“கர்நாடக அணைகள் உடையாமல் தடுப்பதற்காக திருட்டுத்தனமாக தண்ணீர் திறந்து விடுகிறது கர்நாடகம்”

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர் பெ.மணியரசன் பேச்சு!

காவிரி இறுதி தீர்ப்பை ஒரு கண்துடைப்பாக இந்திய அரசு தனது அரசிதழில் வெளியிட்டது. ஆனால் அதை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வில்லை. காவிரி மேலான்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று கர்நாடக அரசு வலியுறுத்துவதை நடுவண் அரசு மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளது. நடுவண் அரசின் இந்த வஞ்சகத்தைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் 09.07.2013 அன்று முற்பகல் தஞ்சை, திருச்சி, சிதம்பரம் ஆகிய இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தஞ்சை

தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில் காலை 10 மணியளவில் நடந்த ஆர்ப்பாட்டத் திற்கு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. துரை.பாலகிருஷ்ணன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச்செயலாளர் அய்யனாபுரம் திரு. சி.முருகேசன், நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரை, தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த.மணிமொழியன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் திரு. காவிரி தனபாலன், தஞ்சை மாவட்ட விவசாயிகள் இயக்கத் தலைவர் திரு. விமலநாதன், மனித நேய மக்கள் கட்சி தஞ்சைப் பொறுப்பாளர் திரு. கலந்தர், தமிழக உழவர் இயக்க இணைச் செயலாளர் திரு. இரா.செயராமன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் அமைப்புச்செயலாளர் திரு. அருள் மாசிலாமணி, புதிய தமிழகம் பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் ராஜ்மோகன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் தெ.காசிநாதன் ஆகியோரும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் உழவர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் அவர்கள் பேசியதாவது:

“கர்நாடகத்தில் இருந்து 30 ஆயிரம் கனஅடி, 40 ஆயிரம் கனஅடி என்று தண்ணீர் திறந்து விடுகின்ற இந்த காலத்தில் காவிரிக்காக ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது ஏன் என்று பலர் நினைக்கக் கூடும்.

காவிரியில் தமிழ்நாட்டுக்குரிய பங்குநீர் என்று இப்போது தண்ணீரை அவர்கள் திறந்துவிடவில்லை. அங்கு தென்மேற்குப் பருவ மழை அதிகமாக பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடக கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிடும் நிலை, கர்நாடக அணைகள் உடைந்துவிடும் அபாயம் உள்ளது. இதனை தடுத்து தங்கள் அணைகளையும், கிராமங்களையும் தற்காத்துக் கொள்வதற்காக கர்நாடக அரசு இந்த உபரித் தண்ணீரை திறந்து விடுகிறது.

இதைக் கூட திருட்டுத் தனமாகத்தான் திறந்து விடுகிறது. சூன் மாதம் சூலை மாதம் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை நாங்கள் திறந்து விடுகிறோம் என்று கர்நாடக அரசு அறிவிக்கவில்லை. எவ்வளவு தண்ணீர் திறக்கிறோம் என்பதை பகிரங்கமாக அறிவிக்கமால் திருட்டுத்தனமாக தான் திறந்து விடுகிறது.

ஏட்டிக்குப் போட்டியாக இந்தத் தண்ணீரை கர்நாடகம் தமிழ்நாட்டுப் பக்கம் திறந்து விடகூடாது என்று நாம் தடுத்தால் அவர்களால் தேக்கி வைத்து கொள்ள முடியுமா, மன்மோகன் சிங் மண்வெட்டி எடுத்துக் கொண்டு போய் தண்ணீரை தடுத்து அணை போடுவாரா? அப்படி தடுத்தால் மூன்று மடங்கு உத்தரகாண்ட் பேரழிவு கர்நாடகத்தில் நடைபெறும்.

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களின் உழவர்கள் இங்கு கூடியிருக்கிறீர்கள். காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்தி முழக்கம் எழுப்பி யிருக்கிறீர்கள். இந்த உணர்ச்சித் தொடர வேண்டும்.

காவிரியில் தான் தண்ணீர் வருகிறதே, போராட்டம் ஏன் நடத்த வேண்டும் என்று ஏமாளித்தனமாக நீங்கள் நினைக்கவில்லை. தமிழ்நாட்டு காவிரி கர்நாடகத்தின் வடிகால் அல்ல என்பதை எடுத்துக் காட்ட, கர்நாடக அணைகளில் தண்ணீர் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அதில் 46 விழுக்காடு தமிழ்நாட்டுக்கு உரியது. 54 விழுக்காடு கர்நாடகத்திற்கு உரியது. இதுவே காவிரி தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு.

இந்தத் தீர்ப்பை செயல்படுத்தக் காவிரி மேலாண்மை வாரியம் என்ற ஒரு அமைப்பை நடுவண் அரசு உருவாக்க வேண்டும். அப்படி ஓர் அமைப்பை உருவாக்க கூடாது என்று கர்நாடக அரசு விரும்புகிறது. கர்நாடக அரசு விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இந்திய அரசு நடந்துக் கொள்கிறது. நடுவண் அரசின் இந்த ஓர வஞ்சனையைக் கண்டித்து காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திட வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைப் பெறுகிறது.

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதோடு நின்று விட கூடாது. அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி, அதில் அனைவரும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் குழுவினரை தனது தலைமையில் அழைத்துக் கொண்டு போய் பிரதமரை சந்தித்து அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக அரசு காவிரி உரிமை மீட்பு எழுச்சி நாள் என்று ஒரு நாளை அறிவித்து, அந்நாளில் தமிழகம் தழுவிய அளவில் அனைத்துக் கட்சிகளும் அனைத்து விவசாய இயக்கங்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும்.

தண்ணீர் வராவிட்டால் தான் தமிழகத்தில் போராட்டம் என்ற நிலையை மாற்றி காவிரியில் கர்நாடகத்தில் இன்று திறந்து விடப்படும் வெள்ளநீர் வருகின்ற இக்காலத்தில், தமிழக உழவர்கள் போராடுகிறார்கள் என்ற நிலையை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு உழவரும் இதனை உறுதி மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்”

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் அவர்கள் பேசினார்.

இவ்வார்ப்பாட்டத்தில், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உழவர்களும், மகளிரும் திரளாகப் பங்கேற்றனர்.

சிதம்பரம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சிதம்பரத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் 09.07.2013 அன்று காலை சிதம்பரம் தலைமை அஞ்சலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக் குழு கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழக உழவர் முன்னணி ஆலோசகருமான தோழர் கி.வெங்கட்ராமன் தலைமை யேற்றார்.

மறுமலர்ச்சி தி.மு.க, குமராட்சி ஒன்றியச் செயலாளர் திரு. பா.இராசாராமன், தமிழக உழவர் முன்னணிச் செயற்குழு உறுப்பினர் திரு. தங்க.கென்னடி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், நாம் தமிழர் கட்சி நகரத் தலைவர் திரு. துரைகுமார், மனித நேய மக்கள் கட்சி திரு. கெ.ஜமால் பாஷா, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கச் செயற்குழு உறுப்பினர் திரு. விடுதலைச்செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் திரு. கி.செ.பழமலை, முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் திரு. சி.பாலாஜி, தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர், ஆ.குபேரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

நிறைவில், தோழர் கி.வெங்கட்ராமன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், “காவிரியில் தமிழகத்தின் பக்கம் உரிய சட்டநீதி இருந்தும் கர்நாடக அரசு அடாவடித் தனமாக தமிழகத்துக்குரிய காவிரி நீரை மறுத்து வருகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை. நடுநிலை வகித்து சட்டக் கடமையை நிறை வேற்ற வேண்டிய இந்திய அரசோ தமிழ்நாட்டைப் பகை இனமாகக் கருதி கர்நாடகத்தின் அடாவடித்தனத்துக்கு துணைபோகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புகளை செயல்படுத்த மறுக்கும் கர்நாடக அரசை தட்டிக் கேட்டு தமிழகத்துக்குரிய தண்ணீரைப் பெற்றுத்தராமல் தமிழக அரசோ வழக்கு மன்றத்தோடு தன் கடமையை முடித்துக் கொள்கிறது. தமிழக உழவர்களும், வணிகர்களும் காவிரி நீரின்றி வாழ்வாதார சிக்கலில் சிக்கித் தவிக்கிறனர்.

கர்நாடக அரசு, தனது நீர்நிலைக் கொள்ளளவை நான்கு மடங்கு பெருக்கியுள்ளது. தமிழக அரசு வழக்கு மன்றத்துக்கு போவதாலோ, வெறும் புள்ளி விவரக்கணக்குகளை வெளியிடு வதாலோ தமிழகத்திற்குரிய சட்டநீதி கிடைத்து விடாது என்பது கண்கூடாகத் தெரிகிறது. கர்நாடக அரசிடம் பேசி புரிய வைக்க முடியாது. போராடிப் பணிய வைப்பது தான் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள ஒரே வழி!

எனவே, கர்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்குரிய நீரைப் பெற்றுத்தர காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு இந்திய அரசுக்கு உரிய அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழகத்திலிருந்து கர்நாடகத்துக்கு நாள்தோறும் 11 கோடி யூனிட் நெய்வேலி மின்சாரம் சென்று கொண்டிருக்கிறது. அதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடகம் செல்லும் பொருள் போக்குவரத்தை தடுத்து நிறுத்தி கர்நாடக அரசுக்கும், இந்திய அரசுக்கும் உரிய அரசியல் அழுத்தம் கொடுத்தால் தான் காவிரி உரிமையை மீட்க முடியும். தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி, காவிரி உரிமை காக்க ’காவிரி உரிமை மீட்பு எழுச்சி நாள்’ என்று ஒரு நாளை அறிவித்து, தமிழக அரசு முன் முயற்சியில் அனைத்துக் கட்சி மற்றும் உழவர் அமைப்புகளை கொண்ட பெருந் திரள் மக்கள் போராட்டம் நடத்த வேண்டும். அப்போது தான் காவிரி உரிமையைக் காக்க முடியும்” எனத் தெரிவித்தார்.

இவ்வார்ப்பாட்டத்தில், பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் உழவர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

திருச்சி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் 09.07.2013 அன்று காலை 11 மணியளவில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. மாவட்டச் செயலாலர் திரு. அ.மலர்மன்னன் தலைமை யேற்றார். மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி தொடக்க உரையாற்றினார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் இந்திரஜித், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாநகரச் செயலாளர் தோழர் த.கவித்துவன், த.தே.பொ.க. தோழர் க.ஆத்மநாதன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத் தோழர் நிலவழகன், புதிய தமிழகம் மாநகர மாவட்டச் செயலாளர் தோழர் கோ.சங்கர், த.தே.பொ.க. தோழர் ச.முத்துக்குமாரசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் தோழர் ராஜா சிதம்பரம், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை மாநகரத் தலைவர் தோழர் ரெ.சு.மணி, தமிழ்நாடு விவசாயிகள் மாவட்டச் செயலாளர் திரு. சிவ.சூரியன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்டத் தலைவர் தோழர் ராயல் சித்திக், திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் தோழர் மீ.இ.ஆரோக்கியசாமி, பாரதிய கிசான் சங்க மாநிலத் துணைத் தலைவர் திரு. பொ.அய்யாக்கண்ணு, தமிழக விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் திரு. ம.ப.சின்னத்துரை, த.தே.பொ.க. தோழர் முகில்இனியன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் சீனி.விடுதலை அரசு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் உழவர்கள் பங்கேற்றனர்.

Pin It