அண்ணா அசாரே ஆதரவுக் குரல்
அங்கிங் கெனாது கேட்கும் - அதன்
ஆர்க்கும் மேட்டிமைக் குரலா ஊழல்
அழுக்கை இங்கே போக்கும்?
மன்மோகன் எனும் மட்டைப் பிடுங்கியின்
மானம் கப்பல் ஏறுது - இங்கு
மதிகெட்ட காங்கிரசுக் கட்சியின் பேரோ
மலமாய் எங்கும் நாறுது!
காந்தியின் பேரைச் சொல்லிச் சொல்லிக்
காயடித் தார்கள் நாட்டை - இன்று
‘கதரின்’ பின்னால் ‘கம்யூனிஸ்டுகளோ?’
சே! பார், வெட்கக் கேட்டை!
ஏந்தி முழக்கிய செங்கொடி வீரம்
எங்கோ வீணாய்ப் போனது - வாக்கு
எடுபிடி அரசியல் கூட்டணிச் சகதியில்
எல்லாம் சாக்கடை ஆனது!
‘உண்ணா விரத’ முகத்தில் உமிழ்ந்தோர்
பெரியார், அம்பேத் காராம்! - இன்று
உண்மையில் அசாரேக் கும்பல்கள் கொழுக்க
உதவிடும் ஆட்கள் யாராம்?
பன்னாட்டுக் குழுமத் தனியார் கொள்கையின்
பக்கத் துணையாய் இருந்து - அசாரே
பந்தலின் கீழே பணக்கா ரர்க்குப்
பலப்பல வகையாய் விருந்து!
துப்புக் கெட்ட தலைவர்கள் நாட்டைச்
சுரண்டிக் கொழுக்கும் வரைக்கும் - ‘அரசியல்
தூய்மை, நேர்மை’ முழக்குகள் போலியர்
தொண்டைகள் தம்மைக் கிழிக்கும்!
உப்புத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்
என்பது ஓர்நாள் உறைக்கும் - இங்கே
உழைக்கும் மக்கள் எழுச்சி ஒன்றே
உலுத்தர் செயல்கள் எரிக்கும்!