நீண்டதுன் சரித்திரம் நெடியதுன் வெற்றிகள்
நின்படை எவரையும் வெல்லும்
ஈண்டுநீ செதுக்கிய இணையிலாப் படைப்புகள்
இன்னும்பல் லாண்டுபேர் சொல்லும்!
பாண்டியர் வளர்த்த பைந்தமிழ் மொழிதனைப்
பாரினில் செம்மொழி என்றாய்
வேண்டிய செயல்களை விரைந்துநீ செய்ததால்
வீரனே வரலாற்றில் நின்றாய்!
வெண்தாடி வேந்தரின் விரல்பற்றி இளமையில்
வெஞ்சினப் போருக்கு வந்தாய்
அண்ணாவின் தம்பியாய் அரசியல் களமாடி
ஆயிரம் வெற்றிகள் தந்தாய்!
கண்ணியம் கடமை கட்டுப்பா டென்ற
கழகத்தின் பாதையில் போனாய்
எண்ணிலாத் தமிழரை இணைத்துக் கட்சியின்
இதயமே நீதான்என் றானாய்!
உரையிலே கவியிலே உனைமிஞ்ச யாரென்றே
உலகினை வியக்கச் செய்தாய்
திரையிலும் உன்கொடி திசையயலாம் பறந்திடத்
தெவிட்டாத வசனங்கள் நெய்தாய்!
இரைகண்ட வேளையில் பசிகொண்ட மனிதர்போல்
எல்லோரும் பேரன்பு வைத்தோம்
கரைகண்ட தமிழிலே காவியம் படைத்திட்ட
கலைஞரைத் தேனீயாய் மொய்த்தோம்!
தனியயாரு மனிதராய்த் தலைவரைக் காண்பவர்
தவறான கணக்கிலே நின்றார்
நனிமிகு அறிவுடை நாயகர் அடடாஓர்
நிறுவனம் தலைவரே என்றார்!
கனிவிலே அண்ணாவும் துணிவிலே பெரியாரும்
கலந்துதான் கலைஞர் இங்கே
இனிவரும் நாள்களில் இவ்வுல கின்வினா
இவர்போலத் தலைவர் எங்கே?