இலங்கையின் மன்னார் பகுதியில் தோண்டத் தோண்டத் தமிழர்களின் பிணங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் அவை, முறையான விசாரணையைத் தொடங்குமானால், அங்கே நடைபெற்றுள்ள போர்க் குற்றங்களுக்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் கிடைக்கும்.

 

மற்ற சட்டங்களைப் போலல்லாமல், ஒரு நூற்றாண்டு காலம் ஆனாலும் போர்க்குற்றச் சட்டம் தூங்காது என்பர். அக்குற்றங்களை மெய்ப்பிப்பதற்கும், போர்க் குற்றவாளிகளான ராஜபக்சே சகோதரர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதற்கும் உரிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

 

rajapakse_350இந்த உண்மைகளை உணர்ந்து கொண்ட சிங்கள இனவெறி அரசு, இப்போது இரண்டு செயல்களில் ஈடுபட்டுள்ளது. ஒன்று, தன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீசை வெளிநாடு களுக்கெல்லாம் அனுப்பித் தன் குற்றங்களை மறைக்க முயற்சி செய்வது. இன்னொன்று, கலாச்சார விழாக்களைப் பெருமளவுக்கு நடத்தி, தன் கோர முகத்துக்குக் கலை முகமூடி அணிந்து கொள்வது.

 

இரண்டாவது முயற்சிக்கான அடிப்படைதான், ஜுன் 2 - 4 தேதிகளில், இலங்கை அரசு அங்கு நடத்தத் திட்டமிட்டுள்ள அனைத்துலகத் திரைப்பட விழா. அந்த விழாவிற்கு இந்திய அரசு துணை போவது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.

 

உலகம் கண்டிராத கொலைக்களப் பூமியில், உல்லாசமாகத் திரைப்பட விழா நடத்த நினைப்பது எவ்வளவு பெரிய வக்கிரம். அதற்கு அமிதாப் பச்சன் போன்ற புகழ்பெற்ற இந்திய நடிகர்களை அழைக்கிறது இலங்கை அரசு.

தி.மு.கழக உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி, நாடாளுமன்றத்தில் பேசும்போது ஒன்றை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார். “ஏ.ஆர்.ரகுமான் போன்ற தமிழர்கள் ஆஸ்கர் பரிசு வாங்கிவந்தால், அவரை இந்தியர் என்று சொல்லிக் கொண்டாடுகிறீர்கள். கன்னியாகுமரிக் கடற்கரையில் இந்தியக் குடிமக்களான மீனவர்கள் கொல்லப்பட்டால், அவர்களைத் தமிழர்கள் என்று ஒதுக்கி விடுகிறீர்கள் ” என்றார்.

எப்போதும் அப்படித்தான் நடக்கிறது.

ஆனால் இப்போது ஒரு சிறிய மாறுதல். முதலில், திரைப்பட விழாவில் பங்கேற்க இசைவு தெரிவித்திருந்த அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் முதலான புகழ்பெற்ற நடிகர்கள், இப்போது தங்கள் மறுப்பைத் தெரிவித்து விட்டனர். அவ்விழாவில் பங்கேற்க இலங்கை செல்லப் போவதில்லை என்றும் அறிவித்து விட்டனர்.

மும்பையில் உள்ள ‘நாம் தமிழர்’ இயக்கத்தினர் நடிகர் அமிதாப் வீட்டை முற்றுகையிட்டு, மனுக்கொடுத்துச் செய்திகளை விளக்கியதும், அமிதாப்பின் மனமாற்றத்திற்குக் காரணமாயிருக்கலாம். அந்த வகையில் நாம் தமிழர் இயக்கப்பணி பாராட்டிற்குரியது.

அதே போன்று, சென்னையில் மே 17 இயக்கத்தினரும் சில முயற்சிகளில் ஈடுபட்டதைச் செய்தித்தாள்களில் பார்க்க முடிந்தது. பல்வேறு தமிழ் அமைப்புகள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளன.

தமிழ்த் திரையுலகம் அந்த விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள செய்தி ஆறுதலாக உள்ளது. திரை உலகினரின் இன உணர்வுக்கும், மனித நேயத்திற்கும் நாம் பாராட்டுத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

எனினும் ஷாருக்கான், லாராதத்தா, விவேக் ஓபராய் போன்ற நடிகர்கள் சிலர், இலங்கை செல்லவிருப்பதாக அறிவித்துள்ளனர். மனிதநேயமற்ற இவர்களின் செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது.

இந்தச் சூழலில்தான், இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ், சில நாள்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று, ஐ.நா. அவையின் செயலர் பான் கீ மூனைச் சந்தித் திருக்கிறார். “இது எங்களின் உள்நாட்டு விவகாரம். இதில் ஐ.நா. தலையிட வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டதோடு, “நாங்களே ஒரு விசாரணை வைத்து முடிவைச் சொல்கிறோம்” என்றும் கூறியிருக்கிறார். குற்றவாளியே தனக்கான விசாரணைக் குழு அமைத்துக் கொள்ளும் ஒன்பதாவது உலக அதிசயம் இதுதான்.

அமெரிக்காவின் வெளிநாட்டு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனையும் பெரிஸ் சந்தித்துப் பேசி இருக்கிறார்.

ஜனநாயகத்திலும், சகோதரத்துவத்திலும், மனித நேயத்திலும் நம்பிக்கை உள்ளவர்கள் ஒருங்கிணைந்து முயற்சிகள் எடுக்க வேண்டிய நேரம் இது. மிகக் கொடூரமான போர்க் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு உலக நாடுகளும், ஐ.நா. அவையும் இடம் கொடுத்தவிடக் கூடாது என்னும் குரல் உலகெங்கும் ஒலிக்கட்டும்.
.


- சுப.வீரபாண்டியன்
Pin It