தமிழ் இலக்கிய வரலாறு சங்ககாலம் முதல் தொடங்குகிறது. சங்க காலம், சங்கம் மருவிய காலம், இடைக்காலம், பிற்காலம் எனத் தொடர் கிறது. இதில் பிற்காலம் என்பதும் தற்காலம் என்பதும் பாரதியையே முன்னிலைப்படுத்துகிறது.

இந்த 20ஆம் நூற்றாண்டைப் பாரதியின் யுகம் என்றும், பாரதியார் சகாப்தம் என்றும் கூறுவர். அவரது படைப்புகளே புதிய தமிழ் இலக்கியத் தடங்களாகத் திகழ்கின்றன; தெரிகின்றன. அவரைப் பற்றியும், அவரது படைப்புகள் பற்றியும் புதிய புதிய வெளியீடுகள் வந்து கொண்டிருக்கின்றன.

‘இலக்கியக் கோட்பாடுகள் நோக்கில் பாரதி படைப்புகள்’ என்னும் இந்நூல் 12 ஆய்வுக் கட்டுரை களின் தொகுப்பாகும். முனைவர் அ. பிச்சை மற்றும் முனைவர் பா. ஆனந்தகுமார் இதன் பதிப்பாசிரியர்கள். பாவை பப்ளிகேஷன்ஸ் இதனை வெளியிட்டுள்ளது.

திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் உள்ள பாரதியார் ஆய்வகம் நடத்திய கருத்தரங்கில் வாசித்த கட்டுரைகள் காற்றில் கலந்த பேரோசையாகி விடாமல் அவ்வப்போது அவற்றை நூல் ஆக்கம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வரிசையில் ஐந்தாவது தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.

“தமிழில் நவீன காலத்துக்குரிய தேசியம், மார்க்சியம், நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம் முதலான எந்தப் புதிய கருத்தியல் சார்ந்த உரை யாடலையும் நாம் பாரதியை முன்வைத்தே தொடங்க வேண்டியிருக்கிறது. பாரதி ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் தோன்றியிருந்தாலும் பழைய மரபுகளின் வேர்களை நோக்கியும், புதிய மரபுகளின் விழுதுகளை நோக்கியும் அவரது சிந்தனை பயணப்பட்டிருக்கிறது. இதன் காரண மாகப் பாரதியின் இலக்கியப் பிரதிகள் பன்முக வாசிப்பிற்கான சாத்தியங்களைப் பெற்றிருக் கின்றன. பாரதியின் படைப்புகளைப் பல்துறை சார்ந்த அணுகுமுறைகளின் அடிப்படையில் ஆராய்ந்த இந்நூல் இதற்குச் சான்றாக அமைந்துள்ளது” என்று பதிப்பாசிரியர்கள் தம் முன்னுரையில் கூறியுள்ளனர்.

முதல் கட்டுரை ‘தொன்மவியல் திறனாய்வு நோக்கில் பாரதியார் படைப்புக்கள்’- இதனை பேராசிரியர் க.பஞ்சாங்கம் எழுதியுள்ளார். பாரதி யார் எந்த நேரமும் தொன்மங்களைப் பேச்சோடும், வாழ்வோடும் பயன்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வைதீகக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்; இத் தொன்மங்களைக் குறித்துத் தம் சமகாலத்திற்கு ஏற்ற மதிப்பீடுகளைக் கொண்டிருந்தார் என அறிய முடிகிறது எனக் கட்டுரையாளர் குறிப்பிடு கிறார்.

அவருடைய குயில் பாட்டில் தொன்மம், கனவு, சடங்கு, கவித்துவம் ஆகிய நான்கும் மிகப் பெரிய மாயா உலகத்தைக் கட்டி எழுப்புவதைப் பார்க்க முடிகிறது. தொன்மம், கலைக் களஞ்சியம் போல் அமைந்து வினை புரியக் கூடியது என்றும், கூறுகின்றனர். குயில் பாட்டிற்கும், கண்ணன் பாட்டிற்கும் மிகப் பொருந்திப் போகிறது என்றும் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

இரண்டாம் கட்டுரையில் பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் குறியியல் பற்றி முனைவர் சி. சித்ரா ஆய்ந்துள்ளார். வடமொழியில் வியாசர் இயற்றிய மகாபாரதக் கதையில் வரும் பாஞ்சாலி, துரியோதனன் சபையில் செய்த சூளுரையை மையமாகக்கொண்டு பாரதியார் படைத்த குறுங் காவியமே பாஞ்சாலி சபதம் என்றும், இது அழைப்புச் சருக்கம், குதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகில் உரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என்னும் ஐந்து பகுதிகளாக அமைந்துள்ளது என்றும், பஞ்சாலி சபதத்தில் இடம்பெற்றுள்ள மாந்தர்களின் கூற்றுகள் வாயிலாகவும் கதைப் போக்கு வாயிலாகவும் குறியியலின் செயல்பாடு களையும் வகைகளையும் கண்டறிய முடிகிறது என்றும் ஆசிரியர் கூறியுள்ளார்.

பேராசிரியர் துரை. சீனிச்சாமி, பாரதியார் கவிதைகளை உளவியல் நோக்கில் ஆய்வு செய் துள்ளார். 1897ஆம் ஆண்டு எட்டயபுரம் மன்னருக்கு விண்ணப்பம் எழுதிய நாள் முதல் இறுதிவரை சுப்பிரமணிய பாரதியார் எழுதி யுள்ள கவிதைகளின் பொருண்மைகளை புறக் கருத்தியல், அக உளைச்சல் என்னும் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளார்.

‘கனவு’ எழுதிய நான்காண்டுகளுக்குப் பிறகு ‘குயில் பாட்டு’ எழுதப்பட்டுள்ளது. காமம், காதல், பெண்நிலை, சாதியம், வைதிகம், இசை, மனக்குழப்பம், புனிதப் பேரழகு, புதிர்மை ஆகிய பல்வேறு பொருண்மைக் கூறுகளைச் சிதறவிட்டு, அவற்றினூடாகத் தன்னை வைத்துக் காணும் ஒரு வேட்கை நிரப்பியாக உள்ளது. இழப்புணர்வு களை எல்லாம் ஒன்று திரட்டி ஓர் அழகுப் பிண்ட மாகக் குயில்பாட்டில் அமைத்துள்ளார் என்றும் ஆசிரியர் கூறுகிறார்.

‘உண்மையான கவிதை அருமையான திரவியம். அதனால் உலகம் சேமத்தை அடைகின்றது. எந்த நாட்டில் புதிய மகாகவி தோன்றுகிறானோ அந்த நாடு மகா பாக்கியம் உடையது. தமிழ் நாட்டிலே கவிதையின் புகழ் ஏறுக’ என்று பாரதியார்- கவிதையின் சிறப்பை பயனைச் சொல்கின்றார். ஆகவே, கவிதையும் கலையும் மக்களுக்காகவே- மனிதரின் வாழ்க்கைக்காகவே என்பது பாரதியின் கவிதையில் பயன்பாட்டுக் கொள்கையாகும் என்று ஆசிரியர் முடிகின்றார்.

இருத்தலியல் நோக்கில் பாரதியை ஆய்ந்தவர் முனைவர் சீ. சீமானம்பலம். இருத்தலியலும், நவீனத் துவமும் தம்முள் தொடர்பு கொண்டனவாகவே காணப்படுகின்றன; நவீனத்துவத்தின் கடைசிக் கோட்பாடாகக் கருதப்படும் இருத்தலியல், நவீனத் துவத்தின் முடிவாகவும் பின் நவீனத்துவத்தின் வரவுக்காகக் காத்திருந்த கடைசிக் கோட்பாடாகவும் குறிப்பிடப்படுகிறது.

பாரதியாரைச் செவ்வியல் கொள்கை நோக்கில் முனைவர் சாரதாம்பாள் மதிப்பிட்டுள்ளார். “எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன், தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்” என்று பாஞ்சாலி சபதம் முகவுரையில் பாரதியார் கூறுகிறார்.

செவ்வியல் இலக்கியங்களுக்குப் பின் தோன்றிய இலக்கியங்கள் தொன்மை, தலைமை, தற்சார் பின்மை போன்ற செவ்வியல் பண்புகளுக்கு இடம் கொடா. எனினும், பாரதியின் கவிதைகள் செவ் வியல் இலக்கியப் பண்புகளுக்கு இடம் கொடுத்து நிற்கின்றன என்று ஆசிரியர் கூறுகிறார்.

பெண்ணியம் பற்றி முனைவர் நாகநந்தினி, நவீனத்துவ நோக்கில் முனைவர் ந. இரத்தின குமார், நடப்பியல் நோக்கில் முனைவர் இரா. காமராசு, பாரதியின் கவிதையியல் பற்றி பேரா சிரியர் ப.மருதநாயகம், தலித்திய நோக்கில் அழகிய பெரியவன், மார்க்சிய நோக்கில் தேவ.பேரின்பன் ஆகியோரின் படைப்புகள் இந்நூலில் இடம் பெற்றுச் சிறப்புச் செய்கின்றன.

‘மகாகவி பாரதி இருபதாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் தமிழின் முற்போக்கு சகாப் தத்தைத் துவக்கி வைத்தவர் என்ற அளவில் அவரைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். அது தொடங்கி சமூக மாற்றத்துக்காகப் போராடுகிற அனைவருக்குமான தமிழ்ப்புலத்தின் தோற்று வாயே பாரதிதான்’ என்று தேவ. பேரின்பன் தம் மார்க்சிய நோக்கில் குறிப்பிட்டுள்ளார்.

‘இப்சனின் நாடகம் ஒன்றில் வரும் கதா பாத்திரம் உறுதியான கம்பீரமான மலையைக் குறை சொல்லக் காரணங்களைத் தேடுகிறது. கடைசியில் மலையைக் குறை சொல்ல ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து உரக்கக் கூவியது: ‘மலை எலிகளை உருவாக்கி விட்டது’.

பாரதியின் படைப்புகள் என்ற மாமேரு குறித்த ஆய்வுகள் எலிகளைத் தேடிச் சென்று விடக் கூடாது என்பதுதான் நமது வேண்டுகோள் ஆகும்’ என்று அறிஞர் தேவ.பேரின்பன் கட்டுரையை முடிக்கிறார். நமது வேண்டுகோளும் அதுதான்.

இலக்கியக் கோட்பாடுகள் நோக்கில் பாரதி படைப்புகள்

பதிப்பாசிரியர்கள்: முனைவர் அ. பிச்சை & முனைவர் பா. ஆனந்தகுமார்

வெளியீடு:

பாவை பப்ளிகேஷன்ஸ்,

142, ஜானி ஜான்கான் சாலை,

இராயப்பேட்டை,

சென்னை- 600 014.

விலை: ` 130/-