என்னதான் பிழைப்பதற்காக ஊர் ஊராகப் போய்த் திரிந்தாலும்கூட சொந்த ஊர் என்றால் சொந்த ஊர்தான்.

பெரும்பாலும் மனைவி, மகளுடன் சுமை களையும் எடுத்துச் செல்வதால், வழக்கமாகக் காலையில் மதுரை சந்திப்பு ரயிலடியில் இறங்கி யதுமே ஆட்டோவொன்றைப் பிடித்து வீட்டுக்குப் போய்விடுவேன்.

mangammal-madurai_450இந்த முறை தனியே. தீபாவளிக்கெல்லாம் ஊருக்குப் போவதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலையில், அதற்கு முன்னதாக ஒரு ஞாயிற்றுக் கிழமையையொட்டிக் கிடைத்த நாளில் எடுத்த டிக்கெட் இது, சென்னையில் இருப்பவர்களின் துரதிருஷ்டத்தின்படியே விரும்பிய ரயிலில் - பாண்டியன் எக்ஸ்பிரஸ்தான், வேறென்ன? - டிக்கெட் கிடைக்காததால் அனந்தபுரி எக்ஸ்பிரஸில் (பேசாமல் திரு அனந்தபுரம் எக்ஸ்பிரஸ் என்றே பெயர் வைத் திருக்கலாம்!) மதுரைக்குச் சென்றேன். அதிகாலை 4.15 மணிக்குச் சென்றடைய வேண்டும். எப்போது சென்றடையுமோ, மதுரையில் இறங்கத் தவறி விடுவோமோ என்ற அச்சத்திலேயே இரவுத் தூக்கம் முழுவதும் போய்விட்டது.

ஒருகாலத்தில் டாக்டர்களுக்கு மருத்துவத்தைத் தவிர வேறெதுவும் தெரிவதில்லை, ஏமாந்துவிடு வார்கள் என்பார்கள். ஆனால், இப்போதெல்லாம் மருத்துவத்தைத் தவிர எல்லாமும் தெரிகிறதோ என்று தோன்றுகிறது. அதேபோல, இந்த ஐ.டி. நபர் களுக்கும்கூட அடுத்தவர்களைப் பற்றி எதுவுமே தெரியாதுபோல; அல்லது தெரிந்தும் தெரியாதவர் களாக நடக்கிறார்கள் போல.

நான் சென்ற ரயிலில் எனக்கு நடுப் படுக்கை. எதிரேயுள்ள நடுப் படுக்கையும் வயதில் மூத்த - சுமார் 65 வயதிருக்கலாம் - ஒருவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ரயில்வேயில் ஐ.ஆர்.சி.டி.சி. எந்திரத்துக்குத் தான் சொந்த அறிவும் கிடையாது, புகட்டப்பட்ட அறிவும் கிடையாதே. ஆனால், எங்கள் பகுதியிலேயே மிக இளைஞர்களுக்குக் கீழ்ப் படுக்கைகள் வழங்கப் பட்டிருந்தன. அவர்கள் இருவருமே ஐ.டி.காரர்கள். வேறொரு பெட்டியிலிருந்து வந்த இன்னோர் இளைஞரும் சேர்ந்துகொண்டார்.

மூவருமாகத் தங்களுடைய செல்போன்களின் பெருமைகளை மாற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவர், தன்னுடைய TABLET-ஐ (செல்போனாகவும் இல்லாமல் லேப்டாப் ஆகவும் இல்லாமல் இரண்டுங் கெட்டானாக உருவெடுத்துள்ள இழிபிறவி?) எடுத்து வைத்துப் பெருமைகளை விளக்கியதுடன், சினிமா வெல்லாமும்கூட காட்டிக்கொண்டிருந்தார். கெரகம், அதில் யூ டியூப்பில் டவுன்லோட் செய்யப்பட்ட விவேக், சந்தானம் நகைச்சுவைகள் வேறு. தங்களுடைய புகழ்களையும் தங்கள் சாதனைகளையும் கூட அவர்கள் பட்டியலிட்டுக் கொண்டிருந்தனர்.

எனக்கு எதிரே இருந்த முதியவர், உட்கார்ந்த நிலையிலேயே தூங்கி விழுந்துகொண்டிருந்தார். இளைய சமுதாயமோ கவலையே படவில்லை. வேறு வழியுமில்லை. நானும் விதியே என அவர்களின் தற்புகழ்ப் புராணங்களைக் கேட்டுக்கொண்டு வந்தேன். எப்படியோ ஒருவரின் கடைக்கண் பார் வையில் முதியவர் பட்டுவிடவே, அவர் வேண்டு மானால் தூங்கட்டுமே எனக் கூறினார். ‘நீங்கள் பேசிக் கொண்டிருங்கள். நானும் - அவர்களில் ஒருவருடையதான - மேல் படுக்கைக்குப் போய் விடுகிறேன்’ என்று கூறித் தப்பிவிட்டேன். ஆனால், வந்த தூக்கம் போனது போனதுதான். இந்த லட்சணத்தில்தான் அதிகாலை 4 மணிக்கு இறங்க வேண்டிய அவதி.

அதிசயமாக அன்று சரியான நேரத்துக்கே மதுரைக்கு வந்துவிட்டது அனந்தபுரி எக்ஸ்பிரஸ். தூங்கியும் தூங்காமல் எழுந்து, மதுரைச் சந்திப்பி லிருந்து வெளியே வரும்போது, எப்போதும்போல அந்த அதிகாலையிலும் ஆட்டோ டிரைவர்கள் வரவேற்றனர் (இவர்கள் எல்லாம் எப்போது தூங்கி எப்போது விழிப்பார்கள்?). நான் தனி என்பதால் அவர்களைத் தவிர்த்துவிட்டு, நீண்ட காலத்துக்குப் பிறகு, பெரியார் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன்.

ரயில் நிலையச் சந்திப்பு முன்பு போல இல்லை. நன்றாக நினைவு இருக்கிறது. ‘70-களின் கடைசி ஆண்டுகளில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, நாட்டுத் தொண்டுத் திட்ட மாணவனாக ரயில் நிலையத்துக்கு வருவோம் (விடுமுறையில் ஊருக்குச் செல்வதற்காகவும்தான்). இலங்கைத் தலைமன்னாரில் இருந்து ஒரே டிக்கெட் எடுத்து மதுரைக்கு நிறைய பேர் வருவார்கள். ரயில் நிலையமே நமக்கு மிகவும் ஒட்டுறவுடன் இருப்பதாகத் தோன்றும்.

இப்போது நிலையத்துக்குள் நுழையும் சாலையை வாய்க்கால் மாதிரி வெட்டிவிட்டு ஆட்டோக்களை மட்டும் விடுகிறார்கள். முன்புறம் முழுவதும் ‘டைல்ஸ்’ பதித்துவிட்டார்கள். ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது. இப்போதும் இருக்கிறது என்று சொல்லிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறதாம். என்னால் ‘சட்’டெனப் பார்க்க முடியவில்லை. அதுவும்கூட மதுரை ரயில் நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்களின் ரட்சிப்புதான் காரணம் என நினைக்கிறேன். வெளியே திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரங்கள். சில ஏ.டி.எம்.கள். அழகுபடுத்து கிறேன் பேர்வழி என்ற பெயரில், சகிக்க முடியாமல் என்னென்னவோ செய்திருக்கிறார்கள். ஒருவேளை இதுதான் சிலருக்கு அழகோ என்னவோ?

ரயில் நிலையத்துக்கு எதிரே மங்கம்மாள் சத்திரம். பழைய கட்டடம். சாதாரண மக்கள் தங்கிக் கொள்வார்கள். முன்புறம் வெளியாக இருக்கும். சில பிச்சைக்காரர்கள் அமர்ந்திருப்பார்கள். வெயிலுக்கு ஒதுங்கி நிற்கலாம். இப்போது எல்லாம் உருமாறிப் போய்விட்டது. முன்புறம் இருக்கக்கூடிய அறைகள் எல்லாம் கடைகளாக மாற்றப்பட்டு விட்டிருக் கின்றன. சத்திரத்தில் கிடைக்காத வாடகை, இந்த வணிகக் கடைகளில் கிடைக்கும்தானே? ராணி மங்கம்மாளே வந்தால்கூட அடையாளம் காண முடியாத அளவுக்குக் கட்டடத்தைக் காணாமல் போகச் செய்யும் அளவுக்குக் கடைகளின் விளம்பரப் பலகைகள். நவீனம்.

முன்பெல்லாம், அதிகாலை நேரங்களில் வழக்க மாக ஜங்ஷனிலிருந்து பெரியார் பஸ் நிலையம் (அப்போது பஸ் ஸ்டாண்ட்) செல்லும் வழியில் ஆங்காங்கே இருக்கும் தேநீர்க் கடைகளில், ஏறத்தாழ ஒரே மாதிரியான பக்திப் பாடல்கள் ஒலிக்கும். ஆனால், இப்போது ஒன்றும் காணவில்லை. இருந்த கடைகள் எல்லாமும்கூட கொஞ்சம் ‘எலைட்’டாகக் காட்சி யளித்தன.

premavls_450அந்த அதிகாலையிலும் திருநெல்வேலி அல்வா புகழ் பிரேம விலாஸில் விற்பனையாளர்கள் சுறு சுறுப்பாக இருந்தார்கள். அல்வா சொன்ன பின், ‘மிளகு போட்ட இந்தக் காராச்சேவுதான் சார் இங்கே ஸ்பெஷல்’ என்று யோசனையும் சொன்னார்கள். 500 ரூபாய்த் தாளைக் கொடுத்தபோது, முகங்கோணாமல் சில்லறையும் தந்தார்கள்.

ஒரு காலத்தில் ஓஹோவென்றிருந்த ரீகல் தியேட்டர் தேடிப் பார்க்க வேண்டியதாக உள்ளடங்கிப் போய்க் கிடந்தது. பெரிய காரை வீடு போலத் தோன்றியது. இப்போது தங்க ரீகல் என்று பெயர். என்னென்னவோ படம் திரையிடுகிறார்கள். அப் போதெல்லாம் ஆங்கிலப் படங்கள் மட்டும்தான். வேர்ஈகிள்ஸ் டேர், கிரேட் எஸ்கேப், எஸ்கேப் டு விக்டரி, ஃபைவ்மென் ஆர்மி... எத்தனையோ படங்கள். எத்தனையோ நண்பர்களுடன். திரையரங்கிற்கு வரும் ரசிகர்களை அவ்வளவு எளிதாக மதிப்பிட்டு விட முடியாது. சாதாரணமாகத் தோன்றக்கூடிய ஒருவர், ஆங்கிலப் படங்களைப்பற்றிய பெரும் தகவல் களஞ்சியமாகவே திகழ்வார். திரையரங்கில் முறுக்கு விற்பவர்கூட விரிவாகப் பேசுவார் (அப் போது இணையமெல்லாம் கிடையாது, அவர் களுக்குப் படிப்பறிவுகூட இருக்காது). நண்பர்கள் மனோ என்ற பால் மனோகரன் (நவம்பர் 25 ஆம் தேதி அதிகாலையில் திருச்சி அருகே நேரிட்ட சாலை விபத்தொன்றில் பால் மனோகரன் மறைந்துவிட்டார்), முரளிதரன் போன்றோருக்குத் தெரிந்த சிலர் அப் போது ரீகல் தியேட்டரில் வேலை பார்த்தார்கள். எனவே, எப்போது போனாலும், எந்தப் படத்துக்கு வேண்டுமானாலும் எங்களால் டிக்கெட் வாங்கிவிட முடியும். டிக்கெட் வாங்குகிறோமோ இல்லையோ, நிச்சயமாகப் படம் பார்த்துவிட முடியும்.

ஒருமுறை திடீரென, எந்தத் திரையரங்காக இருந்தாலும் ஆண்டுக்கு மூன்று மாதங்கள் தமிழ்த் திரைப்படங்களைத் திரையிடுவது கட்டாயம் என்றாக்கப்பட்டது. ரீகலில் தமிழ்த் திரைப்படமா? என்ற வியப்புதான் ஏற்பட்டது. பல பேர் வெறுத்து, சோகச் சித்திரமாகிவிட்டார்கள். ஆனாலும் தமிழ்ப் படங்களையும் அங்கே பார்த்தார்கள். நானும் அங்கேதான் ‘அவள் அப்படித்தான்’ பார்த்தேன். ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீபிரியா நடித்த இயக்குநர் ருத்ரய்யாவின் முதல் படம். கறுப்பு வெள்ளையில் பிரமாதமான படம் (ருத்ரய்யா இயக்கிய இரண்டாவது படம், ‘கிராமத்து அத்தியாயம்’ பெரிதும் சொதப்பிவிட்டது, கல்பனாவில் ஒரு காலைக் காட்சியில் வேர்க்க விறுவிறுக்க அதைப் போய்ப் பார்த்தோம். ‘ஆத்து மேட்டுல, ஒரு பாட்டு கேட்குது’ என்றொரு பாட்டு. நன்றாக இருக்கும். படத்தில் குரல் ஒருபுறம், தலையசைப்பு, வாயசைப்பு ஒருபுறம் என ஒட்டாதிருக்கும். அந்தப் பாட்டுக்கு ஆடிய புதுமுகங்கள் இப்போது எப்படி இருப்பார்களோ தெரியவில்லை. பிறகு ருத்ரய்யாவும் கூட அவ்வளவாக சோபிக்கவில்லை). காலம்தான் எப்படியெல்லாம் மாற்றிக் கொண்டிருக்கிறது?

பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தபோது, சென்னையை எள்ளி நகையாடுவதைப் போல, ஒரு குடும்பம், பேருந்துநிலையப் பக்கமிருந்து ரயில் நிலையத்தை நோக்கி நடந்துவந்துகொண்டிருந்தது. ரொம்ப ‘ரிச்’சாகப் புடைவை கட்டிக் கொண்டிருந்த குடும்பத் தலைவி, மிக இயல்பாகப் பெரிய பை யொன்றைத் தூக்கித் தலையிலும் மற்றொரு பையை இடுப்பிலும் வைத்துச் சுமந்தபடி நடந்துவந்துகொண் டிருந்தார். கணவர், மகன், மகள் எல்லாருமே அவரவர் வலுவுக்கேற்ப ஆளுக்கொரு சுமையுடன் நடந்துகொண்டிருந்தனர். அந்தக் கணத்தில் எனக்கும் சின்ன வயதில், அப்பா, அம்மா, தம்பி, தங்கையுடன் ஊருக்குப் போன நினைவுகள் வந்துபோயின.

கண்ணில் பட்டது கட்டபொம்மன் சிலை, முன்பெல்லாம் அடிக்கடி கட்டபொம்மனின் கையிலிருக்கும் வாள் முறிந்து விழுந்துவிடும். இப்போது எப்படி எனத் தெரியவில்லை (பகல் நேரத்தில் தற்போது நண்பர் எடுத்து அனுப்பிய படத்தில் வாள் இருக்கிறது). பெரிய சதுக்கமாகத் தோன்றிய இடம், இப்போது திட்டு மாதிரி காட்சியளிக்கிறது.

பேருந்து நிலையம் மிகவும் சின்னதாகத் தோன்றியது, சின்னப் பிள்ளையில் பார்த்த எல்லாமே இப்போது அப்படித்தான் தோன்றுகின்றன. பெரியன வெல்லாம் சிறியனவாக, தொலைவுகள் எல்லாம் சுருக்கமாக. பேருந்து நிலையம் முழுவதும் தட்டுக்கல் பாவிவிட்டிருக்கிறார்கள். முன்னர், மழை பெய்தால் குளம் போலப் பேருந்து நிலையம் காட்சியளிக்கும். இப்போது, ஒருவேளை நீச்சல் தொட்டி போலக் காட்சியளிக்குமோ என்னவோ?

பேருந்து நிலைய நடைமேடைகளில் எல்லாம் எப்போதும்போலவே தலைக்குத் தங்கள் பொருள் களையே வைத்துக்கொண்டு, குளிருக்குப் போர்த்திக் கொண்டு நிறைய பேர் படுத்துத் தூங்கிக்கொண் டிருந்தார்கள். பெரும்பாலும் ஏதாவது வேலையாக நகருக்கு வந்துவிட்டு, முதல் பேருந்தில் ஊருக்குத் திரும்பக் கூடியவர்களாக இருக்கும். அல்லாமல் இரவு நேரம் மட்டுமே குடியிருப்பாகப் பாவித்துத் தங்கிக்கொள்ளும் கூலித் தொழிலாளர்களாகவும் பிளாட்பாரங்களில் தின்பண்டங்கள் விற்பவர் களாகவும் பிச்சைக்காரர்களாகவும் இருக்கலாம்.

பேருந்து நிலையம் முழுவதும் முந்தைய நாள் குப்பைகள். நடைமேடைகளும் குப்பை மேடுகளைப் போலத்தான் இருந்தன. இரவோடு இரவாகக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்யலாமே? என்று தோன்றியது. பிறகு மிகவும் யோசித்துப் பார்க்க, இரவோடிரவாக இந்தக் குப்பையைக் கூட்டுவதால் மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது. போய்த் தொலை யட்டும். படுத்துறங்குபவர்களாவது விடியும்வரை நிம்மதியாக உறங்கட்டும் எனப் பட்டது.

இதே பேருந்து நிலையத்தில் ‘80-களில், 90-களில் மதுரைத் தினமணியில் வேலை பார்த்த காலத்தில் எத்தனையோ நாள்கள் அதிகாலை நேரங்களைப் புத்தங்களைப் படித்துக்கொண்டே கழித்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. நாவல்கள், கட்டுரைகள் என எத்தனை யெத்தனை?

ஒரு காலகட்டத்தில் லூனா இருந்தது. 1800 ரூபாய்க்கு ஒரு நண்பரிடம் வாங்கியது. லிட்டர் பெட்ரோல், எட்டு ரூபாயோ என்னவோ, இரவுப் பணிக்கு மட்டுமே அலுவலகத்துக்கு எடுத்துச் செல்வேன். ஒரு நாள் தினமணியில் இரவுப் பணி. நள்ளிரவிலிருந்து பெட்ரோல் விலை உயரப் போவதாக அறிவிப்பு வந்தது. அப்போதெல்லாம் டி.வி.யும் கிடையாது, பிரேக்கிங் நியூஸ்களும் கிடையா. விலை உயர்வு பற்றி ஒன்று வானொலியில் சொல்லித் தெரிய வேண்டும் அல்லது நாளிதழ் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். தெரிந்தவுடனே நாங்கள் எல்லாம், டேங்கை நிரப்பிக் கொள்வதற்காக, அலுவலகத்துக்கு எதிரிலேயே இருந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வண்டிகளுடன் சென்றோம். என்னுடைய லூனா விலும் பெட்ரோல் போட்டார்கள். என்ன கொடுமை! பெட்ரோல் நிரம்பி, ஏராளமாகக் கீழே கொட்டி விட்டது! ஏதோ, சில ரூபாய்களை மிச்சம் செய்யப் போவதாக நினைத்துக்கொண்டு, அதைவிடக் கூடுதலாக வீணாகிவிட்டது.

பின்னால், லூனாவை வைத்துச் சமாளிக்க முடியாததால் - சரியான ஆவணங்களும் இல்லை - விற்றுவிட்டேன். அதன் பிறகு பேருந்துதான். இரவு - அல்ல - அதிகாலை 2 அல்லது 2.30 மணிக்கு வேலை முடிந்ததும், அலுவலக வாசலிலேயே பேருந்து நிறுத்தம், காத்திருந்து இரவு சேவை பேருந்தைப் பிடித்தால், தெற்குவாசல் சுற்றிப் பத்துப் பதினைந்து நிமிஷங்களிலேயே மத்திய பேருந்து நிலையம் வந்துவிடும். வீட்டுக்குச் செல்ல முதல் பேருந்து, 5 மணிக்கு மேலேதான். சில நாள்களில் 5. 15கூட ஆகிவிடும். இடம் கிடைத்தால் ஏதாவது பெஞ்சில் அமர்ந்துகொண்டு, இல்லாவிட்டால் நின்றுகொண்டே இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகப் படித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். அலுவலகத்திலும் படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்த அலுப்பால், சில நாள்களில் வெறுமனே சுற்றி வந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே நேரம் கழியும். அப்போதும் இதேபோன்ற காட்சிகள் தான், கொஞ்சம் பழைய, கறுப்பு-வெள்ளைப் படத்தைப் பார்த்தது போல, இருக்கும்.

இந்தப் பேருந்து நிலையக் காத்திருப்பில் வெயில் காலத்தில் எதுவும் தோன்றாது. குளிர்காலத்தில் தான் மிகவும் கடினமாக இருக்கும். இதற்காக, போர்வையா கொண்டு செல்ல முடியும்? மழைக் காலங்களை நினைத்தால் இப்போதும் நடுங்குகிறது.

முன்னர் பேருந்து நிலையத்துக்குள்ளே ஆட்டோக்களைக்கூடப் பார்க்க முடியாது. இப் போது அதிகாலை என்பதாலோ, முதல் பேருந்து வந்து புறப்பட நேரமாகும் என்பதாலோ ஷேர் ஆட்டோக்களே உள்ளே வந்து சென்றன. அரசரடி, காளவாசல் என்றெல்லாம் கூவிக்கூவி அழைத்தார்கள். முதல் பஸ் வரும் நேரம் நெருங்கிவிட்டதெனக் கருதியதாலோ என்னவோ யாரும் சீண்டவில்லை.

இன்னும் 5 மணியாகவில்லை. அந்தக் காலத்தில் கேட்காத சப்தங்களும் கேட்கத் தொடங்கின. எங்கிருந்தோ பள்ளிவாசல் தொழுகைச் சப்தம். பஸ் நிலையத்தின் தென்புறமாக இருக்க வேண்டும். திடீர் நகர். அப்போது பெரும்பாலும் குடிசைகள், சின்னச் சின்ன வீடுகள்தான். உழைக்கும் மக்கள் வாழ்ந்துவந்தனர். இப்போது மாடிக் குடியிருப்புகள் எல்லாம் தெரிந்தன. சிறிது நேரத்தில் மற்றோரிடத் திலிருந்து தொழுகைச் சப்தம். சிறு இடைவெளியில் பஸ் நிலைய வாசலையொட்டி, கட்டபொம்மன் சிலைக்கு நேர் பின்னேயுள்ள தேவாலயத்தில் 5 மணி அடித்து, ஒலிபெருக்கியில் விவிலியத்தின் சில வரிகள் ஒலிபரப்பாயின. இதுவும் புதிதாகத்தான் இருந்தது.

அப்போது பேருந்து நிலையத்துக்குள் வடக்குப் புறம் சுற்றுச்சுவரையொட்டிச் சில மரங்கள் இருந்தன. வெயிலுக்கு மக்கள் ஒதுங்கி நிற்பார்கள். ஆவின் கடையொன்று இருக்கும். எப்போது பார்த்தாலும் ஒரு கூட்டம் நின்றுகொண்டிருக்கும். வடகிழக்கு மூலை வழியேயும் பேருந்து நிலையத்துக்குள் நடந்து வர வழியிருந்தது. வழியிலேயே இரு புத்தகக் கடைகள் இருந்தன. இப்போது எதுவும் இல்லை - மட்டுமல்ல - நிழல் தரும் மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு, வேலிச் சுவரிட்டுக் கொஞ்சம் குத்துச் செடிகளை நட்டிருக்கிறார்கள். அழகாக்கிவிட்டதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள் போலும்.

வடபுறத்தில் விலையில்லா - அல்ல - இலவசக் கழிப்பிடமாக இருந்தது, இப்போது பளப்பளா கற்கள் பதிக்கப்பட்டு நவீன கழிப்பிடமாக மாறி யிருக்கிறது. தொலைவிலிருந்து பார்க்கும்போதே தெரிந்தது. உள்ளே செல்லும் துணிவு பிறக்கவில்லை. கட்டணம் வசூலிக்கிறார்களா என்றும் தெரியவில்லை.

மதுரை மத்திய பேருந்து நிலையத்தின் சொல்லப் படாத அடையாளமெனத் தெரிந்தது, மேற்கே இருந்த பாழடைந்த கல்லறைத் தோட்டமும் கல்லறை களும். கல்லறையின் சுற்றுச்சுவர்தான் ஆண்களுக் கான சிறுநீர்க் கழிப்பிடமாக விளங்கியது. இப் போது என்னவோ, கோட்டைச் சுவர் போல வரிசை யாகக் கடைகள் கட்டப்பட்டிருந்தன. கல்லறைகள் தெரியவில்லை, இருக்கின்றனவா, அல்லது தூர்த்து விட்டார்களா என்பதுவும் தெரியவில்லை. விசாரிக்க வேண்டும்.

சரியாக 5 மணிக்கு முதல் பேருந்து, 59 பி சேந்த மங்கலம் செல்லும் வண்டி உள்ளே வந்துவிட்டது. அங்கே இங்கே சிதறிக் கிடந்தவர்கள் எல்லாம் திரண்டு பேருந்தில் ஏறிவிட்டார்கள். பேருந்து புறப்படவில்லை. பின்னாலேயே, இதே 59 வரிசையில் முடுவார்பட்டிக்குச் செல்லும் டீலக்ஸ் பேருந்து ஒன்றும் வந்து நின்றது. ஒரே ஒருவர்கூட ஏறவில்லை - உண்மையிலேயே ஒருவர்கூட கண்டுகொள்ளவில்லை. இரு பேருந்துகளும் ஒரேநேரத்தில்தான் புறப்பட்டன. (அப்போது, நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியேறிய வாசல் வழிதான் இப்போது உள்ளே நுழைகின்றன. எந்தெந்தப் பக்கங்களிலோ வெளியேறுகின்றன).

பேருந்திலிருந்து இறங்க வசதியாக முன்புறத்தில் அமர்ந்துகொண்டுவிட்டேன். டிக்கெட் 6 ரூபாய். சென்னையில் 13 ரூபாய், 19 ரூபாய் என்று கொடுத்து விட்டு, அதையும் ‘பாஸ் பண்ணி’ அனுப்பிவிட்டு, டிக்கெட்டும் வராமல், சில்லறையும் வராமல் படும் அவதியுடன் ஒப்பிட்டுப் பார்க்க, டிக்கெட் விலை மிகவும் சல்லிசாகத் தெரிந்தது.

எனக்கு முன்னால் அமர்ந்திருந்த இளைஞர் களில் ஒருவர், 100 ரூபாய்த் தாளை நீட்டி, 3 டிக்கெட் கேட்டார். ஆஹா, ‘காலங்காத்தாலே’ 100 ரூபாய் கொடுத்து டிக்கெட்டா, கடித்துத் துப்பப் போகிறார் கண்டக்டர் என்று அதிர்ச்சியுடன் காத்திருந்தால், ‘சில்லறை இல்லையா?’ என்ற ஒரே கேள்வியுடன் அமைதியாகப் பெற்றுக்கொண்டு, டிக்கெட்டைக் கிழித்துக் கொடுத்தார் கண்டக்டர்; ‘மீதி?’ என்ற இளைஞரிடம் பிறகு தருவதாகக் கூறிவிட்டுச் சென்றார். மறுமுறை டிக்கெட் கிழிக்க முன்புறம் கண்டக்டர் வந்தபோது, ‘அண்ணே, மீதியக் கொடுங்க’ என்றார் இளைஞர் மறுபடியும். ‘அட, ஓடியா போய்விடுவேன், இறங்குமுன் வாங்கிக் கொள்’ என்பது கண்டக்டரின் பதில். ‘சீக்கிரம் கொடுத்தால் தூங்குவோம்ல’ என்று கூறிய இளைஞர், கண்டக்டர் அந்தப் புறம் நகர்ந்ததும், ‘காலங்காத்தால பெரிய ஏழரையாப் போச்சு’ என்றொரு காமென்ட் வேறு அடித்தார். எனக்கு நிஜமாகவே இவையெல்லாம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இதுவே சென்னையாக இருந்திருந்தால் 100 ரூபாய்த் தாளைப் பார்த்ததுமே பேருந்தைவிட்டு இறக்கிவிட்டிருப்பார் கண்டக்டர். ஒரு சொல் கேட்க முடியாது, அப்படியே கேட்டாலும் பேருந்தில் உடன் பயணம் செய்யக்கூடிய ஒரு நபர்கூட ஆதரவாகப் பேசியிருக்க மாட்டார்.

பேருந்து, காளவாசல் நிறுத்தத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது. இந்த இடைவெளியில் ஆளில்லாமல் சென்ற டீலக்ஸ் பஸ், எங்கள் பேருந்தை ஓவர்டேக் செய்து காளவாசல் நிறுத்தத்துக்குச் சென்றுவிட்டிருந்தது தெரிந்தது. நிறைய பேர் கும்பலாக டீலக்ஸ் பேருந்தில் ஏறச் சென்றவர்கள், இந்த சாதாரண பேருந்தைப் பார்த்ததும் ஓட்டு மொத்தமாக மேலேறாமல் புறக்கணித்து நின்று விட்டனர். ஒருகணம் தயங்கிய பின் டீலக்ஸ் பேருந்து மீண்டும் ஆளில்லாமலேயே புறப்பட்டுப் போய்விட்டது. அந்த டிரைவர் ஒருவேளை திரும்பிப் பார்த்திருக்கக் கூடும், அல்லது, இது வழக்கமாக நடைபெறக்கூடிய ஒன்றாகத் தெரிந் திருக்கவும் கூடும். என்ன காரணமோ, உண்மை யிலேயே, இந்தப் புறக்கணிப்பு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

வீடு இருக்கும் பகுதியின் நிறுத்தம் வந்ததும் இறங்கி நடந்தேன். பேருந்து நின்று நிதானமாக இறக்கிவிட்டுப் புறப்பட்டது. ஒரு காலத்தில் ஆளரவமே இல்லாமல் இருக்கும் இந்தப் பகுதியில் அந்நேரத்திலேயே சில டீக்கடைகள் திறந்திருந்தன. மத்திய பேருந்து நிலையப் பகுதியில் டீக்கடை களில் கேட்ட பக்திப் பாடல்கள், இப்போது இங்கே ஒலித்துக்கொண்டிருந்தன. வீடு செல்லும் சாலையில் நடந்தால் - முன்னர் எங்கள் வீட்டில்தான் மரங்கள் இருக்கும், இப்போது பரவாயில்லை - மேலும் பல வீடுகளில் மரங்கள்...

பார்த்தவற்றையெல்லாம் யோசித்துக்கொண்டே நடந்துசெல்லும்போது, பஸ் நிலையத்திலிருந்தே தெரிந்த, யு.சி. ஹை ஸ்கூல் (இப்போது என்னவாகப் பெயர் மாறியிருக்கிறதோ?) சுவரில் எழுதப்பட்டிருந்த விவிலிய வரி, சம்பந்தமில்லாமல், நினைவுக்கு வந்தது - ‘உன் நம்பிக்கைகள் வீண் போகாது’.

என்னதான் இப்போதைக்கு சொந்த ஊரானது அன்னியமாகிவிட்டிருந்தாலும் பிழைக்கப்போன ஊரெல்லாம் சொந்த ஊராகிவிடுமா, என்ன?