1917-ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சிக்குப் பிறகு புதிய மனிதனை உருவாக்குவதே சோவியத் ரஷ்ய இலக்கியத்தின் நோக்கம் என்று அறிவிக்கப் பட்டது. உலகத்தை மாற்றியமைக்கும் பேராற்றல் கொண்டவன் மனிதன் என்று புகழப்பட்டது. ‘மனிதன் மகத்தானவன்’ என்ற கருத்து எங்கும் எதிரொலித்தது. சமத்துவம், உழைப்பைப் போற்றும் குணம், சகிப்புத்தன்மை, பகிர்ந்துகொள்ளுதல், குழு மனப்பான்மை, ஒற்றுமை, போராடுதல் ஆகிய பண்புகள் விதந்தோதப்பட்டன. இப்புதிய பண் பாட்டிற்கு ஏற்ப சோவியத் குழந்தை இலக்கியமும் உருவாக வேண்டும் என்ற முயற்சி மேற்கொள்ளப் பட்டது. புகழ்பெற்ற எழுத்தாளரான மாக்சிம் கார்க்கி இம்முயற்சிக்குக் தலைமை தாங்கினார்.

ஏராளமான குழந்தை இலக்கிய நூல்களை வெளியிட ‘ராதுகா பதிப்பகம்’ தொடங்கப்பட்டது. ராதுகா’ என்றால் ‘வானவில்’ என்று அர்த்தம். வானவில்லின் ஏழு நிறங்களைப் போல ஏழு துறை களுக்கு ஏழு எழுத்தாளர் குழுக்கள் ஏற்படுத்தப் பட்டன. குழந்தைகளின் வாழ்க்கை, கல்விக் குழு விற்கு, ஆன்டன் மெக்கரன்கோ, அறிவியலுக்கு எம்.இலியீன், இயற்கைக்கு விட்டலி பியாங்கி, வீர தீரக் கதைகளுக்கு அலெக்சாண்டர் கிரீன், தேவதைக் கதைகளுக்கு யூரி ஒலிஸ்கா, விஞ்ஞானக் கதைகளுக்கு அலெக்சாண்டர் பிலெய்யாவ், புராண நாடோடிக் கதைகளுக்கு எல்.பேன்டெலியெவ் தலைமை தாங்கினர். 

புராண- நாடோடிக் கதைகளையும் தேவதைக் கதைகளையும் வெளியிட எதிர்ப்பு எழுந்தது. இக் கதைகள் எதார்த்தத்திற்கு எதிரானவை என்ற வாதம் வைக்கப்பட்டது. இக்கதைகளின் முக்கியத்துவத்தை விளக்கி மாக்சீம் கார்க்கி ஆதரவாக இருந்தார். ‘இதயம் தருவோம் குழந்தைகளுக்கு’ என்ற நூலை எழுதிய வசீலி சுகம்லீன்ஸ்கி, ‘குழந்தைகளின் அறிவாற்றல் பயிற்சியிலும் அழகியல் பயிற்சி யிலும் பண்டைய புராண- நாடோடிக் கதைகள் மிகப் பெரும் பங்கு வகிக்கின்றன. புராணங்கள் மனித இனக் கலாசாரத்தின் வியத்தகு பக்கங் களைக் குழந்தைகள் முன்னே விரித்துக் காட்டுவது மட்டுமின்றி, கற்பனையைத் தூண்டிவிடுகிறது, அறிவை வளர்க்கிறது, தொலைதூரப் பழங்காலத்தில் ஓர் அக்கறையை ஏற்படுத்துகிறது என்று புராண, இதிகாச, நாடோடிக் கதைகளுக்கு ஆதரவாகத் தனது கருத்தை ஆணித்தரமாக வைத்தார்.

‘குழந்தைகளை வளர விடுங்கள்’ என்பது சோவியத் ரஷ்யாவின் தந்தை லெனினின் கருத்தாக இருந்தது. எதையும் படிக்கக்கூடாது என்பது சரியல்ல. எல்லாவற்றையும் படித்துத் தாமே சிந்தித்து முடிவுக்கு வரக் குழந்தைகளுக்கு வாய்ப்பு தரப்பட வேண்டுமென்பதை அவர் ஏற்றுக் கொண்டார்.

குழந்தைகளின் மீது அவர் நம்பிக்கை கொண் டிருந்தார். அதற்குக் காரணம் ஒரு சம்பவம். ஒரு சமயம் லெனின் ஒரு பள்ளிக்குச் சென்றிருந்த போது மாணவர்கள் ஓவியங்கள் வரைந்து கொண் டிருந்தனர். அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பொருள்: ‘ஜன்னல் வழியாக ஆகாயம்’. நீலவானம், செந்நிற வானம், வெண் பஞ்சு மேகங்கள் மிதக்கும் வானம் என்று பலரும் பல வண்ணங்களில் ஓவியங்கள் தீட்டியிருந்தனர். ஒரு மாணவன் மட்டும் வானத்தைக் கருப்பு நிறமாகத் தீட்டியிருந்தான். அவன் தாளில் கருப்பு வண்ணத்தைத் தவிர வேறெதுவுமில்லை.

‘வானம் இப்படி இருக்குமா?’ என்று கேட்டார் லெனின்.

‘எனக்குத் தெரிந்த வானம் இதுதான்’ என்று பதிலளித்தான் மாணவன்.

லெனின் நம்பவில்லை என்பதை அறிந்த அந்த மாணவன் அவரைத் தன் வீட்டிற்கு அழைத்தான்.

லெனின் மாணவனின் வீட்டிற்குச் செல்லத் தயங்கவில்லை. தன் வீட்டின் ஜன்னலை திறந்து காட்டினான் மாணவன், அது வழியாக லெனின் பார்த்தார். ஜன்னலின் வழியாகத் தெரிந்த வானம் கருமையாக இருந்தது. அருகிலிருந்த மில்லின் புகைப் போக்கிகள் கக்கிய கரிய புகை சூழ்ந்து வானம் அவ்வாறு தெரிந்தது. மாணவனின் ஓவியத்தில் வெளிப்பட்ட எதார்த்த உண்மையை லெனின் பாராட்டினார். அந்த ஓவியமே பரிசு பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

லெனின் வழிகாட்டுதலோடு கார்க்கியின் தலைமையில் ஈடுபாடுமிக்க எழுத்தாளர் குழுக்கள் குழந்தை இலக்கியத்தைப் படைத்தன. இதனால் சோவியத் குழந்தை இலக்கியம் சிகரத்தைத் தொட்டது. தங்களுக்கு எத்தகைய கதைகள் பிடிக்கும் என்று குழந்தைகள் தனக்குத் தெரிவிக்கு மாறு கார்க்கி அறிவித்தார். குழந்தைகளின் விருப்பங் களின் அடிப்படையில் நூல்கள் வெளியிடுமாறு செய்தார்.

“உலகின் சிறந்த கதைகளை எல்லாம் திரட்டி ‘ராதுகா’ வெளியிட்டது. நம் இந்தியக் கதைகள் மகாபாரதம், இராமாயணம், பஞ்சதந்திரக் கதைகள் அழகிய வண்ணப் படங்களுடன் வெளிவந்தன.

இவ்வாறு கடவுள்கள், தேவதைகள், அரக்கிகள் வருவதை சோவியத் குழந்தை இலக்கியம் ஏற்றுக் கொள்கிறது. குழந்தை இலக்கியம் கற்பனையானது தான். குழந்தைகளின் அறிவு எல்லைக்கு உட்பட்டது அல்ல. குழந்தைகளும் வரையறுக்கப்பட்ட அறிவுக்கு உட்பட்டவர்கள் அல்லர். அதனால் அவர்கள் கற்பனை உலகத்தில் வாழ்கிறார்கள். சோவியத் குழந்தை இலக்கியம் குழந்தைகளின் கற்பனை உலகத்தைச் சார்ந்திருந்தது. அதனால் ராதுகா பதிப்பகம் சோவியத் மக்களது நாட்டுப்புறக் கதை களை எல்லாம் தொகுத்து ‘நவரத்தின மாலை’ என்ற அருமையான தொகுப்பை வெளியிட்டது.

குழந்தைகள் தாய்நாட்டை நேசிக்க, நாட்டை உருவாக்க, உழைத்த தனிச்சிறப்புமிக்க மனிதர் களின் வரலாற்றைத் தெரிந்துகொள்வது முக்கிய மானது. ஸெ. அலெக்ஸேயெவ் எழுதிய ‘ருஷ்ய வரலாற்றுக் கதைகள்’ என்ற நூலில் மக்களுக்காக உயிர் நீத்த ஸ்டெப்பான் ராஸின் என்ற கலகக் காரனின் கதை இடம்பெற்றிருப்பது சோவியத் குழந்தை இலக்கியத்தின் மக்கள் சார்ந்த வரலாற்றுப் பார்வையை வெளிப்படுத்தியது.

மனிதனின் மகத்தான சாதனைகளுக்கு அடிப் படை அறிவியலே. அதனால் குழந்தைகளுக்கு அறிவியல் அறிவைப் புகட்டவும் அறிவியல் மனப் பான்மையை ஏற்படுத்தவுமான ஏராளமான நூல் களை சோவியத் குழந்தை இலக்கியம் தன்னகத்தே கொண்டிருந்தது. அறிவியல் குழுவிற்குப் பொறுப் பான எம். இலியீன், யா.ஸெகால் ஆகியோர் எழுதிய ‘மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன்’ என்ற நூல் அற்புதமான ஒன்று.

குழந்தைகளின் வாழ்க்கை இயல்புகளைச் சித்திரிக்கும் நடப்பியல் கதைகளையும் சோவியத் பதிப்பகங்களான முன்னேற்றப் பதிப்பகம், மீர் பதிப்பகம் வெளியிட்டன. நிக்கலாய் நோசவ் எழுதிய ‘விளையாட்டுப் பிள்ளைகள்’, ஓ. பெரோவ்ஸ்கயா எழுதிய ‘குழந்தைகளும் குட்டி களும்’ ஆகியன குறிப்பிடத்தக்கவை. அலெக் சாந்தர் ரஸ்கின் எழுதிய ‘அப்பா சிறுவனாக இருந்தபோது’ என்ற நூல் குழந்தை இலக்கியத்தில் புதிய சாளரத்தைத் திறந்து வைத்தது. சோவியத் குழந்தை இலக்கியத்தில் போற்றத்தக்க அம்சம் என்னவென்றால் புகழ்பெற்ற பெரிய எழுத்தாளர் களான டால்ஸ்டாய், கார்க்கி, புஷ்கின், துர்க்னேவ், செகாவ், குழந்தை இலக்கியம் படைத்ததுதான். நம் தமிழ், குழந்தை இலக்கியத்தில் இப்போக்கு குறைந்து காணப்படுகிறது. ஜெயகாந்தன் ‘பாரதி பால பாடம்’ எழுதினார். இராஜாஜி, அகிலன் ஆகியோர் ஓரிரு படைப்புகளைத் தந்தனர். அவ்வளவுதான்.

புதிய யுகத்தின் குறியீடாக சோவியத் குழந்தை இலக்கியம் திகழ்ந்தது. சோவியத்தில் ‘கிருதயுகம்’ பிறந்து விட்டதை ‘வையகத்தீர், புதுமை காணீர்’ என்று முதன்முதலில் பாடி வரவேற்றவர் நம் மகாகவி பாரதி. அவர் குழந்தைகளுக்காகப் பாப்பா பாட்டை மட்டுந்தான் எழுதியிருப்பதாக எண்ண வேண்டாம். கவிதையை எளிமையாக்கி யவர் பாரதி. அவர் எழுதிய பாரத சமுதாயம், முரசு, புதிய ஆத்திசூடி ஆகியன குழந்தை இலக்கியந் தான். ‘முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழு மைக்கும் பொது உடைமை’ என்றும், ‘பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்- பிறர் பங்கைத் திருடுதல் வேண்டாம்’ என்றும், ‘புதியன விரும்பு, கொடு மையை எதிர்த்து நில், வேதம் புதுமை செய்’ என்றும் பாரதி பாடியிருப்பது சோவியத்தின் தாக்கத்தினாலாகும்.

பாரதிக்கு தாசனான புரட்சிக்கவிஞர் பாரதி தாசனும் இளைஞர் இலக்கியத்தில் ‘தமிழ்நாட்டில் உருசிய நாட்டையும் உண்டாக்கித் தீர்த்திடலாம்’ என்றும், ‘புத்துலகப் பொதுஉடைமை புதுக்கும் நாள் எந்நாள்? புரட்டு முதலாளியத்தைப் போக்கிடும் நாள் எந்நாளோ?’ என்றும் பாடியிருப்பது சோவி யத்தின் தாக்கத்திலேயாகும்.

உலகத்தில் பொதுமை ஆட்சி செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தவே பாரதிதாசன் ஆத்தி சூடி எழுதினார். அதில் ‘ஆட்சியைப் பொதுமை செய், உடைமை பொதுவே, கொடுத்தோன் பறித் தோன், கோனாட்சி வீழ்த்து, நைந்தார்க்கு உதவி செய்,’ என்று கூறினார்.

பொதுவுடைமை இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் திரைப்படப் பாடல்கள் எழுதியவர். திரைப் படப் பாடல்களான ‘தூங்காதே தம்பி தூங்காதே, சின்னப் பயலே, சின்னப்பயலே சேதி கேளடா, திருடாதே, பாப்பா திருடாதே ஆகியவற்றில் சமுதாயச் சிந்தனைகள் எதிரொலித்தன.

குழந்தையின் உள்ளம் மாசற்றது. பழைய மதிப்பீடுகள் குழந்தையின் உள்ளத்தை அழுக் காக்கி விடும். புதிய மதிப்பீடுகளை முன்வைத்த சோவியத் குழந்தை இலக்கியத்தின் தாக்கம் பெற்ற தாகவே கவிஞர் தமிழ் ஒளியின் இக்குழந்தைப் பாடலை நான் கருதுகிறேன். ‘பாடு பாப்பா’ என்ற நூலில் இடம் பெற்றது.

‘நகை வேண்டாம் பாப்பா’

“பச்சைக் கிளிக்கு நகையில்லை!

பாடுங்குயிலுக்குக் கணியில்லை!

இச்சை மைனாப் பறவைக்கும்

ஏதும் கழுத்தில் நகையில்லை!

கச்சை சதங்கை யில்லாமல்

காட்டில் ஆடும் மயிலுக்கும்

உச்சிக் கொண்டை நகையில்லை!

உனக்கேன் பாப்பா நகையெல்லாம்!”

மனிதனை முன் நிறுத்திய சோவியத் குழந்தை இலக்கியத்தின் தாக்கத்தால் கவிஞர் நாரா. நாச்சி யப்பன் நிறைய சிறுவர் பாடல்களை எழுதினார்.

‘உலகினிலுள்ள உயிர்களிலெல்லாம்

உயர்ந்தவன் மனிதன் இது உண்மை

வலுவினிலேனும் அறிவினிலேனும்

மனிதனுக்கெதுவும் நிகரில்லை’

என்று மனிதனைப் போற்றியும்,

‘உயர்வு தாழ்வாம் ஏற்பாட்டை

                ஒழித்து மக்கள் ஒரு நிகராய்ப்

பயின்று பழகி வாழ்ந்திடவே

                பாதை வகுத்தான் லெனின்தானே!’

என்று லெனினைப் பாராட்டியும் அவர் எழுதினார்.

சமுதாய இயலையும் அறிவியலாக்கினார் கார்ல் மார்க்ஸ் என்று அவரை விஞ்ஞானிகள் வரிசையில் வைத்து, தமிழ்க் குழந்தைகளுக்குப் புதிய கோணத்தில் அறிமுகப்படுத்திப் பாடினார் கவிஞர் செம்பை சேவியர்.

சுற்றுச்சூழலோடும் இயற்கையோடும் இயைந்து வாழ்வதே குழந்தைகளின் உள்ளத்தில் மானுட அன்பை நிரப்பித் ததும்ப வைக்கும் என்ற உணர்வை வலியுறுத்தும் பாடல்களை பாவலர் ம.இலெ. தங்கப்பா ‘மழலை விருந்து’ என்னும் நூலில் வழங் கினார். சோவியத் குழந்தை இலக்கியம் வெளிப் படுத்தும் உணர்வுகளுக்கு நெருக்கமான பாடல்கள் இவை. ம.இலெ. தங்கப்பா ‘சோளக் கொல்லைப் பொம்மை’ என்ற நூலுக்குக் குழந்தை இலக்கியத் திற்கான சாகித்ய அகடமி பரிசைப் பெற்றவர்.

மழையில் நனைந்தால் உடம்பு கெட்டுவிடும் என்று குழந்தைகளைத் தடுக்கும் இந்நாளில் இயற் கையை அனுபவிக்கச் சொல்லுகிறது தங்கப் பாவின் ‘வாராய் தம்பீ வாராய்’ என்ற பாடல்,

‘மழையில் நனைவோம் வாராய்,

செயற்கை வாழ்வின் தீமை காட்டும்

சிறுமை உடைகள் களைந்தெறி; வாராய்,

இயற்கை அன்னை அழைப்பொலி கேளாய்;

இனிதாய் அணைக்கும் கைகளில் தோய்வாய்’.

இயற்கையின் மீதும் அழகின் மீதும் குழந்தை களின் கவனத்தைத் திருப்பும் பாடல்கள் மழலை விருந்தில் நிறைய உள்ளன.

‘நீர் யார்? என்கின்றீரா? ‘நான் யாராயிருந் தால் என்ன? என் முகவரியை என் கவிதைகளில் தேடுங்கள்’ என்று தன்னம்பிக்கையோடு பேசிய தண்டரை முகில் வண்ணன் தமிழ்க் குழந்தை இலக்கியத்தில் ‘புது மழை’யாக வந்தவர்.

‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்’ என்று முன்பு தமிழ் குழந்தை இலக்கியம் இறை வனை முன் நிறுத்தியது. சோவியத் குழந்தை இலக் கியத்தின் தாக்கத்தினால் தமிழ்க் குழந்தை இலக் கியத்திலும் மனிதனை முன் நிறுத்தும் போக்கு எழுந்தது. முகில் வண்ணன் ரஷ்ய சிறுவர் கதையைத் தழுவி இப்பாடலைப் ‘புது மழை’ நூலில் எழுதியுள்ளார்.

அந்நூலில் ‘யார் அதிக பலசாலி?’ என்ற கதைப்பாடல் அண்ணன், தம்பிகளுக்கு இடையே நடைபெறும் உரையாடலாக எழுதப்பட்டுள்ளது.

தம்பி  :               அண்ணா, எனக்கொரு சந்தேகம்... அகிலத்தில் யார் மிக பலசாலி?

அண்ணன்     :               என் விடை முடிவில் சொல்லுகிறேன். உன் பதில் என்ன? நீ சொல்லு!

தம்பி  :               எனக்குத் தெரிந்த உயிரினத்தில் யானை தான் பலசாலி!

அண்ணன்     :               ஒன்பது யானை பலங்கொண்ட ஓருயிர் இனமது- திமிங்கிலமாம்!

தம்பி  :               அதிசயம்! அந்த திமிங்கிலந்தான் அனைத்திலும் வலியதா? சொல் அண்ணா!

அண்ணன்     :               துள்ளும் திமிங்கிலம் நான்கைந்தைத் தூக்கிட வல்லது ‘கிரேன்’ ஒன்றே!

தம்பி  :               ஆகா! ‘கிரேன்’ தான் உலகத்தில் அதிக வலிமை உள்ளதுவா?

அண்ணன்     :               ஆறு ‘கிரேன்’களை இழுக்கின்ற ஆற்றல் பெற்றது ‘இரயில் எஞ்சின்’

தம்பி  :               அற்புதம்! அற்புதம்! ‘இரயில் எஞ்சின்’ அனைத்திலும் பெரிய பலசாலி.

அண்ணன்     :               முப்பது எஞ்சினைச் சேர்ந்தொன் றாய் கப்பல் நீரில் கடந்திடுமே!

தம்பி  :               அப்படியானால் கப்பல்தான் அதிக வலிமை உடையதுவோ?

அண்ணன்     :               கப்பலை விடவும் பலசாலி கண்டது மில்லையா நீ எங்கும்?

தம்பி  :               உரிய விடையைச் சொல் அண்ணா! உலகில் யாரோ பலசாலி?

அண்ணன்     :               யானையை அடக்கிப் பழக்குவதார்? திமிங்கில வேட்டை நடத்துவதார்?                 ‘கிரேனை’ச் செய்தே இயக்குவதார்? ‘இரயிலை’ இணைத்தே ஓட்டுவதார்?                 கப்பலைக் கட்டிச் செலுத்துவதார்? கண்டு கொள் அவரே பலசாலி...!

தம்பி  :               அறிந்தேன்! அறிந்தேன்! ‘மனிதன்’ தான் அனைத்திலும் மிகமிகப் பல சாலி!

சோவியத் குழந்தை இலக்கியம் பெரு மழை யாகப் பெய்தது. மழையின் சிறுதுளி களையாவது மொழிபெயர்ப்பின் வழியாகப் பருகும் வாய்ப்பைத் தமிழ்க் குழந்தைகள் பெற்றது பெரும் பேறே! சோவியத் குழந்தை இலக்கிய நூல்களின் விற்பனை யாளராகவும் விநியோகஸ்தராகவும் இருந்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அப்பெரும் பேற்றை வாய்க்கச் செய்தவர்கள். அதுமட்டுமல்ல, சோவியத் குழந்தை இலக்கியம் தந்த உந்துதலை மேலும் விரிவடையச் செய்யும் பணியையும் என்.சி.பி.எச். நிறுவனம் செய்தது. தமிழ்க் குழந்தைகளுக்கு அறிவியல் பார்வையை ஏற்படுத்த உதவும் சிறுவர் நூல்களை வெளியிட்டது. பாவலர் தமிழியக்கன் எழுதிய தாவரவியல் பற்றிய சிறுவர் பாடல்கள் கொண்ட ‘நிலைத் திணைப்பாட்டு’ ‘உயிரியல் பாட்டு’, குழந்தைவேலன் எழுதிய ‘காற்றின் கதை’, பேரா சிரியர்கள் நா.வானமாமலை, எஸ்.தோத்தாத்ரி எழுதிய ‘ரப்பரின் கதை’ ‘இரும்பின் கதை’, பிறை யணிவோன் எழுதிய ‘இரயிலின் கதை’ ச.சதாசிவம் எழுதிய ‘அறிவியலைப் பாடுவோம், ஜெயராமன் எழுதிய ‘ஆர்வமூட்டும் சிறுவர் அறிவியல்’ ‘கல்வி’ கோபால கிருஷ்ணன் எழுதிய ‘மாயாவிகள்’, ‘பறக்கும் பாப்பா’ என்று நிறைய நூல்களை வெளி யிட்டு விஞ்ஞான அறிவைச் சிறுவர்களிடையே பரப்புவதைக் கடமையாகக் கொண்டு என்.சி.பி.எச். நிறுவனம் செயல்பட்டது. இதைப் பாராட்டி, குழந்தை எழுத்தாளர் சங்கம் என்.சி.பி.எச். நிறுவனத் திற்கு விருது தந்தது.

நெல்லை சு.முத்து, லூர்து எஸ்.ராஜ் ஆகியோர் வானவியல், தாவரவியல், உயிரியல் சார்ந்த உண்மை களைக் கதை நூல்களாக்கி உள்ளனர். குழந்தை எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் ஆதிவாசிச் சிறுவன் நீலனைச் சிறந்த மனிதப் பண்புகளைக் கொண்ட பாத்திரமாகப் படைத்து, தமிழ்க் குழந்தை களுக்கு ஒரு முன் மாதிரியை உருவாக்கியுள்ளார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சோவியத் குழந்தை நூல்கள் பாணியில் நிறைய அறிவியல் நூல்களை வெளியிட்டது. கே.கே. கிருஷ்ணகுமார் எழுதிய இயற்கை, விஞ்ஞானம், மனிதன், வாழ்வே அறிவியல், மனிதன் மகத்தானவன் ஆகிய நூல்கள் வரலாற்றை இயக்கவியல் அடிப்படையில் விளக்கும் எளிய நூல்களாகும். ஈழத்தமிழ் எழுத்தாளர் களான செ.கணேசலிங்கன், செ.யோகநாதன் ஆகியோரும் மகளுக்கு, மகனுக்குக் கடிதம் என்ற தலைப்புகளில் மார்க்சிய சமுதாய சிந்தனைகளைத் தமிழ்க் குழந்தைகளுக்குத் தந்துள்ளனர்.

சோவியத் இலக்கிய நூல்கள் பெரிய அளவில் கெட்டி அட்டையோடு பல வண்ணப் படங்களோடு இருந்தன. உருவத்தில் மட்டுமல்ல, உள்ளடக்கத்திலும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியையும் அறிவையும் மனிதப் பண்புகளையும் கொடுத்த அவை என்றும் மறக்க முடியாதவை. தமிழ், குழந்தை இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் அவை ஏற்படுத்தி யுள்ளன.