எட்டு மாதங்களுக்கு முன்னால் இறந்துபோன தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த 'மர்மத்தை' அறிவதற்காக, இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஒரு நபர் விசாரனைக் குழு ஒன்றை அமைத்துள்ளார்.

"எங்களின் கோரிக்கை நிறைவேறிவிட்டது, இனிமேல் இரு அணிகளின் இணைப்புப் பேச்சு வார்த்தைக்குத் தடையில்லை" என்கிறார். ஓ.பி.எஸ் அணியின் இயக்குனர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான மாபா பாண்டியராஜன்.

உண்மையில் எடப்பாடியும், பாண்டிய ராஜனும் வாயசைக்கின்றனர். பின்னாலிருந்து மோடிதான் பேசுகின்றார். கதை, உரையாடல், இயக்கம் எல்லாம் பா.ஜ.க.தான்!

'பாய்ஸ் கம்பெனி' வைத்து நாடகம் நடித்துக் கொண்டிருப்பவர்கள் இங்குள்ள அ.தி.மு.க.வினர். இந்த மேடையில் அந்த நாடகம் இன்னும் எத்தனை நாளென்று தெரியவில்லை.

தினகரன், சசிகலா குழுவினரையும், அவர்கள் குடும்பத்தினரையும் கழற்றி விட்டு விட்டு, ஓ.பி.எஸ் & ஈ.பி.எஸ். அணிகளை ஒன்றாக இணைத்து, இரட்டை இலைச் சின்னத்தை அவர்களுக்கு வாங்கிக் கொடுத்தபின், அடுத்த தேர்தலில் அ.தி.மு.க.வைத் தங்களுக்குள் 'அடக்கமாக' வைத்துக் கொள்வது, பா.ஜ.க.வின் திட்டம். 

பதுக்கி வைத்துள்ள பணத்தையும், பதவியையும் கட்டிப்பிடித்துக் காப்பாற்றிக் கொள்வது, பாய்ஸ் கம்பெனி நாடக நடிகர்களின் நோக்கம். இரண்டு நோக்கங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான எண்ணத்தில்தான் இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

விசாரணைக் குழுவிற்கு எந்த அதிகாரமும் கிடையாது. பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். அந்தப் பரிந்துரையையும் அரசு  ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் தேவையில்லை. உண்மையாகவே விசாரணை நடத்த விரும்பி இருந்தால், அதனை 6 மாதங்களுக்கு முன்பே நடத்தியிருக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி எடுத்து ஆய்வுகள் செய்திருந்தால் உண்மைகள் வெளிவந்திருக்கும்.

காலம் கடந்து, ஓய்வு பெற்ற நீதிபதியின் கீழ் விசாரணை என்பது வெறும் கண்துடைப்பே அன்றி வேறொன்றும் இல்லை. என்ன செய்வது, மோடி பேசுவதற்கு வாயசைக்க வேண்டும் என்பதுதானே எடப்பாடிக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை!

Pin It