நூல் பதிப்புரை

மலையகமல்லன் -தி. குழந்தைவேலு, காவ்யா பதிப்பகம் - சென்னை - 24, பக்:112, விலை:ரூ.70

எத்தைனையோ விதமான குடும்ப நாவல்களைப் படித்திருக்கிறோம். போராட்ட நாவல்களை படித்திருக்கிறோம். அழகு மிகுந்த காதல் இலக்கியங்களை படித்திருக்கிறோம். மன்னர்களின் வரலாற்றுக் காவியங்களை படித்திருக்கிறோம். இத்தனைக்கும் மத்தியில் தான் சாதாரண மக்களின் வாழ்க்கைக் காவியங்களும் எழுதப்படுகின்றன.

ஊட்டி, வால்பாறை போன்ற மலைப்பகுதியில் தேயிலைத்தோட்டங்கள் உருவாக்கப்பட்டபோது தனது ரத்தத்தையும் கண்ணீரையும் சிந்தி உரமாகிப் போன சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை அழுத்தமாகப் பேசும் நூல் ’எரியும் பனிக்காடுகள்’ இது போன்ற பல்வேறு வாழ்க்கைகளின் வரலாற்றை வெளிப்படுத்தும் நாவல்களின் வரிசையில் தனக்கென தனி இடத்தை பிடித்தபடி வெளி வந்ததுள்ளது மின்சாரத் தொழிலாளி தி. குழந்தைவேலு எழுதியுள்ள ’’மலையக மல்லன்’’ நாவல்!

குந்தா மலைப்பகுதிகளில் மின் இணைப்பு இல்லாமல் இருண்டு கிடந்த காலத்தில் மலைப்பகுதி முழுவதும் ஒளி விளக்கேற்றிய மனிதர்களின் வரலாறு. கழுத்திலே அணியும் அணிகலன்கள் அழகானது தான்! ஒளி வீசுவது தான்! ஆனால் அதற்கான மனிதர்களின் உழைப்போ, இருளின் பிடியில் மூச்சடைக்கும் சுரங்கங்களில் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைதான்! குந்தா மலைப்பகுதியில் மின் இணைப்பு தர பணியாற்றிய ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைத்துப் பேருக்கும் இதே நிலைதான்! உயரமான மலைகள்! அடந்த காடுகள்! உயிர்பயம் ஏற்படுத்தும் மலைப்பாம்புகள்! கூட்டம் கூட்டமான யானைகள்! செந்நாய்கள்! இடுக்கிப்பிடி போடும் கரடிகள்!, இவைகளுக்கு மத்தியில் இணைப்பு வேலைகள்!

மரம் செடி கொடிகள் வெட்ட படி அமைக்கவேண்டும். குழி மார்க் செய்து குழி தோண்டி ஆங்கில் நட வேண்டும். கம்பி இழுக்க வேண்டும். இது போன்ற முன் தயாரிப்புப் பணிகள் பல மைல்தூரங்களுக்கு செய்யும் போது கொடிய மிருகங்களை சந்திக்க வேண்டும். ஆட்கள் செல்லும் வழியில் எந்தெந்த மிருகங்கள் எப்போது வருமோ! முதல் பலி யாரோ? என்ற பயம் மிகுந்த சூழலே வேலை முன்னேற்றத்தை தடுக்கிறது.

இதிலிருந்தெல்லாம் ஊழியர்களைப் பாதுகாக்க முன் அறிந்து செயல்பட கிடைத்தவன்தான் மல்லன். மலையக மல்லன். ஆம்! உறைய வைக்கும் பனி குளிரிலும் உடம்பில் கோவணத்துணியோடும் கையில் கொம்போடும் காட்டில் கிடைக்கும் தேன், பலா முதலிய பொருள்களோடும் திரிந்த மலைவாசி மல்லன் முதல் மின் ஊழியனாகி மின் ஊழியர்களைப் பாதுகாக்கும் கேடயமாய் அமைகிறான். இவனின் வாழ்க்கைதான் தி.குழந்தை வேலுவின் எழுத்தில் நம் முன் வருகிறது. நாவலாக விறுவிறுவெனப் படிக்க வைக்கும் எழுத்து நடை. காட்டின் பயங்கரத்தை வர்ணிக்கும் இவரால் சுவை குன்றாமல் காதலையும் வர்ணிக்க முடிகிறது. இத்தனைக்கும் மேல் நாவலின் நாயகனான மல்லனின் பலதரப்பட்ட அனுபவங்களின் மூலம் ஒட்டு மொத்த மலையகத்தை நம் கண்முன் நிறுத்துகிறார்.

சுருக்கமாகக் கூறினால் இந்நாவலுக்கு அணிந்துரை செய்துள்ள எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி கூறியுள்ளது போல தி.குழந்தைவேலுவின் எளிமையே உண்மையின் வலுவாய் உள்ளது. முன்னுரை வழங்கிய தி.மு.ராசாமணி குறிப்பிட்டுள்ளது போல ஒரு பாட்டாளி படைப்பாளியாக முடியும் என்பதற்கு உதாரணமாய் மட்டுமல்ல; சிறகை விரித்துப் பறக்கும் முயற்சி படிப்படியாய் வானமும் தொட்டுவிடும் தூரம்தான் என நமக்குணர்த்தும். மின்தொழிலாளியாய் இருந்து 5 நாவல்களை எழுதி நம்மை பரவசப்படுத்த வைக்கும் தி.குழந்தைவேலுவின் எழுத்து முயற்சியின் மைல் கல் இந்நாவல்.

இந்நாவலை வாசிப்பதன் மூலம் வாசிப்புக் களத்தை விரிவுபடச் செய்வதே இந்நாவலுக்கு நாம் அளிக்கும் முதல் விருது. இவ்விருதை நாம் இவருக்குத் தயங்காது தருவோம். வாழ்வின் இருள் அகற்றி ஒளி தங்க நம் முன்னோர்களை வாழ்த்துவோம். படிப்பறிவில்லா மலைமக்கள் நம் வாழ்வில் ஒளி வீச ஆற்றியுள்ள அரிய பங்கைப் போற்றுவோம்! மின்சாரம் தனியார் மயமாகும் இச்சூழலில் இந்நாவலை அனைவரும் வாங்கி படித்து நம் தலைமுறையுடன் இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வது அவசியமானது.