அப்போதெல்லாம் தாத்தாக்கள்

அடிக்கடி சொல்வதுண்டு

வெள்ளைக்காரனே

பரவாயில்லை என்று !

தந்தை பெரியார் கூட

தயங்காமல் சொன்னதுண்டு

சுதந்திரதினமன்று

இது துக்கதினம் என்று

எண்ணியதுண்டு அப்போது

என்ன இது இப்படி என்று !

முள்ளிவாய்க்கால் சுற்றம்

அழிக்கப்பட்டபோதும்

முள்ளிவாய்க்கால் முற்றம்

இடிக்கப்பட்டபோதும்

ஆணவ அரசால்

மீனவ நண்பர்கள்

காணாமல்போய்க்

கைவிடப்படும்போதும்

என்னசெய்தது

இந்த சுதந்திரம்

இங்கேயும் அங்கேயும்

அப்போது ?

இப்போதும்கூட

வெள்ளைக்காரன்தானே

வீரமாய் வெளிப்பட்டான்

கேமரூன்தானே

கேள்விகள் கேட்டார்.

அமெரிக்கா கூட

அதட்டுகிறதே இலங்கையை. 

ஆனாலும் இந்தியா

அசையக்கூட மறுக்கிறதே. 

அப்போதெல்லாம் தாத்தாக்கள்

அடிக்கடி சொல்வதுண்டு

வெள்ளைக்காரனே

பரவாயில்லையென்று 

முழுதாய்ப்புரிகிறது இன்று

மூத்தோர்சொல் அமுதம் என்று !