அங்காசங் காலம்

அங்காசம், அங்காசங்காலம், அங்காசக் காரன் ஆகிய சொற்கள் நம்மில் பலருக்குத் தெரிந் திருக்க வாய்ப்பில்லை. இவை மொரீசியஸில் வழக்கிலுள்ள தமிழ்ச் சொற்கள். அங்காசம் என்பது பிரெஞ்சு மொழிச் சொல். engagement என்ற ஆங்கிலச் சொல் தான் பிரெஞ்சு மொழி உச்சரிப்பில் அவ்வாறு ஒலிக்கப்படுகிறது. எங்கேஜ் என்பது ஒப்பந்தம் செய்துகொள்வதைக் குறிக்கிறது. அங்காசங் காலம் காலனி ஆட்சிக் காலத்தைக் குறிக்கிறது. அங்காசங் காரன் காலனி ஆட்சியில் ஒப்பந்தத் தொழிலாளர் களைக் குறிக்கும். மொரீசியஸ் தீவை டச்சுக் காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோர் கைப்பற்றிக் கரும்புத் தோட்டங்களை உருவாக்கினார்கள். கரும்பு உற்பத்திக்குத் தேவை யான உழைப்புச் சக்தியைப் பெறுவதற்காக இந்தியாவிலிருந்து ஏழை மக்களை வஞ்சித்து அழைத்துச் சென்றார்கள். அவர்களில் தமிழர், தெலுங்கர், மராட்டியர், போஜ்புரி இனத்தவர் ஆகியோர் அடங்குவர். அவர்களுக்கு இழைக்கப் பட்ட கொடுமைகள் பலப்பல. அவர்கள் அனு பவித்த இன்னல்கள் ஏராளம். ஒவ்வொரு கரும்பு எஸ்ட்டேட்டிலும் ஒரு மணி (bell) இருக்குமாம். அம்மணி காலையில் மூன்று மணிக்கே ஒலிக்கத் தொடங்கும். அப்போது ஆலைகளில் உள்ள தொழிலாளர்கள் வேலையைத் தொடங்குவார்கள்.

நான்கு மணிக்கு வருகைப் பதிவேட்டில் பணிக்கு வந்தவர்களையும் வராதவர்களையும் பதிவு செய் வார்கள். மாலையிலும் வருகையைப் பதிவு செய் வார்கள். 4.15 மணிக்கு (காலை) வீட்டிலிருந்து வரும் தொழிலாளர்கள் வேலையைத் தொடங்கு வார்கள். சிர்தார் யார் யாருக்கு என்னென்ன வேலை என்பதை ஒதுக்கித் தருவார். காலை 10.00 மணிக்கு உணவு, மறுபடியும் 11 மணிக்கு வேலை தொடங்கி மாலை 5 அல்லது 6 மணி வரை தொடரும். அதற்குப் பிறகு தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களை (புல்) சேகரித்துக் கொண்டு வீடு திரும்புவர். வயலில் வேலை செய்பவர்களுக்குக் கடினமான வேலையும், மில்லில் வேலை செய்பவர்களுக்கு 17 மணி நேர நீண்ட வேலையும் இருக்கும். வேலைக்கு வராதவர்களுக்குச் சம்பளம் இல்லை. சொல்லாமல், அனுமதியில்லாமல் வராதவர்களுக்குத் தண்டனை உண்டு. தொழிலாளர்கள் கூலிகள் என்றே அழைக்கப் பட்டனர். அவர்கள் தங்கள் பண்பாட்டைத் தக்க வைக்க அரும்பாடுபட்டனர்.

தமிழகக் கிராமங்களி லிருந்த வாழ்க்கை நடைமுறைகளையே அங்கும் பின்பற்றினார்கள். அவர்களது குடும்ப உறவுகள், மரபுகள், வாழ்க்கை மதிப்பீடுகள் ஆகியவை அந்நியச் சூழலில் வாழ்வை எதிர்கொள்ளத் துணை புரிந்தன. கோவில்களைக் கட்டிக் கொள்ளவும், திருவிழாக் களைக் கொண்டாடவும் காலனி ஆட்சியாளர் தடைவிதிக்கவில்லை. தொழிலாளர்கள் காலனி ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளையும், சுண்டல் களையும் பல முறைகளில் எதிர்த்தனர். 1925 வாக்கில் தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து அழைத்துச் செல்வது நிறுத்தப்பட்டது. தொழி லாளர் ஒப்பந்தமுறை இத்துடன் முடிவுக்கு வந்தது. 1875 வாக்கில் சர்க்கரை ஆலைகளில் இருந்த 40,000 குழந்தைகளில் சுமார் 1000 குழந்தைகளே கல்வி கற்றனர். மற்ற குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்தியத் தொழிலாளர் களுக்குக் கல்வி அறிவு அவ்வளவாக அளிக்கப் படவில்லை. இந்தியத் தொழிலாளர்களுக்குக் கல்வி அறிவு அவ்வளவாக இல்லாததால் தொழி லாளர் அனுபவித்த கொடுமைகளும் இன்னல்களும் அவர்களாலேயே வரலாறாக எழுதப்படவில்லை; படைப்புகளாகவும் வெளிவரவில்லை.

மொரீசியஸ் நாடு விடுதலை பெற்ற பிறகு இந்தியர்களின் கல்வி வாய்ப்பு பெருகிற்று. குறிப் பாக மொழிக் கல்விக்குச் சிறப்பான இடம் அளிக்கப் பட்டு இந்திய மொழிகளைக் கற்க வாய்ப்புகள் பெருமளவில் ஏற்பட்டன. இந்தியாவிற்கே வந்து மொழிகளைக் கற்கவும், கல்வி பயிலவும் வசதிகள் மேம்பட்டன. அவ்வாறு கல்வி கற்றவர்களுள் டாக்டர் பொன். திருமலைச் செட்டியும் ஒருவர்.

நூலாசிரியர் திருமலைச்செட்டி

பொன்.திருமலைச்செட்டி மோகாவிலுள்ள மகாத்மாகாந்தி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் ஆகிய மூன்று மொழிகளையும் நன்கு கற்று அவற்றில் திறமையாக உரையாட வல்லவர். மொரீசி யசில் தமிழ்க் கல்வியையும், பண்பாட்டையும் பரப்புவதில் ஆர்வமும், செயல் திறமும் மிக்கவர். எல்லோரிடமும் இனிமையாகப் பழகக் கூடியவர். பேராசிரியர் அருணை.பாலறாவாயன் திருமலைச் செட்டி அவர்களைப் பற்றிக் கூறுகையில்

“என் அன்பு இலயோலா மாணவர்

மொரீசியசில் முக்கியமானவர்

அந்தத் தித்திப்புத் தீவின்

உப்புக் கரிக்காத காற்றை

உள்ளுக்கு வாங்கியவர்

உயர்தமிழில் ஓங்கியவர்

அன்னைத் தமிழும்

சென்னைத் தமிழும்

நன்றாக அறிந்தவர்!”

என்று புகழ்ந்துரைத்துள்ளார். திருமலைச் செட்டி அவ்வப்போது தமிழ்க் கவிதைகளையும், நாடகங் களையும் படைத்து வந்துள்ளார். அவை யாவும் மொரீசியஸ் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பான இடம்பெறுகின்றன. திருமலைச்செட்டி எண்பதுகளிலிருந்து அவ்வப்போது எழுதிய நாடகங்கள் ஏழினைத் தேர்வு செய்து 2007-இல் வெளியிட்டுள்ளார். இவ்வேழு நாடகங்களும் அந்நாட்டில் முதல் பரிசினைப் பெற்றவை. இத் தொகுப்பில் உள்ள நாடகங்கள் பின்வருமாறு:

1.            நானும் மனிதன்

2.            அமைதிக்கோர் இடம்

3.            அவன் வருகைக்காக

4.            ஆலெ ஊதுலெ

5.            கண்ணீர்த்துளி

6.            கொந்தளிக்கும் கடலிலே

7.            வட்டியோடு வருமா?

8.            அந்நாடகங்களைப் பற்றிய மதிப்பீடு இக்கட்டுரையில் இடம்பெறுகின்றது.

நாங்க மனுஷங்கடா!

‘நானும் மனிதன்’ என்ற நாடகம் பத்தொன் பதாம் நூற்றாண்டில் அங்காசங் காலத்தில் நடந்த சம்பவத்தைக் கருவாகக் கொண்டது. ‘தொழி லாளிங்க தலை தூக்க வேணும்; அவங்களையும் வெள்ளைக்காரர்கள் மதிக்க வேண்டும்’ என்பது தான் கதைக்கரு. சுப்பையா என்ற தொழிலாளியை ரெனெ என்ற வெள்ளையன் வசவுச் சொற்களால் திட்டிவிடுகிறான். அவனை மட்டுமல்லாமல் அவனது தாயான காமாட்சியையும் வாய்க்கு வந்தவாறு திட்டுகிறான். அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சுப்பையா ரெனெவை கை நீட்டி அறைந்துவிடுகிறான். ரெனெவும் அவனது சக கரும்புத் தோட்ட முதலாளிகளும் சுப்பை யாவைத் தேடிச் சுட்டுக் கொன்று விடுகின்றனர். இது தான் கதை. ராவுல், ரெனெ, ரொபர், இவொன் ஆகிய பாத்திரங்கள் முதல் காட்சியில் வந்து தொழிலாளிகளுக்கெதிராகவும், சுப்பையாவைக் கண்டுபிடித்துத் தண்டிப்பது தொடர்பாகவும் உரையாடுகின்றனர். இரண்டாவது காட்சியில் சுப்பையாவும் தாயார் காமாட்சியும் உரையாடு கின்றனர். காமாட்சி சுப்பையாவை அடங்கிப் போக அறிவுறுத்துகிறான். கந்தசாமியும் சுப்பை யாவுக்கு உதவி செய்கிறான். இறுதியில் எதற்கும் பணியாத சுப்பையா சுட்டு வீழ்த்திக் கொல்லப் படுகிறான். “மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா” புகழ்பெற்ற தமிழக நாட்டுப்புறப் பாடலை நினைவுறுத்துகிறது இந்நாடகத் தலைப்பு.

“நாம் கை நொடித்தால் கரும்புக் கூலியாட்கள் நடுங்க வேண்டும். நாம் எது சொன்னாலும் எது செய்தாலும் அதுவே சட்டம். நம் வார்த்தையையோ, செய்கையையோ எதிர்க்கவோ, மறுக்கவோ யாருக்கும் உரிமை இல்லை. நாம் பேசும்போது அந்த நாய்கள் தலைகுனிந்து ஆமோதிக்க வேண்டும். இந்த மல்பாரிகளுக்கு வெள்ளையன்தான் கடவுள்...” முதல் காட்சியில் இடம்பெறும் இத்தகைய உரை யாடல் வெள்ளையர்களின் மனோபாவத்தைச் சுட்டுகின்றது. தாயார் காமாட்சியின் வழியாக ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலையையும் படம்பிடித்துக் காட்டுகிறார். ‘நான் மாடு போல உழைக்கிறேன். ஆனால் நான் மாடு இல்லெ அம்மா, நானும் மனுஷன்” என்ற சுப்பையாவின் வார்த்தைகள் இந்த நாடகத்தின் அடிநாதமாக விளங்குகின்றன. அதுவே நாடகத்தின் தலைப் பாகவும் அமைந்துள்ளது. நூலின் பெயராகவும் இடம்பெற்றுள்ளது. அங்காசத்துக்கும் அடிமைத் தனத்துக்கும் வித்தியாசமே இல்லை என்று சுப்பையா கொதித்து காலனி ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்து உயிர் துறக்கிறான்.

தமிழன் தலைநிமிர்தல்

ஆலெ ஊதுலெ என்பது மற்றுமோர் அங்காசங் காலத்தை நினைவுகூரும் நாடகம். இரண்டு காட்சி களைக் கொண்ட நாடகம். திறமைசாலிகளாக இருக்கும். தொழிலாளர்களைக்கூட அடிமைகளாக நடத்தும் மனோபாவத்தை எதிர்க்கிற நாடகமாகப் படைக்கப்பட்டுள்ளது. இந்நாடகத்தில் சந்திராயன் திறமையுள்ள தொழிலாளி. ஆலையில் ஏற்படும் பழுதுகளை உடனடியாகச் சரிபார்த்து விடுவான். காலனி எஜமானர்களுக்கும் தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொடுப்பான். அவ்வாறு கற்றுக் கொடுக்கும் வேளையிலும் அடிமையாகவே நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிற எஜமானர்களை எதிர்த்து ஆலை பழுதடைந்த நிலையிலும் வேலைக்குச் செல்லாமல் வீட்டுக்கு வந்துவிடுகிறான். அவன் மீது கோபம் கொண்ட ஆலை முதலாளிகள் அவனைத் தேடிப் பிடித்துத் தண்டிக்கின்றனர். “மானம் உள்ளவங்க தலைநிமிர்ந்துதான் பேச வேண்டும். நான் மானம் உள்ளவன் எசமான். ஒளைச்சிப் பொளைக்கிறவன். எங்க வேர்வையிலெ இந்தப் பூமி செளிக்குது. ஒங்க ஆலெ ஓடுது” இவை சந்திராயன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள். மொரீசியஸ் கரும்புத் தோட்டத் தொழிலாளர் தலைநிமிரத் தொடங்கிய காலகட்டத்தை இந் நாடகம் உணர்த்துகிறது.

குதிரைப் பந்தயம்

காலனி ஆட்சியாளர்களின் பண்பாடு தமிழ் மக்களிடத்தில் பரவத் தொடங்குகிறது. புதிய நாகரிகத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையிலும் பழைய சொந்தப் பண்பாடு சிதைகின்ற நிலையிலும் ஏற்படும் சிக்கல்களை ‘வட்டியோடு வருமா’, ‘கண்ணீர்த் துளி’ போன்ற நாடகங்கள் விவரிக் கின்றன. ‘வட்டியோடு வருமா?’ என்ற நாடகம் குதிரைப் பந்தயத்தின் தீங்குகளைச் சுட்டிக் காட்டு கிறது. ‘பணக்காரர்களுக்குக் குதிரைப் பந்தயம் பொழுது போக்கு; ஏழைகளுக்குப் புதைகுழி’ என்று இந்நூலின் முகவுரையில் பேராசிரியர் பாலறாவாயன் குறிப்பிடுவது போலவே இந் நாடகத்தில் வரும் கிருஷ்ணன் மூவாயிரம் ரூபாயை இழந்து விடுகிறான். ‘ஓராண்டு வேலை செய் தாலும் செலவுகள் போக மூவாயிரம் சம்பாதிக்க முடியாது. இப்பொழுது பொக்கெனப் போய் விட்டதே!’ என்று துன்பப்படுகிறான். ஒரு தீய பழக்கம் இன்னொரு தீய பழக்கத்திற்கும் காரண மாக அமைந்து விடுகிறது. “விளையாடி வெற்றி பெற்றால் அந்த மகிழ்ச்சியில் நன்றாகக் குடித்து வருவார். தோற்றுப் போனால் அதை மறப்பதற்கு அப்பவும் குடிப்பார்”. இவை கிருஷ்ணரின் மனைவி லோகாவின் தம் கணவர் குறித்த மதிப்பீடு. தீய நண்பர்களின் சகவாசம் மேலும் மேலும் கெட்டுப் போகவே தூண்டுகோலாக அமைகின்றது. “சில நாட்களில் எல்லாப் பணமும் போய்விடும். தளர்ந்து விடக்கூடாது. அது திரும்பி வந்தால் வட்டியோடு வரும்’ என்ற கிருஷ்ணனின் நண்பன் ராமா, கிருஷ்ணனுக்கு ஊக்கம் கொடுக்கிறான். குதிரைப் பந்தயத்துக்குச் செல்லமுடியாமல் வீட்டுக்கு வரவேண்டிய கட்டாயச் சூழலில் உடல் வீட்டிலும் மனம் குதிரைப் பந்தய மைதானத்திலும் இருக்கிற பதற்றத்தை நாடகத்தில் திருமலைச்செட்டி நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.

வீட்டை மறந்து ஊருக்கு உபதேசம்

மொரீசியசில் தமிழ்ப் பண்பாடு பரவ வேண்டும் என்று ஆர்வம் கொண்ட கண்ணப்பன் தன் வீட்டிலேயே தன் மகள் பமெலா மேனாட்டு நாகரிகத்தில் திளைத்துத் தமிழ்ப் பண்பாட்டை மறக்கிறாள் என்பதை அறியவில்லை. அவளைத் திருத்த முடியாததற்கு வருத்தப்படுகிறார் கண்ணப்பன். தொடக்கத்தில் ‘அப்பா செய்வதும் சொல்வதும் இக்காலத்துக்குப் பொருந்தாது அம்மா!’ என்று பமெலா அப்பாவை அலட்சியப் படுத்துகிறாள். பின்னர் ‘ஆடையை மாற்றுகிற மாதிரி, பெண்களையும் மாற்றுகிற ஒரு ஆடவனோடு சினிமா, பூங்கா, இன்னும் பல இடங்களுக்கும் போகிறாள்’ இந்தச் செய்தியை அறிந்து மன வேதனைப் படுகிறார் கண்ணப்பன்.

‘தமிழ் ஒழுக்கம் பற்றிப் பேசிப்பேசி என் வாழ்நாள் முழுவதும் கழித்தேனே. நம் தமிழ் இலக்கியத்தில் மகளிர் எவ்வாறெல்லாம் வாழ்ந்து சிறப்படைந்தார்கள் என்பது பற்றி மணிக்கணக் காய் எடுத்து எடுத்துச் சொன்னேனே. ஒழுக்கம், ஒழுக்கம் என்று முழக்கம் செய்தேன். ஆனால் அந்த ஒழுக்கம் என் சொந்த வீட்டில் இல்லாமல் போயிடுச்சே” என்று கண்ணப்பன் வருந்துவதோடு நாடகம் முடிகிறது. இந்த நாடகத்துக்குக் ‘கண்ணீர்த் துளி’ என்று பெயரிட்டுள்ளார்.

உயிருக்குயிராய்

‘அமைதிக்கோர் இடம்’ என்ற நாடகம் உயிருக்குயிராய்க் காதலிக்கிற அழகன், அமுதா, அக்காதலை அனுமதிக்காத அமுதாவின் பெற்றோர் ஆகியோர்க்கிடையே நடக்கின்ற உரையாடலைக் கொண்ட கதை. கைலாசம் தன் மகள் அமுதாவைச் செல்வந்தராகிய வடிவேலன் மகனுக்கு மண முடிக்க விழைகிறான். அமுதாவும், அழகனும் தங்கள் காதலை வெளிப்படுத்துகிறார்கள். ‘காதல் என்பது களியாட்டமன்று; கற்றோரும் மற்றோரும் மதிப்பதும் அல்லாமல் கடவுளே ஏற்கும் உயர்ந்த உணர்ச்சியாகும்” என்று அழகன் வாதாடுகின்றான். இறுதியில் கைலாசம் திருமணத்திற்குச் சம்மதிக் கிறான்.

அவன் வருகைக்காக

இந்த நாடகத் தலைப்பே ஒருவன் வருகைக் கான காத்திருப்பை உணர்த்தி விடுவதாக உள்ளது. பிள்ளையின் திருமணத்திற்காகக் காத்திருக்கும் பெற்றோர்களின் கனவைத் தகர்ப்பது போல இக்கதையில் வரும் சந்திரன் தன் பெற்றோர்களையும், அவனை நேசிக்கும் நிலா என்ற பெண்ணையும் மோசம் செய்துவிட்டு ‘அன்புள்ள பெற்றோருக்கு வணக்கம். செப்டம்பர் ஆறு என் திருமணம். அக்டோபர் வீடு திரும்புவேன்” என்று தந்தி அனுப்பி விடுகிறான். எல்லோரும் கல்லாகி விடுகிறார்கள் என்று நாடகம் முடிகின்றது. ‘கொந்தளிக்கும் கடலிலே’ என்ற கதை வீட்டிற்குச் சொல்லாமல் இங்கிலாந்து நர்சிங் வேலைக்குச் சென்றுவிடும் குமரன் என்பவனின் முடிவை விவரிக்கிறது.

முடிவுரை

நாடகங்களில் பிரெஞ்சு மொழிச் சொற்கள் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. bravo,bonjour, calmeto i Rene, Jemme bonne முதலிய சில வற்றைக் குறிப்பிடலாம். பிரெஞ்சு எஜமானர் களின் உரையாடலில் இத்தகைய சொற்கள் வெளிப் படுகின்றன. அங்காசங் காலத்தில் பேசப்பட்ட தமிழ் வழக்கு குறித்த பதிவுகள் ஏதும் கிடைக்க வில்லை. ஆனால் பொன்.திருமலைச்செட்டி மூத்த குடிமக்களின் பேச்சு வழக்கைச் சில நாடகங்களில் பதிவு செய்கிறார். “வேணு, நம்பல்க்கும், நெனச் சிக்டெ, கன்சாமி, அப்பெனே, கஷ்டொம், எவ்ள, வாள்ந்தா மனுசன் மாதிரி வாளுணு” - இவ்வாறு அங்காசங்கால வழக்குச் சொற்கள் இந்நாடகங் களில் பதிவாகியுள்ளன. அப்பா! என்ற சொல் அப்பாய்! என்றும், சுப்பையா என்ற சொல் சுப்பாய்! என்றும் விளியேற்பதை ஆசிரியர் சுட்டுகிறார். நாடக உரையாடல்களின் இடையே கவிதை வரிகளும் இடம்பெறுகின்றன. நாடகங்களில் வரும் தமிழ்ப் பாத்திரங்கள் குடிகாரர்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர். ‘வட்டியோடு வருமா’ என்ற நாடகத்தில் கிருஷ்ணன் என்ற பாத்திரம் சூதாட்டத்தோடு குடிப்பழக்கமும் உடையவன். ‘ஆலெ ஊதுலெ’ நாடகத்தில் சந்திராயன் என்ற பாத்திரம் குடிப்பழக்கம் உடையவன்.

பிரெஞ்சு கலாச்சாரத்தின் பாதிப்பாக இதனைக் கருதலாம். இத்தொகுப்பிலுள்ள ஏழு நாடகங்களில் இரு நாடகங்கள் அங்காசங்காலக் கொடுமை களைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டவை. அங்காசங்காலத்தில் தொழிலாளர்கள் தலை நிமிர்ந்து எதிர்க்கத் துணிந்த போக்கினை இரு நாடகங்களும் உணர்த்துகின்றன. பின் காலனித்துவ இலக்கியங்கள் காலனி ஆட்சியை எதிர்க்கக் கூடியவை. அந்த வகையில் இவ்விரு நாடகங்களும் பின்காலனித்துவ இலக்கியம் என்று கொள்ளலாம். இத்தொகுப்பில் மீதமுள்ள ஐந்து நாடகங்கள் சமகால மொரீசியஸ் தமிழர்களின் பிரச்சினை களைச் சுட்டுகின்றன. பல்லின / பன்மொழிச் சூழலில் தலைமுறை இடைவெளியில் தோன்றும் அச்ச உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந் நாடகங்கள் படைக்கப்பட்டுள்ளன. மொரீசியசில் தமிழ்மொழியை எழுதவும் வாசிக்கவும் தெரிந்தவர் எண்ணிக்கை மிகவும் குறைவு. எழுதும் நாடகங் களைப் படிப்பதற்கும் அங்குத் தமிழ் தெரிந்த வர்கள் இல்லை. தமிழ்மொழியை வளர்க்கும் முக மாகப் படைக்கப்பட்ட நாடகங்கள்தாம் இவை. ஆகவே இந்நாடகங்களைப் படைத்த முனைவர் பொன்.திருமலைச்செட்டி நமது நெஞ்சார்ந்த பாராட்டுதலுக்குரியவர்.