உடுமலையாரின் பிறப்பும் - வாழ்வும் :

அன்னைத் தமிழகத்தின் கொங்குநாடாய்ப் போற்றப்பெறுவ கோவை மாவட்டம். அங்கு உடுமலைப்பேட்டை வட்டம், பூவிளைவாடி (தற்பொழுது பூளவாடி) என்னும் சிற்றூரில் திருவள்ளுவராண்டு 1930 (25.09.1899)ல் பிறந்த நம் உடுமலையாரின் தாயார் பெயர் திருவமை. முத்தம்மாள்; தந்தையார் பெயர் திருவமை. கிருட்டிணசாமி ஐயா. உடுமலை நாராயணகவி யாருக்குப் பெற்றோரிட்ட பெயர் நாராயணசாமி. சாதிப் பெயர்களைப் பின்னொட்டாகப் போட்டுப் பெயர்களை எழுதும் ஓர் தீய வழக்கம் வெகுவாகப் பரவியிருந்த அக் காலக்கட்டங்ளில் பகுத்தறிவுச் சுடராக ஒளிர்ந்த நம் உடுமைலையார் அவர்கள், சாதியால் தம்மை அடையாளப் படுத்திக்கொள்ள விரும்பவில்லை என்றும் தாம் பாடலியற்றும் தொழிலால் தான் தம்மை அடையாளப்படுத்த வேண்டும் என்றும் கருதியே தம் பெயருக்குப் பின்னால் கவி என்னும் பின்னொட்டைச் சேர்த்து நாரயண கவி என்று தன்னைக் குறிப்பிடச் சொன்னார். உடுமலைப்பேட்டை எனும் தன் ஊரின் பெயரை முன்னொட்டாகக் கொண்டு உடுமலை நாராயணகவி என அன்போடு அழைக்கலானார்.

udumalai_narayanakaviபகுத்தறிவும் நாராயணகவியும்

தந்தை பெரியாரைப் பின்பற்றி வந்தவர்தாம் நம் உடுமலை நாராயணகவியாரும். அவர்தம் பாடல்களில் பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துக்கள் பரந்துபட்டுக் கிடக்கின்றன. அவரே தந்தை பெரியார் பற்றி எழுதிய பாடலும் உள்ளது.

‘‘இழிவை நீக்கும் ஈ.வெ.இராமசாமி என்ற
  எங்கள் தந்தை உண்மைப் பெரியார்’’

பல்வகைக் குமுகாயநலப் பாடல்களை எழுதியிருந்தாலும் நாராயணகவியாரின் பாடல்களில் பகுத்தறிவுக் கருத்துள்ள பாடல்களே பெருமளவில் இருக்கின்றன.

‘‘பகுத்தறிவுக் கொவ்வாத
பஞ்சாங்கப் பாடைதனைப்
பார்ப்பனர்கள் சரிபாதி
பாய்ச்சி விட்டனர்...’’

மூடநம்பிக்கை மறுப்பு :

அறிவினாலும் அறிவியலாலும் ஏற்றுக் கொள்ள முடியாததே மூடநம்பிக்கை ஆகும். மாந்தர் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒருவகையில் ஒன்றின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் அதுவே அறிவுக்கு ஒவ்வாத செயல்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தால் அது மூடநம்பிக்கையே.

ஆகூழ் (அதிர்ஷ்டம்), ஓகம் என்னும் பெயரில் குமுகாய மக்களிடையே பரவியுள்ள மூட நம்பிக்கைகள் பெருமளவு. ஆகூழைக் காரணங்காட்டியே உழைக்காமல் சோம்பேறிகளாக உள்ள மாந்தரும் நிறையப் பேர் உள்ளனர். இதனைக் கருத்திற்கொண்டே உடுமலையார்,

‘‘ஆளை ஏய்ச்சுத் தின்பா£ர் எல்லாம்
வேலை செஞ்சே தீரணும்’’

என்ற தம் பாடல் வரிகளில் மூட நம்பிக்கைக்கு வேட்டு வைக்கிறார்.

கடவுள் மறுப்பு:

திராவிடக் கருத்துகளின் வழித்தோன்றலான நம் உடுமலையாரின் பாடல்களில் கடவுள் மறுப்புக் கொள்கையும் வெளிப்படையாகக் காணப்படுகிறது.

‘‘காலஞ் செய்கிறதைக் கடவுள் செய்யாதென்று
கவனத்தில் வையுங்கடா...’’

கடவுள் நம்பிக்கைக்காரரால் கல்விக் கடவுள் என்று சொல்லப்பட்டு வரும் கலைவாணி, தன் கணவன் நாக்கில் குடியிருப்பதாகச் சொல்லப்படும் வடிகட்டிய மூடத்தனத்தைத் தனக்கே உரிய நகைச் சுவையுணர்வுடன்...

‘‘மறையவன் நாவிலவள் உறைவது நிசமானால்
மலசலம் கழிப்பது எங்கே ? எங்கே ?’’ என்று பகடி செய்கிறார்.

சாதி மறுப்பு:

மண்ணுலகில் ஆண் சாதி, பெண் சாதி என்னும் இரண்டு சாதி தவிரப் பிரிவினை செய்யும் பிறசாதிகள் இல்லையென்றும், அப்படிப் பிரிவினை செய்வதால் வாழ்வில் நன்மையில்லை என்றும் கூறுகிறார்..

‘‘பெண்ணும் ஆணுமெனப் பிறந்த சாதியது
மண்மேல் ரெண்டுதான் வேறில்லை’’
என்று சாதிமறுப்பை வலியுறுத்திப் பாடுகிறார்.

மத மறுப்பு :

‘‘சாதிமத பேதம் இல்லாமலே
தன்னலம் எண்ணாமலே மேலாம்
நாடு செழித்திடவும் நாடு....

என்பதன் மூலம் நாடும் நாட்டு மக்களும் தாழ்வடையாமல் உயர்ந்து விளங்கித் தழைத்தோங்கிடத் தன்னலமின்றி, சாதி-மத வேற்றுமையின்றி வாழ வேண்டும் என்கிறார்.
உடுமலை நாராயண கவியார் பாடல்களில் பொதுவுடைமை உணர்வு களும் ஏழை, எளியோர் மீதான இரக்க உணர்வும் தேங்கியுள்ளன.

‘‘மனுசனை மனுசன் ஏச்சுப் பொழைச்சது
அந்தக்காலம்
மடமை நீங்கிப்
பொதுவுடைமை கோருவது
இந்தக் காலம்....’’

இதில், அந்தக் காலம் போல் பிறரை ஏய்த்துப் பிழைக்காமல் பொதுவுடைமை வேண்டும் இக்காலத்தில் என்கிறார்.

பெண்ணியம் :

ஒரு காலக்கட்டத்தில் குடும்பச் சூழல்களில் பெண்களை ஆண்கள் பேய்கள் என்றும் குரங்குகள் என்றும் இழிச்சொல், பழிச்சொல் கூறி நடத்தி வந்தனர். அப்படிப் பழிக்கும் ஆண்களுக்கெல்லாம் பெண்களைத் திருமணம் செய்வித்து அவர்களுக்குப் பெண்ணின் பெருமையை உணரச் செய்வதாக,

‘‘பெண்குலத்தைப் பேய்கள் என்ற
பித்தர் தம்மையே பெண்டு
பிள்ளைக்குட்டி உள்ளவராய்
மாற்றி விடுவோம்....’’

அறிவியல் பார்வை :

குழந்தைப் பேறு வேண்டி மக்கள் அந்தக்காலம்போல் காசிக்குப் போகாமல் அறிவியல் கண்டுபிடிப்பில் உருவான ஓர் ஊசியைப் போட்டாலே போதும் என்பதைத் தன் பாடலில் உணர்த்துகிறார். குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தம் பாடல்வழி வலியுறுத்திய பெருமை உடுமைலையாரையே சாரும். அறிவியலை ஏதோ மேலோட்டமாகப் பாராமல் அறிவியலின் வளர்ச்சியை ஒவ்வொரு படிநிலையாக ஆழமாக விரித்துரைத்துள்ளார். குழந்தைப் பேறின்மை குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அது குறித்த மூட நம்பிக்கைகளை விட்டொழித்துவிட்டு, அறிவியலின் வளர்ச்சியைப் பயன்படுத்தி அக்குறைபாட்டை அகற்ற வலியுறுத்துகிறார்.

‘‘காசிக்குப் போனாக் கருவுண்டாகு மென்ற
காலம் மாறிப் போச்சு - இப்ப
ஊசியைப் போட்டா உண்டாகும் என்ற
உண்மை தெரிஞ்சு போச்சு’’

என்று மூடத்தனத்தை விடச் சொல்லி அறிவியல் நோக்கில் காட்டுகிறார் உடுமலையார்.

இலக்கிய நயம்:

படைப்பாளிகளின் படைப்புத் திறனை அளந்தறிவதற்கு அவர்தம் உவமைகள் மிகச் சிறந்த அளவு கோல்களாய் அமைகின்றன. உடுமலையாரின் உவமைகளைக் கொண்டு அவரின் படைப்புத் திறனை அளக்கும்போது அவர் இலக்கிய வானில் உயர்ந்து விளங்குகின்றார். உடுமலையார் பாடல்களில் உவமை உத்தி, பல்வேறு இடங்களில் மிளிர்கிறது. வானத்து நிலவைப் பெண்ணின் முகத்திற்கு ஒப்பிடுகின்றார். அதில் அவள் கண்களை மீன்களாக உவமைப்படுத்து கின்றார்.

‘‘வெண்மதித் துண்டொன்றில்
வில்லிரண்டும் கெண்டை
மீன்களிரண்டும் கண்டேன்...’’

இறப்பு:

புகழ் உச்சியில் இருந்தபோதும் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த உடுமலை நாராயணகவியார், தம் 82ஆம் அகவையில் - தி.பி. 2012 (23.05.1981)ல் உயிர்துறந்தார். அவர்தம் இறப்பிற்கு முன்பு எழுதி வைத்த இறுதி ஆவணத்தில், தாம் இறந்தபிறகு என்ன செய்யவேண்டுமென்பதைக் குறித்துள்ளார். அந்த ஆவணத்தில், ‘‘செத்த பிணத்தை வைத்துக் கொண்டு, இனிமேல் சாகும் பிணங்கள் கூத்தடித்துக் கொண்டிருப்பது அறியாமை; இந்த அறியாமையானது பணத்தின் அளவிலே விரிவடைகிறது, குறைகிறது. என்னைப் பொறுத்தமட்டில் இந்த அறியாமை வேண்டாம். உடலைவிட்டு உயிர் பிரியுமானால் அப்போதே காலத்தை வீணாக்காமல் குழியைத் தோண்டிப் புதைப்பதோ அல்லது எரிப்பதோ இந்த இரண்டில் ஒன்றைச் செய்திடுங்கள்! வேறு எந்தவகையான சடங்குகளும் தேவையில்லை. மீறிச் செய்வது அறியாமை. உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். எனக்காக ஒன்று செய்யவேண்டுமானால் அதை மட்டும் செய்யுங்கள்! உணவிலே எளிமை, உடையிலே எளிமை, கல்வியிலே மேன்மை இது போதுமானது. இதுதவிர வேறு எதையும் செய்யாதீர்கள். இந்த வீண்பெருமைகளை (டாம்பீகங்களை) எல்லாம் செய்து சீரழிந்து, மனத்துன்பங்களுக்கு ஆளாகி, என் பின்னோர்க்கு (வாரிசுகளுக்கு) இதைப் பழக்கி, அவர்களின் அறிவைக் கெடுத்துத் துன்பங்கட்கு ஆளாக்கி விட்டேன். இப்போது உணர்கிறேன். காலங்கடந்துவிட்டது. இனி ஒரு பயனும் இல்லை. கடைசியாக ஏதோ வைத்திருக்கிறேன். அதைக்கொண்டு உங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்! இத்தனையும் கல்விக்குள்ளாக அடங்கியுள்ளது. ஆதலால் காலத்தை வீணாக்காமல் கவனத்தைக் கல்வியிலே செலுத்துங்கள்; இதுதான் என் கடைசி ஆசை!’’ என்று எழுதிவைத்துள்ளார். காலத்தை வென்ற - வரலாற்றுப் புகழ்மிக்க எண்ணற்ற பாடல்களை எழுதி, தமிழ்க்குமுகத்திற்கு விழிப்புணர்வை ஊட்டிய உடுமலை நாராயணகவியாரின் மறைவு நமக்கெல்லாம் மிகப்பெரிய இழப்பாகும்.