நவீனகால அரபிக்கவிதை பற்றிய விரிவான அறிமுகக்கட்டுரையும் அரபுலகக்கவிஞர்கள் பற்றிய குறிப்புகளோடு கூடிய நாற்பத்தி ஏழு கவிதைகளின் மொழிபெயர்ப்பும் அடங்கிய நவீனகால அரபி கவிதைகள் எனும் இந்நூல் தமிழ் கவிதை வாசகர்களையும், படைப்பாளி களையும் வெகுவாக ஈர்க்கும் தன்மை கொண்டதென்று குறிப்பிடலாம். சென்னை புதுக்கல்லூரி அரபித்துறை பேராசிரியர் முனைவர் க.மு.அ.அஹ்மது ஜுபைர் இந்நூலை எழுதியுள்ளார்.

 

இஸ்லாமியர்களின் புனிதவேதம் குர்ஆன் உருவாவதற்கு முந்தைய முன் இஸ்லாமிய காலகட்டத்தைச் சேர்ந்த கவிஞர்களில் இம்ருல்கயஸ், அல்நபிகா, அல்துபையினி, தரபா இப்னு அல்அப்து சுகயர் இப்ன் அபிசல்மா உள்ளிட்டோர் புகழ்பெற்றவர்கள். கி.பி. 6- ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டிருந்த யாப்பும், சந்தமும், அடிகளும் கொண்ட செய்யுள் வடிவம் சார்ந்த இப்படைப்புகள் தத்தம் அரபு குலங்களின் பெருமைகளை புகழ்ச்சியாக முன்வைப்பதும், எதிர் குலங்களின் மீது வசைமொழிகளைச் சொல்வதும், இனக்குழு போர்களையும், பாலைவன நாடோடி வாழ்வைப் பேசுவதாகவும் அமையப் பெற்றிருந்தன. இந்தவகையில் சேகரிக்கப்பட்ட ஏழு கவிஞர்களின் கவிதைகளுக்கு முஅல்லகாத் என்றுபெயர். இதற்கு தொங்குகவிதைகள் என்ற பொருளும் உண்டு. மக்கமா நகரின் கபா ஆலயத்தில் அல்லாத், அல்உஜ்ஜா, அல்மனாத் உள்ளிட்ட எண்ணற்ற உருவச்சிலைகளோடு இக்கவிதைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன. முன் குர்ஆனிய காலகட்ட கவிகளின் மற்றுமொரு தேர்வு செய்யப்பட்ட தொகுப்பினை முபத்தலியாத் என்ற பெயரால் வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

நூலாசிரியர் அஹ்மது ஜுபைர் அரபுக்கவிதை வரலாற்றை ஒவ்வொரு காலகட்டத்தின் கவிதைப் போக்கின் உள்ளடக்கம் சார்ந்து ஐந்து பகுதிகளாக வகைப்படுத்துகிறார். புதிய செவ்விலக்கியவாதம் (Neo-classicism) முந்தைய புனைவியல்வாதம் (Neo-classicism) புனைவியல்வாதம் (Romanticism) மஹ்ஜ எனப்படும் புலம் பெயர்வாதம் மற்றும் நவீனவாதம் (Moder nism) என இவற்றை வரிசைப்படுத்தலாம். நவீனவாதம் சார்ந்த அரபுலகின் கவிதை எழுத்தை படைப்பிலக்கிய உள்ளீடு உருவவியல் சார்ந்து மேலும் அவர் ஆய்வுக்கு உட்படுத்துகிறார். இக்கவிஞர் களை பிந்தைய புனைவியல் வாதிகள் (Late Romantics) குறியீட்டுவாதிகள் (Symbolists) சமூக யதார்த்தவாதிகள் (Social Realist) எதிர்ப்பிலக்கிய கவிஞர்கள் (Poets of Resistance Literature) எனவும் அடையாளப்படுத்தி அவர்தம் படைப்பிலக்கிய சாராம்சம் குறித்த உரையாடலை நிகழ்த்துகிறார்.

 

முன் இஸ்லாமிய காலகட்டத் திற்கு பிறகு, அரபுச்சூழலில் நபிமுகமதுவின் வழி குர்ஆனும் இஸ்லாமிய கருத்தியல் வாழ்வியல் முறையும் உருவாகிறது. உருவற்ற அல்லாவின் மொழி ஜிப்ரயீல் எனும் தேவதூதர் மூலமாக நபிமுகமதுவிடம் வெளிப்பட்ட தாக முஸ்லிம்கள் நம்பிக்கை கொண்டுள்ள குர்ஆன் என்னும் புனித வேதம் கிபி.610 - 632 காலகட்டத்தில் தோற்றம் பெற்ற கவிதைசார் உரைநடை இலக்கியமாகும். இது ஏழு மன்ஸில்கள், முப்பது ஜளஸ்வுகள், 114 அத்தியாயங்கள், 6236 வசனங்கள் என்ற வடிவமைப்பில் உள்ளது. உலகின் தோற்றம், மனித உருவாக்கம், நபி முகமதுவுக்கு முற்பட்ட அரபு சமூக வரலாறு, போர், சமாதானம், பெண் சார்ந்த உரிமைகள், அடிமைமுறை ஒழிப்பு, கருணை, நீதி, சுதந்திரம், பொருளியல், கல்வி என வாழ்வின் பன்முகப்பரிமாணங்கள் குறித்த ஒரு வாசிப்பை நிகழ்த்துகிறது. குர்ஆனிய உருவாக்க காலத்திலேயே நபிமுகமதுவின் வாழ்வினூடாக கவிஞர்களும் வாழ்ந்துள்ளனர். அபு சுப்யான் இப்னுஹரித், அக்ரபின் ஹாபிஸ், ஸபர்கான் இப்னு பத்ரு உள்ளிட்ட குலப்பெருமை பேசித் திரிந்த கவிஞர்களுக்கு மறுப்பு சொல்ல நபிமுகமதுவின் தரப்பில் ஹஸ்ஸலன் இப்னு தாபித்திற்கு வாய்ப்பு தரப்பட்டது. இவரோடு அப்துல்லாஹிப்னு ரவாஹா, கஃபு இப்னு மாலிக் உள்ளிட்ட கவிஞர்களையும் குறிப்பிடலாம்.

 

இவைபற்றிய விடுபடுதலுடன் கி.பி. 650 - 750 களில் உமையாக்கள் ஆட்சிக்கால கவிதை வரலாற்றிற்கு ஆசிரியர் நகர்ந்துவிடுகிறார். ஒரு பேரரசையோ, குலங்களின் பெருமையையோ, இனக் குழுக்களின் போர்த்திறன் வீரம்பற்றிய நிகழ்வுகளை சித்திரிக்கும் ஓர் அடியில் இரண்டு கண்ணிகள் கொண்ட இக்கவிதைகள் பைத் என்னும் கஸீதா என்றழைக்கப்பட்டன. இக்காலத்தில் உருவான வாழ்க்கை வரலாறு போன்ற புதுவித உரைநடைபாணி எழுத்துக்கு ரிசாலா என்று பெயர். அப்துல்ஹமீது அல்காதிப், இப்னுல் முகஃப்பா உள்ளிட்டோர் இதில் முக்கியத்துவம் பெற்றவர்களாகும். இஸ்லாத்தின் அறவியலை, ஒழுக்கவியலை கவிதைகளில் மீறியதாகக் கூறி ஈராக்கிய கவிஞர் அபுநிவாஸ், கலீபா, ஹாரூன் அலி ரஷீதால் நாடு கடத்தப்பட்ட வரலாற்றையும் இத்தோடு ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.

 

கி.பி. 750 - 1258 காலகட்டத்தில் அப்பாஸியர்களின் ஆட்சிக்காலத்தில் நகர வாழ்வுப்பண்பும் பாரசீக கலாசாரத்தின் பாதிப்பு சார்ந்தும் வெளிப்பட்ட இக்கவிதைகளில் கஸீதா வடிவமும் மேலோங்கி இருந்தாலும் ஜளஹளத் - இறைக்காதல், கமறிய்யா - மதுவின்பாடல், தரத் - வேட்டைக்கவிதை, இதாப் - அரசன், பிரபுக்களிடம் முறையீடு என்கிற புது வடிவங்களிலும் இவை வெளிப்பட்டன. ரோமபுரி சிறையில் வாடியபோது அபுபிராஸ் (932 - 967) எழுதிய ரூமிய்யத் கவிதைகளை இவ்வகையில் குறிப்பிடலாம்.

 

ஒரே சந்த அமைப்பு முறையை உடைத்து, இரண்டுவித சந்த அமைப்புகள் அடிக்குஅடி வெவ்வேறு ஒளிஅமைப்புகள் கொண்ட மஸ்னவி கவிதை வடிவம் உருவாகியது. நான்கு, ஐந்து, அல்லது ஆறு பாட்டுகளைக் கொண்ட முவஸ்ஸஹா கவிதை வடிவமும் பத்தாம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஸ்பெயினில் தோன்றியது.

 

வரலாறு, இலக்கியம், தத்துவம், சுயசரிதை, புவியியல் சார்ந்த சிறப்பு உரைநடை இலக்கியம் மகாமத் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. பதீயுஜ்ஜமான், ஹராரி மற்றும் இப்னு பனதா, இப்னு கல்தூன ஆகியோரை இதில் முக்கியமாகக் குறிப்பிடலாம். மத்திய காலத்தில் அறிவியல் ரீதியான உரைநடை இலக்கியத்தை அந்நசருல் இல்மீ, கலை ரீதியான உரைநடையை அந்நசருல் பன்னீ என்றும் அழைத்தனர். அரபுலகம் கி.பி.1516-1800 காலகட்டத்தில் துருக்கியர்களின் ஆட்சியின் கீழ் இருந்தபோது ஆட்சிமொழியாக துருக்கி இருந்தது. அரபுமொழி இலக்கிய வளர்ச்சி பாதிப்புக்கு உள்ளானது. எனவேதான் இக்காலத்தை அஸருல் இன்ஹிதார். இலக்கிய நசிவுகாலம் என்பதாக வரலாற்றறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

நவீனகால அரபி இலக்கியத்தின் மறுமலர்ச்சியை நஹ்தா என்ற சொல்லின் மூலம் அர்த்தப்படுத்தலாம். 19-ம் நூற்றாண்டில் இது துவக்கம் கொள்கிறது. லெபனான், சிரியா, எகிப்து நிலப்பரப்புகளில் நவீன கவிதையின் தடங்கள் பதித்தன மேற்கத்திய தொழில் நுட்பங்கள், புது இலக்கிய பாணிகள் என ஐரோப்பிய அமெரிக்க கவிதைப் புலங்களை அடிநாதாமாய் எடுத்துக் கொண்டன.

 

இராக்கிய பெண்கவிஞர் நாஜிக் மலாயிகா நவீன அரபுக் கவிதையில் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர். பிந்தைய புனைவியல்வாத போக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் இவரின் கவிதைகளில் கீட்ஸின் நவீனத்தன்மை, எலியட்டின் உளவியல் கூறு,. ஷோஃபன் ஹாயரின் நம்பிக்கையற்றமனம் செயல்படுவதை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 1942-ல் இரவுக்காதல், 1949-ல் சிராய்ப்புகளும் சாம்பல்களும் 1975-ல் அலைகளின் அடியினிலே உள்ளிட்ட கவிதை நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

 

ஏன் சொற்களுக்காக நாங்கள் அஞ்சவேண்டும் என்ற தன்கவிதை ஒன்றில் கேட்கும் மலாயிகா எங்கள் வாழ்க்கையை ஒரு தொழுகையாய் அர்ப்பணித்துவிட்டோம். ஆனால் யாருக்காக நாங்கள் தொழுவது என கேள்வி எழுப்புகிறார்.

 

உனது ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஒவ்வொரு அர்த்தத்திற்குப்பின்னாலும் நீ உனது நிழலைவிட்டுச் சென்றாய் என அழிக்கமுடியாத வாழ்வின் சுவடுகளைப்பற்றி உரையாடுகிறார். இரவு என்னைக் கேட்டது, காற்று என்னைக் கேட்டது, காலம் என்னைக் கேட்டது நான்யார் என்று - என உடைபட்ட நானையும், சுயத்தின் அழிவினையும் மீட்பையும் நவீனத்துவம் சார்ந்த தேடலாக நிகழ்த்துகிறார்.

 

நவீன அரபு கவிதை உலகில் குறியீட்டியல் இயக்க கவிஞராக வெளிப்பட்ட அனனிஷ் என்ற அலீ அஹ்மது சயீத் 1945களில் தனது முதல் கவிதைத் திரட்டு பூமி கூறியது வெளியிடுகிறார். அரபு கலாசார தொன்மங்களை தனது படைப்பில் மறு உருவாக்கம் செய்த அனனிஷ்.

 

இவ்வுலகமென்பது ஒன்றுமே இல்லை. இருந்தால் அது என்ன தலைவெட்டும் கில்வெட்டின் இயந்திரமா அல்ல இறைவனா - என எதிர்ப்பின் குரலை பதிவு செய்கிறார் நான் எனது வரிகளை இவ்வுலகின் மீது காக்கைச் சிறகால் எழுதுகிறேன். அந்தக் காபிக்கடையின் மரநாற்காலி மீது விழும் அந்தப் பகலொளியைக் கெஞ்சுவேன். விழுந்து கிடக்கும் சிகரெட் துண்டுகளை வணங்குவேன் என் பாடப்புத்தகங்களை நான் நறுமணமிட்டு எரிக்க விரும்புகிறேன் என இழப்பின் துயரங்களையும், புலம்பெயர்தலின் வலிகளையும் படிமமாய் காட்சிப்படுத்துகிறார்.

 

இவ்வகையில் நவீனகாலக்கவிதை இலக்கியத்தில் பழைய யாப்பு வடிவத்தில் புதுக்கருத்துகளையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்திய புதிய செவ்விலக்கிய படைப்பாளிகளான எகிப்தைச் சார்ந்த அஹ்மது ஷவ்கீ (1868 - 1932) ஹாபிஸ் இபுராஹீம் (1871 - 1932) ஈராக்கை சார்ந்த ஜமீல் சித்திகீ அல் - ஜஹாவீ (1863 - 1936) மஃரூப் அல் - ருஸலஃபீ (1875 - 1945) கவிஞர்களின் சில கவிதைகளையும் நூலாசிரியர் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

மஹ்ஜர் இலக்கியவாதிகள் என்ற வகையில் அரபு நாட்டில் பிறந்து ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற லெபனானைச் சார்ந்த மீகாயில் நுஜமா, ஈலியா அபூமாதி ஆகியோரின் கவிதைகளும் இந்த மொழிபெயர்ப்பில் அடங்கும்.

 

அரபு தேசியவாதம், அரபு சோசலிச சிந்தனை சார்ந்த கோட்பாட்டு தாக்கங்களினுடாக வெளிப்பட்ட நவீனவாத கவிஞர்களில் சிரியகவிஞர் நிஸலர்கப்பானீ இராக்கியகவிஞர் நாஜிக் அல் மலாயிகா, பதர்சாகிர் அல்க்ஷசய்யாப் அப்துல் வஹாப் அல் - பயாதீ, ஐரோப்பிய யூத அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பின் கவிஞராகத் திகழ்ந்த பலஸ்தீன கவிஞர் மஹ்மூத்தர்வீஷ் (1941 - 2008) உள்ளிட்ட கவிஞர்களின் கவிதைகளையும் முனைவர் கா.மு.அ அஹ்மது ஜளபைர் மொழியாக்கம் செய்துள்ளார். நூலாசிரியரின் 36 பக்க நவீனகால அரபிக்கவிதைகள் குறித்த முன்னுரையின் பலமும், ஆழ்ந்த எழுத்தும், தகவல்களும் மொழி பெயர்க்கப்பட்ட கவிதை மொழியில் இன்னும் செறிவுடன் வெளிப்பட்டிருக்க வேண்டும். இவ்வேளையில் அரபுக் கவிதைகளை தொடர்ந்து தமிழுக்கு தந்துகொண்டிருக்கும் இலங்கை தமிழறிஞர் எம்.ஏ.நுஃமானின் பலஸ்தீன கவிதைகள், மஹ்மூத்தாவேஷ் கவிதைகள் மொழிபெயர்ப்பு தொகுப்புகளையும் நினைவுபடுத்தி பார்க்கலாம்.

 

தமிழுக்கு இன்னும் முழுமையாக அறிமுகமாகாத அரபுலக புனைகதையாளர்கள், தத்துவ சிந்தனையாளர்கள் ஏராளம் பேர் உள்ளனர். 1988 - ல் அரபுலகில் முதன்முதலாக நோபல் பரிசு பெற்ற எகிப்தின் நாவாலாசிரியர் நகீப் மஹ்பூஸ் அப்துல் ரஹ்மான் அல்முனிப், பாலஸ்தீன நாவலாசிரியர் எலியாஸ் கௌரி நாடகவியலாளர் லெனின் எல் ரெம்லே முக்கியமானவர்கள். பாலியல் அரசியலை முன் வைத்து இயங்கிய எகிப்தின் முக்கிய படைப்பாளியான நவ்வல் எல் சாதவியின் எழுத்துகள் அரசால் தடைசெய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்ட போது கழிவறையில் மலம் துடைக்கப்பயன்படும் டிஷ்யூ பேப்பரையும் ஐப்ரோ பென்சிலையும் பயன்படுத்தி தனது சிறைக்குறிப்புகளை நூலாக எழுதினார். முனைவர். கா.மு.அ அஹ்மது ஜுபைரிடமிருந்து இதுபோன்ற காத்திரமான அரபுலக எழுத்துக்களின் மொழியாக்கத்தை நாம் எதிர்பார்க்கிறோம்

-ஹெச்.ஜி.ரசூல்