ஒரு பொருளை எப்படி உருவாக்க வேண்டும் என்று ஒருவன் கற்றுத் தெரியாமல் அல்லது கற்றுத் தெரிந்து கொள்ளாமல் அதை அவன் உருவாக்க வேண்டும் என்று யாரும் எதிர்ப்பார்ப்பதில்லை.ஆனால் சில செயல்கள் செய்வதற்குக் கற்றுத் தெரிய வேண்டிய அவசியமில்லை. கவிஞன் உருவாக்கப்படுவதில்லை; அவன் கவிஞனாகவே பிறக்கிறான் என்ற இந்தப் புகழ்பெற்ற கருத்து அதை உறுதிப்படுத்துகிறது. அதுமட்டுமன்றி அவனுடைய கவிதைகள் அவனின் நிரம்பிய மனதிலிருந்து வழிந்தோடுகின்றன. உண்மையில் கவிஞன் தன் வணிகத்தை தூக்கணாங்குருவி எப்படி தன் முயற்சியில் கவனமாக இருந்து தானாகவே கூடு கட்டுவதற்குக் கற்றுக் கொள்கிறதோ அவ்வாறே அவன் கற்றுக்கொள்ள வேண்டும்.

அவன் மனதில் உயர்ந்த கருத்துகள், சிந்தனைகள். செழிப்பான, கிளர்ச்சியூட்டுகின்ற, ஒளிவிடுகின்ற கற்பனைகள் நிரம்பியிரக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம் எழுத்து வடிவில் அவனுடைய கலா ரசிகர்களுக்குத் தெரிவிக்க இயலாவிட்டால் அவன் தன்னைக் கவிஞன் என்று உரிமை கோர இயலாது. தனது வணிகத்தின் நுட்பத்தை விவரிக்கவும், விளக்கவும் சில மணிநேரங்களே செலவிடுவதால் ஒரு வணிகனை மன்னிக்கலாம். ஆனால் மகிழ்ச்சி மிகுந்து எளிதாகவும் இருக்கும் அழகான கலை, கூர்ந்து ஆராய்ந்து விளக்குவதற்கும் விவரிப்பதற்கும் உட்படாதது.

முதலில், கவிதைகளைப் பற்றி என்னுடைய உறுதியான நம்பிக்கையைக் குறிப்பிடுகிறேன். கவிதை என்பது எதையும் போதிக்க முயற்சிக்கக் கூடாது. ஜெர்மானிய மொழிகளில் வருவதுபோல் மிக விநோதமான கற்பனையின், எண்ணத்தின் அழகான வெளிப்பாடாக இருந்தாலும்கூட கவிதை, கவிதையாக இருக்க வேண்டும். ஏனென்றால் கவிதையானது படைக்கப்பட்ட ஓர் அழகு. ஒழுக்க நெறிகளை நமக்குக் கற்றுக் கொடுக்க படைப்புகளான செடி, கொடி, மரங்களை நாம் வேண்டக் கூடாது அல்லது கட்டாயப்படுத்தக்கூடாது. ஆனால் இதற்கென்றுள்ள இயக்கங்கள்தாம் இவற்றின்மேல் போதனைகளைத் திணிக்க அவசியமாகக் கருதுகின்றன. இந்தப் போதனைகள் எல்லாம் வேடிக்கையானவை; சிரிப்புக்குரியவை.

இது நமக்கு நன்கு தெரிந்த ஒன்று. ஆனால் நம்மில் பலர் தெளிவான ஒழுக்கநெறிகளைக் கலையுடைய செயல், ஓவியம், சிலை அல்லது கவிதைகளின் மூலம் வெளிப்படுத்த நினைப்பது நகைப்புக்குரிய விஷயமட்டுமல்ல, அது ஒரு கொச்சையான செயலும்கூ. ஆமாம், அழகை நாம் இவ்வாறெல்லாம் தவறாகக் கணிக்கிறோம். அதை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் நம்முடைய துடுக்குத்தனமான கருத்துக்களுக்கு விரைந்து விடுகிறோம். பிரபஞ்சத்தை ஏற்றுக் கொள்ளுதல் என்பதிலிருந்து நாம் எவ்வளவு விலகியிருக்கிறோம்! பிரபஞ்சமானது தன்னுடைய கண்டங்களையும் கடல்களையும் வெளியேற்றியிருக்கிறது அதைப் பற்றி எந்தவொரு கருத்தும் கூறாமல் விட்டிருக்கிறது. பிரபஞ்சத்தின் செயல்களைப் போன்றதான கலை, இரவும் பகலும் சந்திக்கும் நேரத்தில் எற்படும் புயல்போன்றது அல்லது புவி ஈர்ப்பு விதியைப் போன்றது. சிறிய காதிதச்சுருளில் எழுதப்பட்ட ஒரு வேலைப்பாடாக (அ) காகிதக் கலைப்பொருளாக இதை எடுத்துக் கொள்ளவேண்டும். அல்லது அழகான, உயர்வை உடைய மென் உணர்ச்சிக் கருத்துக்களை அணிகலன்களாக அமையப் பெறாவிடில் இதற்கு (கவிதைக்கு) எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லாமல் போய்விடும் என்பதை வலியுத்துகிறோம்.

 அமி லோவல் (அமி லாரன்ஸ் லோவல்)
(பிப். 9, 1874 - மே 12, 1925)

அமெரிக்க பெண் கவி, விமர்சகர். இவர் பாஸ்டனின் சிறப்பு வாய்ந்த லோவல் குடும்பத்தில் பிறந்து, 28 வயதில் தன்னைக் கவிதைக்காக அர்ப்பணித்தும் 1910 வரையிலும் கவிதை எதுவும் பிரசுக்கப்படவே இல்லை.

A Dome of many - Coloured Glass (1912) என்ற அவரது முதல் கவிதைக் தொகுப்பைத் தொடர்ந்து Polyphonic Prose என்று அவர் அழைத்த அவரது முதல் புதுக்கவிதையைக் கொண்ட, Sword Blades and Poppy Seed (1914) என்ற தொகுப்பும் வெளிவந்தது. பின் அவர் படிமவியலை வழிநடத்துபவரானது, கூரொளியும் சக்திவாய்ந்த தனித்தன்மையான அவரது ஆளுமையைக் குறிப்பதாகவும் மரபார்ந்த செயல்பாட்டின் மேல் உள்ள அவரது வெறுப்பு கலந்த எள்ளலையும் காட்டுகிறது.

1926-ல் கவிதைக்காக புலிட்சர் விருதைப் பெற்றார். இவர் லெஸ்பியனாகப் பேசப்பட்டு, நடிகை அதா டேயர் ரஸ்ஸலின் காதல் இணையானார். இவரது பெரும்மாலான காதல் பாடல்களில் அதாவே அகநிலைப் பொருளாக உள்ளார்.

தமிழில் - மோதி இந்திரா