சாதிய வரலாறுகள் அனைத்தும் பொது வாக கி.பி. 9ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே ஆரம்ப மாகின்றன. அப்படிப் பார்க்கும்போது இன்றுள்ள சாதிகள் அதற்கு முன்பு என்னவாய் இருந்திருக்கும்? நிலவியல் அடிப்படையிலும், தொழில் அடிப்படை யிலும், பண்பு நலன்கள் அடிப்படையிலுமே குடிகள் என்ற பெயரிலும், குலங்கள் என்ற பெயரிலும் அமைந்திருந்தன. பிற்காலத்தில் சமயங்கள் அடிப் படையிலும் சாதிகள் பலவாய்த் தோன்றின.1

குமரிக் கண்ட காலத்தில் மக்கள் ஏழு குடி களாய் வாழ்ந்தனர் (தமிழ் வரலாறு. ஞா. தேவ நேயப் பாவாணர்.ப. 14) அவர்கள் ஏழ்தெங்க நாடு, ஏழ் மருத நாடு, ஏழ் முன் பாலை நாடு, ஏழு பின் பாலை நாடு, ஏழ் குன்ற நாடு, ஏழ் குணகரை நாடு, ஏழ் குரும்பணை நாடு ஆகிய நாற்பத்தி ஒன்பது நாடுகளில் ஏழ் குடியினரும் வாழ்ந்தனர்.

பழங்காலத்தில் குறிஞ்சி நிலத்தை விட முல்லை நிலத்திலும், முல்லை நிலத்தை விட மருத நிலத்திலும், செந்நெல்லும் வெண் நெல்லும் மிகுதியாக விளைந்ததாலும், மக்கள் பெருக்கமும், மக்கள் பெருக்கத்திற் கேற்ப ஊர்ப் பெருக்கமும், ஊர்ப் பெருக்கத்திற்கேற்ப நாகரிகமும் பண்பாடும், தொழிலும் அரசியலும், மொழியும் வளர்ச்சி யடைந்தன.

மருத நிலத்தில் உழவுத் தொழில் வளரவளர முழுநேர உழைப்பு வேண்டியிருந்தது. அதற்குப் பல புதுப்புதுக் கருவிகள் வேண்டியிருந்தன. வாழ்க் கையில் நாகரிகம் வளர வளர புதிது புதிதாகப் பற்பல தேவைகள் தோன்றின. எல்லார்க்கும் எல்லா வேலைகளையும் செய்ய இயற்கையாகவே பல தொழில்கள் ஏற்பட்டன.

அறிவு வளர்ச்சி ஏற்பட்டதால் உழவு, வணிகம், காவல், கல்வி என்னும் நாற்பெரும் தொழில்கள் பற்றி மருத நில மக்களே அரசனாகவும், அந்தண னாகவும், உழவராகவும், வணிகராகவும் இவர் களுக்குப் பக்கத் துணையாகப் பதினெண் கை வினைஞர்களும் பிரிந்து சென்று பணியாற்றினர். குடிகளையும், மக்களையும் காப்பதால் காவலன், மன்னன், அரசன், வேந்தன் என்று ஒரு பிரிவாகவும்; அந்தணர், பார்ப்பார் என்பவர்கள் கல்வியின் பொருட்டு ஒரு பிரிவாகவும்; வணிகம் செய்ய ஒரு பிரிவினரும், உழவுத் தொழிலை மேற்கொண்டு மக்களுக்கு உணவளித்தும் வந்ததால் உழவர் என்றும்; விருந்தினரைப் பேணி வந்ததால் (வேளாண் மக்கள்) வேளாளர் என்றும்; கைத் தொழிலை மேற்கொண்டதால் கைவினைஞர், வினைவலர் என்றும் தத்தமது பணிகளைச் செம்மையாய்ச் செய்து வந்தனர். நாகரிகமும், அரசியலும், வாணிகமும், தொழிலும் வளரவளர நூற்றுக் கணக்கான தொழில்கள் புதிதுபுதிதாய் ஏற்பட்டன.2

சங்க காலத்தின் பிற்பகுதியிலும், சங்கம் மருவிய காலப் பகுதியிலும் பலம் வாய்ந்த அரசுகள் தோன்றி யதன் விளைவாகத் தனியுடைமையின் பேரில் அரசுகள் நிலைநிறுத்தப்பட்டன. சமுதாயத்திலே வேலைப் பிரிவினை ஏற்படலாயிற்று. இந்த வேலைப் பிரிவினையே பிற்காலப் பகுதியில் சாதிப்படி நிலையாக நிலை நிறுத்தப்பட்டது.

பிறநாட்டு வணிகமும் இக்காலப் பகுதியிலே தமிழ்நாட்டுச் ‘செல்வ’ நிலைக்கு உதவிற்று. கைத் தொழிலும் விவசாயமும் பிரிந்தன. நகரம் நாட்டுப் புறத்திலிருந்து வேறுபட்டது. பெருகி வந்த உற் பத்தியின் விளைவாக உற்பத்தியிலே பங்கெடுத்துக் கொள்ளாத ஒரு வர்க்கம் தோன்றியது. உற்பத்தியில் பங்கெடுக்காமல் உற்பத்தி செய்த பொருட்களைப் பரிவர்த்தனை செய்வதில் மட்டும் ஈடுபடும் வர்க்கத்தை சிருட்டித்தது இக்காலப் பகுதியே. அந்த வர்க்கந்தான் ‘வியாபாரி’களின் வர்க்கம்.

வணிக வர்க்கம் சமுதாயத்திலே முக்கியமான தனத்தை வகித்த காலப்பகுதியிலேயே திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய சிறப்புமிக்க நூல்கள் தோன்றின. இவற்றின் முதல் தோற்றத்தைப் பட்டினப் பாலை, மதுரைக் காஞ்சி முதலிய பிற்காலச் சங்க நூல்களிலே காணலாம்.

வலுக் கொள்கையின் அடிப்படையிலே தோன்றிய அரசுகளின் பிரசவ காலத்திலே வந்து சேர்ந்த சமணமும் பௌத்தமும் சொத்துரிமை, சமுதாய ஒழுங்கு, சாதிப்பாகுபாடு ஆகியவற்றை வெவ்வேறு வழிகளில் ஏற்றன. சமணத் துறவியான தொல்காப்பியர் இயற்றிய நூலிலே இவையாவும் அங்கீகாரம் பெறுவதை நாம் காணலாம். மனிதனது அக வாழ்க்கைக்கும் புறவாழ்க்கைக்கும் ‘இலக்கணம்’ அமைத்த தொல்காப்பிய நூலார் சாதிப்பாகு பாட்டினை ஏற்றுக்கொண்டே (சாதியும் வர்க்கமும் இக்காலப்பகுதியில் கலக்கின்றன) தமது வரை விலக்கணங்களைக் கூறுகின்றார். கொல்லா மையைக் கையாளும் வர்க்கத்தினரான வணிகர் மற்றைய வர்க்கங்களின் மேல் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. பொருளாதாரத் துறையில் காணப்பட்ட இந்தச் செல்வாக்கின் காரணமாகச் சமுதாயத் துறையிலும் வைசியர் அல்லது வணிகரின் ஆதிக்கம் வலுத்திருந்தது. சிலப்பதிகாரம் இதனை நேரடி யாகவும் மறைமுகமாகவும் பிரதிபலித்துக் காட்டு கின்றது.3

சங்க காலத்தில் தொழில் வழிக் கூட்டமாய் இருந்தவை பல்லவர்கள் காலத்தில் பிறப்பு வழிச் சாதியாய் மாறியது. பிராமணிய சாதி பல்லவர்கள் காலத்தில் தமிழகத்துள் புகுந்த பல்லவர்களே ஆரியப் பண்பாட்டைப் பரப்புவதிலும் வட மொழியைக் காப்பதிலும் பிராமணர்களை உச்சிமேல் வைத்துப் போற்றுவதையும் வெறித்தனமாகக் கடைப்பிடித்தனர். கி.பி.10ஆம் நூற்றாண்டிலிருந்து வலங்கை இடங்கைச் சாதிகளாகப் பிரிந்தது.4

பல்வேறு சாதிகளின் தொகுப்பே வலங்கை, இடங்கைப் பிரிவுகள். முதலாம் இராசராசன் (கி.பி. 1012-1044) படையிலேயே வலங்கை வேளைக் காரப்படை என்ற ஒரு பிரிவு இருந்தது. ஆயின் முதலாம் குலோத்துங்கன் காலத்திய (கி.பி. 1091) கல்வெட்டில் (கல்வெட்டு எண். ஹசுநு 31/1936-37) இடங்கைச் சாதிகள் பற்றிய குறிப்பும், இடங் கைக்கும் வலங்கைக்கும் இடையிலான சண்டையும் குறிப்பிடப்படுகின்றன. இடங்கை, வலங்கைச் சாதிகளின் பட்டியலைக் கண்டால் இடங்கைச் சாதிகளை வணிகச் சாதிகளாகவும் வணிகத்தை ஒட்டிய கைவினைச் சாதிகளாகவும் காணலாம். முதலாம் குலோத்துங்கன் காலத்தில் ஓரளவு வணிகம் பெருத்ததனால் நகர்மயமாதல் ஏற்பட்டது என்றும், இக்காலத்தில் வணிகர்களைச் சார்ந்து நின்ற கைவினைஞர்களின் எழுச்சிகளாக இத்தகைய மோதல்கள் அமைந்திருக்கக்கூடும் என்றும் பர்ட்டன் ஸ்டெயின் கூறுவதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள லாம்; (முற்றிலும் அப்படியே ஒப்புக்கொள்ள இயலாது)5.

வலங்கையர் தங்கள் தொடக்க காலத்தில் இரும்பைத் தங்கமாக்கும் இரசவாத வித்தையினை அறிந்து தங்கத்தை உற்பத்தி செய்தனர். இப்பெரும் செல்வத்தால் வெங்கலத்தால் வீடு வைத்தும், கப்பல் வைத்து வியாபாரம் செய்த இவர்கள் வலங்கைப் படை என ஒன்றை வைத்து மற்ற வணிகர்களுக்கும் பாதுகாப்பாகவும் இருந்து வந்துள்ளனர். வலங்கைப் பிரிவில் வணிகர் முதலிடத்தையும், இடங்கைப் பிரிவில் கம்மாளர் முதலிடத்தையும் வகித்ததாகக் கல்வெட்டுகளிலிருந்து அறிய முடிகின்றது.

சோழப் பேரரசில் ஐந்நூற்றுவர் (அய்ந்நூற்றுவர்) கொண்ட வணிகர் கூட்டம் ஒன்று செயல்பட்டு வந்தது. இதிலடங்கிய வணிகர் இலங்கைக்குக் கடல் வணிகம் மேற்கொண்டிருந்தனர். அவர்களுக் கெனப் படைப்பிரிவு ஒன்று பாதுகாப்பாக இருந்தது. சோழ நாட்டின் தேவைக்காகப் பருத்தி, பட்டு போன்ற பொருள்களை ஈழத்திலிருந்து கப்பல் மூலமாகக் கொண்டு வருதலை இவ்வணிகர்கள் மேற்கொண்டிருந்தனர். கரையான் என்னும் வலைஞர்கள் இப்பொருள்களை நாசம் செய்தனர். இவ்வலைஞர்கள் இடங்கைக் குலத்துக்கேயுரிய இந்திர மாயாஜாலம் முதல் அடங்கப் படித்தவர். இவர்களுடைய அழிவுச் செயல்களைத் தடுக்க வழியறியாத வணிகர் தம் குறைகளைப் பலரிடம் கூறியும் விடிவு ஏற்படாது இறுதியில் 700 பேர் கொண்ட வலங்கைப் படை வீரர்களை அவர்தம் வீடுகளில் சென்று சந்தித்து இடங்கையின் செயல் களைக் கூறி முறையிட்டனர். வலங்கைப் படை வீரர் வலைஞரை அடக்கி வணிகர்க்கு மீண்டும் அவர்கள் தொழில் நடக்குமாறு செய்தனர். இதனால் வணிகர்கள், ‘தோளேறும் குமாரர்கள் என்றும், தோளேறும் பெருமாள்’ என்றும் வலங்கை வீரர்களுக்குப் பட்டம் கொடுத்து இலங்கையில் தமக்குட்பட்ட இடங்களை அப்படை வீரர்க்குரிய தாகவும் செய்து ‘இலங்கைக் கரசர்’ என்றும் உரிமை கொடுத்தனர். இந்நிகழ்ச்சி சீரிய சொற் சோழன் என்னும் வரதர் குலச் சோழன் காலத்தில் நடைபெற்றது.

சோழப் பேரரசில் ‘ஐந்நூற்றுவர் வணிகர்’ கூட்டம் இருந்தமையும், அவர்தம் பாதுகாப்பிற்கு வலங்கைப்படை என்னும் எழு நூற்றுவர் படையை நியமித்ததாகவும், அப்படை சோழநாடு - ஈழநாடு என்னுமிடங்களில் நிலைகொண்டிருந்தமையும், சோழப் பேரரசு வீழ்ச்சியடைந்த போது வணிகம் நின்று, அப்படை ஈழத்தில் வணிகர் பகுதிகளை நாடாண்டதாகவும் தெரியவருகின்றன.

அயோத்தி படை வீடு என அழைக்கப்பெற்ற வேங்கி நாட்டில் (திருப்பதிப் பகுதி) வெங்கலத்தைக் கண்ணாளர் (கம்மாளர்கள்) கண்டெடுத்துக் காவிரிப்பூம்பட்டினத்து வணிகர்க்கு விற்று வந்துள்ளனர். இடங்கை ஈட்டி வீரன் ஒருவன் கடைத்தெருவில் சிங்கக் கொடியுடைய வணிகர்க்கு (வலங்கை வணிகர்) விற்கும் போது அதைத் தடுக்கும் நோக்கத்தில் வலங்கைத் தலைவனுக்கும் இடங்கை ஈட்டி வீரனுக்கும் போர் நடைபெறுகிறது. இதில் வலங்கைத் தலைவன் வெற்றி பெறுகிறான். இதன் படி வெற்றி பெற்ற வீரனுக்குப் பரிசில் வழங்கி, வெங்கலத்துக்குச் சுங்கவரியை நீக்கி வணிகர் களுக்குச் சலுகையும் அளிக்கின்றான் சோழ மன்னன்.6

இவ்வாறு வணிகம் தொடர்பாகப் பகை கொண்ட வலங்கை இடங்கைப் படைப்பிரிவுகள் நாளடைவில் சாதிச் சண்டைகளைக் கையிலெடுத்துக் கொண்டன.

கி.பி. 10ஆம் நூற்றாண்டுவரை இருந்துவந்த எளிய சமூகக் கட்டமைப்புப் போய் ஒரு செறி வான, சிக்கலான கட்டமைப்பு உருவாகிறது. புதிய நிலவுடைமை இனங்கள் தோன்றுவதன் காரண மாக முரண்பாடுகள் வளர்கின்றன. ஒவ்வோர் இனமும் தங்கள் நிலையை உயர்த்தவும் உறுதி செய்துகொள்ளவும் கட்டமைப்புகளை உண்டாக்கு கின்றன. (k.v. Subramanya Aiyer, ‘Largest Provincial Organisations in Ancient India’, quarterly Journal of Mythic Society. 45-46. மற்றும் தெ.இ.க. 6. எண். 439; தெ இ க 7, எண் 129; தெ இ க. 8. எண். 198. 442) இக் கூட்டமைப்புகளின் நாடு தழுவிய கூட்டங்கள் சமயம் என்று பொதுவாகவும், பெரிய நாட்டார், பதினெண் விஷயத்தார் போன்ற பெயர்கள் அந்தந்த இடத்துக்குத் தக்கவாறும் அமைக்கப் பட்டன. இவை ஒரே நேரத்தில் தொழில்சார் கூட்டு களாகவும் உறவின் முறைக் கூட்டுகளாகவும் இயங்கத் தொடங்குகின்றன. இந்தச் சூழ்நிலையில் அதுவரை இலை மறைவு காய் மறைவாக இருந்த ‘சாதி உணர்வு’ தங்குதடையின்றி வெளிப்படு கிறது. ஒவ்வொருவரும் ‘தங்கள் சாதி’ பற்றிப் பேசுவதில் பெருமைப்படுகிறார்கள். சில நூற்றாண்டு களில் பல்கிப் பெருகிய சாதிச் சமூகத்துக்கு உறுதி யான அடித்தளம் பன்னிரண்டு பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில் அமைந்துவிட்டது.7

மூன்றாம் ராஜராஜ சோழனுடைய ஆட்சியில் ஐந்தாம் ஆண்டில் நடந்த கலகங்களால் பழைய கணக்குகள். அழிந்து போயினமையால் அனு போகப் பற்றொழுகை ஒட்டி ஆதாரச் சீட்டுகளைப் புதுப்பிக்க வேண்டியிருந்தது என்னும் செய்தி ‘தலைச் செங்காடு மூன்றாம் ராஜராஜனது பத் தொன்பதாம் ஆண்டு கல்வெட்டொன்று’ கூறு கிறது. இவ்வாறு நடந்த கலகங்களைச் சாதிக் கலகங்கள் என்று காட்ட, வரலாற்று ஆசிரியர்கள் முயன்றுள்ளார்கள். இக்கலகங்கள் இடங்கை, வலங்கை சாதியினரிடையே நடைபெற்றதென்று கூறுகிறார்கள். நிலத்தொடர்புடைய சாதியர்கள் வலங்கைப் பிரிவினர் என்றும்; கொல்லர், தச்சர், தட்டார் முதலிய தொழிலாளர்களும், வாணியர், கொத்தர், சுண்ணாம்புக்காரன், வலையன், அளவர் முதலியோர் இடங்கைப் பிரிவினர் என்றும் பல கல்வெட்டுகள் கூறுகின்றன. கிராமத்திலுள்ள மேல் வர்க்கத்தார், இவ்விரு சாதியினரையும் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள். தங்களுடைய கொடுமைகளால் ஏதாவது ஒரு வகைப்பிரிவினர் தங்களுக்கு எதிராகப் போராட முன்வந்தால், அடுத்த பிரிவினரைத் தங்களோடு சேர்த்துக் கொண்டு அவர்களை அடக்குவதே வழக்கமா யிருந்தது. பெரும்பாலும் இவர்கள் இடங்கைப் பிரிவினரோடு சேர்ந்துகொண்டு வலங்கைப் பிரிவினரை எதிர்த்து வந்தார்கள். இடங்கைப் பிரிவினரில் மிகவும் ஏழ்மையில் உழன்றவர்கள் வலங்கைப் பிரிவினரது போராட்டங்களில் கலந்து கொண்டதுமுண்டு. அக்காலங்களில் இருவருக்கும் சில சலுகைகள் செய்து தங்களது ஆதிக்க அமைப்பு முறையை மேல் வர்க்கத்தார் காப்பாற்றிக் கொண்டனர்.

கோயில் சாசனங்களின் முகவுரையில், மேற் குறித்த உண்மைக்குச் சான்றாக ஒரு செய்தி காணப்படுகிறது. திருச்சிராப்பள்ளி, ஆடுதுறைக் கல்வெட்டு ஒன்று அச்செய்தியைத் தெரிவிக்கிறது. ‘அரசாங்கம் அதிகாரிகளின் உதவியுடன் வன்னியர் களும், வேளாளர், பிராமணர் முதலிய நிலச் சொந்தக் காரர்களும் சேர்ந்து இடங்கைப் பிரிவில் அடங்கிய 96 வகைச் சாதியினருக்கு இழைத்த அநீதிகளை இக்கல்வெட்டு கூறுகிறது.8

ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் (1748- ஐந்தாம் தொகுதி) இடங்கைப் பிரிவைச் சேர்ந்த பூத்து உலகப்பச் செட்டி வெள்ளைக் குதிரையொன்றில் ஏறியதற்காகச் சிறையிடப்பட்டார். வெள்ளைக் குதிரையேறுவது, வெள்ளைக் குடைபிடிப்பது, வெள்ளைப் பாவாடையணிவது போன்றன வலங் கையர் மட்டுமே அனுபவித்த பெருமைகள். நாடெங் கிலும் இதுவே மரபாக இருக்க, பூத்த உலகப்பன் அதை மீறியதற்காகச் சிறையிலடைக்கப்பட்டார். ‘மரியாதை மற்றும் உரிமை’ குறித்த வலங்கை, இடங்கைச் சச்சரவுகள் அக்காலத்தே மிகுந்திருந்த தாக டொட்வெல் குறிப்பிடுகிறார்.9

தமிழகத்தில் ஒவ்வொரு நகரத்திலும், சிற்றூர் களிலும் இடங்கை வலங்கையினர் வசிப்பதற்கு வீதிகள் தனித்தனியே ஏற்பட்டிருக்கின்றன. ஒருவர் வசிக்கும் தெருவில் மற்றொருவர் வசிப்பதில்லை. கோயில் விழா, திருமணம் உள்ளிட்ட விழாக்கள், சவ ஊர்வலம் போன்றவைகளும் ஒரு தெருவி லிருந்து பிறிதொரு தெருவிற்குள் ஊர்வலம் செல்லத் தடைசெய்யப்பட்டிருந்தது. ஆனால் இருவருக்கும் பொதுவாயுள்ள வீதியில் போவதற்குத் தடை யில்லை. என்று கனகசபைப் பிள்ளை 1901 ஆம் ஆண்டில் எழுதியுள்ளார். (வருண சிந்தாமணி. ப. 502-503).10

மோடி ஆவணங்களில் (கி.பி. 1676 முதல் கி.பி. 1855வரை). சாதிப் பாகுபாடு, சாதியை விட்டு நீக்குதல், கீழ்ச் சாதியினரைத் தொட நேர்ந்தால் பரிகாரம் செய்தல் போன்ற பல செய்திகளை இவை தன்னகத்தே கொண்டு திகழ்கின்றன. இடங்கை, வலங்கை என இருவகைச் சாதிப்பிரிவு புதுக் கோட்டைப் பகுதியில் இருந்தமையையும் அவர் களில் வலங்கையினர் 22 சாதியினர் என்பதையும், இடங்கையினர் 6 சாதியினர் என்பதையும் இச் சான்றுகள் வழி அறியமுடிகிறது. பிறிதொரு ஆவணம் வலங்கையினர் 24 சாதிகள் எனவும், இடங்கையினர் 9 சாதிகள் எனவும் கூறுகிறது. திருமணக் காலத்தில் பந்தல் போடுதல், வாத்தி யங்கள் வாசித்தல், ஊர்வலம் வருதல், ஆடையணி பூணுதல், வாகனங்களைத் தேர்ந்தெடுத்தல் ஆகியன பற்றிய மன வேறுபாடே இவர்களது பூசலுக்குக் காரணம் என இவ்ஆவணங்கள் புலப்படுத்து கின்றன.11

வலங்கை இடங்கைப் பூசல்கள் தாசிகளையும், தேவரடியார்களையும், சக்கிலியப் பெண்களையும் கூட விட்டு வைக்கவில்லை, என்பதை ஆனந்தரங்கர் காலத்திலும் காண முடிகிறது.12

கொங்குப் பகுதியில் 24 நாடுகள் உள்ளன. இவற்றில் வலங்கை இடங்கைச் சாதிகளின் சமூக வேறுபாடுகள் கடந்த காலங்களில் விரிவானதாக இருந்தன. இன்று வலங்கை இடங்கைப் பிரிவு களின் முக்கியத்துவம் குறைந்துவிட்டாலும் அடிப் படையான சமூக அமைப்புகள் நிலம், சாதி, சாமி என்னும் மூன்று தளங்களின் உறவை இன்றும் கூட இணைக்கின்றன. இதன் மூலம் சாதி என்ற கட்டுக் கோப்பைத் தக்க வைத்துக்கொள்ள முனைகின்றன.13

நால்வகைப் பிரிவுகளுள் மக்களைப் பகுத்துக் கொண்ட பண்டைய முயற்சிக்குப் பின்னர், பிராமணரல்லாத மக்களை வலங்கை, இடங்கை என்னும் இருபெரும் பிரிவுகளுள் உட்படுத்தி, அவர் தம் வாழ்க்கை முறைகளை வகுத்துக் கொண்ட தன்மை இடைக்காலத்தில் ஏற்பட்டது.14

வலங்கை இடங்கைப் பிரிவுகள் சமூக வரலாற்றில் நிலவுடைமையாளர்களுக்கும், வணிகர் களுக்கும் தங்கள் நலன்களுக்குகந்த முறையில் மக்களைத் தங்கள் பக்கம் திரட்டிக் கொள்ள ஏற்படுத்திக் கொண்ட பிரிவுகளே (வானமாமலை) இன்று சாதிப் படிநிலையாக நிலைகொண்டு விட்டன. இத்தகைய சாதி இருப்புக்கும், அதன் இறுக்கத்துக்கும் வணிகர்களின் பங்கு மிகப் பெரியதாகும்!

1.            பறையர் ஒரு வரலாற்றுச் சுருக்கம் புங்கனூர் இராமண்ணா. ப.5.

2.            மேலது. ப. 9,10.

3.            பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும். க. கைலாசபதி. ப. 91,92

4.            பறையர் ஒரு வரலாற்றுச் சுருக்கம். புங்கனூர் இராமண்ணா. ப.14.

5.            தமிழ். மொழி-இனம்-நாடு. கோ. கேசவன். ப.124-129.

6.            வலங்கைச் சான்றோரும் சோழரும். ஆ. தசரதன். ப. 104-108, 66-68, 69-72.

7.            தமிழியல் ஆய்வுகள் பதிப்பாசிரியர்கள். முனைவர். சா. கிருட்டினமூர்த்தி முனைவர் கி. அரங்கன் முனைவர். எ. சுப்பராயலு. ப. 122-126.

8.            தமிழ் வரலாறு பண்பாடும் நா. வானமாமலை. ப. 117-119

9.            ஆனந்தரங்கம். பதிப்பாசிரியர்கள் முனைவர். அ. அறிவு நம்பி, முனைவர் அரங்க மு. முருகையன். ப.68

10.          தமிழர் வரலாறு பாவாணர் தமிழ்க் களஞ் சியம் 8. ப. 127-129.

11.          தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும் (இரண்டாம் பகுதி) பதிப்பாசிரியர். முனைவர் பா. சுப்ர மணியன்

12.          ஆனந்தரங்கர் நாட்குறிப்பு தொகுதி 2. பதிப்பா சிரியர். க.ப. அறவாணன். துணைப்பதிப்பாசிரியர்.    அரங்க. மு.முருகையன். ப.71,72.

13.          தமிழர் மானிடவியல் பக்தவத்சல பாரதி. ப. 238.

14.          தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும். ப. ஓஓஐ)

15.          ஆனந்தரங்கர் நாட்குறிப்பு தொகுதி. 2. ப. 71-72.