பலம் பொருந்திய காட்சி ஊடகமான தொலைக்காட்சி நம்முள் திணித்து வரும் கலாச்சாரமானது நம் ஒவ்வொருவரையும் பீதியடைய வைக்கிறது. பார்வையாளர்களைக் கிளர்ச்சியடைய செய்ய, திரைப்படம் அல்லது அது சார்ந்ததை மட்டுமே, அதுவே முற்றான ஒரு சாதனையாக, இயல்பு வாழ்வில் சிறிதும் பயன்தராத குழு நிகழ்ச்சிகள், அரை நாள் முழுவதும் தொடரும் வக்கிரம் மிகுந்த மேல்தட்டு நெடுந்தொடர்கள், குறிப்பாக குழந்தைகளைச் சீரழிக்கும் அயல்நாட்டு கலாச்சாரத்தின் தமிழாக்க ‘குட்டீஸ்’கள் என தவிர்க்க முடியாத அளவிற்கு நமது கதவுகளைத் தகர்த்து நடுக்கூடம் சேர்க்கின்றன. இதன் விளைவு பூமி வெப்பமடைதலைப் போல கைமீறிய ஒரு விஷயமாக, மிகக் காலம் தாழ்த்திவிட்டதாக உணரும் கணம் வெகு தொலைவில் இல்லை.

இந்த சீர்கேடுகளுக்கு இடையே, முற்றிலும் திரைப்படம் சாராமல், தொன்மங்களை நினைவூட்டி நமது பண்பாடு, கலாச்சாரம், உலகமயமாகிவிட்ட தமிழ்ச் சமூகத்திற்கான தீர்வுகளைத் தேடும் மக்கள் தொலைக்காட்சியின் ‘மண் பயனுற வேண்டும்’ என்ற கருத்துப்பாடு நம்மை நிறையவே ஆசுவாசப்படுத்துகிறது.