அம்மாவின் கண்ணீர் உப்பேறி கறைபடிந்த
எழுத்துக்களை முன் போல் காணமுடிவதில்லை
துணை எழுத்துக்களின் துணையில்லாமல்
நலம் பேணும் கடைசிதம்பியின் விசாரிப்புகளும்
விவாதங்களுடனும், விளக்கங்களுடனும்
நீளும் நண்பணின் மடல்களும் நின்று போயின
விரலசைவில் சுலபமாய் "ஹலோ'க்கள்
தொலைபேசியின் கவர்ச்சி சிணுங்கலில்
தபால்காரரின் மணியோசை மெலிந்துபோனது
ஊர்கள் சுருங்கி, உலகம் சுருங்கி
ஒயர்களாய் நெளிந்தன
எண்களை சுழட்ட, சுழட்ட
சேமிப்பில் கரைந்தவை சில நூறு மட்டுமல்ல
ஞாபகங்களாய் வைத்திருக்க
காலவரிசைப்படி கடிதங்களும்தான்
- நெய்வேலி பாரதிக்குமார்