அண்ணா அசாரே ஆதரவுக் குரல்

       அங்கிங் கெனாது கேட்கும் - அதன்

       ஆர்க்கும் மேட்டிமைக் குரலா ஊழல்

       அழுக்கை இங்கே போக்கும்?

மன்மோகன் எனும் மட்டைப் பிடுங்கியின்

       மானம் கப்பல் ஏறுது - இங்கு

       மதிகெட்ட காங்கிரசுக் கட்சியின் பேரோ

       மலமாய் எங்கும் நாறுது!

காந்தியின் பேரைச் சொல்லிச் சொல்லிக்

       காயடித் தார்கள் நாட்டை - இன்று

       ‘கதரின்’ பின்னால் ‘கம்யூனிஸ்டுகளோ?’

       சே! பார், வெட்கக் கேட்டை!

ஏந்தி முழக்கிய செங்கொடி வீரம்

       எங்கோ வீணாய்ப் போனது - வாக்கு

       எடுபிடி அரசியல் கூட்டணிச் சகதியில்

       எல்லாம் சாக்கடை ஆனது!

 

‘உண்ணா விரத’ முகத்தில் உமிழ்ந்தோர்

       பெரியார், அம்பேத் காராம்! - இன்று

       உண்மையில் அசாரேக் கும்பல்கள் கொழுக்க

       உதவிடும் ஆட்கள் யாராம்?

பன்னாட்டுக் குழுமத் தனியார் கொள்கையின்

       பக்கத் துணையாய் இருந்து - அசாரே

       பந்தலின் கீழே பணக்கா ரர்க்குப்

       பலப்பல வகையாய் விருந்து!

துப்புக் கெட்ட தலைவர்கள் நாட்டைச்

       சுரண்டிக் கொழுக்கும் வரைக்கும் - ‘அரசியல்

       தூய்மை, நேர்மை’ முழக்குகள் போலியர்

       தொண்டைகள் தம்மைக் கிழிக்கும்!

உப்புத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்

       என்பது ஓர்நாள் உறைக்கும் - இங்கே

       உழைக்கும் மக்கள் எழுச்சி ஒன்றே

       உலுத்தர் செயல்கள் எரிக்கும்!
Pin It