காந்தியடிகள் இந்திய அரசியல் உலகில் தலையிடுவதற்கு முன்னர் மேனாட்டு அரசியல் முறைபற்றி நமது நாட்டில் அரசியல் கிளர்ச்சி நடைபெற்று வந்தது. மேனாட்டு அரசியல் நூல்களைக் கற்று அந்நாட்டு இராஜ தந்திரத்தில் மோகங்கொண்ட படித்த வகுப்பினர்களே நமது நாட்டின் அரசியல் துறையில் உழைத்து வந்தனர். ஆங்கில ஆட்சியில் நமது நாட்டின் பல வளங்களும் அழிந்து போயிற்று என்ற உண்மையை உணர்ந்தவர்கள் தாம். எனினும் நமது நாட்டின் விடுதலை ஆங்கிலர்களின் உள்ளங் கைக்குள் அடங்கிக்கிடக்கிறதென்ற கொள்கையுடையராய் உழைத்து வந்தனர். தன்னம்பிக்கையும், தன் கையே தனக்குதவி என்ற சீரிய எண்ணமும் இலராய் ஆங்கிலர்களின் புன்சிரிப்பிலேயே தவழ்ந்து தேச விடுதலை வேண்டி நின்றனர். சுயராஜ்யம் ஆங்கிலர் கொடுக்க நாம் பெற வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்குள் மிக்கு இருந்தது. படித்த வகுப்பினர் ஆண்டுக்கு ஒரு முறை கூடும் கூட்டமே காங்கிரஸ் மகாசபையாக விளங்கி வந்தது.

ஆங்கில அரசாங்கத்தாருக்கு “எமக்கு இன்ன குறை உளது, அதனை தயவு செய்து நீக்க வேண்டும்” என்று அடிமைக்குணம் அரும்பிய விண்ணப்பத் தீர்மானங்களும், வேண்டுகோள்களுமே காங்கிரஸ் மகாசபையில் செய்யப்பட்டுத் தாழ்மையுடன் அனுப்பப்பட்டு வந்தன. இந்திய அரசாங்க ஊழியம் இந்தியமயமாக்கப்படின் அதுவே தேசவிடுதலையெனக் கருதி உத்தி யோகங்கள் பெறப் பாடுபட்டு வந்தன. படித்த வகுப்பினரே இந்திய மக்கள் என்றும், சென்னை, பம்பாய், கல்கத்தா போன்ற பட்டினங்களே இந்தியாவென்றும் கருதி அரசியல் துறையில் உழைத்து வந்தனர். ஆங்கிலர்களின் மனப் பான்மையை உள்ளபடி ஒருவரும் அறிந்தவர்களில்லை. அறிந்த ஒரு சிலரும் அதற்கேற்ப தக்க முறைகளை மக்களுக்குக் காட்டத் துணிந்து முன் வந்தார்களில்லை.

ஆங்கிலர்களின் உண்மையான மனப்பான்மையை உள்ளபடி அறிந்தவர் உத்தமர் காந்தியடிகளேயாவார். ஆங்கில ராஜதந்திரிகள் போன்ற நிபுணர்களை இவ்வுலகில் எங்கும் காண்டல் அரிது என்றும், அவர்களை அம்முறை கொண்டே வெல்லுதல் அரிது என்றும் இந்திய மக்களுக்கு எடுத்துக் காட்டினார். சுயராஜ்யம் வேண்டி ஆங்கிலர்களிடத்து அடிபணிந்து நிற்பது இழிவு என்றும், சுயராஜ்யம் என்பது ஒருவர் கொடுக்க ஒருவர் பெற்று அநுபவிக்கும் பொருள் அல்லவென்றும், தாமாகவே அடைந்த சுயராஜ்யமே நிலைத்து நிற்கும் என்றும் காந்தியடிகள் மக்களுக்கு எடுத்தோதினர்.

சுயநலமும் இலாபமும் கருதியே ஆங்கிலர்கள் இந்நாட்டில் அரசு செலுத்தி வருகின்றார்கள் ஆதலின் அவர்களாகவே மனமிரங்கி இந்தியா விற்குச் சுயராஜ்யம் அளிப்பார்களென எதிர்பார்ப்பது பகற்கனவேயாகும். தற்கொலை செய்துகொள்ள விரும்பும் மனிதன் ஒருவனையேனும் இவ்வுலகில் காண்டல் அரிது. தமது நாட்டின் மக்கள் திரண்ட செல்வம் அடைந்து இன்பம் நுகர்வதற்குக் கருவியாக அமைந்திருக்கும் இந்தியாவை விட்டுச் செல்லவும் ஆங்கிலர் ஒருப்படுவரோ? ஆகையினால் அவர்பால் உதவியை எதிர்பார்ப்பது இந்தியரின் தன்மதிப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் பெரியதோர் குறைவு என்று இடித்துக் கூறினார்.

நூற்றைம்பது ஆண்டுகளாக இந்தியர்களை அடக்கி, ஒடுக்கி அடிமைக்குழியில் வீழ்த்தின இந்திய ஆங்கில அரசாங்கத்தோடு ஒத்துழையாமையைக் கைக்கொள்வதே சுயராஜ்யம் பெறும் வழியென ஓர்ந்து இந்திய மக்களுக்கு அரிய உபதேசம் செய்தனர். காங்கிரஸ் மகாசபை படித்த வகுப்பினர் கூட்டமாக விளங்காமல் உண்மையான இந்திய மக்களின் பிரதிநிதி சபையாகத் திகழல் வேண்டுமானால் இந்தியமக்கள் அனைவரும் அதில் சேர்ந்து கலந்து உழைத்தல் வேண்டுமென வழிகள் வகுத்தனர். தேசமும், தேச உரிமையும் இன்னதென்றறியாது கிணற்றுத் தவளையென வாளாக் கிடந்த இந்திய மக்களைத் தட்டி எழுப்பி தேச விடுதலையில் ஆர்வங்கொண்டு உழைக்கும்படிச் செய்தனர்.

இந்தியாவிற்கு சுயராஜ்யம் வேண்டுவது பல்லாயிரக்கணக்கான ஏழை இந்திய மக்கள் விடுதலை பெறவே என்ற உண்மையைக் கண்டு, இதுகாறும் இந்திய மக்களைப் புறக்கணித்து நடைபெற்றுவந்த இந்திய அரசியல் நெறியை மாற்றி படித்த வகுப்பினருக்கும் பாமர மக்களுக்கும் நெருங்கிய தொடர்பை உண்டாக்கி வைத்தனர். இந்தியா என்பது படித்த வகுப்பினரும் பட்டினங்களும் அல்ல; ஏழு லட்சம் கிராமங்களும் அங்கு வாழ்ந்து வரும் முப்பது கோடி மக்களுமேயாவார். சுயராஜ்யம் படித்த வகுப்பினர்க்கு மட்டுமல்ல; உத்தியோகங்களை இந்தியமயமாக்குவதும் சுயராஜ்யமாகாது, வறுமைக்கும், பிணிகளுக்கும், பஞ்சத்திற்கும் அகால மரணத்திற்கும் ஆளாகி எலும்பும் தோலுமாக அலைந்து திரியும் எண்ணற்ற கிராமவாசிகள் நந்நிலையடைந்து உண்ண உணவிற்கும் உடுக்கத் துணிக்கும் வாடி நிற்காமல் நிமிர்ந்த தலையினராய் ஏறுபோல் நடையினராய் வாழ்ந்து இன்பம் நுகரச் செய்வதே சுயராஜ்யமாகும். நமது கிராம வாழ்க்கை மீண்டும் பழைய நந்நிலைமை அடைந்தால் அல்லாது சுயராஜ்யம் பெறமுடியாது என்பது காந்தியடிகளின் முடிந்த கொள்கை. இவ்வாக்க வேலைக்கு இந்திய அரசாங்கம் உதவி புரியுமென எதிர்பார்த்தல் வீணே; கிராம வாழ்க்கையைக் குலைத்து, கிராம வாசிகளின் கைத்தொழிலைத் தொலைத்து, அதன்மேலேயே இவ்வரசாங்கம் கட்டப்பட்டிருக்கிறது என்ற உண்மையைக் காந்தியடிகள் கண்டார்.

இவைகளையெல்லாம் நன்றாய் ஆராய்ந்த பின்னரே தேசம் விடுதலை பெற வேண்டுமானால், சுயராஜ்யம் அடையவிரும்பினால் ஆக்க முறைகளையும் அழிவு முறைகளையும் இந்திய மக்கள் ஒருங்கே கைக் கொண்டு உழைக்க வேண்டுமெனக் கூறினார். அப்பெரியாரின் கொள்கை யைக் காங்கிரஸ் மகாசபையும் ஏற்றுக்கொண்டு ஒழுகியது. அழிவு முறை எனப்படுவது இந்நாட்டில் ஆங்கில அரசாங்கம் நடை பெறுவதற்கு உதவியாக இருப்பவைகளோடு மக்கள் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளா மல் ஒதுங்கி நிற்பது ஆகும். ஆக்க முறையாவது சுயராஜ்யத்தை நல்குவதான நிர்மாண வேலைகளை நிறைவேற்றி வைப்பது ஆகும். அரசாங்கத்தார் அளிக்கும் பட்டங்களையும் கௌரவப் பதவிகளையும் துறத்தல், சட்டசபை களை விட்டு விலகல், அரசாங்க பாடசாலைகளையும் நீதிமன்றங்களையும் விலக்குதல் ஆகிய இவைகளே அழிவு முறைகளாம். இவ்வரசாங்கத்தாரின் அட்டூழியங்களினால் நசுக்கப்பட்டு இறந்துபோன குடிசைத் தொழிலாகிய இராட்டினத்தில் நூல் நூற்று கைத்தறியில் நெசவு செய்தல், உயிர்ப்பித்தல், இருபெரும் வகுப்பினராகிய இந்துக்களும், முஸ்லீம்களும் எவ்வித வேற்றுமையுமின்றி நட்புரிமை பூண்டு உடன் பிறந்தார்களைப்போல் ஒன்றி வாழ்தல், இந்து சமயத்தின் நற்பெயரைக் கெடுப்பதும், கேவலம் மனித உரிமையை மறுப்பதும் ஆகிய தீண்டாமை என்னும் கொடிய வழக்கத்தை ஒழித்தல் ஆகிய இவைகளே ஆக்க முறைகளாகும்.

பற்பல காரணங்களினால் காந்தியடிகள் கோலிய அழிவுமுறைகள் மக்களால் கைவிடப்பட்டு வருகின்றன. ஆக்கமுறைகளும்கூட புறக்கணிக் கப்பட்டு வருகின்றன. இவ்விரு முறைகளே இந்தியாவிற்கு சுயராஜ்யம் தரவல்லது; வேறு எம்முறையும் தராது என்பது உறுதி. ஆங்கிலர்களின் ராஜதந்திரத்தின்முன் நம்மவர் தந்திரம் ஒருக்காலும் தலைதூக்காது; காலத்திற் கேற்ற பேச்சும், வாக்குறுதியைக் காக்கும் குணமின்மையும், வஞ்சகமும், பொய்க்கோட்டையும் பொதிந்துகிடக்கும் ஆங்கில இராஜதந்திரத்தின் வலிமை பாவம்! ஏழை இந்தியர் அறியமுடியுமோ? சட்டசபை சென்றவர் களின் கதி என்னவாயிற்று? “பழைய கருப்பனே கருப்பன்” என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். ஆங்கில நாட்டுத் தொழிலாளர் கட்சியினரை எதிர்பார்த்து நின்றவர்களின் கதி என்ன? ஏமாற்றமல்லாது வேறுண்டோ? இது காலை பர்க்கன் ஹெட்பிரபுவை எதிர்பார்த்து நிற்பவர்களின் கதி என்ன ?

இந்தியாவைப் பாதுகாக்கும் திறமை இந்தியர்களுக்கில்லையாதலின் ஆங்கிலர் ஆட்சி இன்றியமையாதது என்றும், மாண்டேகு சீர்திருத்தத்தை ஏற்று நடத்தினால் அல்லாது மேலும் சீர்திருத்தம் வழங்குவதைப்பற்றி ஆலோசிக்க இயலாது என்றும் வாய் கூசாமல் பிதற்றித்திரிகின்றார், காந்தியடிகளை உதறித் தள்ளி விட்டு மீண்டும் அடிமை குணத்திற்காளாகி ஆங்கிலர்களை எதிர் பார்க்கும் அறிவாளிகளின் கதி இந்நிலையுற்றதில் ஒரு சிறிதும் வியப்பு இல்லை. ஆகையினால் தமிழ் மக்களுக்கு நாம் அறிவிக்க வேண்டியதொன்றுண்டு. இவ்வழிவு முறைகளை மீண்டும் காங்கிரஸ் மகாசபை ஏற்று நடத்தும் வரையில் ஆக்க முறைகளைக் கைக்கொண்டு இடைவிடாது அல்லும் பகலும் உழைத்து வரல் வேண்டும். காங்கிரஸ் மகாசபை வேறு கட்சிகள் வயப்பட்டு விடுமாயினும் நாம் கவலையுறவேண்டுவதில்லை, அழிவு முறையில் நம்பிக்கையுள்ளோர் அதனை நடத்தியே வரல் வேண்டும். சட்டசபை செல்வோர் செல்க; பட்டங்களையும், பதவிகளையும், பெற்றுமகிழ்வோர் மகிழ்க; உயிரைக் கொல்லும் உடலைக்கொல்லும், அடிமைக் குழியில் வீழ்த் தும் மானிட இயந்திரங்களை உண்டாக்குவிக்கும் பள்ளிகளுக்குப் போவோர் போக; நீதிமன்றம் ஏறுவோர் ஏறுக; ஆங்கிலமாயைகளாகிய இவைகளினின்றும் விடுபட்டு நல்லுணர்வு பெற்று மீண்டும் காந்தியடிகளைச் சாண்புகும் வரையில் மற்றையோர் பொறுத்துக் கொண்டிருத்தல் கடன்; ஆக்க முறைகளை வெகு தீவிரமாக நடத்தி வருதல் வேண்டும்.

ஒத்துழையாமை இயக்கம் இறந்துபடவில்லை. ஒத்துழையாமை ஒடுக்கப்பட்டிருக்கிறதே ஒழிய இன்னும் அறவே ஒழிக்கப்படவில்லை. ஒத்துழையாமை நெறியை விட்டுவிடுவதாக எண்ணவேயில்லை என காந்தியடிகள் கூறுகின்றார். ஆக்க முறைகளை நடத்துங்கள், சுயராஜ்யம் பெறு வீர்கள் எனக் கதறுகிறார். உண்மை! உண்மை!! காந்தியடிகளைவிட வேறு துணை இந்திய மக்களுக்கு இல்லை என்பது உறுதி. மற்றத் தலைவர்கள் அரும் பாடுபட்டுச் சுயராஜ்யம் பெறுதலும் கூடும். அவர்களின் சுயராஜ்யம் இந்திய நாகரீகத்திற்கும், அறிவிற்கும், கலை வளர்ச்சிக்கும் ஏற்றதாக இரா தென்பது திண்ணம். உண்மை இந்தியா இன்னதென உணர்ந்தவர் காந்தியடிகள் ஒருவரேயாவார்; மற்றையோர் மேனாட்டுக் கண்ணாடியால் இந்தியா வைப் பார்க்கின்றனர். இஃது தான் காந்தியடிகளின் முறைக்கும், மற்றையோரின் முறைக்கும் உள்ள வேற்றுமை.

காந்தியடிகளின் ஆக்க முறையில், காங்கிரஸ்மகாசபை இதுகாலைத் தழுவிநிற்கும் ஆக்க முறையில் அரசியல் மணம் இல்லை? ஆதலின், அது சுயராஜ்யம் நல்காது என்று மிதவாத நண்பர்களும், பெஸண்டம்மைக் கூட்டத்தாரும், சுயராஜ்யக்கட்சியினருங்கூடக் கூறுகின்றார்கள். பர்க்கன் ஹெட்பிரபுவோடும் பாராளுமன்றத்தினரோடும் வறிதே வாதாடுவதும், கொஞ்சிக் கூத்தாடுவதும் தான் அரசியல் ஞாபகம் போலும்!

நாட்டின் செல்வ நிலையைப் பெருக்கும் தேச மக்களின் பொருள் வருவாயைப் பெருக்கும் வழி அரசியலின் பாற்படாதோ? ஆங்கில ஆட்சிக்கு ஆதார மாக இருக்கும் வியாபார பெருக்கைத் தொலைக்கும் முறை அரசியலின் பாற்படாதோ? குடியின்றேல் கோல் உண்டோ? நாட்டில் வாழும் மக்கள் நல் வாழ்வுபெற நாடும்வழி அரசியல் முறையாகாதோ? நாட்டிலுள்ள மக்கள் குடிக்கக்கஞ்சியும், உடுக்க கூறையும் இல்லாமல் நாசமுற்று ஒழிந்துபோய்விடின் சுயராஜ்யம் எற்றுக்கு? ஆங்கில ஆட்சியின் கொள்கைகளும் ‘பிரித்தாளுதல்’ என்ற கொள்கை முதன்மையான தல்லவோ? “பிரித்தாளும் கொள்கை”யை ஒழிக்க இந்து முஸ்லீம் ஒற்றுமை யைப் பலப்படுத்தவும், உயர்வு தாழ்வு என்ற வேற்றுமையின் வேராக விளங்கும்.

தீண்டாமையை ஒழித்து மக்கள் ஒற்றுமையாக வாழவும் பாடுபடுதல் அரசியல் முறையின் பாற்பட்டதாகாதோ ? சுயராஜ்யம் எனின் இதுபோழ்து நடைபெறும் ஆட்சிமுறையைத் திருத்தியோ ஒழித்தோ மக்கள் பிறப்புரிமைகளைப் பெற்று எல்லாத் துறைகளிலும் முன்னேற்றமெய்தி வாழ்வதுதானே. இதுபோழ்து நடைபெறும் ஆட்சிமுறையின் அடிப்படை களாக இருக்கும் நாட்டின் செல்வத்தை கொள்ளை கொள்ளும் வியாபாரம், பிரித்தாளுதல் ஆகியவை களை ஒழிக்கும் முறைகள் அரசியல் முறைகள் அல்லவெனின் பின் எதுதான் அரசியல் முறையோ? தமிழ்மக்களே! பட்ட வேட்டையிலும், பதவி மோகத் திலும் அமிழ்ந்து அலைந்து திரிவோர்களின் மயக்க வார்த்தைகளில் ஈடுபட்டு ஏமாந்து போகாதீர்கள். “கதர், இந்து - முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழித்தல் ஆகிய இம்மூன்றுமே சுயராஜ்யம் நல்கும். இதுவே எனது சித்தாந்தம்” எனக் காந்தியடிகள் கூறும் அரிய மொழிகளை ஆழ்ந்து ஆராய்ந்து உண்மையைக் கண்டு தேறி, காந்தியடிகள் வழிநின்று தேசவிடுதலைக்காக உழைப்பீர்களாக !.

குடி அரசு - தலையங்கம் - 31.05.1925

Pin It