிச் சிறுவனைக் கோபிக்கிறது. ஒரு தடவை சிலந்திக்காய், ஒட்டடை வலைப்பின்னலை விட்டுவிடும் மனம் பிறிதொரு தடவை தீக்குச்சி சுவாலையால் சிலந்தியை எரித்துப் பார்த்துவிட்டு அதன் உயிர்வலியை ரசித்துப் பார்க்கிறது.

பிரபஞ்சத்தின் விசித்திரத்தை எழுதிப்பார்க்கும் நாகராஜனின் கவிதை மொழியில் சில வால் நட்சத் திரங்கள், பால் வெளிகளில் மிதக்கின்றன. வெளி களில் மிதப்பதால் பறவைகளோடு தம்மை இனங் காணவும் செய்கின்றன.

விதை, மரம், நிழல் என மிக நெருக்கமாகத் தாவரங்களோடும், உறவையும், உறவின்மையையும் ஏற்படுத்திக் கொள்கின்றன. வளர்ந்த மரத்தின் நிழலில் சாயமுடிகிறது. விதையைப்பிளந்த முளையில் உயிரின் தாகம் தொற்றிக் கொள்கிறது. காக்கை களின் கழிவுமிழ்ந்த விதைகளில் பொதிந்தமரம் ஏழடுக்குக் கட்டடங்களின் சுவர்களிலும் எளிதாக வளர்ந்துவிடுகிறது.

உதிர்வையும், செழிப்பையும் ஒன்றுபோலப் பாவித்து இது எல்லோருக்கும் நிழல்பரப்பிக் கொண்டும், தன்னுணர்வற்ற தன்கிளையில் காகங் களுக்கு இடமளித்துக் கொண்டும் ஒருவிசாலமான ஜனநாயக சித்திரமாய் மரம் உருமாறுகிறது.

மௌனமே மொழியாகப் பேசச் சொல்லிக்கொடு எனக் கழிவிரக்கத்தோடு வேண்டுகோள்விடுக்கும் கவியின்குரல் தன் தோற்றுப்போன கதைகளையும் கூறுகிறது. என்மொழிகள் எதுவும் உன்னை எட்ட வில்லையென்ற தூரத்தை, இடைவெளியைச் சொல் கிறது. கரைமரத்து மாம்பழத்தில் அவன் எறிந்த கல்லோடிணைந்த அன்பைப் பற்றி ஒரு பெண்ணாகி ஞாபகப்படுத்துகிறது. வெவ்வேறு விதமாய் அமைந்து விட்டவாழ்வுச் சூழலில் கடைசிவரை நேரில் பேசிக் கொள்ளாத வார்த்தைகளின் மௌனம் எதை மறந்து எதைப் பேசவென விம்மிக் கரைகிறது.

இழப்பின் வலிகளையும், மௌனத்தின் துயரங் களையும், அழிப்பின் அரசியலையும் ஒருசேர எழுதிச் செல்லும் நாகராஜனின் கவிதையை இறந்துபோன உயிரின் ஆவி தொடர்ந்துதுரத்திக் கொண்டிருக்கிறது. அது நெஞ்சுக்குள் பேயாட்டமிடும் வசீகரத்தை மறைத்தும், காயங்களின் இதழ்களில் ஒரு புன்னகையை எல்லோருக்குமாய்ப் படரவிடவும் செய்கிறது. ஊடும் பாவும் உருக்குலைந்த சிதைந்த பட்டுப் புடைவை யாகிறது. மலச்சிதறலை மண்ணுருண்டையாக உருட்டிச் செல்லும் வண்டாகிறது. பூக்கள் ஆற்றோடு போகின்றன. பூச்சி மருந்துகளில் மண்புழுக்களும் மாண்டு போகின்றன. வலிகளைக் கடந்தும் செல் கின்றன.

இந்த இழப்பின் வலியும் வேதனையும் அன்புச் சிதைவையும் வெறுமையையும் சொல்வதோடு நின்றுவிடவில்லை. ஆகப் பெருங்கனவு கொண்டிருந்த நம்பிக்கைகள் சிதறிப்போனதையும் வரலாற்றின் கொடுங்கனவாய் மாறிவிட்ட மனச்சோர்வையும் இணைத்துப் பேசுகின்றன.

சிற்பத்திற்குக் கண்திறப்பதுதான் சிற்பக் கலையின் உயிரோட்டம். ஆனால் இங்கு நிகழ்வு வேறுவிதமாய் இருக்கிறது.

கவனமாய்ச் செதுக்கிய சிற்பத்தில் கண்பழுது

இது என்ன சிற்பம். சோவியத் யூனியன் செதுக்கிய சோசலிச சிற்பமா... வாசகனை இவ்வரி எங்கெங்கோ அழைத்துச் செல்கிறது. இதனால்தான் அவரால் நட்சத்திரங்கள் மீன் செதில்களாய் சிதறிக்கிடப் பதையும் நிலா தடம் தேடித் திரிவதையும், வெளிச்சம் வருமென நம்பிக் கொண்டிருந்தபோது நிகழ் தளமே அழிந்துபோனதாகப் புரட்சியைக் குறி யீடாக்கிப் பேசமுடிகிறது.

நாகராஜன் எழுதிச் செல்லும் நம்பி ஏமாந்த கதைகள் பல. ஒரு காதலி போல வந்து தோளில் ஏறிக் கொண்டு கழுத்தில் சுருக்குக் கயிறை மாட்டி இறுக்கியபோது தெரிந்துகொண்ட அந்தக் கொடிய நகங்களும், கொடூரப்பற்களும் பயமுறுத்துகின்றன. சிங்கத்திடமிருந்து காப்பதாய்க் கூறி இலையும் தழையும் தந்து பாலைக் கறக்கும் முயற்சியின் பயங்கரமும் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளி யத்தின் கொடூர உழைப்புச் சுரண்டலையும் சொல் லாமல் சொல்லிச் செல்கிறது. வெளிப்படுத்த முடிந்த வற்றைக் கூடவெளிப்படுத்தமுடியாமல் இருப்பது தான் கவிதை என்ற வாசகத்தின் நுட்பத்தை இங்குப் புரிந்துகொள்ளலாம்.

நாகராஜனின் கவிதையில் காலம், அழகின் அமைதியும், அமைதியின் அழகும் நிறைந்த அறையின் சாவியைத் தேடிக் கரைகிறது. அமைதியற்ற வாழ்வின் நெருக்கடிகளும், வன்முறையும் ரத்தச் சுவடுகளும் மனதைத் துயரப்படுத்துகின்றன. வாழ்தலுக்கும் மரணத்திற்கும் இடையிலான தூரம் எளிதில் கடக்க முடியாததாகி விடுகிறது.

மரணம் பற்றிய குறிப்புகளை எழுதிச் செல்லும் நாகராஜன் உலகமயச் சூழலில் மண்சார்ந்த உரிமைப் பறிப்புகளும் நிகழ்கின்றன. வட்டார உற்பத்திப் பொருள்களான நொங்கும் கல்லும் கருப்பட்டியும் அழிக்கப்படுகின்றன. இது புழுதியின் சூழலாகவும், விளக்கின் சுடரில் கரும்புகை மூட்டமாகவும் மாறுகிறது. மரணம் வெட்டி எறியப்பட்ட தலை களின் ஓலமாக எழுகிறது.

தீட்டிய அரிவாளுக்குத் தெரிவதில்லை/வெட்டி எறியப்பட்ட தலைகளின் வலியும் வீரியமும் என்பதாகவும் இது அடையாளம் பெறுகிறது. மரணம் கொலைச் செயல்களாக மறுவடிவம் பெறுகிறது. சாதீயத்தின் மோதல்களால் தலித்துகளின் மீதான ஒடுக்குமுறை நிழலாகப் படர்கிறது.

இங்கு ஒவ்வொரு முறையும் அடித்துக் கொல்லப் பட்ட போதும் தினமும் வந்துகொண்டுதானிருக் கின்றன பாம்புகள் என சாதாரணமாக எழுதிச் செல்கையில் ஒரு அசாதாரணத்தன்மை கவிதைக்குக் கூடிவந்துவிடுகிறது.

மீண்டும் மீண்டும் பிணங்களைப் பார்த்தபோதும்/இறந்துவிடுவது ஒன்றும்/எளிதானதாக இல்லை. என்பதாக இறப்பின் மீதான இயலாமையினையும் வெளிப் படுத்திச் செல்கிறது.

பாலியல் அரசியலைப் பேசும் குறியீட்டுச் சொல் லாடல்களில் விளிம்புநிலைப் பெண்ணின் குரல் மிகுந்த துயரத்தோடு கேட்கிறது.

பாழ்மண்டப இருளில், ரகசிய இரவொன்றில் அவன் சொன்ன போதை மிகுந்த சொற்களில் தன்னை இழக்கிறாள். நெஞ்சில் முட்டும் துயரம் கண்களில் கனத்து தேயும் இரவில் இருளை வளர்க்கிறது. காதலையும் காமத்தையும் வேட்கையோடு பேசும் வளர்முலை பார்த்து குறுகுறுத்த தன்னுடலின் பருவமாற்றத்தில் அவன் வருடிக் கொடுத்த ஸ்பரிசத்தின் நினைவு அவ்வப்போது வந்து கொல்கிறது. அவன் இதழ்களின் தன்மை இப்போது நினைத்தாலும் சில்லிடச் செய்வதாகவே இருக்கிறது.

வன்புணர்வால் ஏற்படுத்திய வலி, உடலெங்கும் தகிப்பதாகவும் ஆற்றாமை, ஏமாற்றம், வன்மம் சூழ, அவளின் வயிற்றில் உண்டான கரு பழிதீர்க்கும் என நம்புகிறாள்.

இப்பிரதிகளில் பாலியத்தைக் கடந்து செல்லும் பெண் எதிர்கொள்ளும் பாலுணர்வுச் சிக்கல் களையும், ஒரு ஆணின் ஸ்பரிசத்திலும் ஈர்ப்பிலும் ஏமாந்து போய், விளிம்புநிலைக்குத் தள்ளப்படுகிற பெண்ணின் வாழ்வையும் பேசுகிறார்.

இதற்கு முற்றிலும் எதிர்நிலையில் வேசி எனத் தெரிந்தும் முலைக்காட்சியின் கவர்தலில் புணர்ச்சி சுகம்நாடி பின்னால் ஓடுபவர்களைக் கண்டு பரிதாபப்படுகிறார். அந்த முகம் கிழித்து சாகசம் புரியவைக்கத் தவிக்கும் மனசு வலுவற்ற இறக்கை களுடன், காயங்களுடன் இருட்டில் பறப்பதாகவும் குறிப்பீடு செய்கிறார்.

கவர்ச்சி, விளம்பரங்கள், இலவசங்கள் பின்னா லோடிக் கொண்டிருக்கும் மக்களின் பொதுப் புத்தியின் மீதான விமர்சனத்திற்கு வேசி சொல் லாடல் பயன்பட்டிருக்கிறது. மலடிபோன்ற சொற் களும் இவற்றில் உள்ளடங்கும். இன்னொரு வகையில் இது பெண்ணுடல் மீது வெறுப்பை உமிழ்ந்த பட்டினத் தாரின் மறு உருவாக்கக் குரலின் சாயலாகவும் வெளிப்பட்டுவிடுகிறது. இவை பெண்மொழிக்கு எதிரான சொல்லாடல்களாகவே தன்னுணர்வற்ற நிலையில் இடம் பெற்றுள்ளன.

நாகராஜனின் கவிதைகளில் நடுத்தர வர்க்கத்தின் ஏலாமையும், மைய நீரோட்டத்திலிருந்து விலகிய விளிம்புநிலை மனிதர்கள் குறித்த அக்கறையும் இணைந்து வெளிப்படுகின்றன. செருப்பு தைப்பவனின் வாழ்க்கைச் சித்திரத்தைத் துண்டுபீடியின் புகை யோடும், கண்களின் கனலோடும் பதிவு செய்கிறார்.

சாக்கடை அருகில் கருவறைக் குழந்தை போலச் சுருண்டு முடங்கிக் கிடந்த யாசகனின் தெருவோரச் சித்திரம் இதில் மற்றொன்று. அழுக்கையும், ஓட்டை களையும் தவிர்த்துப் பார்த்தால் ஆடை எதுவுமற்ற அவனின் நிர்வாணம், சவரம் கண்டறியா முகம், குடியின்நெடி எல்லாமுமாக அந்தத் தெருவோரச் சித்திரத்தைப் படைத்துக் காட்டுகிறார். கழிவிரக்கம் கொள்ள நினைத்தபோது முடியவில்லை. இவனுக்கும் சேர்த்து தேசிய கொடி ஏற்றிய ஜனாதிபதியின் முன் பீரங்கி ஏவுகணைகள் அணிவகுத்தது நினைவுக்கு வருகிறது. அம்பானியின் சொத்தைமட்டும் சமபங் கிட்டால் இவனுக்கு ரூபாய் ஆயிரம் வரும் என்பதாக எண்ணும் மனக்குரலின் கவிதை இவ்வாறாக முடிகிறது.

அம்பானிகளிடமுள்ள என்பங்கை/இவனுக்கு மானசீகமாய் எழுதிவைத்துவிட்டு/மெதுவாக நடந்தேன்.

இந்திய தமிழகச் சூழலின் பொருளியல்சார் வர்க்க முரண்களையும், இருவேறுபட்ட வாழ்வு முரண்களையும் மிகவும் கூர்மையான விமர்சனத் தொனியோடு நாகராஜன் முன்வைக்கிறார். பெரு முதலாளியம் அழித்துப் போட்ட விளிம்புநிலை மக்களின் வாழ்வுபற்றிய புரிதலையும் பகடியின் வழியாக கலகத்தையும் மொழிவழி நடத்திக் காட்டுகிறார்.

இந்தவகையில் அடித்தள விளிம்புநிலை மக்களின் வாழ்வுக்காட்சியைத் தனது கவிதையில் நாகராஜன் வரைந்துகாட்டுகிறார். தலித்திய வாழ்வின் கடைக் கோடியாய் வாழ்கிற மலம் அள்ளும் தோழனின் வாழ்வுப்பதிவாக இது அமைகிறது. இருவேறு பட்ட அம்மாக்கள் இக்கவிதைக்குள் வருகிறார்கள். நள்ளிரவில் பன்றிக்குடில் கடந்து மலம் படிந்த குளக்கரைக்கு அப்புறத்தில் விகார காமத்தோடு வேசியைப் புணர்ந்துவிட்டு வருகிறான். நோய் பெற்று வந்த மகனின் காலில் முளைத்த கொப்புளங்களில் மஞ்சள்தடவிய அம்மாகழிப்பு பிண்டம் தாண்டினாயா என அப்பாவித்தனமாய் ஏதுமறியாமல் கேட்கிறாள். இக்கவிதையில் இடம்பெறும் இன்னொரு அம்மா தன் மகனிடம் என்ன கேள்விகேட்பாளெனக் கேட்கும் கேள்வியோடு கவிதை முடிகிறது.

உடலில் மண்ணெண்ணெய் தடவி/சாராயம் குடித்து/மலக்குழிக்குள் இறங்கியவனிடம்/அவன் அம்மா என்ன கேட்பாள்.

எண்பதுகளின் இறுதியில் துவங்கிய போராட்டத்தில் சிங்களப் பேரினவாதத் தாக்குதலில் இரண்டுலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறார்கள். எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த அகதிகளாய் இருப்பிடமற்று அலை பாய்கிறார்கள். கனடா, பிரிட்டன், பிரான்ஸ் என ஐரோப்பிய நாடுகளில் இரண்டரை லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள்.

ஈழமக்கள் மீதான இன அழிப்பின் உச்சகட்டமாக 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் கடலோரக் கிராமத்தில் நாற்பதினாயிரம் தமிழர்கள் இனப் படுகொலைசெய்யப்பட்டார்கள். தமிழ்நதி, சேரன், கிபி அரவிந்தன், திருமாவளவன் என நீண்ட வரிசையில் கவிகள் இந்த இனப் படுகொலையின் குரூரத்தைப் பதிவுசெய்துள்ளனர். பிணங்களோடு வாழ்தல் என்னும் கவிதையில் இளைய அப்துல்லாஹ் இவ்வாறு எழுதிச் செல்வார்.

புணர்ந்து புணர்ந்து சக்கையாகிய/ பெண்ணுடலின் யோனிக்குள்/குண்டுவைத்து தகர்த்துப் போகிறான் ஒருவன்/கேலிகேலியாக வெட்டிய குழந்தையை/கயிற்றில் தொங்க

விட்டுப் போகிறான் இன்னொருவன்/வாய்க்குள் துப்பாக்கி வைத்து/சன்னம்பாய்ச்சி சிரிக்கிறான் இன்னொருவன்/வெட்டுதல் கூறு போடுதல் எரித்தல் கதறுதல் புணர்தல் என்றெல்லாம் செய்து விட்டு/ இறுதியில் பிரேதம் செய்கிறான்./பூர்வீகக் குடிகளாய் வாழ்ந்த வரலாற்றையும் மீள்வாசித்துப் பார்க்கிறது./தாம் கோலோச்சிய எழிலார்ந்த மனபிம்பங்கள்/எங்கேனும் காணக் கிடைக்குமென்று/புராதன நிலங்களில் புதையல்கள் நாடும் ஒருகூட்டம் பறவைகள்...

கண்களில் ஒளியும் கையில் துப்பாக்கியும் கழுத்தில் சயனைடு குப்பிகளுமாய்க் காவு கொள்ளப் பட்ட வாழ்க்கை அலைபாய்கிறது. குறிகள் துப்பிய விஷங்கள் ஏந்திய யோனிகள் சிதைக்கப்படுகின்றன. கொப்பளிக்கும் குருதியில் உறையும் கண்களும் சிதைந்த உடல்களின் ஓலங்களில் கிழிந்த செவிகளும் பயத்தில் உறைந்து சுருங்கும் விதைகளுமாக அழித் தொழிக்கப்பட்ட ஈழமக்களின் வாழ்வின் துயரைத் தனது கவிதையின்வழி பேசி இதயங்களை ஊடுருவிச் செல்கிறார்.

மரணமும் புரட்சியும் நொடியில் நிகழ்வன என்பதறியாமல்/விளையாடிக் கொண்டிருக்கிறாய்/பழிதீர்க்கும் குரலையும் சொல்லாமல் விட்டுவிடவில்லை.

கவி.ந. நாகராஜன் விளிம்பின் வாழ்வையும் ஒடுக்குமுறைக்கும் அதிகாரங்களுக்கும் எதிரான வன்மமிக்க குரலையும் தனது கவிதைகளில் இடையறாது ஒலிக்கச் செய்துள்ளார்.

இவரது கவிதை நான் நவீனத்துவத்தின் அந்நியப் பட்ட நான் அல்ல. விளிம்புநிலை மக்களின் நான். பிச்சை எடுப்பவனோடும், வேசியோடும், தெருவோரக் குடியனோடும், செருப்புதைப்பவனோடும், மலம் அள்ளும் தோழனோடும், ஈழத்தமிழனின் குருதியோடும் தன்னை இணைத்துக் கொள்ளும் விளிம்பு நிலை நானாக உருமாறி இருக்கிறது. தமிழ் படைப்புச் சூழலில் கலகத்தொனி நிறைந்த எதிர்ப்பின் கவிதைகளாகவும் இவற்றைச் சொல்லலாம்.

சித்திரம் வரைந்த குழந்தை

ஆசிரியர் : ந. நாகராஜன்

வெளியீடு: என்.சி.பி.எச்.

விலை: ரூ.45.00