இருபத்தோராம் நூற்றாண்டில் சங்க இலக்கியப் பிரதிகளின் வாசிப்பு புதிய புதிய கண்ணோட்டங்களில் நிகழ்ந்து வருவதைக் காண்கிறோம். பதினெட்டுப் பிரதி களையும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கும் பார்வை தொடர்ச்சியாக இருந்துவருவதைக் காணமுடிகிறது. அப்பார்வையை மறுபசீரிலனை செய்யும் வகையில் ச.வையாபுரிப்பிள்ளை, கமில்சுவலபில், வ.அய்.சுப்பிர மணியம் ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். இவ்வாய்வு குறித்த கட்டுரை ஒன்றை Pandunus 2009 கருத்தரங்கில் வாசித்தேன். அக்கருதுகோளை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், அப்பிரதிகள் தொடர்பான பிறிதொரு அணுகு முறையைப் புதிய தரவுகள் வழி முன்னெடுப்பது இங்கு நோக்கம்.

சங்கப் பிரதிகளை நான்கு பிரிவுகளாக (Units) அணுக வேண்டும் என்பது கருதுகோள். அது பின்வருமாறு அமைகிறது.

-           நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, புறநானூறு

-           பொருநர்ஆற்றுப்படை, மலைபடுகடாம், பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப் படை, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி

-           கலித்தொகை

-           பரிபாடல், திருமுருகாற்றுப்படை

மேற்குறித்த நான்கு பிரிவுகளை உறுதிப்படுத்தும் வகையில், சடங்கு, நடுகல், நம்பிக்கை ஆகியவற்றை மானுட வியல் கண்ணோட்டத்தில் முன்னர் விவாதித்தேன். மார்ச் Pandunus:9 page Vol. issue. இப்போது மேற்கொள்ளப் போகும் உரையாடல் பின்வரும் வகையில் அமைகிறது.

சங்கப் பிரதிகளில் காணப்படும் தொழில்சார் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வுரை யாடல் கட்டமைக்கப்படுகிறது. தொழில்சார் பதிவு களைத் தரவுகளாகக் கொண்டமைக்கான காரணங்கள் பின்வரும் வகையில் அமைகிறது.

-           மனித சமூகம் X இயற்கை நிகழ்வுகள் என்ற முரணில்தான் இப்பிரபஞ்சம் இயங்குகிறது.

-           மனித சமூகம் இயற்கையை எதிர்கொள்ள இயற்கையில் உள்ளவற்றையே பயன்படுத்து கிறது.

-           இயற்கைப் பொருட்களையே தமக்கான உணவாக மனித சமூகம் மாற்றிக் கொள்கிறது.

-           இயற்கையோடு இயைந்த வாழ்முறையையும் மனித சமூகம் கட்டமைத்துக் கொள்கிறது.

-           மனித சமூகம் தம் தேவைகளுக்கானவற்றை உற்பத்தி செய்துகொள்வதையே தொழில்கள் என்கிறோம்.

சங்க இலக்கியப் பிரதிகளில் மேற்குறித்த வகையில் அமையும் பத்துத் தொழில்கள் மாதிரிக்கான உரை யாடலாகத் தேர்வு செய்துள்ளேன். அவை வருமாறு,

மனிதர்கள் தங்கள் உணவுப் பொருட்களில் உப்பு என்னும் வேதிப்பொருளை அடிப்படையாகக் கலக்கிறார்கள். Ôஉப்பில்லாப் பண்டம் குப்பையிலேÕ என்கிறார்கள். இச்சுவையை எப்படி, எங்கே கண்டுபிடித்தார்கள்? எப்பொழுதிலிருந்து பயன்படுத்தத் தொடங்கினார்கள்? என்ற விவரங்கள் முக்கியமானவை. அது குறித்த விவரங்கள் இங்கு நமது முதன்மை நோக்கமன்று. ஆனால், தொல்பழம் காலம் முதல் உப்பைப் பயன்படுத்து கிறார்கள். கடல் நீரில் இருக்கும் உப்பை மடைகட்டிப் பாய்ச்சி சூரிய வெப்பத்தால் திரவப் பொருளைத் திடப்பொருளாக மாற்றியுள்ளார்கள். இத்தொழிலைச் செய்தவர்கள் உமணர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் தொடர்பான பதிவுகள் சங்கப் பிரதிகளில் சுமார் 32 இடங்களில் அமைந்திருப்பதைக் காண்கிறோம். இப்பதிவுகள் பின்வரும் வகையில் உள்ளன.

-           உமணர்கள் வாழும் சிறுகுடிகள் குறித்து (நற்.374) அறிகிறோம்.

-           உமணரின் உப்புக் குவியல் மீது ஏறி நின்று, கடலில் வரும் தம் தந்தையரின் படகுகளை பரதவ மகளிர் எண்ணுவர் என்ற குறிப்பு (நற்.331) உள்ளது.

-           உப்புக்குப் பண்ட மாற்றாக நெல் கொடுக்கப் பட்டதை அறிகிறோம். (நற்.254)

-           உமணர் உப்பு விற்கும் பொருட்டு, பல இடங்களில் தங்கித் தங்கிச் செல்லுதல் குறித்த குறிப்பு உள்ளது. (குறுந்.124)

-           கழுதைகளின் மீது பொதியாக உப்பு மூட்டைகள் ஏற்றிச் செல்லுவது குறித்து அறிகிறோம். (அகம்.337)

-           எருது பூட்டப்பட்ட உமணர் உப்பு வண்டிகள் தொடர்பான பதிவுகளைக் காணமுடிகிறது. (புறம்.307, சிறு.பாண்.55, பெரும்பாண்.64)

கரடுமுரடான நிலப்பகுதியைச் சமன்செய்து அங்கு பயிர்களை விளைவிக்கும் பணி குறித்துச் சங்கப் பிரதி களில் காணமுடிகிறது. இவர்களை உழவர்கள் என்று அழைக்கிறோம். உழவர்கள் தொடர்பான சுமார் 43பதிவுகளைக் காண்கிறோம். மருத நிலப்பகுதியில் வாழ்வோர்களை உழவர்கள் என்று அழைக்கும் மரபும் உள்ளது.

-           தாம் உழுத வயலின் சேற்றில் வாளை மீனைப் பிடித்தனர் உழவர் (நற்.340) என்ற குறிப்பு உள்ளது.

-           பழங்கொல்லையை உழுத உழவர், காலையில் விதைக்க எடுத்துச்சென்ற வட்டில் நிறைய மாலையில் முல்லைப் பூவைக் கொண்டு வந்தனர். (குறுந்,155)

-           கழனியில் உழவர் எழுப்பிய குரலுக்கு மயில் அஞ்சியது. (அகம்.266)

-           பாரியின் பறம்பு மலையில் உழவரால் விளைவிக்கப்படாத மூங்கில்நெல், பலாப்பழம், வள்ளிக்கிழங்கு, மலைத்தேன் ஆகிய நான்கு விளைபொருட்கள் உள்ளன. (புறம்.109)

-           எருதுகளைக்கொண்டு முல்லை நிலத்தில் உழவர் உழுதனர். (பெரும்பாண்.353)

காடுகளை அழித்து அங்குப் பயிரிடும் கானவர் என்னும் காட்டில் வாழும் மக்கள் குறித்தும் அறிய முடிகிறது. காட்டு நிலங்களில் வாழும் இம்மக்கள் தொடர்பான விரிவான பதிவுகளை அறிகிறோம்.

-           கானவர் விளைவித்த தினையைத் தின்று புலிக்கு அஞ்சாமல் பன்றிகள் உறங்குவது தொடர்பான குறிப்பு உள்ளது. (நற்.386)

-           நீண்ட அம்பையும் வலிய வில்லையும் உடைய கானவர் தங்கை என்று தலைவி குறிக்கப்படுகிறாள். (குறுந்.335)

-           யானையின் வெண்கோடுகளைக் கானவர் பெறுவதற்கு, யானை பிடிக்கும் குழிகளை அமைத்தனர். (அகம்.21)

-           கானவர் மூட்டிய தீயில் பெருங்கோப்பெண்டு தீப்பாய்ந்தாள் (புறம்.247)

-           முல்லை நிலத்து வாழும்கானவர், மருதப் பண் பாடினர் (பொருநர்.220)

மலைப்பகுதியில் வாழும் மக்களைக் குறவர் என்று அழைக்கும் மரபு இருப்பதைக் காண்கிறோம். இவர் களைக் குறிஞ்சி நில மக்கள் என்று கூறலாம். மலையில் கிடைக்கும் பொருட்களையே இவர்கள் உண்டு வாழ்ந்து வந்தனர். இன்றைய மலைவாழ் பழங்குடி மக்கள் வாழ்முறையை ஒத்தது இவர்கள் வாழ்முறை. இவர்கள் தொடர்பான பதிவுகள் சங்கப்பிரதிகளில் சுமார் 47 இடங்களில் காணமுடிகிறது.

-           தினைப்புனத்தில் ஆண் யானைகள் புகுந்தன. அவற்றைக் கவண்கொண்டு குறவர் விரட்டினர் (நற்.108)

-           ஆண் யானையால் மிதிக்கப்பட்ட வேங்கை மரப்பூக்களைக் குறவர் மகளிர் சூடினர். (குறுந்.208)

-           குரவைக் கூத்தைக் குறவர் மக்கள் ஆடுவர். (அகம்.232)

-           மூங்கில் குழாயில் வார்த்திருந்த முதிர்ந்த தேறலைக் குடித்து வேங்கை மரத்தடியில் குரவை ஆடினர். (புறம்.129)

-           குறவர் மகள் வள்ளி (திருமு.100)

சங்கப் பிரதிகளில் இரும்பு பயன்படுத்தப்பட்டதை அறிகிறோம். இரும்பை எவ்விதம் அகழ்ந்தனர்; எவ்வகையில் பயன்படுத்தினர் என்ற விவரங்கள் சுவையானவை. தொல் பொருள் ஆய்வின் மூலம் தமிழர்களின் இரும்புக் காலத்தைச் சங்கப் பிரதிகளை அடிப்படையாகக்கொண்டு ஆய்வு செய்துள்ளனர். இரும்புத் தொழில் நடைமுறையில் இருந்ததை அறிகிறோம். 13 இடங்களில் கொல்லர் தொழில் தொடர்பான பதிவுகளைக் காணமுடிகிறது.

-           இரும்பு உலை தொடர்பான குறிப்பைக் காணமுடிகிறது.(நற்.133)

-           கொல்லர் ஊதுகின்ற உலை குறித்த விவரணம் உள்ளது. (நற்.125)

-           தேரில் பூட்டப்பெற்ற குதிரைகள் கொல்லன் வலித்து இழுக்கும் துருத்தியைப் போல வெப்பமாகப் பெருமூச்சு விட்டன. (அகம். 224)

-           வீரன் போர் செய்வதற்கரிய வேலினைக் கொல்லன் வடிவமைத்தார் (புறம்.312)

-           கருமையான கைகளையுடைய கொல்லர் (பெரும்பாண்.436)

சங்கப் பிரதிகளில் கால்நடைகள் வளர்க்கும் தொழிலை மேற்கொண்டவர்கள் கோவலர் ஆவர். இவர்களை ஆயர் என்று அழைக்கும் மரபும் உண்டு. இவர்கள் தொடர்பான சுமார் 40 பதிவுகளைச் சங்கப்பிரதிகளில் காணமுடிகிறது.

-           ஆவினங்களின் கழுத்தில் கட்டிய மணி ஒலிக்க, அவற்றைக் கோவலர் ஓட்டி வந்தனர்.

-           கோவலரின் குழலிசை தொடர்பான குறிப்பை அறியமுடிகிறது. (நற்.364)

-           பசுக்களை மேய்ச்சலிலிருந்து மீட்டுவரும் கோவலர் புல்லாங்குழலில் செவ்வழிப் பண்ணை இசைத்தனர் (அகம்.214)

-           மிகுதியான மழைப்பொழிவால், மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டிச் செல்ல இயலாத நிலையில் கோவலர் இருப்பது தொடர்பான குறிப்பு உள்ளது (முல்லை.12)

படகுகளைச் செய்து, அதன்மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டவர்கள் பரதவர் என்று அழைக்கப் படுவர். இவர்கள் கடலோடு வாழ்பவர்கள். இவர்கள் தொடர்பான பதிவுகள் சங்கப் பிரதிகளில் சுமார் 45 இடங்களில் இடம்பெற்றுள்ளன.

-           சிறுகுடியிலிருந்து கடலுக்குள் செல்லும் பரதவர், கடலுக்குள் செல்லும் சரியான நேரத்தை நோக்கிப் புன்னை மர நிழலில் காத்திருப்பர். (நற்.4)

-           கடலிலிருந்து மீன்களைப் பிடித்து வந்த பரதவர், படகுகளிலிருந்து மீன்களை எடுத்து மணலில் குவித்துவிட்டு, மீன் கொழுப்பால் உருவாக்கிய விளக்கொளியில் துயிலுவர். (நற்.175)

-           பரதவர் வலிய வில்லைத் தாங்கிய வலிமை பொருந்திய தோளையுடையவர். (அகம்.226)

-           பரதவர், சங்குகளிலிருந்து பெற்ற முத்துக்களை விலைக்கு விற்பர் (ஐங்.195)

-           கடலிலே வேட்டைக்குச் சென்று திரும்பும் பரதவர், காவிரிப்பூம்பட்டினத்து மாடங்களில் ஏற்றப்பட்டு, அவிந்தன போக எஞ்சியவற்றை எண்ணுவர் (பட்டினப்.112)

சங்கப் பிரதிகளில் தொழில்சார்ந்த பிரிவினர்களில் மிகுதியான பதிவு பாணர்களைப் பற்றியதாகும். சுமார் 95 பதிவுகளைக் காண்கிறோம்.

-           பாணர் கையில் சீறியாழுடன் இருப்பது தொடர்பான பதிவைக் காண்கிறோம். (நற்.30)

-           தலைவனைப் புகழ்ந்து பேசும் பாணன் என்ற குறிப்பு உள்ளது. (குறுந்.85)

-           வளைந்த கோட்டு யாழினைப் பாணர் பயன்படுத்தினர் என்ற பதிவைக் காண்கிறோம் (அகம்.115)

-           பாணர்கள் பொற்றாமரைப் பூவைச் சூடி இருப்பதை அறிகிறோம். (புறம்.141)

-           பாணர்களுக்கு யானைகளைப் பரிசாக வழங்கியமை அறியமுடிகிறது. (மதுரைக் காஞ்சி.141)

வேட்டைத் தொழிலை மேற்கொள்வோர் குறித்த பதிவுகள் சுமார் இருபது இடங்களில் இடம் பெற்றுள்ளன.

-           உடும்பு, முயல் போன்றவைகளை வேட்டை யாடும் வேடர்கள் வாழும் காடு என்ற குறிப்பு உள்ளது. (நற்.59)

-           வேட்டை நாய்களுடன் பற்பல மலை களையும் கடந்து செல்லும் வேட்டுவன் என்ற பதிவு உள்ளது. (அகம்.28)

-           யானையினை வேட்டையாடும் வேடர் குறித்த பதிவு உள்ளது (புறம்.214)

-           வேட்டுவர் முயலை வேட்டையாடுவர் என்ற குறிப்பு (கலித்.114-21)

சடங்குகளை நிகழ்த்தும் வேலன் தொடர்பான பதிவுகள் சுமார் 30 சங்கப் பிரதிகளில் இடம் பெற்றுள்ளன.

-           வேலன் சடங்கு நிகழ்த்தியமை தொடர்பான குறிப்பைக் காண்கிறோம். (நற்.34)

-           வேலன் வெறியாட்டு நிகழ்த்திய குறிப்பு உள்ளது. (குறுந்.53)

-           வெறியாட்டு வேலன் நிகழ்த்துவது குறித்த தலைவி - தோழி கூற்றைக் காணமுடிகிறது, (ஐங்.241)

மேற்குறித்த தொழில்சார் பதிவுகள் அமைந்துள்ள முறைமை என்பது 350:40:15:5 என்னும் நிலையில் உள்ளது. (பார்க்க: வரைபடம்)

70 சதவீத அளவில் மேற்குறித்த பத்து தொழில்சார் பதிவுகள் இடம்பெற்றுள்ள பிரதிகள் சங்கப் பிரதிகளில் பழமையானவை. அதற்கான காரணங்கள் வருமாறு

-           மனிதனின் இயற்கை வாழ்முறையைக் குறித்து இவை பேசுகின்றன.

-           மனித வாழ்க்கை அடிப்படைத் தேவைகளாக இவை உள்ளன.

-           நிலம், கடல், மலை என்ற அடிப்படையான இயற்கை மரபுகள் மீது மனிதர்கள் செலுத்திய வினைகள் இவற்றில் பேசப்படுகின்றன.

-           இவை இட்டுக்கட்டப்பட்ட புனைவுகளாக இல்லை. எதார்த்த வாழ்க்கை

-           இவ்வாழ்முறை இன்றும் எச்சமாகவும் முழுமையாகவும் தொடர்வதைக் காண் கிறோம்.

எஞ்சியுள்ள பிரதிகள் இவ்வகையான வாழ் முறையைப் பேசாது, மாற்றமடைந்த மனித வாழ்வைப் பதிவு செய்கின்றன. அவை இயற்கை மரபுக்கு மாறானவை. வைதிக மரபைச் சார்ந்தவை.

இயற்கை வழிபாட்டை மறுத்துக் கட்டப்பட்ட கடவுள் வழிபாட்டைப் பேசுகின்றன. பிற்காலத்தில் உருவான சமய மரபுகளின் மூலமாக உள்ளன. இதனால் இவை தொன்மையான பிரதிகளாக இருக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்காது.

இவற்றின் நீண்ட வரிகள் கொண்ட அமைப்பும், தன் உணர்ச்சித்தன்மையை இழந்த போக்கும் மேற் குறித்த கருத்தை வலுப்படுத்துவதாக அமைகிறது.

இவை ஒவ்வொன்றிலும் பேசப்படும் செய்திகளை மேலும் விரிவாக விவாதிக்கும்போது சங்கப் பிரதிகளை நான்கு பகுதிகளாகக் கட்டமைத்து, அவற்றுள் கட்டமைக்கப்படும் படிநிலையைப் புரிந்துகொள்ள ஏதுக்கள் மிகுதியாக உண்டு. அதனை அடிப்படையாகக் கொண்ட பின்கண்ட கருதுகோள்களை முன்வைக்கலாம். இவை சங்கப் பிரதிகளை புதிய அநுபவங்களோடு வாசிக்க வழி காட்டுவன.

-           நான்கு பகுதிகளாகச் சங்கப் பனுவல்களைப் பதிப்பித்தல்

-           சங்கப் பனுவல்களின் கால ஒழுங்கை தர்க்கப்பூர்வமாக உறுதிப்படுத்தல்

-           சங்கப் பிரதிகள் தொடர்பான சமூகவியல் ஆய்வுகளை இவ்வடிப்படையில் நிகழ்த்துதல்

-           தொகுப்பு மரபில் காலம் கருத்தில் கொள்ளப்படாமையை அறிதல்

மேற்குறித்த தன்மையை விளக்கும் வகையில், எனது முந்தைய கட்டுரையில் உள்ள பகுதியை மீண்டும் மேற்கோளாகக் கொடுக்கிறேன்.

“தொகுப்பு மரபு ஒன்று நேர்க்கோட்டுத் தன்மையாக இருக்க முடியாது. பல்வேறு மரபுகளின் இணைவாகவே இருக்க முடியும். இவ்வகையில் அதனை அணுகாமல், ஒற்றைத் தன்மையில் அணுகினால் வரலாற்றுப் பிழைகளைச் செய்ய நேரிடும்; சமூக இயங்குநிலை (Dialectics) பற்றிய பார்வை இன்றிச் செயல்பட்டதாகவும் அமையும்.

தொல்பழம் பிரதிகளை அணுகும்போது மரபுத் தொடர்ச்சியைப் பற்றிய புரிதல் தேவை. அதன் மூலம் அப்பிரதிகளை வாசிக்கும் பார்வையில் தெளிவு ஏற்படும். அதற்கான ஒரு கருவியாக (tool)) இவ்வகையான தொகுதி யாக்கம் செய்யப்படுகிறது. இதன்மூலம் பிரதியை அதன் சூழலில் (context) வைத்து வாசிக்க முடியும்.

கி.பி. 6, 9 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்ச்சூழலில் உருவான சமூக அசைவியக்கமான தொகுப்பு மரபு குறித்து இருபத்தோராம் நூற்றாண்டில் வாசிப்பதற்கு மேற்குறித்த தொகுதியாக்கம் உதவக்கூடும். சங்கப் பிரதிகளை ஆய்வு செய்ய வசதியாக இத் தொகுதியாக்க மரபில் பதிப்பிக்கவும் செய்யலாம்.

இவ்வகையான புரிதல் இல்லாமல் சங்கப் பிரதி களை வாசிப்பதால், அவற்றை “சமஸ்கிருத காவிய மரபின் தமிழ் வடிவம்” என்றும் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டளவில் இவை தோன்றியிருக்க வேண்டும் என்றும் ஹெர்மன் டிக்கன் (Herman Tieken) என்பவரால் பேச முடிகிறது. முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுவதாக அமையும் இவரது புரிதல், அப்பிரதிகளின் பழமை குறித்த காலநிரலைப் பற்றிய புரிதல் இன்மையே. கலித்தொகையிலிருந்த சங்கப் பிரதிகளின் காலத்தை அவர் மதிப்பிடுகிறார். கலித்தொகையின் இணைப்பிரதிகளாக ஐங்குறுநூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகியவற்றை அவர் புரிந்து கொள்கிறார். இந்த விபத்தை, இப்பிரதிகளின் காலத் தொகையாக்கத்தைப் பற்றிய புரிதல் மூலம் தவிர்க்க முடியும். டிக்கன் அவர்களின் நேர்க்கோட்டு ஒற்றைப் பார்வை வரலாற்றுப் பிழைக்குக் காரணமாகிறது. (பார்க்க: :Kavya in South India - Old Tamil Poetry - 2001)

செவ்விலக்கியப் பாடல் உருவாக்க மரபு, செவ் விலக்கியப் பாடல்தொகுப்பு மரபு, பாடல்களுக்கு உரை எழுதிய மரபு, அச்சில் பதிப்பித்த மரபு என்ற சங்கப் பனுவல் வாசிப்பு மரபில் தொகையாக்கத்தின் மூலம் கால நிரல்படுத்துதல் தேவைப்படுகிறது. இதன்மூலம் சங்கச் செவ்விலக்கியப் பிரதி வாசிப்பு மேலும் செழுமையுறும். (சங்க நூல்களின் காலம்:2012:12-14)

வரைபடம்

சங்கப் பிரதிகளில் தொழில்சார் பிரிவுகள் குறித்த பதிவு

·           ஆறுநூல்கள்:         நற்றிணை, குறுந்தொகை, ஐங் குறுநூறு, பதிற்றுப்பத்து, அக நானூறு, புறநானூறு

·           ஒன்பது நூல்கள்:  பொருநர் ஆற்றுப்படை, மலை படுகடாம், பெரும்பாணாற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை,

                        முல்லைப்பாட்டு, குறிஞ்சிப் பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப் பாலை, மதுரைக்காஞ்சி

·           ஒருநூல்:     கலித்தொகை

·           இரண்டு நூல்கள்:  பரிபாடல், திருமுருகாற்றுப்படை

குறிப்பு:

இக்கட்டுரை pandanus.13, International Seminar on Nature in Literature, Art, Myth and Ritual To honour the 150th Birth anniversary of Moriz Wintemitz Institute of South and Central Asia, Philosophical Faculty, Charles University in prague, May 30-June 1, 2013 இல் நடைபெற்ற கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.

Pin It